Tamil Bayan Points

அஃப்சல் குரு முதல் அஃப்ரசுல் கான் வரை

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

Last Updated on February 3, 2020 by

அஃப்சல் குரு முதல் அஃப்ரசுல் கான் வரை

கொல்லப்படும் முஸ்லிம்கள்! கொதிக்கும் நடுநிலையாளர்கள்!

2001ஆம் ஆண்டு, டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட வழக்கில் காஷ்மீரைச் சார்ந்த அஃப்சல் குருவுக்கு கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உச்ச நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவ்வாறு அவர் மீது விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்தின் அடிப்படையில் விதிக்கப்பட்ட தண்டனை அல்ல. அது அரசாங்கம் ஒரு முஸ்லிம் மீது நடத்திய படுகொலை என்றே நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மட்டுமல்லாது நடுநிலைவாதிகளும் பார்த்தனர்.

காவல்துறையினர் அஃப்சல் குருவின் உண்மையான வாக்குமூலத்தை மறைத்து, அவரை சித்திரவதை செய்து தங்களுக்கேற்ற வகையில் வாக்குமூலத்தை வாங்கிக் கொள்கின்றனர். முறையான நீதிமன்ற விசாரணையும், சட்ட உதவியும் அவருக்கு மறுக்கப்படுகிறது.

காவல்துறை சமர்ப்பித்த அப்சல் குருவின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு சாட்சியமாகவே ஏற்க முடியாது என்பதையும், அவருக்கு எதிராக வேறு சாட்சியங்கள் எதுவும் இல்லை என்பதையும் நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. இவ்வாறு ஒப்புக் கொண்ட நீதிமன்றம் அஃப்சல் குருவை விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு விடுதலை செய்யவில்லை. மாறாக, மரண தண்டனை விதிக்கப்பட்டால் தான் இந்திய சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி திருப்தி அடையும் என்று கூறி அப்சல் குருவின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.

இது ஒரு திட்டமிட்ட படுகொலையாகும். இந்திய காவல்துறை, அரசுத் துறை, மனு சாத்திர மனப்பான்மை கொண்ட சாதிய நீதித்துறை அத்தனையும் கூட்டாகச் சேர்ந்து, தங்களது இந்துத்துவ சிந்தனையை முழுமையாக வெளிப்படுத்தி, கூட்டு மனசாட்சி என்ற குருட்டுத் தத்துவத்தின் அடிப்படையில் அஃப்சல் குருவை திகார் சிறையில் 09.02.2013 காலை 7.56 மணிக்கு தூக்கிலிட்டுக் கொன்று தீர்த்தார்கள்.

அஃப்சல் குருவுக்கு அளிக்கப்பட்ட இந்தத் தண்டனை ஓர் அநியாயமான தண்டனை என்பதால் தான் சமூக நல ஆர்வலர்  அருந்ததி ராயும், சிவில் குடியுரிமை அமைப்புக்களும் இந்த வழக்கை மறுவிசாரணை செய்யுமாறு போராடினர். இதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து, உலக மகா பொய்யர் மோடி தலைமையிலான பாசிச பிஜேபி ஆட்சிக்கு வந்தது.

2014ல் மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து முஸ்லிம்கள், முஸ்லிம் என்பதற்காக அடித்தே கொல்லப்படுகின்றார்கள்; அல்லது எரித்துக் கொல்லப்படுகின்றார்கள். பாசிச சங்கப்பரிவாரங்கள் மாட்டின் பெயரால் அடித்துக் கொன்றார்கள். வீடுகளைத் தீக்கிரையாக்கினார்கள். முஸ்லிம்கள் மட்டுமின்றி தலித்துகளையும் அடித்துக் கொல்கின்றார்கள்.

அவர்களால் தாக்குதலுக்குள்ளானவர்கள், அடித்துக் கொல்லப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் ஆடிய அராஜக வன்முறை வெறியாட்டங்களைப் பற்றிய பட்டியலைப் பார்ப்போம்.

  1. ஜூன் 2014, முஹ்சின் சாதிக் சேக், வயது 24 – புனேவில் கொல்லப்பட்டார்.
  2. மார்ச் 2015, செய்யது ஷரீபுத்தீன் கான், நாகலாந்தில் மாட்டுக்காக ஒரு கும்பலால் கொல்லப்பட்டார்.
  3. 2015ஆம் ஆண்டு, மே 30ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் இறைச்சிக்காக மாடுகளை கொன்றதாகக் கூறி அப்துல் குரோஷி என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
  4. 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் வீட்டிற்குள் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டார்கள் என்று கூறி தாத்திரியில் 70 வயதான முகம்மது அக்லக் என்ற முதியவரை பசுக் குண்டர்கள் அடித்துக் கொன்றார்கள்.
  5. 2015ஆம் ஆண்டு, அக்டோபர் 9ம் தேதி, காஷ்மீர் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி பெட்ரோல் குண்டு வீசி ஒருவர் கொல்லப்பட்டார்.
  6. 2015ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், உதம்பூர் தாக்குதல் நடந்த 10 நாட்களுக்குப் பிறகு, அதைக் கண்டித்து காஷ்மீர் மாநிலத்தின் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் இன்ஜினியர் அப்துர்ரஷீது என்பவர் மீது கருப்பு மை ஊற்றித் தாக்குதல் நடத்தப்பட்டது.
  7. அக்டோபர் 2015 ல் ஹிமாச்சல் பிரதேசத்தில் நோமன் அக்தார், வயது 28, மாட்டிறைச்சிக்காகக் கொல்லப்பட்டார்.
  8. மணிப்பூரில் நவம்பர் 2015, முஹம்மது ஹம்சாத் அலி, வயது 55, அதே காரணத்திற்காகக் கொல்லப்படுகின்றார்.
  9. 2016, ஜனவரி 13ல் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரயில் நிலையம் ஒன்றில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகப் பொய் சொல்லி கணவர் மற்றும் மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டது
  10. 2016 ஆம் ஆண்டு மார்ச் 18ல் ஜார்கண்ட் மாநிலத்தில் இறைச்சிக்காக மாடுகளைக் கொண்டு சென்றதாகக் கூறி முஹம்மது மஜ்லூம், வயது 35, மற்றும் முஹம்மது இனாயத்துல்லாஹ் கான், வயது 12, முஸ்லிம் இளைஞர்களை பசுக் குண்டர்கள் சிறை பிடித்தனர். கொடூரமாகத் தாக்கப்பட்ட பின்னர் அவர்கள் மூவரையும் தூக்கிட்டுப் படுகொலை செய்தனர்.
  11. 2016ஆம் ஆண்டு, ஏப்ரல் 2ம் தேதி, ஹரியானா மாநிலத்தில் இறைச்சிக்காக வேறு மாநிலத்திற்கு மாடுகளைக் கொண்டு சென்றதாகக் கூறி அப்பாஸ் என்பவர் கொல்லப்பட்டார்.
  12. 2016ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 2ம் தேதி, ராஜஸ்தான் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி தலித் இளைஞர்கள் 5 பேர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டனர்.
  13. 2016ஆம் ஆண்டு, ஜூன் 10ம் தேதி, ஹரியானா மாநிலம் குர்கானில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி 2 பேரை மாட்டு சாணத்தை உண்ண வைத்தனர்.
  14. 2016ஆம் ஆண்டு, ஜூலை 15ல் குஜராத்தில் உள்ள ஊனாவில் மாட்டுத் தோலை உரித்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.
  15. 2016ஆம் ஆண்டு, ஆகஸ்டு 18ம் தேதி, கர்நாடக மாநிலம் உடுப்பியில் பாஜக தொண்டர் ஒருவரே பசுவின் பெயரால் பசுக் குண்டர்களால் கொல்லப்பட்டார்.
  16. 2016ஆம் ஆண்டு, ஆகஸ்டு 24ல் ஹரியானா மாநிலத்தில் மாடுகளை கொன்றதாகக் கூறி இஸ்லாமிய தம்பதியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.
  17. 2016ஆம் ஆண்டு, ஏப்ரல் 1ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வாரில் பெஹ்லுகான் அடித்துக் கொல்லப்படுகின்றார். பெஹ்லுகான் வாகனத்தில் பண்ணைக்காக மாடுகளை எடுத்துச் செல்லும் போது உரிய ஆவணங்களைக் காட்டிய பிறகும் அடித்துக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
  18. ஏப்ரல் 2017, அஸ்ஸாம் மாநிலத்தில் அபூ ஹனீஃபா மற்றும் ரியாசுத்தீன் அலி
  19. மே 2017, ஜார்க்கண்டில் முன்னா அன்சாரி வயது 39
  20. ஜூன் 2017, ராஜஸ்தான் மாநிலத்தில் ஜாஃபர் ஹுசைன்
  21. ஜூன் 2017ல் மேற்கு வங்கத்தில் நஸீருல் ஹக், முஹம்மது சமீருத்தீன், முஹம்மது நசீர் ஆகியோர் கொல்லப்படுகின்றார்கள்.
  22. 2017ஆம் ஆண்டு, ஜூன் 23ல் தில்லி அருகில் மாட்டிறைச்சியைக் கொண்டு சென்றதாகக் கூறி 3 பேர் தாக்கப்பட்டனர். ஜுனைத் என்ற இளைஞர் கொல்லப்பட்டார்.
  23. 2017, ஜுன் 28ம் தேதி, ஜார்கண்ட் மாநிலத்தில் இஸ்லாமியரின் வீட்டின் அருகில் பசுவின் தலை கிடந்தது என்று கூறி அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டது.

இவை அனைத்தும் மாட்டின் பெயரால் நடந்த படுகொலைகள், தாக்குதல்கள் ஆகும். அதிலும் குறிப்பாக கடந்த மே மாதம் மாடுகள் விற்பனைக்குத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அது பாசிச பசுக் குணடர்களுக்கு முரட்டுத் தனமான தைரியத்தையும் சட்டத்தைக் கையில் எடுக்கின்ற கண் மூடித்தனமான துணிச்சலையும் கொடுத்தது. இதை பாசிச சக்தியின் தலைவன் மோடி கண்டு கொள்ளவே இல்லை.

மாட்டின் பெயரால் ஆடிய வேட்டையின் போதும், வெறித்தனத்தின் போதும் துடிதுடிக்க செத்து வீழ்ந்தவர்களின் பிணங்களிலிருந்து கொப்பளித்துத் தெறித்த இரத்தத் துளிகளின் ஈரம் காய்வதற்கு முன்னாலே ராஜஸ்தான் மாநிலம் ராம்சமந்த் மாவட்டத்தில் லவ் ஜிஹாத் என்ற பெயரில் சம்புலால் ரெய்கார் என்ற இந்துத்துவா வெறி நாய், வேட்டை நாய் ஒருவன், 50 வயதான அஃப்ரசுல் கான் என்ற பாட்டாளித் தொழிலாளி முஸ்லிமை விறகு பிளக்கும் கோடரியாலேயே கொடூரமாகக் கொத்திக் குதறி, உயிருடன் தீ வைத்துக் கொளுத்திக் கொன்றிருக்கின்றான்.

இதில் வேதனை என்னவென்றால் கோடரி கொண்டு கொல்கின்ற அந்தக் கோரக் காட்சியை அந்த வெறி நாயின் உறவினன் 14 வயதுச் சிறுவன் மொபைல் வீடியோவில் பதிவு செய்கின்றான். அது சமூக வலை தளங்களில் பதிவும் செய்யப்படுகின்றது.

ஒரு பெண்ணை லவ் ஜிஹாதிலிருந்து காப்பாற்றுவதற்காகவும், (இந்தி சினிமா)படத்தைப் போன்று திரைப்படங்களில் இரு மதங்களைச் சார்ந்தவர்களின் காதல் காட்சிகள் இடம் பெறக் கூடாது என்பதற்காகவும், இந்த கோரக் கொலையைச் செய்ததாகவும் சம்புலால் திறந்த வாக்குமூலம் கொடுக்கின்றான்.

அதில் பத்மாவதி திரைப்படத்தையும், பாபரி மஸ்ஜித் விவகாரத்தையும் பேசுகின்றான். அந்தக் கொலையைச் செய்வதற்கு அவன் தேர்வு செய்த நாள், இந்தியாவில் வாழுகின்ற 20 கோடி முஸ்லிம்களின் இதயங்களில் வேல் பாய்ச்சி, பாபரி மஸ்ஜிதை வீழ்த்திய நாளாகும்.

அந்த டிசம்பர் நாளில் படுகொலை செய்யப் பட்ட 50 வயது நிறைந்த அஃப்ரசுல் கானுக்கும், லவ் ஜிஹாதுக்கும் எள்ளளவும் எள்முனையளவும் சம்பந்தமே இல்லை. அவருக்குச் சொந்த ஊர் மேற்கு வங்காளம் மால்டா மாவட்டம் சய்யித் பூர் கிராமத்தைச் சார்ந்தவர். அவருக்கு 3 பெண் குழந்தைகள். 2 பெண் குழந்தைகள் கல்யாணம் முடிக்கப்பட்டுள்ளனர். 80 வயதில் ஒரு தாயார் படுத்த படுக்கையாகக் கிடக்கின்றார். 20 வருடமாக ராஜஸ்தானில் கூலித் தொழில் செய்து நாளொன்றுக்கு 500 அல்லது 600 சம்பாதிப்பவர்.

இந்த வருவாய், தனது மனைவி, மக்களின் குடும்பச் செலவுக்கும், படுக்கையில் கிடக்கும் 80 வயது தாயாரின் மருத்துவச் செலவுக்கும் போதாத நிலையில் அன்றாட வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒரு பாட்டாளி. இவர் இந்நிலையில் எந்தப் பெண்ணைக் காதலிக்கப் போகின்றார்? அல்லது இவரை இந்த வயதில் எந்தப் பெண் காதலிக்கப் போகின்றாள் என்ற சிந்தனை கூட இல்லாமல் அந்தக் காண்டுமிராண்டி கொன்றிருக்கின்றான். இதையெல்லாம் பார்க்கும் போது நாட்டில் வாழ்கின்றோமா? மிருகங்கள் வாழ்கின்ற காட்டில் வாழ்கின்றோமா? என்று எண்ணத் தோன்றுகின்றது.

சரி! கொல்லப்பட்டு விட்டார். இந்துத்துவா வெறியன் ஷம்புலால் ரெய்காரும், அவன் உறவினனும் உடன் கைது செய்யப்பட்டு விட்டார்கள். சட்டம் தன் கடமையைச் செய்கின்றது என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது அந்த நம்பிக்கையிலும் அடி விழுந்தால் பரவாயில்லை. இடியே விழுகின்றது. ஆம்! முதல் நோக்கில், குற்றவாளி மனநிலை சரியில்லாதவராகத் தெரிகின்றார் என்று கூறும் மாநில காவல்துறைத் தலைவர் ஓ.பி. கல்ஹோத்ரா இந்த வழக்கு கிடப்பிலும், கிணற்றிலும் போடப்பட்டு விட்டது என்ற மாநில இந்துத்துவா அரசின் முடிவை பகிரங்கமாகப் போட்டு உடைக்கின்றார்.

இதே செயல் ஒரு முஸ்லிமால் செய்யப் பட்டிருந்தால் இந்துத்துவா சக்திகள் ராஜஸ்தான் மாநிலத்தை ரணகளப்படுத்தி, ஒரு வகுப்புக் கலவரத்தை உருவாக்கி, முஸ்லிம் சமுதாயத்தை நரவேட்டை ஆடியிருப்பார்கள். அப்போது காவல் துறை தன் பங்கிற்கு முஸ்லிம்களை வேட்டையாடி சிறையில் கொண்டு போய் தள்ளியிருக்கும். ஆனால் கொல்லப்பட்டவர் ஒரு முஸ்லிம் என்பதால் அந்த உயிர் கிள்ளுக்கீரை போல் ஆகி விட்டது.

இந்தக் கொடூரக் கொலை விவகாரமாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர், இந்துத்துவாவின் ஊதுகுழல், முக்தார் அப்பாஸ் நக்வி என்ற முஸ்லிம் பெயர் தாங்கி, அஃப்ரசுல் கான் கொலையை மதரீதியில் தூண்டப்பட்ட கொலையாகப் பார்க்கக் கூடாது; ஒரு தனி நபர் செய்த குற்றச் செயலாகத் தான் பார்க்க வேண்டும் என்று கூறி முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கின்றார்.

ஆனால் திரிபுராவின் இந்துத்துவா ஆளுநர் ததஹாட்டா ராய், அது மத ரீதியிலான கொலை தான் என்று வக்காலத்து வாங்குகின்றார். ‘உலக முழுவதிலும் ஜிஹாதிகள், பல்லாயிரக் கணக்கானோரைக் கொலை செய்து, உடல்களைத் துண்டித்து, சிதைத்து, சின்னபின்னமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதை நீ கேட்க மறுக்கின்றாய். ஓர் ஆளைக் கொன்றதைப் போய் கேட்கின்றாய்’ என்று டிவிட்டரில் ஒரு பெண் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கின்றார்.

ஜிஹாதிகளை எப்படி தடுத்து நிறுத்துவது? என்று திரிபுரா ஆளுநர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு அந்தப் பெண், ராஜஸ்தானில் கொலை செய்தானே அந்த பைத்தியக்காரன் என்ன ஜிஹாதியா? என்று கேட்டிருந்தார். அதற்கு தான் இப்படிப்பட்ட பதிலை இந்துத்துவா வெறிபிடித்த ஆளுநர் இந்தப் பதிலைச் சொல்லியிருக்கின்றார். அப்படியானால் இவர்களின் மனநிலை எப்படியிருக்கின்றது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

ஏற்கனவே இவர், இந்து முஸ்லிம் பிரச்சனை தீர வேண்டுமானால் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட வேண்டும் என்று சொன்னவர். அதாவது முஸ்லிம்களைக் கருவறுக்க வேண்டும் என்று குறிப்பிட்டவர். ராஜஸ்தான் கொலையும் இந்த நோக்கில் தான் நடத்தப்பட்டது என்பது இவரது பதிவிலிருந்து தெளிவாக விளங்குகின்றது.

உதிரத்தை உறைய வைக்கின்ற அடுக்கடுக்கான கொலைகள் நாடெங்கிலும் உள்ள முஸ்லிம்களைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கின்றது. முஸ்லிம்கள் கொள்கின்ற கவலையிலும், கண்ணீரிலும், கொந்தளிப்பிலும், கொதிப்பிலும் நியாயமிருக்கின்றது.

முஸ்லிம்கள் ஒன்றை நினைத்து ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டும். மாட்டின் பெயராலும் லவ் ஜிஹாதின் பெயராலும் முஸ்லிம்களை அடித்து, எரித்துக் கொல்வது நாட்டில் மனசாட்சி உள்ள நடுநிலையான மக்களின் மனக் கதவுகளைத் தட்டி, ஏன் முஸ்லிம்களை இப்படிக் கொல்கின்றார்கள்? என்று அவர்களின் சிந்தனைப் பொறிகளை இஸ்லாத்தின் பக்கம் திருப்பி உள்ளது என்பது தான் அந்த ஆறுதலாகும்.

முஸ்லிம்களை இவர்கள் ஏன் அழிக்க நினைக்கின்றார்கள்? அதற்கு ஒரே ஒரு காரணம் தான்.

இந்துத்துவாவின் பிராண வாயுவே சாதிய அடக்குமுறை தான். அந்த சாதிய அடக்குமுறையை அடியிலிருந்து பிடுங்கி அதை அதள பாதாளத்தில் தள்ளி அழித்து விடுகின்ற அபார சக்தி உலகில் இஸ்லாம் மார்க்கத்திற்கு மட்டுமே உள்ளது.

நேற்று வரை பள்ளன், பறையன் என்று தூற்றப்பட்டவன் இஸ்லாம் மார்க்கத்தில் நுழைந்த மாத்திரத்தில் அந்த சாதி அடையாளமே அவனை விட்டு மறைந்து போகின்றது. அவன் பரம்பரை முஸ்லிம்களின் சகோதரனாகவும், அவர்களுக்குச் சரிநிகர் சமமானவனாகவும், சம்பந்தம் பண்ணுகின்ற மாப்பிள்ளையாகவும் ஆகிவிடுகின்றான். அதற்குக் காரணம் உயிர் துடிப்புடன் உள்ள திருக்குர்ஆன் தான். இதோ அந்தத் திருக்குர்ஆன் முழங்குகின்றது.

நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.

(அல்குர்ஆன்:49:13)

திருக்குர்ஆன் சங்கநாதம் செய்கின்ற இந்த சகோதரத்துவம், சமத்துவம் கிறிஸ்துவத்திலும் கிடையாது. ஏனைய எந்த மதங்களிலும் கிடையாது.

அப்படி அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டு தன் வயப்படுத்துகின்ற இந்த சகோதரத்துவம், சமத்துவம் தங்களது சாதிய சனாதனத்திற்கு சமாதிகட்டி விடும்; மனிதனை மனிதனுக்கு அடிமையாக்குகின்ற தங்களின் மனு தர்ம சாத்திரத்தில் மண்ணள்ளிப் போட்டு விடும் என்று இந்துத்துவா சக்திகள் கதி கலங்குகின்றனர்.

அதனால் தான் இஸ்லாத்தை இந்த நாட்டை விட்டும் தடம் தெரியாமல், தடயம் தெரியாமல் அழித்து விட வேண்டும் என்று துடிக்கின்றார்கள். இதன் காரணமாகவே முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விடுகின்றார்கள்; கருவறுத்துத் தள்ளுகின்றார்கள். இதன் மூலம் இஸ்லாம் இந்த மண்ணை விட்டும் அழிந்து விடும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.

ஆனால் அது அவர்களின் எதிர்பார்ப்புக்கு நேர்மாற்றமாக எதிர் வினையாற்றி, நடுநிலையாளர்களை இந்த இஸ்லாத்தின் பக்கம் திரும்ப வைக்கின்றது. இறுதியில், இஸ்லாம் அவர்களைத் தன் பக்கம் ஈர்த்தே விடுகின்றது. அந்த நாள் இன்ஷா அல்லாஹ் வெகு தொலைவில் இல்லை.

வரப் போகும் இந்த வெற்றியைத் தங்களது வேதனைக்கு அருமருந்தாகவும், ஆறுதலாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும். இவர்கள் ஒரு கணக்குப் போடுகின்றார்கள். இறைவன் வேறொரு கணக்குப் போட்டு இவர்களின் எதிர்பார்ப்பில் மண்ணள்ளிப் போட்டு விடுகின்றான். அந்த நாளுக்காக முஸ்லிம்கள் பொறுமையுடன் காத்திருப்பார்களாக!