Tamil Bayan Points

அவ்லியாக்கள் மறுமையில் கைகொடுப்பார்களா? கை விடுவார்களா?

பயான் குறிப்புகள்: கொள்கை உறுதி

Last Updated on June 3, 2020 by

அவ்லியாக்கள் மறுமையில் கைகொடுப்பார்களா? கை விடுவார்களா?

அல்குர்ஆன் அளிக்கும் அழகிய விளக்கம் அதிகமான முஸ்லிம்கள் அவ்லியாக்கள் மீது அதீதமான, அலாதியான பற்றும் பாசமும் கொண்டிருக்கின்றார்கள். அதனால் தான் அவர்களின் நினைவாகப் பள்ளிவாசல்களை மிஞ்சும் அளவுக்கு வானளாவிய மனாராக்களைக் கொண்ட தர்ஹாக்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன.

அவற்றிற்காகக் கந்தூரிகள், சந்தனகூடுகள், கொடியேற்றங்கள் போன்றவை ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன. அவர்களின் பெயரால் மீலாது விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மவ்லிதுகள் ஓதப்படுகின்றன. அந்த மவ்லிதுக்காக புலவுச் சோறு சமைக்கப்பட்டு புனிதம், புண்ணியம் என்ற பெயரில் விநியோகிக்கப்படுகின்றன.

மேலும் இப்படிக் கூட்டாக இல்லாமல் இன்னொரு பக்கம் தனித்தனியாகவும் தங்களது வீடுகளில் அவ்லியாக்கள் பெயர்களில் மவ்லிதுகள், கத்தம் ஃபாதிஹாக்கள் ஓதுவதையும் முஸ்லிம்கள் கடைப்பிடித்து வருகின்றனர். தமிழகத்தில் அவ்லியாக்களின் கதாநாயகனாக, அற்புத நாயகனாக முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி பார்க்கப்படுகின்றார்.

அவரை அடுத்து காஜா முஈனுத்தீன், நாகூர் ஷாஹுல் ஹமீது என்று தரவரிசைப் பட்டியல் நீண்டு கொண்டு போகின்றது. தமிழக முஸ்லிம்களின் பெரும்பாலான பெயர்களில் மைதீன் (முஹ்யித்தீன் என்பதிலிருந்து மாறிய தோற்றம்), காஜா, ஷாஹுல் ஹமீது என்ற இந்த மூன்று பெயர்களைத் தாண்டி நீங்கள் பார்க்கவே முடியாது.

அதே போன்று பெண் அவ்லியாக்கள் என்று ஒரு பட்டியல் இருக்கின்றது. அவர்களுக்கும் தர்ஹாக்கள் கட்டப்பட்டு அவற்றிற்கும் கந்தூரிகள், சந்தனக் கூடுகள், கொடியேற்றங்கள் அனைத்தும் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன. முஸ்லிம் பெண்களின் பெயர்களில் செய்யது அலீ ஃபாத்திமா, பீமா என்ற பெயர் தாக்கங்கள் பெரிதும் ஆக்கிரமித்திருப்பதற்கு இது தான் காரணம்.

தர்ஹாக்கள் கட்டப்படக் கூடாது; அப்படியே கப்ருகளுக்கு மேல் கட்டடம் கட்டப்பட்டிருந்தால் அவை இடிக்கப்பட வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளை அப்படியே அப்பட்டமாக மீறப்பட்டிருக்கின்றன என்பது ஒருபுறமிருக்க அந்த தர்ஹாக்களை தரிசிப்பதெற்கென்று பெரும் சிரமத்தையும் சிக்கலையும் தாங்கிக் கொண்டு ஒரு பெரிய பயணத்தை முஸ்லிம்கள் மேற்கொள்கின்றனர். உள்மாநிலம், வெளிமாநிலம், உள்நாடு, வெளிநாடு என்று இதற்கு விதிவிலக்கில்லை. இந்தப் பயணத்திற்காகப் பெரிய அளவில் பொருளாதாரத்தையும் செலவழிக்கின்றனர்.

وَمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ مِنْ دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ ۖ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ ۗ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ

அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும்போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும், அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.

(அல்குர்ஆன்:2:165)

அல்குர்ஆன் கூறுவது போல் அப்படியே இவர்களது செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. இப்படி செல்லக் கூடிய முஸ்லிம்களில் இரு சாரார் இருக்கின்றனர்.

ஒரு சாரார் அவ்லியாக்களிடம் நேரடியாகவே கேட்கின்றனர். ‘யா கவுஸ், யா முஹ்யித்தீன், என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அவ்லியாக்களை நேரடியாக அழைத்துப் பிரார்த்தனை செய்கின்றனர். மற்றொரு சாரார், அவ்லியாக்கள் நமக்காகப் பரிந்துரை செய்வார்கள் என்று நம்பிச் செல்கின்றனர்.

இவர்களில் முதல் சாராரின் நம்பிக்கைக்குக் குர்ஆன் என்ன பதில் சொல்கின்றது என்று பார்ப்போம்:

أَمْوَاتٌ غَيْرُ أَحْيَاءٍ ۖ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ

அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். “எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்”  என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன்:16:21)

إِنْ تَدْعُوهُمْ لَا يَسْمَعُوا دُعَاءَكُمْ وَلَوْ سَمِعُوا مَا اسْتَجَابُوا لَكُمْ ۖ وَيَوْمَ الْقِيَامَةِ يَكْفُرُونَ بِشِرْكِكُمْ ۚ وَلَا يُنَبِّئُكَ مِثْلُ خَبِيرٍ

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

(அல்குர்ஆன்:35:14)

இறந்தவர்கள் ஒரு போதும் செவியுற மாட்டார்கள் ஒரு வாதத்திற்கு செவியுற்றாலும் அவர்கள் நாளை கியாமத் நாளையில் மறுத்து விடுவார்கள் என்று அல்லாஹ் அடித்துச் சொல்லி விட்டான்.

அவ்லியாக்கள் நமக்காகப் பரிந்துரை செய்வார்கள் என்று நம்பும் இரண்டாவது சாராருக்குக் குர்ஆன் சொல்கின்ற பதிலைப் பார்ப்போம்:

விசாரணை நாளில் விசாரிக்கப்படும் மலக்குகள்

நாளை மறுமையில் மக்களால் கடவுளாக ஆக்கப்பட்டவர்கள் அத்தனை பேர்களும் அல்லாஹ்வின் சன்னிதானத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். மலக்குகள் மனிதர்களை விட வலிமையானவர்கள் என்று நாம் நன்கு புரிந்து வைத்திருக்கின்றோம். அதனால் மக்கள் மலக்குகளை அழைத்துப் பிரார்த்தனை செய்திருக்கின்றார்கள். அதற்காக வேண்டி மலக்குகள் விசாரிக்கப்படுகின்றார்கள். அல்லாஹ்வின் அந்த விசாரணையும் அதற்கு அந்த மலக்குகளின் பதிலும் இதோ:

وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ يَقُولُ لِلْمَلَائِكَةِ أَهَٰؤُلَاءِ إِيَّاكُمْ كَانُوا يَعْبُدُونَ

قَالُوا سُبْحَانَكَ أَنْتَ وَلِيُّنَا مِنْ دُونِهِمْ ۖ بَلْ كَانُوا يَعْبُدُونَ الْجِنَّ ۖ أَكْثَرُهُمْ بِهِمْ مُؤْمِنُونَ

 

(அது) அவர்கள் அனைவரையும் அவன் ஒன்று திரட்டும் நாள்! பின்னர் “இவர்கள் உங்களைத் தான் வணங்குவோராக இருந்தார்களா?’’ என்று வானவர்களிடம் கேட்பான்.

“நீ தூயவன். நீயே எங்கள் பாதுகாவலன். இவர்களுடன் (எங்களுக்குச் சம்பந்தம்) இல்லை. மாறாக, இவர்கள் ஜின்களையே வணங்கி வந்தனர். இவர்களில் அதிகமானோர் அவர்களையே நம்பினர்’’ என்று கூறுவார்கள்.

(அல்குர்ஆன்:34:40, 41)

இங்கே தங்களைப் பரிந்துரையாளர்கள் என்றோ கடவுளாகவோ நம்பியவர்களை, அவ்வாறு நம்பி வழிபாடு செய்தவர்களை மலக்குகள் கைகழுவி விடுகின்றனர்.

விசாரிக்கப்படும் ஈஸா (அலை)

நபி ஈஸா (அலைஹி) அவர்கள் கிறிஸ்தவர்களால் கடவுளாக வணங்கப்படுகின்றார்கள். அதனால் ஈஸா நபி அவர்களும் அல்லாஹ்வின் முன்னிலையில் விசாரணைக் கூண்டில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுகின்றார்கள். அந்த விசாரணையும் அதற்கு அவர்கள் அளிக்கும் பதிலும் இதோ:

 

وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِنْ دُونِ اللَّهِ ۖ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ ۚ إِنْ كُنْتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ ۚ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ ۚ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ

مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَا أَمَرْتَنِي بِهِ أَنِ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ ۚ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ ۖ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ ۚ وَأَنْتَ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ

 

“மர்யமின் மகன் ஈஸாவே! ‘அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!’ என நீர் மக்களுக்குக் கூறினீரா?’’ என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும்போது, “நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்’’ என்று அவர் பதிலளிப்பார்.

“நீ எனக்குக் கட்டளையிட்டபடி ‘எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!’ என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும்போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்’’ (எனவும் அவர் கூறுவார்.)

(அல்குர்ஆன்:5:116-118)

விசாரிக்கப்படும் முஹம்மத் (ஸல்)

நம்முடைய சமுதாயத்திற்குத் தூதராக அனுப்பப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களும் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். அவர்களும் கூண்டில் நிறுத்தப்படுவார்களா? என்று கேட்கலாம். இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே பதிலளிக்கின்றார்கள்.

إِنَّكُمْ مَحْشُورُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا، ثُمَّ قَرَأَ: {كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ} [الأنبياء: 104]، وَأَوَّلُ مَنْ يُكْسَى يَوْمَ القِيَامَةِ إِبْرَاهِيمُ، وَإِنَّ أُنَاسًا مِنْ أَصْحَابِي يُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ، فَأَقُولُ أَصْحَابِي أَصْحَابِي، فَيَقُولُ: إِنَّهُمْ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ، فَأَقُولُ كَمَا قَالَ العَبْدُ الصَّالِحُ “: {وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي} [المائدة: 117]- إِلَى قَوْلِهِ – {العَزِيزُ الحَكِيمُ} [البقرة: 129]

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும், ஆண் குறிகளின் நுனித்தோல் நீக்கப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள்.

பிறகு, ‘நாம் முதன் முதலாகப் படைத்ததைப் போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாகி விட்ட நம்முடைய) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கிறோம்’ (திருக்குர்ஆன் 21:104) என்னும் இறைவசனத்தை ஓதினார்கள்.

மறுமை நாளில் (நபிமார்களில்) முதன் முதலாக (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம் அவர்கள் ஆவர். என் தோழர்களில் சிலர் இடப்பக்கம் (நரகத்தின் பால்) கொண்டு செல்லப்படுவார்கள். நான், ‘இவர்கள் என் தோழர்கள். இவர்கள் என் தோழர்கள்’ என்று (அவர்களை விட்டு விடும்படி) கூறுவேன். அப்போது, ‘தாங்கள் இவர்களைப் பிரிந்(து மரணித்)ததிலிருந்து இவர்கள் தம் மார்க்கத்தை விட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்’ என்று கூறுவார்கள்.

அப்போது, நல்லடியார் (ஈஸா நபி அவர்கள்) கூறியதைப் போல், ‘நான் அவர்களோடு இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்தபோது நீயே அவர்களையும் கண்காணிப்பவனாக இருந்தாய். மேலும், நீ (இப்போது) அவர்களுக்கு தண்டனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன் அடிமைகளே, நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கிறாய்’  என்னும் (திருக்குர்ஆன் 05:117,-118) இறைவசனத்தை (பதிலாகக்) கூறுவேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3349

இன்று பிரபலமாக, சகல நோய் நிவாரணி போல் பாவிக்கப்பட்டு, கல்யாண வீடு முதல் கருமாதி வீடு வரை, வரவேற்பு நிகழ்ச்சிகளிலிருந்து வழியனுப்பு நிகழ்ச்சிகள் வரை ஓதப்படுகின்ற யாநபி பைத்து, யாஸய்யிதீ யாரசூலல்லாஹி குத்பியதி, சுப்ஹான மவ்லிது போன்றவற்றில் முஹம்மது (ஸல்) அவர்கள் கடவுளாக ஆக்கப்பட்டிருப்பதை, அல்லாஹ்வுக்குச் சமமாக ஆக்கப்பட்டிருப்பதை தெளிவாகப் புரிந்துக் கொள்ளலாம்.

அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இப்படி ஒரு பதிலை ரப்புல் ஆலமீன் முன்னால் சமர்ப்பிக்கின்றார்கள். தன்னை மக்கள் கடவுளாக்கிய பாவத்திற்கும் தமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கைகழுவி விடுகின்றார்கள். இது நபிமார்கள் நிலை என்றால் மற்றவர்களின் நிலையை நாம் சொல்லவே வேண்டியதில்லை.

விசாரிக்கப்படும் நல்லடியார்கள்

இன்று முஸ்லிம்கள் நம்பியிருக்கின்ற இந்த முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, காஜா முஈனுத்தீன் ஜிஷ்தி, ஷாஹுல் ஹமீது, ஏர்வாடி இப்ராஹீம் ஷா போன்றவர்கள் (அவர்கள் நல்லவர்கள் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான்) அல்லாஹ்வின் முன்னால் நிறுத்தப்படுவார்கள். அப்போது அவர்களும் இறைவன் முன்னால் மறுத்து விடுவார்கள்.

وَيَوْمَ يَحْشُرُهُمْ وَمَا يَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ فَيَقُولُ أَأَنْتُمْ أَضْلَلْتُمْ عِبَادِي هَٰؤُلَاءِ أَمْ هُمْ ضَلُّوا السَّبِيلَ

قَالُوا سُبْحَانَكَ مَا كَانَ يَنْبَغِي لَنَا أَنْ نَتَّخِذَ مِنْ دُونِكَ مِنْ أَوْلِيَاءَ وَلَٰكِنْ مَتَّعْتَهُمْ وَآبَاءَهُمْ حَتَّىٰ نَسُوا الذِّكْرَ وَكَانُوا قَوْمًا بُورًا

 

அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கியவற்றையும் அவன் ஒன்று திரட்டும் நாளில் “எனது அடியார்களை நீங்கள் தான் வழிகெடுத்தீர்களா? அவர்களாக வழிகெட்டார்களா?’’  என்று கேட்பான்.

“நீ தூயவன். உன்னையன்றி உற்ற நண்பர்களை ஏற்படுத்துவது எங்களுக்குத் தகாது. நீ அவர்களுக்கும், அவர்களின் முன்னோர்களுக்கும் வசதிகளை அளித்தாய். (உன்னை) நினைக்க மறந்தனர். அழிந்து போகும் கூட்டமாக ஆகி விட்டனர்’’ என்று (வணங்கப்பட்ட) அவர்கள் கூறுவார்கள்.

(அல்குர் ஆன்:25:17,18)

இதை அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் புரியும்படி தெள்ளத் தெளிவாக விளக்குகின்றான்.

فَقَدْ كَذَّبُوكُمْ بِمَا تَقُولُونَ فَمَا تَسْتَطِيعُونَ صَرْفًا وَلَا نَصْرًا ۚ وَمَنْ يَظْلِمْ مِنْكُمْ نُذِقْهُ عَذَابًا كَبِيرًا

 

நீங்கள் கூறியதை இவர்கள் பொய்யாக்கி விட்டனர் (என்று இணை கற்பித்தவர்களிடம் கூறிவிட்டு, வணங்கப்பட்டவர்களை நோக்கி) தடுக்கவோ, உதவவோ உங்களுக்கு இயலாது. உங்களில் அநீதி இழைத்தோருக்குப் பெரிய வேதனையைச் சுவைக்கச் செய்வோம் (என்று கூறப்படும்.)

(அல்குர்ஆன்:25:19)

இந்த வசனத்தில் இவர்கள் யாரை நம்பி வந்தார்களோ அந்த அவ்லியாக்கள் இவர்களைப் பொய்யர்கள் என்று பகிரங்கமாக அந்த மஹ்ஷர் மைதானத்திலேயே மறுத்து விடுகின்றார்கள். இப்போது அவ்லியாக்களின் பக்தர்கள் என்ன செய்ய முடியும்? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவ்லியாக்கள் மீது பாசம் கொண்டவர்கள் அவர்களை நேரில் கண்டதும் ‘இதோ எங்கள் அவ்லியாக்கள்’ என்று அல்லாஹ்விடம் கூறுவார்கள். அப்போது அவர்கள் தங்கள் பக்தர்களை நோக்கி, ‘நீங்கள் பொய்யர்கள்’ என்று சொல்வார்கள்.

وَإِذَا رَأَى الَّذِينَ أَشْرَكُوا شُرَكَاءَهُمْ قَالُوا رَبَّنَا هَٰؤُلَاءِ شُرَكَاؤُنَا الَّذِينَ كُنَّا نَدْعُو مِنْ دُونِكَ ۖ فَأَلْقَوْا إِلَيْهِمُ الْقَوْلَ إِنَّكُمْ لَكَاذِبُونَ

وَأَلْقَوْا إِلَى اللَّهِ يَوْمَئِذٍ السَّلَمَ ۖ وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَفْتَرُونَ

 

இணை கற்பித்தோர் தங்கள் தெய்வங்களைக் காணும் போது “எங்கள் இறைவா! அவர்களே எங்கள் தெய்வங்கள். உன்னையன்றி அவர்களையே பிரார்த்தித்து வந்தோம்’’ என்று கூறுவார்கள். “நீங்கள் பொய் சொல்கிறீர்கள்’’ என்று அவர்கள் மறுமொழி கூறுவார்கள்.

அன்று அல்லாஹ்விடம் சரணாகதியைச் சமர்ப்பிப்பார்கள். அவர்கள் இட்டுக்கட்டியவை அவர்களை விட்டும் மறைந்து விடும்.

(அல்குர்ஆன்:16:86, 87)

எந்த அவ்லியாக்களை பக்தர்கள் நம்பினார்களோ அந்த அவ்லியாக்கள் அவர்களுக்குக் கைகொடுக்க முன்வரமாட்டார்கள். இவ்வளவு இழிவும் வேதனையும் எதனால் ஏற்பட்டது? அல்லாஹ்விடம் இவர்கள் பரிந்துரைப்பார்கள் என்ற தவறான நம்பிக்கையால் தான்.

أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ ۚ وَالَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَىٰ إِنَّ اللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِي مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ ۗ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ كَاذِبٌ كَفَّارٌ

 

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் “அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்க மாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை’’ (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்:39:3)

وَيَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُولُونَ هَٰؤُلَاءِ شُفَعَاؤُنَا عِنْدَ اللَّهِ ۚ قُلْ أَتُنَبِّئُونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ ۚ سُبْحَانَهُ وَتَعَالَىٰ عَمَّا يُشْرِكُونَ

 

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர்.  “அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்’’ என்றும் கூறுகின்றனர். “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்’’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்:10:18)

ஆகிய வசனங்களில் மக்கா காஃபிர்கள் இந்த நம்பிக்கையைத் தான் கொண்டிருந்தார்கள். அந்தத் தவறான நம்பிக்கையிலிருந்து அவர்களை மீட்டெடுக்கத் தான் முஹம்மது (ஸல்) அவர்கள் தூதராக அனுப்பப்பட்டார்கள்.

வலீ வேண்டுமா? பரிந்துரையாளர் வேண்டுமா?

وَأَنْذِرْ بِهِ الَّذِينَ يَخَافُونَ أَنْ يُحْشَرُوا إِلَىٰ رَبِّهِمْ ۙ لَيْسَ لَهُمْ مِنْ دُونِهِ وَلِيٌّ وَلَا شَفِيعٌ لَعَلَّهُمْ يَتَّقُونَ

 

“தமது இறைவனிடம், தாம் ஒன்று சேர்க்கப்படுவதை அஞ்சுவோருக்கு அவனன்றி பொறுப்பாளனோ, பரிந்துரைப்பவனோ இல்லை’’ என்று இதன் மூலம் எச்சரிப்பீராக! இதனால் அவர்கள் (இறைவனை) அஞ்சுவர்.

(அல்குர்ஆன்:6:51)

அல்லாஹ் தன்னையே வலிய்யாகவும் பரிந்துரையாளனாகவும் ஆக்கச் சொல்கின்றான்.

அவ்லியாக்கள் எங்களுக்கு வக்கீலாக வாதிடுவார்கள் என்று ஒரு வாதம் வைக்கின்றார்கள்.

رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَا إِلَٰهَ إِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِيلًا

 

(அவன்) கிழக்குக்கும், மேற்குக்கும் இறைவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாருமில்லை. எனவே அவனையே பொறுப்பாளனாக்கிக் கொள்வீராக!

(அல்குர்ஆன்:73:9)

கிழக்கிற்கும் மேற்கிற்கும் அதிபதியான தன்னையே வக்கீலாக எடுத்துக் கொள்ளச் சொல்கின்றான். எனவே அவனையே பொறுப்பாளனாக்கிக் வாழும் நன்மக்களாய் அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.!