Tamil Bayan Points

தலையை வெட்டினாலும் திரும்ப வளருவேன்!

பயான் குறிப்புகள்: அறிவியல் உண்மைகள்

Last Updated on October 11, 2016 by Trichy Farook

உறுப்புகளை வளர்க்கும் உயிரினங்கள்

கடல் நண்டு போன்ற எத்தனையோ பிராணிகள், அவற்றின் கால்கள் அல்லது கொடுக்குகளில் ஒன்றை இழந்து விட்டால் தனது உடலில் ஓர் உறுப்பு குறைந்து போய் விட்டதைத் தெரிந்து கொண்டு உடலிலுள்ள உயிரணுக்களையும், மரபு வழிக் காரணிகளையும் தூண்டுகின்றன. இழந்த உறுப்புக்குப் பதிலாக வேறொரு காலையோ அல்லது கொடுக்கையோ வளரச் செய்து இழப்பை ஈடு செய்து கொள்கின்றன.

எப்போது அந்த உயிரணுக்கள் சேர்ந்து காலாக, கொடுக்காக மாறுகின்றனவோ அப்போது அவை தமது செயல்பாட்டை, அதாவது வளர்ச்சியை நிறுத்திக் கொள்கின்றன. இழந்த உறுப்பு வளர்ச்சியடைந்த உடன் தமது செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும் நேரம் வந்து விட்டது என்பதை அந்த உயிரணுக்கள் எப்படியோ ஒரு முறையில் தெரிந்து கொள்கின்றன.

ஆக்டோபஸ்

ஆக்டோபஸ் என்ற பல கால்களையுடைய ஒரு கடல்வாழ் உயிரி இரண்டாகப் பிளந்து விட்டாலும், அந்த இரண்டு துண்டங்களில் ஒரு துண்டத்தின் வழியாகத் தன்னைச் சீர் செய்து கொள்ளும் ஆற்றல் மிக்கதாகத் திகழ்கின்றது.

புழுக்களின் தலை

உணவுப் பண்டங்களில் காணப்படும் ஒரு வகைப் புழுக்களின் தலையை நாம் கொய்து விட்டால் விரைந்து இன்னொரு தலையை உருவாக்கிக் கொள்ள அதனால் முடியும்.

நமது உடலில் ஏற்படும் வெட்டுக் காயங்களின் உயிரணுக்களைத் தூண்டி முன்பிருந்தபடியே அவை இணைந்து கொள்ளும்படிச் செய்வதற்கு நம்மாலும் முடிகின்றது. என்றாலும் ஒரு புதிய கையையோ, அல்லது சதைப் பகுதியையோ, எலும்பு, நகம், நரம்புகளையோ இழந்து விடும் போது அவற்றை மீண்டும் உருவாக்க உயிரணுக்களை எவ்வாறு தூண்ட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வது எப்போது சாத்தியமாகும்? அந்நிலையை மனிதன் அடைவது சாத்தியம் தானா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

உடலில் இழந்த அல்லது சேதமுற்ற பகுதி புதிதாக உருவாவது எவ்வாறு? எனும் புதிருக்கு விளக்கமளிக்கக் கூடிய வியத்தகு உண்மை ஒன்று இங்கே இருக்கின்றது. உயிரணுக்கள் தமது முதல் கட்டங்களின் போது பல கூறுகளாகப் பிரிகின்றன. அவ்வாறு அவை பிரியும் போது அவற்றில் ஒவ்வொரு அணுவும் முழுமையான வேறொரு உயிரைப் படைக்க ஆற்றல் மிக்கதாய் மாறி விடுகின்றது. முதல் உயிரணு இரண்டாகி, பின்னர் அவ்விரண்டும் பிரிந்து நான்காகி இப்படியே பிரிந்து கொண்டு போனாலும் ஒன்று போல் தோற்றமளிக்கக் கூடிய இரண்டிற்குள்ளும் அவற்றைப் பற்றிய எல்லா விபரங்களும் அடங்கியிருக்கின்றன. இன்னும் எத்தனையோ செய்திகள் அவை ஒவ்வொன்றின் உள்ளும் பதிவாகியிருப்பதை நாம் நுண்ணோக்காடியில் காணலாம்.

மொத்தத்தில் தனித்தனியான ஒவ்வொரு அணுவுக்குள்ளும் அந்தப் படைப்பின் முழுமையான தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த அடிப்படையில் நமது உடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுக்குள்ளும் நம்மைப் பற்றிய எல்லா தகவல்களும் அடங்கியிருப்பதால் அந்த உயிரணுக்கள் ஒவ்வொன்றிற்குள்ளும் அதன் ஒவ்வொரு இழைகளிலும் நாம் இருக்கிறோம் என்பதில் மட்டும் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.