Tamil Bayan Points

அல்லாஹ்வின் பெயர்களை மனிதர்களுக்கு வைக்கலாமா?

கேள்வி-பதில்: குழந்தை வளர்ப்பு

Last Updated on November 22, 2016 by Trichy Farook

அல்லாஹ்வின் பெயர்களை மனிதர்களுக்கு வைக்கலாமா?

இறைவனுக்கு மட்டும் உரிய தன்மைகளை அறிவிக்கும் பெயர்களை இறைவன் அல்லாத மற்றவர்களுக்குச் சூட்டக்கூடாது. எந்தத் தன்மைகள் இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இருக்கின்றதோ அது போன்ற தன்மைகளைக் கொண்ட பெயர்களை மனிதர்களுக்கு சூட்டுவது தவறல்ல.

சில தன்மைகள் இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இருந்தாலும் இறைவன் அத்தன்மைகளைப் பெற்றிருப்பதற்கும் மனிதர்கள் அத்தன்மைகளைப் பெற்றிருப்பதற்கும் இடையே பல வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஹகம் என்ற பெயரைச் சூட்டவேண்டாமென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். ஹகம் என்றால் யாருடைய தீர்ப்பு மறுக்கப்படக் கூடாதோ அப்படிப்பட்டவருக்குச் சொல்லப்படும். அதாவது தவறில்லாத தீர்ப்பு வழங்குபவர் என்பது இதன் பொருள். இப்பெயரில் இறைத்தன்மை இருப்பதால் இதைச் சூட்டக் கூடாது என நபியவர்கள் தடுத்தார்கள்.

ஹானிஉ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் எனது கூட்டத்தாருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். எனது கூட்டத்தினர் என்னை அபுல் ஹகம் என்ற குறிப்புப் பெயரால் அழைப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். எனவே என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து அல்லாஹ்வே ஹகம் (தவறில்லாமல் தீர்ப்பளிப்பவன்) ஆவான். (தவறிழைக்காமல்) தீர்ப்பளிப்பது அவனிடமே உள்ளது. அவ்வாறிருக்க நீ ஏன் அபுல் ஹகம் (தவறிழைக்காமல் தீர்ப்பளிப்பவனின் தந்தை) என குறிப்புப் பெயர் வைக்கப்பட்டிருக்கின்றாய்? எனக் கேட்டார்கள். அதற்கு நான் எனது கூட்டத்தினர் ஏதேனும் ஒரு விஷயத்தில் பிணங்கிக் கொண்டால் என்னிடம் வருவர். அவர்களுக்கிடையே நான் தீர்ப்பு வழங்குவேன். இருபிரிவினரும் (அத்தீர்ப்பை) பொருந்திக் கொள்வர் (எனவே இவ்வாறு எனக்கு அவர்கள் பெயர் வைத்தனர்) என்று கூறினார். இவ்வாறு தீர்ப்பு வழங்குவது எவ்வளவு அழகாக உள்ளது? என்று கூறிவிட்டு உனக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டார்கள். நான் ஷுரைஹ், முஸ்லிம் மற்றும் அப்துல்லாஹ் ஆகியோர் உள்ளனர் என்றேன். இவர்களில் மூத்தவர் யார்? என்று கேட்டார்கள். நான் ஷுரைஹ் என்றேன். அதற்கு அவர்கள் (இனிமேல்) நீ அபூ ஷுரைஹ் (ஷுரைஹ்வுடைய தந்தை என்பதே உனது குறிப்புப் பெயர்) என்று கூறினார்கள்.

அபூதாவுத் (4304)

அரசர்களுக்கெல்லாம் அரசராக அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. எனவே இப்பெயரை மனிதர்களுக்கு சூட்டக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிக வெறுப்பிற்குரிய பெயரைக் கொண்டவன் மலிகுல் அம்லாக் (அரசர்களுக்கெல்லாம் அரசன்) என்ற பெயருடையவனாவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி (6205)

அறிவிப்பாளர் : அபூ ஹூரைரா (ரலி)

அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த அரசனும் இல்லை. மலிகுல் அம்லாக் (அரசர்களுக்கெல்லாம் அரசன்) என்று பெயர்வைக்கப்பட்டவன் மறுமை நாளில் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவனாவான். இன்னும் மோசமானவனாவன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் (3994)

அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி)

ரஹீம் என்றால் இரக்கமுள்ளவன் என்பது பொருள். இரக்கம் என்ற தன்மை மனிதர்களிடமும் இருப்பதால் இப்பெயரை இறைவன் தனக்குப் பயன்படுத்துவதைப் போன்று மனிதர்களுக்கும் பயன்படுத்தியுள்ளான். ஆனால் இறைவன் காட்டுகின்ற கருணைக்கும் மனிதர்கள் காட்டுகின்ற கருணைக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கின்றது.

பின்வரும் வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ரஹீம் என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.

لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ (128 التوبة : 1289

உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார். நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிகஅக்கறை உள்ளவர். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும், இரக்கமும் உடையவர்.

அல்குர்ஆன் (9 : 128)

مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ ளالفتح : 29ன48

முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர்.

அல்குர்ஆன் (48 : 29)

முஜீப் என்ற சொல்லும் இதேப் போன்றதாகும். பதிலளிப்பவன் என்பது இதன் பொருள். அதாவது இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் பதிலளிப்பவன் கட்டுப்படுபவன் என்ற கருத்தில் இப்பெயரைக் குழந்தைகளுக்கு சூட்டுவது தவறல்ல.

ஆனால் ரஹ்மான் ரஸ்ஸாக் என்ற பெயர்கள் இறைவனுக்கு மட்டும் உரிய தன்மைகளை உள்ளடக்கியுள்ளது. அளவற்ற அருளாளன் கணக்கின்றி தருபவன் என்பது இவ்வார்த்தைகளின் பொருளாகும். மனிதர்கள் யாரும் அளவற்ற அருள்புரிய முடியாது. கணக்கின்றி அள்ளித் தரவும் முடியாது. இத்தன்மைகள் மனிதர்களிடம் இல்லை என்பதால் இது போன்ற பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

இது பற்றி திருமறையின் தோற்றுவாய் நூலில் மேலும் விரிவாக விளக்கியுள்ளோம். அது வருமாறு

ரஹ்மான் என்ற திருப்பெயர் எந்தச் சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் குர்ஆனிலோ நபிமொழிகளிலோ, நபித்தோழர்களின் பேச்சுக்களிலோ பயன்படுத்தப்பட்டதே இல்லை. அல்லாஹ் என்ற சொல் எவ்வாறு எந்தச் சந்தர்ப்பத்திலும் வேறு எவருக்கும் பயன்படுத்தப்படவில்லையோ அதே போல் ரஹ்மான்’ என்பதும் வேறு எவருக்கும் பயன்படுத்தப்படவில்லை.

அல்லாஹ்வின் திருப்பெயரைமற்றவர்களுக்குச் சூட்டலாமா?

ரஹீம்’ என்ற திருப்பெயரும் அல்லாஹ்விற்குரிய பெயரேயாகும். ஆனால் ரஹீம் என்ற இந்தச் சொல் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கும் சில சமயங்களில் பயன்படுத்தப்படுவதுண்டு. திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இதற்குச் சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் புகழ்ந்துரைக்கும் போது ரஹீம்’ என்ற அடைமொழியை அல்குர்ஆன் 9:128 வசனத்தில் பயன்படுத்தியிருக்கிறான்.

ரஹீம் என்ற தன் பெயரையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளதால் அல்லாஹ்வைப் போலவே அவர்களும் நிகரற்ற அன்புடையவர்கள் தாம் என்று சில அறிவீனர்கள் எண்ணுகின்றனர்.

ரஹீம்’ என்ற சொல்லுக்கு நிகரற்ற அன்புடையவன் என்று பொருளிருப்பதைப் போல் இரக்க குணம் உள்ளவர்’ என்ற பொருளும் உண்டு. அல்லாஹ்வுக்கு அதைப் பயன்படுத்தும் போது அவனது தகுதிக்கும் அந்தஸ்துக்கும் ஏற்றவாறு நிகரற்ற அன்புடையவன்’ என்ற பொருளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்படும் போது இறைவனின் அந்தஸ்தைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காக இரக்க குணம் கொண்டவர் என்ற பொருளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சாதாரணமான உண்மையைக் கூட இத்தகையோர் உணர்வதில்லை.

ரஹீம்’ என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் தான் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான் என்று இவர்கள் எண்ணிக் கொண்டதே இவர்களின் தவறான விளக்கத்துக்குக் காரணமாகும்.

ரஹீம் என்ற சொல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி நபித்தோழர்களுக்கும், நம்மைப் போன்றவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதை இவர்கள் அறியவில்லை.

முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே (ரஹீம்களாகவும்) இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர்.

(அல்குர்ஆன் 48:29)

இவ்வசனத்தில் நபித்தோழர்களை ரஹீம்கள் என அல்லாஹ் கூறுகிறான்.

நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களில் ரஹீம்களாக (இரக்கம் மிகுந்தவர்களாக) உள்ளவர்களுக்கே அருள் புரிகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)

நூல்: புகாரி 1284, 5655, 6655, 7377, 7448

மனிதர்கள் அனைவரும் ரஹீம்களாக இருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கே கூறியுள்ளார்கள்.

நபித்தோழர்களும், மனிதர்கள் அனைவரும் நிகரற்ற அன்புடையவர்கள் என்று இவர்கள் பொருள் கொள்வார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்கிறோம் என்று நினைத்துக் கொண்டு அல்லாஹ்வுக்குச் சமமாக அவர்களைக் கருதினார்கள். முடிவில் ரஹீம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி நபித்தோழர்களுக்கும் நம்மைப் போன்றவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எந்தச் சிறப்பும் இல்லாமல் இவர்கள் ஆக்கிவிட்டார்கள்.

பொதுவாக அல்லாஹ்வின் பண்புகளைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு சில வரையறைகள் உள்ளன. அவற்றை விளங்காத காரணத்தினாலேயே இப்படியெல்லாம் கூறுகின்றனர்.

அல்லாஹ்வின் பண்புகளில் ஸமீவுன் என்பதும் ஒன்று. செவியுறுபவன் என்பது இதன் பொருள். இதே பண்பு மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் செவியுறுபவன் என்று தான் பொருள்.

எனவே அல்லாஹ்வும், மனிதனும் ஒன்று தான் எனக் கூறக் கூடாது. வார்த்தையை மட்டும் பார்க்காமல் யாருக்குப் பயன்படுத்தப்படுகிறதோ அவர்களது தகுதியையும் கவனத்தில் கொண்டு தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தனக்கு நிகராக யாருமில்லை என்று அல்லாஹ் திட்டவட்டமாக அறிவித்து விட்டதால் அல்லாஹ்வை ஸமீவுன்’ என்று குறிப்பிடும் போது அவனது தகுதிக்கேற்ப அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எத்தனை ஓசைகளையும் ஒரே நேரத்தில் கேட்பவன், எவ்வளவு தொலைவிலிருந்தாலும் கேட்பவன், எந்த நேரத்திலும் கேட்பவன், சுருங்கச் சொன்னால் அனைத்தையும் செவியுறுபவன்’ என்று கூறலாம்.

மனிதனை ஸமீவுன் எனக் கூறும் போது அனைத்தையும் செவியுறுபவன்’ என்று கூற முடியாது. ஒரு நேரத்தில் இரண்டு பேரின் குரலைக் கூட அவனால் கேட்க முடியாது.

இது போலவே பார்ப்பவன், சக்தியுள்ளவன், அன்பு செலுத்துபவன், உயர்ந்தவன் போன்ற பண்புகள் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்தையும் பார்ப்பவன், அனைத்தின் மீதும் சக்தி உள்ளவன், நிகரற்ற அன்புடையவன், அனைத்தையும் விட உயர்ந்தவன் என அல்லாஹ்வைப் பற்றி பேசும் போது புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களுக்குப் பயன்படுத்தும் போது சாதாரணமான பொருளில் புரிந்து கொள்ள வேண்டும்.

இதை விளங்காதது தான் குழப்பத்திற்குக் காரணமாகும்.

ஸமீவுன் பஸீருன் (பார்ப்பவன், கேட்பவன்) என்ற தனது பண்புகளை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியதை அல்குர்ஆன் 76:2 வசனத்தில் காணலாம்.

ஜப்பார் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளதை 11:59, 14:15, 40:35 ஆகிய வசனங்களில் காணலாம்.

ஹஸீப் என்ற தனது பண்பை மனிதனுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 17:14 வசனத்தில் காணலாம்.

ஃகபீர் என்ற தனது பண்பை 25:59 வசனத்தில் மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தி இருக்கிறான்.

ரப்பு என்ற தனது பண்பை அல்லாஹ் மனிதர்களுக்கும் பயன்படுத்தியிருப்பதை 12:42, 12:50, 12:23 ஆகிய வசனங்களில் காணலாம்.

அஸீஸ் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 12:30, 12:51, 12:78, 12:88 ஆகிய வசனங்களில் காணலாம்.

அலீம் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 7:109-112, 10:79, 12:76, 15:53, 26:34, 26:37, 51:28 ஆகிய வசனங்களில் காணலாம்.

அலீ’ என்ற அல்லாஹ்வின் பெயர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் அலீ (ரலி) அவர்களுக்கும் சூட்டப்பட்டது. அதை நபிகள் நாயகம் (ஸல்) மாற்றவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் ரஹீம் எனக் குறிப்பிட்டுள்ளான். எனவே அல்லாஹ்வும் நபியும் ஒன்று தான். அல்லாஹ்விடம் கேட்பதை நபியிடம் கேட்கலாம் என்றெல்லாம் சில அறிவீனர்கள் கூறி வருகின்றனர். அவர்களுக்காகவே இந்த விபரங்களை நாம் குறிப்பிடுகிறோம்.

அல்லாஹ்வின் பல பண்புகள் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த இடங்களில் நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம். அல்லாஹ்வைக் குறிக்கும் போது அவனது தகுதிக்கேற்பவும் மனிதர்களைக் குறிக்கும் போது அவர்களின் நிலைமைக் கேற்பவும் தான் புரிந்து கொள்கிறோம்.

அது போலவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் ரஹீம் என்று குறிப்பிட்டுள்ளதையும் புரிந்து கொள்ள வேண்டும். அது போலவே தான் மற்ற மனிதர்களை ரஹீம் எனக் கூறப்படும் போதும் புரிந்து கொள்ள வேண்டும்.