இமாம் மீது சந்தேகம் வந்தால்?
கேள்வி-பதில்: தொழுகைLast Updated on January 26, 2017 by Trichy Farook
இமாம் மீது சந்தேகம் வந்தால்
இமாம் இணைவைப்பவரா எனச் சந்தேகம் ஏற்பட்டால் அவரைப் பின்பற்றித் தொழலாமா?
அஷ்ரஃப் அலி
பதில்
ஒருவர் தன்னை இஸ்லாமிய சமுதாயத்தில் இணைத்துக் கொண்டு தன்னை முஸ்லிம் என்று கூறினால் அவருடைய வெளிப்படையான இந்த நிலையைக் கவனித்து அவர் முஸ்லிம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு மாற்றமாக அவர் வெளிப்படையாக இணைவைப்புக் காரியங்களில் ஈடுபடுவதை அறிந்தால் அப்போது அவர் இணைவைப்பவர் என்ற முடிவுக்கு வரலாம்.
அவர் இணைவைக்கும் காரியங்களில் ஈடுபடுவதை நாம் பார்த்தால் அல்லது அதைப் பார்த்த நம்பகமானவர்கள் நமக்குத் தெரிவித்தால் அப்போது அவர் இணை வைப்பவர் என்ற முடிவுக்கு வரலாம். அவரைப் பின்பற்றி தொழாமல் இருக்க வேண்டும்
ஆதாரங்கள் எதுவுமின்றி நமது சுய யூகத்தின் அடிப்படையில் ஒரு முஸ்லிமை இணைவைப்பவர் என்று சந்தேகப்படுவது கூடாது. இந்த சந்தேகத்தின் அடிப்படையில் முடிவெடுப்பதும் கூடாது. இவ்வாறு யூகம் கொள்வதை மார்க்கம் தடை செய்துள்ளது.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنْ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ
நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்!
திருக்குர்ஆன் 49 : 12
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ عَنْ الْأَعْرَجِ قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ يَأْثُرُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ وَلَا تَجَسَّسُوا وَلَا تَحَسَّسُوا وَلَا تَبَاغَضُوا وَكُونُوا إِخْوَانًا وَلَا يَخْطُبُ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ حَتَّى يَنْكِحَ أَوْ يَتْرُكَ رواه البخاري
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம் தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குற்றங்குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 5144