Tamil Bayan Points

4) உண்மை நிலை என்ன?

நூல்கள்: பேய் பிசாசு உண்டா?

Last Updated on April 15, 2023 by

பேய்கள் பற்றிய உண்மையான நிலையை இனி காண்போம்.

பேய்கள் என்றொரு படைப்பினம் இல்லை. இறந்தவர்களின் ஆவி உயிருள்ளவர் மேல் வந்து ஆதிக்கம் செலுத்துவதும் இல்லை. ஒரு மனிதனிடம் இருந்த ஷைத்தான் அவனது மரணத்திற்குப் பின் இன்னொருவரிடம் வந்து குடியேறுவதுமில்லை என்பதை திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் அடிப்படையில் நாம் நிரூபித்தாலும் அதை நம்பாத உள்ளங்களும் இருக்கின்றன. இதற்கு நியாயமான காரணங்களும் அவர்களிடம் உள்ளன. எனவே அந்தத் தரப்பினரின் நியாயமான ஐயங்களை அகற்றினால் மட்டுமே பேய்களை மனித உள்ளங்களிலிருந்து முழுமையாக நீக்க முடியும்.

பேய் பிடித்தவர்கள் நேற்று வரை சாதாரணமாக இருந்தனர். திடீரென்று அசாதாரணமானவர்களாக மாறி விடுகிறார்கள். அவர்களின் பழக்கவழக்கங்கள் விசித்திரமாக மாறிப் போய் விடுகின்றன; முன்பிருந்ததை விட அவர்களின் பலம் அதிகமாகி விடுகின்றது; இத்தகைய நிலைக்கு ஆளான சிலர் மறைவான சில விஷயங்களைக் கூட அறிவிக்கின்றனர். இதற்கு முன் அறிந்திராத மொழிகளைக் கூட சிலர் பேசுகின்றனர்; பயந்த சுபாவம் கொண்ட இத்தகையோர் அடியோடு அச்ச உணர்வு நீங்கியவர்களாகி விடுகின்றனர். இன்னும் பல வியப்பூட்டும் மாறுதல்கள் அவர்களிடம் ஏற்பட்டு விடுகின்றன. இவையெல்லாம் மனித சக்தியை மிஞ்சக் கூடிய ஒரு சக்தியால் மட்டுமே சாத்தியம். அதனையே பேய்கள் என்கிறோம் என்பது இவர்களது நியாயமான சந்தேகம்.

மற்றொரு சந்தேகமும் கூட உண்டு. பேய் பிடித்ததாக நம்பப்படுவோருக்கு எவ்வளவோ உயர்வான மருத்துவ சிகிச்சையளித்தும் நிவாரணம் கிடைப்பதில்லை. ஆனால் ஒரு சாமியாரிடமோ, மந்திரவாதியிடமோ, பூசாரியிடமோ, மௌலவியிடமோ மந்திர சிகிச்சை பெற்றதும் உடனடி நிவாரணம் கிடைக்கின்றது. மேலும் அந்தப் பேய்களே தாங்கள் ஓடி விடுவதாகக் கூறி விட்டு ஓடிப் போகின்றன.

மருத்துவத்தால் ஆகாதது மந்திரத்தால் ஆகிறது என்பது பேய்கள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றது. தர்காக்கள் மற்றும் கோயில்களில் அதிசயமான முறையில் அவர்கள் குணப்படுத்தப்படுகின்றார்கள். இது பேய்கள் இருப்பதை மேலும் உறுதி செய்கின்றது என்று இத்தகையோர் கூறுகின்றனர்.

இந்த அதிசயங்களின் புதிரை விடுவிக்காமல் எடுத்து வைக்கப்படும் சான்றுகள் முழுமையான பலனையளிக்காது. எனவே இந்த அதிசயங்கள் பற்றிய புதிரை நாம் முதலில் விடுவிக்க வேண்டும். இது பற்றிக் கடுகளவு கூட சந்தேகம் இராத அளவுக்கு இது பற்றி நாம் ஆராய்வோம்.

சமூக விரோதிகளும், குற்றங்களில் ஈடுபடுவோரும் தங்களைக் காத்துக் கொள்ளவும், மக்களை ஏமாற்றவும் பேய்களைப் பற்றிய கட்டுக்கதைகளைக் கூறுகின்றனர். பேய்களைப் பற்றி கதைகளைக் கட்டிவிட்டு தாங்கள் நினைத்ததைச் சாதித்துக் கொள்கின்றனர். இதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு இடத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ அல்லது கடத்தலில் ஈடுபட்டாலோ அது பிறரால் கண்டு கொள்ளப்படக் கூடாது என்பதற்காக அந்த இடங்களில் பேய்கள் நடமாடுவதாக கதை கட்டும் அவசியம் இவர்களுக்கு ஏற்படுகின்றது. வேறு எந்த வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விட இது செலவு குறைந்ததாகவும், முழுப் பயனளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.

ஒரு இடத்தில் பேய்கள் நடமாடுவதாகச் செய்திகள் பரவும் போது அந்த இடத்திற்கு காவல் துறையினர் கூட செல்வதற்கு அச்சப்படுவர். எவராலும் நெருங்க முடியாத பாதுகாப்பு வளையத்தை பேய்கள் ஏற்படுத்துகின்றன. தங்களின் ஏஜன்டுகள் மூலம் இப்படி வதந்திகளைப் பரப்புவதுடன் கூட இவர்கள் நின்று விடுவதில்லை. வதந்திகளை உண்மைப்படுத்தும் விதமாக சில ஏற்பாடுகளையும் செய்கின்றனர். இரவு நேரங்களில் சலங்கையொலியை ஏற்படுத்துதல், நள்ளிரவில் கற்களையும், மற்ற பொருட்களையும் வீடுகளின் மேல் வீசுதல், தீப்பந்தங்களைக கொளுத்தி பயமுறுத்துதல் இன்னும் பலவாறான ஏற்பாடுகளைச் செய்து அரைகுறை தைரியசாலிகளையும் அதைரியப்படுத்தி வீடுகளில் முடங்கச் செய்கிறார்கள்.

இத்தகைய ஏற்பாடுகளால் உண்மையிலேயே பேய்கள் இருப்பது போன்ற தோற்றத்தை இந்தச் சமூக விரோதிகள் ஏற்படுத்தி விடுகின்றனர். எங்கெல்லாம் பேய்கள் நடமாட்டம் பற்றிப் பேசப்படுகின்றதோ அங்கெல்லாம் துணிவுடன் சென்று ஆராய்ந்தால் அங்கே சமூக விரோதக் காரியங்கள் நடப்பதைக் கண்டு கொள்ளலாம்.

அற்பமான நோக்கங்களுக்காகக் கூட பேய்கள் பற்றிய வதந்திகள் கிளப்பப்படுவதுண்டு. ஒருவருக்குச் சொந்தமான இடத்தைக் குறைவான விலைக்கு வாங்க வேண்டும் என்று விரும்பினால் அல்லது வாடகைக்கு குடியிருப்பவரைக் காலி செய்ய விரும்பினால் பேய்களை விட எளிய வழி எதுவும் இல்லை. அந்த இடத்தில் பேய்கள் நடமாடுவதாக வதந்திகளைப் பரப்பி விட்டு, அதை உறுதிப்படுத்தும் விதமாக சில காரியங்களைச் செய்தால் விரும்பிய விலைக்கு அந்த இடத்தை வாங்கலாம். வாடகைக்கு இருப்பவரை உடனேயே காலி செய்து விடலாம். இது போன்ற அற்பமான நோக்கங்களைக் கருத்தில் கொண்டும் பேய்கள் நடமாட விடப்படுகின்றன.

இவையெல்லாம் சில உதாரணங்களே. இது போன்ற இன்னும் அநேக காரணங்கள் பேய்களுக்குப் பின்னணியாக இருக்கின்றன.

இனி பேய் பிடித்ததாகச் சொல்லப்படுபவரிடம் அதிசயங்கள் நிகழ்வது எப்படி? என்பதைப் பார்ப்போம்.

நேற்று வரை சாதாரமாணவனாக இருந்த ஒருவன் பேய் பிடித்ததாக நம்பப்படும் போது அசாதாரணமானவனாக எப்படி மாறி விடுகின்றான்?

இந்தக் கேள்விக்கு நாம் விடை கண்டாக வேண்டும்.

மற்றவர்களைப் பயமுறுத்துவதற்காகவும், அதன் மூலம் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காகவும் பேய்க் கதைகள் கட்டி விடப்படுவது போலவே வேறு சில காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காக தங்களுக்கே பேய் பிடித்து விட்டதாக நடிப்பவர்களும் உண்டு. அவ்வாறு நடிப்பதால் சில காரியங்களை அவர்கள் சாதித்துக் கொள்வதும் உண்டு.

இப்படி பேய் பிடித்து விட்டதாக நடிப்பவர்கள் அசாதாரணமானவராகவும் நடித்து தீர வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் பேய் வேஷத்தினால் அவர்கள் முழுப்பயனை அடைய முடியாது.

இதைச் சில உதாரணங்கள் மூலம் உணர முடியும்.

ஒரு பெண் நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாமல் இருப்பதாக, அல்லது நீண்ட நாட்கள் கணவனைப் பிரிந்தவளாக இருப்பதாக வைத்துக் கொள்வோம். இவள் இறைவனை அஞ்சி தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடியவளாக இருந்தால் பிரச்சனையில்லை. அவ்வாறின்றி, அன்னிய ஆடவனை விரும்பி அவனை அவள் அடைவதற்கு குடும்பத்தினரின் கட்டுப்பாடு தடையாக இருந்தால் அதை எவ்வாறேனும் உடைக்கவே அவள் முயற்சிப்பாள்.

அத்தகைய பெண் சாதாரண நிலையில் நள்ளிரவில் வீட்டை விட்டுப் போய் விரும்பிய ஆடவனைச் சந்தித்து வீட்டிற்குத் திரும்பினால் சமூகம் அவளைச் சும்மா விடாது. இந்தத் தடையை உடைப்பதற்கு அவள் பேயாக மாற வேண்டும். பானை சட்டிகளை உடைக்க வேண்டும். வாயில் வந்ததை உளற வேண்டும். நமக்குத் தெரியாத விஷயங்களைக் கற்பனை செய்து மறைவான செய்திகளைக் கூறுவதாக அவிழ்த்து விட வேண்டும். வேறு மொழி பேசுகிறாளோ என்று மற்றவர்கள் கருதும் அளவுக்கு வாயில் வந்தவாறு உளற வேண்டும். இதையெல்லாம் செய்துவிட்டு அவள் நள்ளிரவில் எழுந்து வெளியே சென்று விரும்பிய ஆடவனைச் சந்தித்து விட்டுத் திரும்பினால் சமூகம் அவளது நிலைக்காகப் பரிதாபப்படும். இதனால் தான் அசாதாரணமானவளாக அவள் ஆகி விடுகின்றாள்.

இது ஒரு உதாரணமே. வேறு பல நோக்கங்களுக்காகவும் இது போல் வேஷம் கட்ட வேண்டிய நிலையில் பலர் இருக்கின்றனர்.

பெருமளவு கடன்பட்டவன் கடன் கொடுத்தவர்களிடமிருந்து தப்பிக்கவும், விரைவிலேயே தனக்குத் திருமணம் செய்யும் முடிவுக்குப் பெற்றோர்களைக் கொண்டு வரவும், இன்ன பிற நோக்கங்களுக்காகவும் இப்படி நாடகமாடுவதுண்டு.

அவர்கள் அசாதாரணமானவர்களாகக் தோற்றமளிப்பது நடிப்புத் தான் என்பதில் ஐயம் தேவையில்லை. இதற்குச் சில சான்றுகளையும் அறிந்து கொள்வோம்.

இலங்கையில் ஒருவர் – மலையாள மொழி அறியாத ஒருவர் – பேய் பிடித்தவுடன் மலையாளம் பேசுவதாக மக்கள் பரவலாகப் பேசிக் கொண்டனர். அவரைச் சோதிப்பதற்காக டாக்டர் கோவூர் என்பவர் செல்கிறார். இவரது தாய்மொழி மலையாளம். இவர் சென்று அவர் பேசும் மலையாள மொழியைக் கேட்ட போது அதில் ஒரு வார்த்தையும் மலையாளச் சொல்லாக இருக்கவில்லை. வெறும் உளறலைத் தவிர வேறு இல்லை.

(பார்க்க: டாக்டர் கோவூரின் மனக்கோலம்)

பேய் பிடித்ததாக நம்பப்படுபவன் மலையாளம் பேசுகிறான். அரபியில் பேசுகிறான் என்றெல்லாம் முடிவு செய்கின்ற மக்களுக்கு அந்த மொழிகள் தெரியாது. தாங்கள் மொழி அல்லாத வேறு எந்த மொழியிலும் சேராத உளறல்களைக் கேட்டு அதற்கு ஒரு பெயரைச் சூட்டி விடுகிறார்கள். இது தான் உண்மை.

‘மாயம்மா என்றொரு பெண். இளம் விதவையான அவளுக்குப் பேய் பிடித்துள்ளது என்று ஊரே அனுதாபம் காட்டுகின்றது. சில இளைஞர்கள் நள்ளிரவில் அவள் பேயாக (?) வெளியே வரும் போது பின்தொடர்ந்து சென்றால் ஊருக்கு ஒதுக்குப் புறமாக மற்றொரு ஆடவனுடன் அவள்!

(ஜுனியர் விகடனில் கி. ராஜ் நாராயணனின் கரிசல் காட்டுக் கடுதாசி)

ஒரு பெண்ணுக்குப் பேய் பிடிக்க அவளுக்கு மொட்டை அடிக்க முற்பட்ட போது பேய் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

(சில மாதங்களுக்கு முந்தைய மறுமலர்ச்சி)

எந்த நோக்கத்திற்காக பேய் வேஷம் போடுகிறாளோ அதற்கு அழகிய கூந்தல் வேண்டும். மொட்டை அடித்தால் எவரும் சீண்ட மாட்டார்கள். அதனால் தான் பேய் ஓடிவிடுகின்றது.

இது நடிப்புத் தான் என்பதற்கும், பேய்கள் கிடையாது என்பதற்கும் மேலும் சில அறிவுப்பூர்வமான சான்றுகளையும் அறிந்து கொள்வோம்.

இறந்தவர்களின் ஆவிகள் தான் பேய்கள் என்பது உண்மையானால் பேய்கள் உலகளாவிய ஒரு பிரச்சனையாக இருக்க வேண்டும். எங்கெல்லாம் மனிதர்கள் மரணிக்கின்றார்களோ, அடக்கம் செய்யப்படுகின்றார்களோ, எரிக்கப்படுகின்றார்களோ அங்கெல்லாம் பேய்கள் நடமாட்டம் இருந்தாக வேண்டும். ஆனால் மூடநம்பிக்கை மலிந்துள்ள இந்தியா போன்ற நாடுகளைத் தவிர உலகின் பல பகுதிகளில் பேய்களுக்கு அறவே இடமில்லை.

கம்யூனிஸத்தின் பிடி இருக்கமாக உள்ள நாடுகளில் பட்டிதொட்டிகள் முதல் பெருநகரம் வரை எவருக்கும் பேய் பிடிப்பது கிடையாது. சவூதி அரேபியா போன்ற பகுதிகளிலும் பேய்களைக் காண முடிவதில்லை. இந்தியாவில் கூட மிகப்பெரும் நகரங்களில் பேய்களின் அதிகாரம் செல்லுபடியாவதில்லை.

அங்கெல்லாம் மனிதர்கள் மரணிக்கத் தான் செய்கின்றனர். பேய்களின் உற்பத்தித் தலங்களாகக் கருதப்படும் சுடுகாடுகளும், கல்லறைகளும் இருக்கத் தான் செய்கின்றன. பேய்களுக்குரிய எல்லா வசதிகளும் செய்யப்பட்டிருந்தும் அங்கெல்லாம் பேய்கள் இல்லாமலிருப்பது ஏன் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

அங்குள்ள மக்களுக்கு பேய்கள் பற்றிய நம்பிக்கை இல்லாததால் பேய் வேஷம் அங்கே எடுபடுவதில்லை. பேய் வேஷம் போட்டு எதையும் அங்கே சாதிக்க முடிவதில்லை என்பதைத் தவிர இதற்கு வேறு காரணம் எதுவுமில்லை.

சட்டதிட்டங்களோ, கட்டுப்பாடுகளோ இல்லாத ஐரோப்பிய நாடுகளிலும் பேய்களுக்கு அவ்வளவு இடமில்லை. காரணம் அங்குள்ளவர்கள் எத்தகைய தகாத உறவிலும் பேய் வேஷம் போடாமலேயே ஈடுபட முடியும். ஒரு பெண் விரும்பிய ஆடவனுடன் விரும்பிய நேரத்தில் சுற்ற முடியும். அதை அந்தச் சமூகம் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. பேய் வேஷம் போடாமலேயே காரியத்தைச் சாதித்துக் கொள்ள வழியிருப்பதால் அங்குள்ளவர்கள் பேய்களின் துணையை நாடுவதில்லை; அதற்கு அவசியமும் இல்லை.

இறந்தவர்களின் ஆவிகளே பேய்கள் எனும் அடிப்படையில் பார்க்கும் போது பேய்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்க வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 500 கோடி என்றால் இன்று மேலும் 100 கோடி அதிகமாகியிருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பலநூறு பேய்கள் அதிகமாகும் போது அவற்றின் அட்டகாசங்களும் அதிகமாகி இருக்க வேண்டும்.

அவ்வாறு பேய்களின் அட்டகாசங்கள் அதிகமாகியுள்ளனவா? என்றால் நிச்சயமாக இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பேய் பிடித்தவர்களின் எண்ணிக்கையை விட இன்று பேய் பிடித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவோ குறைந்துள்ளது. இதுவும் பேய்கள் இல்லை என்பதற்குச் சான்றாக உள்ளது.

பேய்கள் மனிதனை விட அதிக வல்லமை கொண்டவை. ஒரே அடியில் அவை மனிதனை வீழ்த்தி விடக்கூடிய ஆற்றல் கொண்டவை என்றெல்லாம் பேய் நம்பிக்கையாளர்கள் எண்ணுகிறார்கள்.

இவ்வளவு வல்லமை மிக்க பேய்கள் ஒரு மனிதன் தனியாகச் செல்லும் போது பிடித்துக் கொண்டதாகத் தான் பேசப்படுகின்றதே அன்றி கூட்டமாக இருப்பவர்களைப் பிடித்ததாக எங்கேயும் பேசப்படுவதில்லை. ஐந்தாறு பேர் ஒரு சுடுகாட்டை அல்லது கல்லறையைக் கடந்து சென்றாலும் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான பேய்கள் இவர்களை அண்டுவதில்லை என்பதையும் நாம் கேள்விப்படுகிறோம். பேய்கள் உண்மையிலே இருக்குமானால் இவர்களை ஏன் தாக்குவதில்லை?

இருட்டில் மாத்திரம் ஆதிக்கம் செலுத்தும் பேய்கள் வெளிச்சத்தில் வருவதில்லையே அது ஏன்? இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் ஏதும் கிடையாது.

இருட்டாக இருக்கும் போது எதையாவது பார்த்து விட்டு பேய் என்று மனிதன் நினைத்துக் கொள்கின்றான். நல்ல வெளிச்சத்தில் ஒவ்வொரு பொருளும் அதன் உண்மையான வடிவத்தில் காட்சி அளிப்பதால் வெளிச்சத்தில் பேய்களை யாரும் பார்க்க முடியவில்லை.

இது போலவே தனியாக ஒரு பெண் செல்லும் போது தைரியம் குறைந்த நிலையில் இருக்கிறாள். அப்போது அவள் கண்களுக்குக் கற்பனைத் தோற்றம் தெரிகிறது. ஐந்தாறு பேருடன் செல்லும் போது ஒருவளுக்கு மட்டும் கற்பனையாக ஏதும் தோன்றினாலும் மற்றவர்கள் அப்படி எதுவும் தோன்றவில்லையே என்று கூறி விடுகிறார்கள். உண்மையாக இருந்தால் ஐந்து பேருக்கும் தென்பட வேண்டும். பொய்யாக இருப்பதால் தான் ஒருத்திக்கு மட்டும் அப்படித் தோன்றுகிறது என்பதை இதிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ள இயலும்.

பேய்கள் என்று ஆட்டம் போடுபவர்களில் 90 சதவிகிதம் பேர் நடிப்பவர்களே. அதன் மூலம் எதையோ சாதித்துக் கொள்ள விரும்புபவர்களே என்பதை இதன் மூலம் அறியலாம்.

இந்த இடத்தில் நியாயமான ஒரு சந்தேகம் பலருக்கும் உண்டு. எவ்வளவோ மருத்துவம் செய்தும் குணமடையாத இத்தகையோர் ஒரு சாமியாரின் விபூதியைக் கண்டவுடன், வேப்பிலையைக் கண்டவுடன் ஓம் ரீம் என்ற மந்திரத்தைக் (?) கேட்டவுடன் எவ்வாறு அடங்கி விடுகின்றனர்?

மவ்லவிகள், தங்கள்மார்கள் ஆகியோர் மந்திரித்தவுடன், தண்ணீர் ஓதி முகத்தில் தெளித்தவுடன், அல்லது துணியில் எதையாவது எழுதி அதை எரித்து அந்தப் புகையை முகரச் செய்தவுடன் ‘விட்டுவிடு இனி வரமாட்டேன் என்று கூறிக் கொண்டு பேய்கள் ஓடுகின்றனவே, இது எப்படி? ஒரு பாதிரியாரின் தாயத்தை அணிந்தவுடன் அலறிக் கொண்டு பேய்கள் ஓட்டமெடுப்பது எவ்வாறு? இது தான் அந்த நியாயமான சந்தேகம்.

பேய்கள் பிடித்துள்ளதாக நடிப்பவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் அலறிக் கொண்டு ஓடுவதாகவும் நடித்தாக வேண்டும். மந்திரத்துக்கு அடங்காவிட்டால் பேய் பிடித்ததை மற்றவர்கள் நம்ப மாட்டார்கள்.

இந்தச் சாமியார்களோ, பாதிரிகளோ அல்லது தங்கள்மார்களோ ஜபிக்கும் போது பேய் பிடித்தவர்களிடம் எந்த விளைவும் ஏற்படவில்லையென்றால் பிடித்திருப்பது பேயல்ல என்று மக்கள் நினைப்பதுடன் பேயோட்டிகளே “பேயில்லை நோய்தான்” என்று சான்று வழங்கி விடுவார்கள். அதன் பிறகு பேய் வேஷம் போட்டதனால் எதிர்பார்த்த பலனை அடைய முடியாது. பேயோட்டிகளே ‘பேய் பிடித்துள்ளது’ என்று சர்டிபிகேட் வழங்குபவர்களாக உள்ளதால் அவர்களது ஜபத்திற்கு ஏதேனும் எதிர் விளைவைக் காட்டியாக வேண்டும்.

இதனால் தான் எல்லா மந்திரவாதிகளுக்கும் (?) பேய்கள் அடிபணிகின்றன.

இதை யார் வேண்டுமானாலும் சோதித்து அறிய முடியும். பேய் பிடித்ததாக நம்பப்படுபவனின் முன்னால் பேயோட்டி போல் சென்று அமர்ந்து கொண்டு பேயோட்டும் திறமை உங்களுக்கு இருப்பதாக நம்பச் செய்யுங்கள். அதன் பிறகு உங்கள் வாய்க்குள்ளாக ‘அறிவு கெட்ட மடையா! யாரை ஏமாற்றுகிறாய்….! என்பது போல் எதையாவது கூறி ஓதுவது போல் பாவனை செய்து தண்ணீரில் ஊதித் தெளித்தால் அப்போதும் அந்தப் பேயிடம் எதிர் விளைவைக் காணலாம்.

பேய் பிடித்ததாகக் கூறுவது எப்படி நடிப்பாக உள்ளதோ, மந்திரத்தைக் கேட்டதும் அது விலகுவதாக அலறுவதும் நடிப்புத் தான்.

இது வரை நாம் எடுத்து வைத்த சான்றுகள் பேய்கள் கிடையாது என்பதையும் பேய் பிடிப்பதும் அவற்றின் நடமாட்டமும் திட்டமிட்ட நாடகமே என்பதையும் நிரூபிக்கப் போதுமானவையாக உள்ளன. ஆயினும் பேய்கள் இருக்குமோ என்ற தடுமாற்றத்தை ஏற்படுத்தும் இன்னும் சில ஐயங்களும் உள்ளன.

அவற்றையும் அப்புறப்படுத்தாத வரை பேய் நம்பிக்கையை ஒழிக்க முடியாது. அத்தகைய ஐயங்களையும் அது பற்றிய தெளிவையும் காண்போம்.

பேய் பிடித்ததாக நம்பப்படுபவர் அதற்கு முன்னால் அவர் அறிந்திராத மறைவான செய்திகளையெல்லாம் அறிவிக்கக்கூடிய நிலையை நாம் காண்கிறோம்.

உதாரணமாக இருபத்தி ஐந்து வயதுடைய இளைஞனுக்கு பேய் பிடித்ததாக வைத்துக் கொள்வோம். அதாவது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் மரணித்தவரின் ஆவி வந்து இவனைப் பிடிப்பதாக வைத்துக் கொள்வோம்.

இவனுக்குப் பேய் பிடிப்பதற்கு முன்னால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை தெரியாமலிருந்து இப்போது ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய பேய் பிடித்துக் கொண்டவுடன் மளமளவென்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்தவைகளை அவன் கூற ஆரம்பித்து விடுவதைக் காண்கிறோம்.

இது போலவே மதுரையில் உள்ள ஒருவனை நாகர்கோவிலில் உள்ள பேய் பிடிப்பதாக வைத்துக் கொள்வோம். இப்போது இந்தப் பேய் பிடித்தவன் நாகர்கோவிலில் நடந்த விபரங்களைக் கூறுகிறான்.

பேய் பிடிப்பது என்பது ஒரு நாடகம் என்றால் இந்த அதிசய வல்லமை எப்படி அவனுக்கு ஏற்படுகின்றது? என்று பேய் நம்பிக்கையாளர்கள் வினா எழுப்புகின்றனர். இப்படி ஒரு நம்பிக்கை அவர்களின் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் போது எந்த ஆதாரங்களும் அவர்களை அசைத்து விட முடியாது. எனவே இதன் உண்மை நிலையை நாம் வெளிச்சம் போட்டுக் காட்டுவோம். பேய் பிடித்தவரிடம் இத்தகைய ஆற்றல் ஏற்பட்டு விடுவது போல தோன்றுவது பொய்த் தோற்றமே தவிர உண்மை அல்ல. இதைப் பலரும் உணர்வதில்லை.

25 வயதுடைய இளைஞன் பேய் பிடித்ததும் ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய செய்திகளைக் கூறுவதும் நடிப்புத் தான். அவன் கூறுவது போல் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஏதும் நடந்தே இராது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்ததை விசாரித்தறிய பின்னோக்கிச் செல்ல முடியாது என்பதாலும், தனது சாயம் வெளுக்காது என்ற தைரியத்தாலும் இவன் உளறிக் கொட்டுகிறான். இதைப் பார்த்து விட்டு அவன் மறைவான சங்கதிகளைக் கூறுகிறான் என்று பேய் ஆதரவாளர்கள் முடிவு செய்து விடுகின்றனர்.

கடந்த காலம் பற்றி இப்படி கண்டதையும் கூறும் வசதியை பேய் பிடித்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அவர்கள் உளறும் போது மட்டுமே மக்கள் அதை நம்புவார்கள்.

பேய் பிடித்தவர்களிடம் வந்துள்ள பேய்கள் கடந்த காலத்தை அறிந்துள்ளன; பேய்கள் அவற்றை நமக்கு அறிவிக்கின்றன என்ற நம்பிக்கை சமூகத்தில் ஆழமாகப் பதிந்துள்ளதால் கடந்த காலம் பற்றி எதை வேண்டுமானாலும் கூற முடிகின்றது. அதை நம்புவதற்கும் ஆட்கள் உள்ளனர்.

கடந்த காலம் பற்றியெல்லாம் அறியும் ஆற்றல் பேய் பிடித்தவர்களுக்கு எற்படுவது உண்மையானால் நிகழ் காலத்தை அறிவது அதை விட எளிதானதாக இருக்க வேண்டுமல்லவா? நிகழ்காலம் பற்றி எதையேனும் கேட்டுப் பாருங்கள்! அவர்கள் விடையளிக்க மாட்டார்கள்.

உங்கள் கைகளில் எதையாவது மறைத்து வைத்துக் கொண்டு இதில் என்ன உள்ளது? என்று கேட்டால் அவர்களால் அதைக் கூற முடியாமல் போவது ஏன்? இதைத் தான் நாம் சிந்திக்கத் தவறி விடுகிறோம்.

நமது கையில் மறைந்திருப்பதைப் பற்றி அவர் வாயில் வந்தவாறு விட்டு அடிக்க முடியாது. ஏனெனில் உடனேயே நாம் அவரது கூற்று உண்மையா? பொய்யா? என்பதைக் கண்டுபிடித்து விடுவோம்.

அது போல் பத்து நிமிடத்துக்குப் பின்னால் என்ன ஏற்படும்? என்ற விஷயத்தைப் பற்றி பேய் பிடித்தவனிடம் கேளுங்கள். அதற்கும் விடை வராது.

ஒரு நாளைக்கு முன் அல்லது ஐந்தாறு நாட்களுக்கு முன் அல்லது சில மாதங்களுக்கு முன் நடந்தவை பற்றி மூச்சு விடுவதில்லை. எனெனில் இதைப் பற்றி விசாரித்தறிந்து பேய் பொய் கூறுகிறது என்பதை நாம் கண்டுபிடித்து விடுவோம்.

சென்ற காலத்தில் (எந்தச் சென்ற காலம் பற்றி விசாரித்தறிய முடியாதோ) எது நடக்கும் போது பலரும் சம்பந்தப்பட்டிருக்கவில்லையோ அது போன்ற காலம் பற்றியும் – அது போன்ற சம்பவம் பற்றியும் மட்டுமே பேய்கள் கூறுவது ஏன்? இதைச் சிந்தித்தால் உண்மை விளங்கும்.

பேய் பிடித்ததாக நடிப்பவர்கள் திட்டமிட்டு திறமையாக நடிப்பதால் ஆற்றல் மறைந்து கிடப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இது தான் உண்மையாகும்.

இதை இன்னும் விரிவாக அறிந்து கொள்ள இன்னொரு விதத்தில் நாம் சோதித்துப் பார்க்கலாம்.

அதாவது ஒரு மனிதன் தன் கண் முன்னே நடப்பதை மட்டுமே அறிய முடியும். அவனது முதுகுக்குப் பின்னால் நடக்கும் எதையும் அவனால் அறிய முடியாது. இது மனிதனின் நிலை. ஆனால் பேய்கள் உருவமற்றவை. அவற்றுக்கு முதுகுப்புறம், முன்புறம், பின்புறம் எல்லாம் கிடையாது. இவ்வாறிருக்க பேய் பிடித்தவரின் முதுகுக்குப் பின்னால் இரண்டு விரல்களைக் காட்டி இது எத்தனை விரல்கள்? என்று கேட்டால் கூட சொல்ல முடிவதில்லை. பேய் பிடித்தவரின் கண்களையும் கட்டி விட்டு அருகில் நடப்பதைக் கேட்டால் அதையும் சொல்ல முடிவதில்லை.

பார்ப்பதற்கு மனிதனுக்குத் தான் கண்கள் வேண்டுமே தவிர பேய்களுக்குக் கண்கள் தேவையில்லை. அப்படியானால் ஏன் பேய்களால் இதைச் சொல்ல முடிவதில்லை?

இந்த இடத்தில் தான் இதுவொரு நாடகம் என்பது தெளிவாகின்றது.

பேய் பிடித்த மனிதனது கண்களும், அவனது காதுகளும் கட்டப்பட்டதும் பேய்களால் பார்க்கவோ, கேட்கவோ முடியாமல் போவதிலிருந்து பார்ப்பதும், கேட்பதும், பேசுவதும் இந்த மனிதன் தான்; பேய் கிடையாது என்பதை நிரூபிக்கின்றது.

பேய் பிடித்ததாகக் கூறுவது நடிப்பின் ஒரு காட்சி என்றால் மறைவான கடந்த கால நிகழ்ச்சி பற்றிக் கூறுவது நடிப்பின் மற்றொரு காட்சி என்பதைத் தவிர வேறில்லை.

இது திட்டமிட்ட நடிப்புத் தான் என்பதில் இன்னும் சந்தேகம் இருந்தால் இன்னொரு சோதனையின் மூலம் அதை நீக்கிக் கொள்ள முடியும்.

உயிரோடு இருக்கும் மனிதனிடம் பேய்கள் வந்து விடுமானால் ஏற்கனவே பெற்றிருந்த வல்லமையை விட கூடுதல் வல்லமை பெறுகின்றான் என்பது பேய் நம்பிக்கையாளரின் முடிவு.

பேய் பிடித்ததாக நம்பப்படும் நிராயுதபாணியான ஒருவனிடம் ஒரு கத்தியை அல்லது கழியைக் காட்டி அவனை அடிக்க முயன்றால் அவன் அலறுவதைக் காண்கிறோம். சாதாரண மனிதனை விட சக்தி வாய்ந்த பேய் அவனிடம் குடி கொண்டிருப்பது உண்மையானால் அவன் என்ன செய்ய வேண்டும்? இந்த ஆயுதங்களைக் கண்ட பின்பும் அஞ்சாமல் எதிர்க்க வேண்டும். நம்மை வெற்றி கொள்ள வேண்டும். அது தான் முடியாவிட்டாலும் அந்த மனிதனிடமே உள்ள பேய் அவனிடமிருந்து பாய்ந்து நம்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும். இப்படியெல்லாம் எங்கேயும் நடந்ததில்லை. அப்படியானால் மிரள்வதும், அரள்வதும் அந்த மனிதன் தானே தவிர பேயில்லை என்பது தெளிவாகின்றது அல்லவா!

சில பேர் மிரளாமலும் இருப்பார்கள். எனெனில் மிரட்டுபவர் தன்னை அடிக்க மாட்டார் என்று திட்டவட்டமாகத் தெரியும் போது தான் இந்த நிலை. மிரட்டக் கூடியவர் நிச்சயம் அடிப்பார் என்று தெரிந்தால் அப்போது நிச்சயம் மிரள்வார். சிலர் மிரட்டும் போது மிரளாமல் இருப்பதும், வேறு சிலர் மிரட்டும் போது மிரள்வதும் அதனால் தான்.

 

இவர்களின் மற்றொரு ஐயத்தையும் காண்போம்.

நல்லடியார்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள தர்ஹாக்களில் பேய் பிடித்த எத்தனையோ நபர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். சங்கிலியால் பூட்டப்படுகின்றனர். இவ்வாறு தர்ஹாக்களைத் தஞ்சமடைந்தவர்களிடம் உள்ள பேய்களை அந்த மகான்கள் வியக்கத்தக்க விதத்தில் விரட்டியடிக்கின்றனர். ஏர்வாடி, நாகூர் போன்ற ஊர்களில் இதை நாம் காண முடிகின்றதே என்பது சிலரது ஐயம்.

இதுவும் ஒரு நாடகம் தான். ஏனைய ஐயங்களைப் போலவே இதுவும் அடிப்படையில்லாததாகும்.

தர்ஹாக்களில் கொண்டுபோய் விடப்படும் பேய் பிடித்தவர்களை மூன்று வகையினராகப் பிரிக்கலாம்.

ஒரு சாரார் உண்மையாகவே பைத்தியம் பிடித்தவர்கள். மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இவர்கள் இவர்களது உறவினர்களின் அறியாமையினால் பேய்கள் என்று நம்ப வைக்கப்பட்டு தர்ஹாக்களுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள்.

உண்மையாகவே இவர்களுக்குப் பைத்தியம் பிடித்துள்ளதால் தர்ஹாக்களில் இவர்கள் நிவாரணம் பெற முடிவதில்லை. ஒரு தர்ஹாவிலிருந்து மறு தர்ஹா என்று டிரான்ஸ்ஃபர் வாங்கிக் கொண்டு தமிழகத்தின் அனைத்து தர்ஹாக்களுக்கும் விசிட் செய்வார்கள். முடிவில் நம்பிக்கையிழந்து விதியை நொந்து கொண்டு பைத்தியங்களாகவே விடப்படுவர். பாவம் இவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்!

ஆரம்பத்திலேயே முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் இவர்கள் முழு அளவில் ஆரோக்கியம் பெறும் அளவுக்கு மருத்துவத் துறையில் இன்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மூடநம்பிக்கை இவர்களது எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விட்டது.

ஏர்வாடி தர்ஹாவைச் சுற்றியுள்ள காப்பகங்களில் தங்க வைக்கப்பட்ட பல மனநோயாளிகள் தமிழக அரசால் மீட்கப்பட்டு உரிய சிகிச்சையின் மூலம் குணமடைந்ததையும் நாம் கண்டோம். அங்கே தீப்பற்றி நூற்றுக்கணக்கான மன நோயாளிகள் எரிந்து கரிக்கட்டைகளாகப் போனதையும் நாம் பார்த்துள்ளோம்.

இரண்டாம் சாரார் நாம் முன்னரே விளக்கிய பிரகாரம் எதேனும் ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக பேய்களாக நடிப்பவர்கள். இவர்கள் தங்களின் காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் காலம் வரை நடித்து விட்டு காரியம் கை கூடிய பிறகு பேய் வேஷத்தைக் களைப்பவர்கள். இவ்வாறு இவர்கள் தங்களுக்கு வசதியான ஒரு காலகட்டத்தில் வேஷத்தைக் களையும் போது அதன் பெருமை தர்ஹாவுக்குச் சேர்ந்து விடுகின்றது.

உண்மையில் பைத்தியம் பிடித்தவர்களும், பேய் பிடித்ததாக நடிப்பவர்களும் ஆகிய இந்த இரு சாராரும் பாதிக்கும் குறைவானவர்களே. தர்ஹாவின் பால் மக்களை ஈர்ப்பதற்காக செட்டப் செய்யப்பட்டவர்கள் மறுபாதியினர்.

ஏறத்தாழ கூலிக்கு மாறடிக்கும் கூட்டம் போன்றவர்கள் இவர்கள். இப்படி வெள்ளி, திங்கள் இரவுகளில் பேய்கள் பிடித்ததாக நடிப்பதற்கும் தலையை விரித்துப் போட்டு ஆடுவதற்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் உண்டு. சுவையான உணவும் உண்டு.

பேய் பிடித்தவர்கள் எல்லாம் இங்கே தான் வந்து குழுமுகின்றனர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி ஏனையோரை வரவழைக்கவும், உண்டியலை நிரப்பிக் கொள்ளவும் தர்ஹா பூசாரிகள் நடத்தும் நாடகம் இது. இது வெறும் அனுமானம் இல்லை. நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

ஒவ்வொரு வெள்ளி இரவிலும் ஏனைய நாட்களை விட பேயாட்டம் போடுவோர் அதிக அளவில் காணப்படுவர். வெள்ளிக்கிழமை அவர்களில் பெரும் பகுதியினர் காணாமல் போய் விடுவர். சொல்லி வைத்தாற் போல் வெள்ளி இரவுகளில் மட்டும் இப்படி பேயாடிகள் பெருகி ஏனைய நாட்களில் குறைவதிலிருந்து இது திட்டமிட்ட ஏற்பாடு என்பதை உணரலாம். தொடர்ந்து சில நாட்கள் தர்ஹாக்களை நோட்டமிட்டால் இதை எவரும் அறியலாம்.

வெள்ளி இரவுகளில் தான் மக்கள் அதிக அளவில் வருவார்கள். அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வெள்ளியன்று மட்டும் இந்த விசேஷ ஏற்பாடு செய்யப்படுகின்றது.

வெள்ளிக்கிழமையில் கூட எல்லா நேரங்களிலும் பேய்களின் ஆட்டங்கள் இருப்பதில்லை. எந்த நேரத்தில் மக்கள் திரளாகக் குழுமுகின்றார்களோ அந்த மாலை நேரங்களில் மட்டுமே இந்த ஆட்டம் உச்சக் கட்டத்தில் உள்ளது. மக்கள் கூட்டம் குறைய ஆரம்பித்ததும் பேயாட்டம் போடுவோரும் குறைய ஆரம்பித்து விடுகின்றனர். உண்மையிலேயே பேய் பிடித்து இயல்பாகவே அவர்கள் ஆட்டம் போடுகிறார்கள் என்றால் எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் தர்ஹாக்கள் பேயாட்டம் போடுவோரால் நிரம்பி வழிய வேண்டும்.

குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கணிசமாக பேயாடிகள் அதிகரிப்பது செட்டப் என்பதை நிரூபிக்கப் போதுமாகும்.

மேலும் தொடர்ந்து சில வாரங்கள் இவர்களை நாம் கண்காணித்து வந்தால் குறிப்பிட்ட அதே முகங்கள் அதே கோலத்தில் தென்படுவார்கள். இதுவும் செட்டப் என்பதற்கு சான்றாக உள்ளது. எவ்வாறெனில் வெள்ளி இரவு பேயாடி விட்டு அன்று காலையிலேயே குணம் பெற்று (?) வீடு திரும்பியவர்கள் ஒவ்வொரு வெள்ளி இரவும் (வெள்ளி இரவு மட்டும்) பேய் பிடித்தவர்களாகக் காட்சி தருகின்றார்கள். ஏனைய நாட்களில் அவர்கள் காணப்படுவது கிடையாது. இது தர்ஹா பூசாரிகளின் திட்டமிட்ட ஏற்பாடே என்பது ஐயமில்லை.

இது போன்ற ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே தர்ஹாக்களில் பேய்கள் நடமாடுகின்றன; விலகி ஓடுகின்றன.

ஏற்கனவே நாம் எடுத்துக்காட்டியுள்ள குர்ஆன் ஹதீஸ்களில் இறந்தவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பதைக் கண்டோம். மனிதன் இறந்து விட்டால் இவ்வுலகத்துடன் அவனுக்கு இருந்த எல்லா உறவுகளும் முடிவுக்கு விடுகின்றன என்பதையும் கண்டோம். தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் பேய்களை விரட்டுவார்கள் என்ற நம்பிக்கை இந்தச் சான்றுகளுக்கு முரணானவை என்பதையும் நாம் கவனிக்கும் போது தர்ஹாக்களில் பேய் பிடித்தவர்கள் குழுமுகிறார்கள் என்பதும், அதை அங்கே அடக்கம் செய்யப்பட்டவர்கள் விரட்டுகிறார்கள் என்பதும் ஆதாரம் அற்றவை என்பது மேலும் உறுதியாகின்றது.

பைத்தியமாகி விட்டவர்கள், பைத்தியமாக நடிப்பவர்கள் தவிர மற்றொரு வகையினரையும் மக்கள் பேய் பிடித்தவர்கள் என எண்ணுகின்றனர்.

குடும்பத்தில், சமுதாயத்தில் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டவர்கள் அதை எண்ணியே ஹிஸ்டீரியா எனும் மனநோய்க்கு ஆளாகி விடுவர். இதன் மூலம் பிறரைத் தங்கள் பால் ஈர்க்க முயல்வர். தன்னை இன்னொருவராகப் பாவனை செய்ய முற்படுவர்.

அளவுக்கதிகமான கற்பனைகளில் பலவாறான விளைவுகளுக்கு ஆளாகின்றனர். ஒரு கட்டத்தில் இன்னொருவராக தன்னைப் பார்க்கத் தொடங்குவர்.

தன்னை யாரும் கவனிப்பதில்லையே என்ற விரக்தியில் எதை எதையோ செய்ய ஆரம்பிப்பார்கள்.

தனக்கு சாமி வந்து விட்டது, அவ்லியா இறங்கி விட்டார், பேய் பிடித்து விட்டது என்றெல்லாம் இவர்கள் கருதத் துவங்கும் போது பிறரால் இவர்கள் கவனிக்கப்படுகிறார்கள். அக்கறை செலுத்தப்படுகிறார்கள்.

இவர்கள் வேண்டும் என இப்படிச் செய்யாவிட்டாலும் தம்மையுமறியாமல் இப்படியெல்லாம் நடக்கத் துவங்கி விடுகின்றனர். இவர்களுக்கு ஹிஸ்டீரியா எனும் மனநோய் தான் ஏற்பட்டுள்ளது என்று தெரிய வந்தால் இவர்களை எளிதில் குணப்படுத்தி விடலாம்.

இவர்கள் பேயாட்டம் போடும் போதும், சாமி வந்துவிட்டதாகக் கூறும் போதும், அவ்லியா மேலாடுவதாகக் கூறும் போதும் எவருமே அதைக் கண்டு கொள்ளக் கூடாது. அந்தச் சமயத்தில் அதிகமாக அவர்களைக் கவனிக்கக் கூடாது. இப்படி நடந்து கொண்டால் இரண்டொரு நாளில் இந்த நோய் குணமாகி விடும்.

பிறரது கவனத்தையும், கவனிப்பையும் பெறுவதற்காக ஏற்பட்ட மனநோய் தானா? என்பதை முதலில் மனநோய் மருத்துவரிடம் காட்டி உறுதி செய்து கொண்ட பின், மேற்கூறிய முறையில் அவர்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டும்.

முற்றிப் போன பைத்தியம் என்றால் அதற்கான முகாம்களில் வைத்து சிறப்பு வைத்தியம் செய்ய வேண்டும்.

நடிக்கிறார்கள் என்றால் அதற்கான காரணத்தைக் களைய முயல்வதுடன் உரிய பரிகாரமும் செய்ய வேண்டும். இப்படிச் செய்துவிட்டால் பேய்களுக்கு அறவே இடம் இராது.

ஒருவனுக்கு வந்துள்ள பேய் எந்த வகையானது (?) என்பதை தக்கவர்களிடம் சென்று உறுதி செய்வது மிகவும் அவசியம். அதன் பின்னர் சிகிச்சையில் இறங்க வேண்டும்.

பேய் – பிசாசுகள் என்று நம்பி ஈமானையும், நிம்மதியையும், பகுத்தறிவையும் பலி கொடுப்பதிலிருந்து வல்ல இறைவன் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக.