Tamil Bayan Points

04) சிலைகள் வேறு! சமாதிகள் வேறு!

நூல்கள்: தர்கா வழிபாடு

Last Updated on February 24, 2022 by

இறைவனிடம் சிபாரிசு செய்பவர்கள் என்று மக்கத்துக் காபிர்கள் எண்ணியது ஒரு சக்தியுமற்ற கற்சிலைகளைத் தான்; மகான்களை அல்ல என்று சிலருக்குச் சந்தேகம் எழலாம்.

இது அடிப்படையில்லாத சந்தேகமாகும்.

அல்லாஹ்வைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் நமக்கு இடப்பட்ட கட்டளை. இதில் சமாதியையும் சிலைகளையும் வேறுபடுத்திப் பார்க்க எந்த ஆதாரமும் இல்லை. முகாந்திரமும் இல்லை. சிலைகளும், சமாதிகளும் இதில் சமமானவை தான்.

மக்கத்துக் காபிர்கள் வணங்கியது தீயவர்களின் சிலைகளைத் தான். நாங்கள் மகான்களின் சமாதிகளை அல்லவா வணங்குகிறோம் என்றும் சிலர் கேட்கின்றனர்.

இந்த வாதமும் தவறானதாகும். ஏனெனில் மக்கா காபிர்கள் வணங்கியதும் பெரும்பாலும் நல்லடியார்களையும், நபிமார்களையும் தான். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கஃபாவுக்குள் இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவச்சிலைகளைக் கண்டார்கள். அவற்றைத் தம் கைத்தடியால் அப்புறப்படுத்திய பின்பே உள்ளே நுழைந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1601, 3352, 4289,

மற்றொரு அறிவிப்பில்  இப்ராஹீம் நபி, மர்யம் (அலை) ஆகியோரின் சிலைகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

நூல்: புகாரி 2351

நல்லடியார்களிடம் பிரார்த்தனை செய்வதும், அவர்கள் இறைவனிடம் பரிந்து பேசிப் பெற்றுத் தருவார்கள் என்று நம்பி அவர்களை வழிபடுவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டிருக்குமானால் அந்த நபிமார்களின் சிலைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்புறப்படுத்தியிருக்க வேண்டியதில்லை.

யூத கிறித்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் தங்கள் நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஆக்கி விட்டனர்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 436, 437, 1390, 3454, 4441, 4444, 5816,

உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அபூதாவூத் 1746,

அவர்களில் நல்லவர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்பிக் கொண்டனர். அவர்களது உருவங்களையும் அதில் செதுக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் படைப்புகளிலேயே இவர்கள் தான் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 427, 434, 1341, 3873

சமாதிகளின் மீது கட்டடம் கட்டுவதையும், அது பூசப்படுவதையும், அதன் மீது உட்கார்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1610

இஸ்லாத்தின் பார்வையில் சமாதிகளும், சிலைகளும் சமமானவை தான் என்பதற்கு இந்த நபிமொழிகள் சான்றுகளாக உள்ளன.

‘சமாதி வடிவம் என்றாலும் கூட அதுவும் இறைவனின் சாபத்திற்குரியதே’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்த பின் சமாதிகளை வழிபடலாம் என்ற வாதத்தில் நியாயம் எதுவுமில்லை என்பதை உணர வேண்டும்.