Tamil Bayan Points

எலிக்கறி சாப்பிடலாமா?

கேள்வி-பதில்: பிராணிகள்

Last Updated on February 13, 2021 by

எலிக்கறி சாப்பிடலாமா?

எலிக்கறி சாப்பிடலாமா? கூடாதா? என்பது தொடர்பாக தற்போது கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது

எலிக்கு வேட்டையாடும் நகங்களோ, கோரைப் பற்களோ கிடையாது எனவே அதனைச் சாப்பிடுவதால் குற்றமில்லை என்பதே எலிக்கறி சாப்பிடலாம் என்பவர்கள் முன்வைக்கும் ஆதாரமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விலங்குளில் கோரைப் பற்கள் உள்ள ஒவ்வொன்றையும், பறவைகளில் வேட்டையாடும் நகங்கள் உள்ள ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடாதெனத்) தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : முஸ்லிம் (3914)

ஒன்றை உண்பது ஹலாலா? ஹராமா? என முடிவு செய்வதற்கு இந்த இரண்டு மட்டுமே அளவுகோலாக சொல்லப்பட்டிருந்தால் ”எலி கறி ” சாப்பிடலாம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இது அல்லாத பல்வேறு அளவுகோல்கள் திருமறைக் குர்ஆனிலும், நபிமொழிகளிலும் கூறப்பட்டுள்ளது. எலிக் கறியைப் பொருத்தவரை அதற்கு அனுமதியில்லை என முடிவு செய்வதற்கு போதுமான சான்றுகள் நபிமொழிகளில் உள்ளன.

 حَدَّثَنَا أَصْبَغُ قَالَ : أَخْبَرَنِي عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ عَنْ يُونُسَ ، عَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ سَالِمٍ قَالَ : قَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَتْ حَفْصَةُ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : خَمْسٌ مِنَ الدَّوَابِّ لاَ حَرَجَ عَلَى مَنْ قَتَلَهُنَّ الْغُرَابُ وَالْحِدَأَةُ وَالْفَأْرَةُ وَالْعَقْرَبُ وَالْكَلْبُ الْعَقُورُ.

ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை இப்னு உமர் (ரலி), ஹஃப்ஸா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி (1826, 1827, 1828 & 1829)

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ شُعْبَةَ ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ سَمِعْتُ قَتَادَةَ يُحَدِّثُ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ عَائِشَةَ – رضى الله عنها – عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « خَمْسٌ فَوَاسِقُ يُقْتَلْنَ فِى الْحِلِّ وَالْحَرَمِ الْحَيَّةُ وَالْغُرَابُ الأَبْقَعُ وَالْفَارَةُ وَالْكَلْبُ الْعَقُورُ وَالْحُدَيَّا ».

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தீங்கிழைக்கக்கூடிய ஐந்து (வகை) உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் வெளியிலும் கொல்லப்படும். பாம்பு, வயிற்றுப் பகுதியிலும், மேற்பகுதியிலும் வெண்மை நிறம் கொண்ட காகம், எலி, வெறிநாய், பருந்து ஆகியவைதாம் அவை.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் 2254

சில அறிவிப்புகளில் ”குராப்” (காகம்) என்று பொதுவாக கூறப்பட்டிருந்தாலும் மேலும் சில அறிவிப்புகளில் ” அல்குராபுல் அப்கஃ” (வயிற்றிலும் மேற்பகுதியிலும் வெண்ணிறம் கொண்ட காகம்) என தெளிவு படுத்தி வந்துள்ளது. எனவே இந்த குறிப்பிட்ட வகை காகம் மட்டுமே கொல்லப்படவேண்டியதாகும்.

மேற்கண்ட இரண்டு அறிவிப்புகளிலும் பாம்பு, வயிற்றுப் பகுதியிலும், முதுகுப் பகுதியிலும் வெண்மை நிறம் கொண்ட காகம், எலி, வெறிநாய், பருந்து , தேள் ஆகிய உயிரினங்கள் புனித எல்லைக்குள்ளும் , வெளியிலும் கொல்லப்பட வேண்டியவை எனக் கூறப்பட்டுள்ளது. இஹ்ராம் அணிந்த நிலையில் உள்ளவர்களே இவற்றைக் கொல்ல வேண்டும் எனும் போது இஹ்ராம் அணியாதவர்கள் இவற்றைக் கொல்லலாமா? கூடாதா? என்ற கேள்விக்கே இடமில்லை. இரண்டு நிலைகளிலும் உள்ளவர்கள் இந்த உயிரினங்களைக் கொல்ல வேண்டும் என்பது தெளிவாகிறது.

இந்த ஹதீஸ் எலியை உண்பது கூடாது என்பதற்கு தெளிவான ஆதாரமாகும். கொல்லப்பட வேண்டும் என மார்க்கம் கட்டளையிட்டவை உண்பதற்கும் தடை செய்யப்பட்டவை ஆகும். குர்ஆனிலும் சுன்னாவிலும் எவையெல்லாம் கொல்லப்பட வேண்டியவை என்றும், கொல்லப்படக் கூடாது என்றும் தடைசெய்யப்பட்டுள்ளதோ அவை உண்பதற்கும் தடை செய்யப்பட்டவை ஆகும்.

தவளையை நபி (ஸல்) அவர்கள் கொல்லக் கூடாது என்று தடை செய்துள்ளார்கள். எனவே அவற்றை உண்பதும் கூடாது. ஏனெனில் சாப்பிடுவதற்காக மார்க்கம் அனுமதித்த முறைப்படி அறுத்தாலோ அல்லது எம்முறையில் கொன்றாலும் அவை உயிர் நீக்கம் செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதிலிருந்தே கொல்லப்படக் கூடாது என்று தடுக்கப்பட்டால் அவை உண்பதற்கும் தடுக்கப்பட்டவை ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் கொல்லக் கூடாது என்று தடுத்திருப்பதில் நாம் அறிந்தது உட்பட அறியாத பல காரணங்களும் இருக்கலாம். எனவே இது மட்டும்தான் காரணம் என்பதை நாம் உறுதி செய்ய இயலாது. அது போன்று கொல்லுங்கள் என்று உத்தரவிட்டவற்றையும் உண்பது கூடாது. நாம் குறிப்பிட்டுள்ள ஹதீஸில் பாம்பு, பருந்து, காகம், தேள் , எலி, வெறிநாய் ஆகியவற்றைக் கொல்லுங்கள் என்று நபியவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். கொல்லுங்கள் என்ற கட்டளையில் உண்ணக் கூடாது என்ற கட்டளையும் உள்ளடங்கியுள்ளது.

கொல்லுதல் என்பது இரண்டு வகைப்படும்.

ஒன்று : உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அல்லாஹ்வின் பெயர் கூறி கூர்மையான கருவியால் அறுத்தல், அது போன்று உண்பதற்காக வேட்டையாடப்படும் பிராணியை மார்க்கம் கற்றுத் தந்த முறைப்படி வேட்டையாடுதல். இம்முறையில் கொல்லப்படுபவை உண்பதற்கு அனுமதிக்கப்பட்டவை ஆகும். இதற்கு ”தப்ஹ்” (ذبح)எனப்படும்.

இரண்டு : அடித்தோ, வெட்டியோ, நசுக்கியோ, மிதித்தோ, எரித்தோ மொத்தத்தில் உண்பதற்காக வரையறுக்கப்பட்ட கொல்லும் முறை அல்லாமல் எம்முறையிலும் கொல்லுதல்.இதற்கு ”கத்ல்” ((قتل எனப்படும்.
இவ்வாறு கொல்லப்படுபவை அனைத்தும் உண்பதற்கு தடைசெய்யப்பட்டவை ஆகும்.இவ்வாறு இரண்டு முறைகள் உள்ளன என்பதை பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் எல்லாவற்றிலும் எளிய முறையை விதியாக்கியுள்ளான். எனவே, கொல்லும்போதும் எளிய முறையில் கொல்லுங்கள். அறுக்கும்போதும் எளிய முறையில் அறுங்கள். உங்களில் ஒருவர் அறுப்பதற்கு முன் கத்தியைத் தீட்டிக்கொள்ளட்டும். அறுக்கப்படும் பிராணியை ஆசுவாசப்படுத்தட்டும்.

அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) நூல் : முஸ்லிம் (3955)

மேற்கண்ட நபி மொழியில் ”கொல்லுதல்” என்பதற்கு ”கத்ல்” என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இது உண்பதற்கான பிராணிகளை எவ்வாறு அறுக்க வேண்டும்,வேட்டையாட வேண்டும் என்று மார்க்கத்தில் வரையறுக்கப்பட்டுள்ளதோ அது அல்லாத முறைகளில் கொல்லப்பட்டவைகளைக் குறிக்கும்.”அறுத்தல்” என்பதற்கு ”தப்ஹ்” என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.இது உண்பதற்கான பிராணிகளை எவ்வாறு அறுக்க வேண்டும்,வேட்டையாட வேண்டும் என்று மார்க்கம் வரையறுத்துள்ளதோ அதற்கு உட்பட்டு கொல்லப்பட்டவைகளைக் குறிப்பதாகும்.

எவ்வாறு கொன்றால் சாப்பிடலாம் என்று மார்க்கம் வரையறுத்து தந்துள்ளதோ அந்த அடிப்படைகளைத் தாண்டி கொல்லப்படுபவை அனைத்துமே ஹராம் ஆகும். இதனை பின்வரும் வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

கழுத்து நெரிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, வனவிலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.) (அல்குர்ஆன் 5 : 3)

மேற்கண்ட வசனத்தில் வரையறுத்த முறையைத் தாண்டி கொல்லப்பட்ட உயிரிழந்த அனைத்துப் பிராணிகளும் ஹராம் என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது. அறுக்கப்பட்டதா? கொல்லப்பட்டதா? எனச் சந்தேகம் வந்தால் கூட அவற்றை உண்பது ஹராம் ஆகும்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் ஈட்டி (மூலம் வேட்டையாடுவதைப்) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், பிராணியை ஈட்டி அதன் முனையால் தாக்கிக் கொன்றால் அதை நீ உண்; பக்கவாட்டாகத் தாக்கிக் கொன்றால் அதை நீ உண்ணாதே. ஏனெனில் அது அடித்துக் கொல்லப்பட்டதாகும் என்றார்கள்.

அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி) நூல் ; புகாரி (2054)

வேட்டையாடும் போது அம்பையோ ஈட்டியையோ அல்லாஹ்வின் பெயர் கூறி எறியும் போது அதன் கூர்மையான பகுதி தாக்கினால்தான் அது அறுக்கப்ப்பட்டது. உண்பதற்கு ஹலாலானது. அல்லாஹ்வின் பெயர் கூறியே எறிப்பட்டாலும் அதன் கூர்மையான பகுதியால் தாக்கப்படாமல் அந்த ஈட்டி அல்லது அம்பு அதன் மீது விழுந்ததினால் அது செத்துப் போனால் அது அடித்துக் கொல்லப்பட்டது. அதை உண்பது ஹராம் ஆகும்.
”தீங்கிழைக்கும் ஐந்து உயிரினங்களைக் கொல்ல வேண்டும்” என்ற நபிமொழியில் இடம் பெறும் ”கத்ல்” என்ற வார்த்தை வரையறுக்கப்பட்ட முறையைத்தாண்டி கொல்லப்படுதல் என்ற பொருளில்தான் இந்த செய்தியில் இடம் பெற்றுள்ளது.

இஹ்ராமுடைய நிலையில் உள்ளவர்கள் உணவிற்காக தரையில் வேட்டையாடுவது ஹராம் ஆகும். ஒரு பிராணியை வேட்டையாடி சாப்பிட வேண்டுமென்றால் அது மார்க்கம் குறிப்பிட்ட முறையில் வேட்டையாடப்பட்டிருக்க வேண்டும். ”தீங்கிழைக்கக் கூடிய ஜந்து உயிரினங்களை இஹ்ராம் நிலையில் உள்ளவர்களும் கொல்லலாம்” என்றால் அது உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட உயிரினம் இல்லை என்பது தெளிவாகிறது. அது போன்று ”இஹ்ராமுடைய நிலையில் உள்ளவர்களும் கொல்லுங்கள்” என்று கட்டளையிடுவதின் மூலம் அடித்தோ, வெட்டியோ, நசுக்கியோ கொல்லும் முறையைத்தான் நபியவர்கள் கட்டளையிடுகிறார்கள் .

பின்வரும் செய்தியிலிருந்தும் அதனை அறிந்து கொள்ளலாம்.

ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “இஹ்ராம் கட்டிய ஒருவர் எந்த உயிரினங்களைக் கொல்லலாம்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர் “வெறிநாய், எலி, தேள், பருந்து, காகம், பாம்பு ஆகியவற்றைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுவந்தார்கள்’ என்று என்னிடம் கூறினார்” என்றார்கள். இவற்றை ஒருவர் தொழுகையில் இருக்கும்போதும் கொல்லலாம் என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

நூல் : முஸ்லிம் (2262)

தொழுகையில் இருக்கும் போதும் இந்த ஐந்து உயிரினங்களைக் கொல்லலாம் என்று இப்னு உமரின் இந்த செய்தி குறிப்பிடுகிறது. ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது பாம்போ, தேளோ வரும் என்றால் எப்படிக் கொன்றால் அது சீக்கிரம் சாகுமோ அந்த முறையில்தான் அதனைக் கொல்வார். அதனைப் பிடித்து பிஸ்மி கூறி கூர்மையான கருவியால் அறுத்துக் கொண்டிருக்கமாட்டார். இவ்வாறு ”உண்பதற்காக வரையறுக்கப்பட்ட முறையைத் தாண்டி” வேறு முறைகளில் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டால் அவை உண்பதற்கு அனுமதிக்கப்பட்டவை இல்லை என்பைதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். இதிலிருந்து எலியை உண்பது அனுமதியல்ல என்பது தெளிவாகிறது.

எலியை உண்பது ஹலாலாக இருக்குமென்றால் உண்ணத் தக்க ஒன்றை கொல்லுமாறு நபியவர்கள் கட்டளையிடுவார்களா? எலி உண்ணத் தக்க பிராணி என்று வாதிப்பவர்கள் அதை பண்ணை வைத்து வளர்ப்பது ஹலால் என்று ஃபத்வா கொடுப்பார்களா? நபி (ஸல்) அவர்கள் கொல்லுங்கள் என்றோ , கொல்ல வேண்டாம் என்றோ தடை செய்தவை தவிர மற்ற பிராணிகளைப் பொறுத்த வரை அவை வேறு வகையில் உண்பதற்கு தடை செய்யப்பட்ட வரையறைக்குள் வரவில்லையென்றால் அவை ஹலாலானவை ஆகும்.

தீங்கு தரக் கூடியவற்றை உண்பது ஹராம் ஆகும்.

எலி, பருந்து, காகம், தேள், வெறிநாய், பாம்பு ஆகியவற்றை ”ஃபவாஸிக்” தீங்கு இழைக்கக் கூடியவை என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ”ஃபாஸிக்” என்றால் ”வெளியேறக் கூடியவன்” என்று பொருளாகும். இதனுடைய பெண்பால் ஒருமை ”ஃபாஸிகா” என்பதாகும். இதன் பொருள் ”வெளியேறக் கூடியவள்” என்பதாகும். இந்த ”ஃபாஸிகா” என்பதின் பன்மைச் சொல்தான் ”ஃபவாஸிக்” என்பதாகும். ”வெளியேறக்கூடிய பெண்கள்” என்பது இதன் பொருளாகும். பாவம் செய்யக் கூடியவர்கள் இறைவனின் கட்டளையை விட்டும் வெளியேறுவதால் அவர்கள் ”ஃபாஸிக்” பாவி என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறார்கள்.

ஓரினச் சேர்க்கை எனும் கேடான, அசிங்கமான செயலைச் செய்த லூத் சமுதாயத்தவர்களை திருமறைக் குர்ஆன் பாவிகள் என்று குறிப்பிடுகிறது.

{ وَلُوطًا آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا وَنَجَّيْنَاهُ مِنَ الْقَرْيَةِ الَّتِي كَانَتْ تَعْمَلُ الْخَبَائِثَ إِنَّهُمْ كَانُوا قَوْمَ سَوْءٍ فَاسِقِينَ} [الأنبياء: 74]

லூத்துக்கு அதிகாரத்தையும், கல்வியையும் அளித்தோம். அசிங்கமான காரியங்களைச் செய்து வந்த கிராமத்திலிருந்து அவரைக் காப்பாற்றினோம். அவர்கள் கெட்ட கூட்டமாகவும், பாவிகளாகவும் இருந்தனர்.

(அல்குர்ஆன் 21 : 74)

மேற்கண்ட வசனத்தில் ”அசிங்கமான காரியங்கள்” என்பதற்கு ”ஹபாயிஸ்” என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இறைவன் தடுத்த கேடான காரியங்களைச் செய்யும் மனிதர்களுக்கு பாவிகள் என்று கூறப்படுகிறது.
அந்த வார்த்தையை இரவலாகப் பெற்று கேடுவிளைவிக்கும் காரியங்களைச் செய்யும் உயிரினங்களுக்கு ஃபவாஸிக் என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.

وإنما سميت هذه الحيوانات فَوَاسِقَ على الإستعارة لخبثهن -لسان العرب (10/ 308

இந்த உயிரினங்களின் கேடுகளினால் ஃபவாஸிக் என்ற வார்த்தையை இரவலாகப் பெற்று அவற்றுக்கு (ஃபவாஸிக் என்று) பெயரிடப்பட்டுள்ளது.

(லிஸானுல் அரப் பாகம் 10 பக்கம் 308)

ஃபவாஸிக் என்றால் பாவிகள் என்று பொருள். மேற்கண்ட உயிரினங்கள் மனித குலத்திற்கு கேடு உண்டாக்குவதினால் அந்த வார்த்தை மூலம் இந்த உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த ஐந்து உயிரினங்களும் கேடு தரக் கூடியவை என்பது தெளிவாகிவிட்டது. ஒன்றை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கேடு தரக் கூடியவை என்று குறிப்பிட்டுவிட்டால் அவை உண்பதற்கும் ஹராமாகிவிடும்.

நபியவர்களைப் பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

{وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ } [الأعراف: 157]

தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். கேடுதரக்கூடியவைகளை அவர்களுக்குத் தடை செய்கிறார்.

(அல்குர்ஆன் 7 : 157)

அல்லாஹ்வும் , அவனது தூதரும் எவற்றையெல்லாம் கேடுதரக் கூடியவை என்று குறிப்பிட்டு விட்டார்களோ அவை அனைத்துமே தடை செய்யப்பட்டவை ஆகும். அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு செயலை கேடு தரக் கூடியது என்றோ அசிங்கமானது என்றோ குறிப்பிட்டால் அந்தச் செயலை செய்வது ஹராம் ஆகும். 

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு உயிரினத்தை கேடுதரக் கூடியது என்று குறிப்பிட்டால் அவற்றை உண்பது ஹராம் ஆகும். கேடு தரக் கூடியவை என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் பொத்தாம் பொதுவாகக் குறிப்பிட்டு விட்டாலே அவை தடை செய்யப்பட்டவைதான். எந்த வகையான கேடு என்று பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.