Tamil Bayan Points

தீண்டாமை ஒழிப்பில் தோற்றுப் போன திட்டங்கள்

பயான் குறிப்புகள்: கொள்கை உறுதி

Last Updated on February 5, 2020 by

தீண்டாமை ஒழிப்பில் தோற்றுப் போன திட்டங்கள்

இந்தியாவில் புரையோடிப் போன தீண்டாமையைக் களைய, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த, பிற இனங்களைச் சார்ந்த சீர்திருத்தவாதிகள், புரட்சியாளர்கள் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தனர்.

நாத்திகம்

கடவுள், விதி, பாவம், புண்ணியம், வேதம் போன்றவற்றின் மீது கொண்ட நம்பிக்கையும் தீண்டாமைக்கு ஒரு காரணம் என்று முடிவு கட்டி, கடவுள் கிடையாது என்று நாத்திகத்தின் பால் சென்றார் ஈ.வெ. ராமசாமி.

கடவுள் கிடையாது; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; காட்டுமிராண்டி என்று அவர் தமிழக மக்களிடம் போதிக்கலானார். சாதிய ஒழிப்புக்கு அவர் எடுத்துக் கொண்ட இந்த ஆயுதத்திற்குப் படித்தவர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. பல அறிஞர்கள் இந்தக் கொள்கையில் விரைவாகக் கவரப்பட்டனர்.

இதற்காக இவர் திராவிடர் கழகம் என்ற அமைப்பைக் கண்டார். அண்ணாத்துரை, நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், எம்.என். நடராஜன், கருணாநிதி போன்றோர் இந்த இயக்கத்தில் ஐக்கியமாயினர். தமிழகமெல்லாம் இந்தப் புரட்சித் தீயைக் கொண்டு சென்றனர்.

புரட்சித் தீயில் பொசுங்கிய புராணங்கள்

அவர்கள் கொளுத்திய புரட்சித் தீயில் புராணங்கள் பொசுங்கின. அவர்களின் எரிமலைப் பேச்சுக்களில் இதிகாசங்கள் எரிந்தன. பூணூல் போட்ட பார்ப்பனர்கள் இவர்களது பொறி பறக்கும் பேச்சில் பொரிந்து போனார்கள். அண்ணாத்துரை எழுதிய ஆரிய மாயை என்ற நூல், ஆரியத்தின் வீரியத்தை அரவமில்லாமல் அடக்கியது. நாத்திகக் கொள்கை இந்த வகையில் ஓரளவு பலனளித்தது; சாதி ஒழிப்பு இதன் மூலம் நடைபெற்றது.

சாதிக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று! ஆரியம் வாழ்வதற்கும், ஆள்வதற்கும் அஸ்திவாரமாக இருக்கும் வர்ணாசிரம தர்மம் துடைக்கப்பட வேண்டும்; தூக்கியெறியப்பட வேண்டும். ஆனால் அதற்காகக் கடவுள் இல்லை என்ற கொள்கையை ஏற்க முடியுமா? என்று நாத்திகக் கொள்கையைப் பலரால் ஏற்க முடியவில்லை. அந்த வகையில் அந்தக் கொள்கை தோற்றுப் போனது. அத்துடன் திராவிடர் கழகத்தில் பிளவு ஏற்பட்டு தி.மு.க. உருவானது. அதிலிருந்து பிரிந்து அ.தி.மு.க. உருவானது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கொள்கை பின்னுக்குப் போனது. ஆட்சியைத் தக்க வைப்பது தான் அதன் குறியானது. இறுதியில், ஆரியத்தை வீழ்த்தப் புறப்பட்ட திராவிடம், ஆரியத்திடம் தோற்றுப் போனது. ஆம்! ஆரிய பி.ஜே.பி.யிடம் கூட்டணி வைத்து, செயல்பாட்டில் மட்டுமல்ல! சிந்தனையளவிலும் ஆரியமெனும் ஆக்டோபஸிடம் மாட்டிக் கொண்டது.

தீண்டாமையை ஒழிப்பதற்கு நாத்திகம் என்ற வாகனத்தில் புறப்பட்டு வந்த திராவிட இயக்கங்கள் அரை நூற்றாண்டு காலத்திற்குள் சாதியத்தை உயிர் மூச்சாகக் கொண்ட ஆரியத்திடம் சரணாகதி அடைந்தன. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இயற்றத் தான் முடிந்ததே தவிர அனைவரும் பிராணமர் ஆகலாம் என்ற மாற்றத்தைத் தர முடியாமல் ஆனது.

கல்வி

தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியறிவு பெற்று விட்டால் சாதியம் கரைந்து விடும் என்று கருதி தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக் கண் திறப்பதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் புரட்சியாளர்கள், புதிய சிந்தனைவாதிகள் செய்தனர்.

காலங்காலமாக அழுத்தப்பட்ட இந்த மக்கள் ஏற்கனவே முன்னேறிய சமுதாயத்தவருடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னேற முடியாது. அதற்கு இட ஒதுக்கீடு அவசியம் என்று கருதி இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தனர்.

நாடு விடுதலை பெற்று அரை நூற்றாண்டைத் தாண்டி விட்டது. கல்வியாலும் தீண்டாமை ஒழிந்தபாடில்லை; ஒழியப் போவதுமில்லை. அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு தான் கைர்லாஞ்சி சம்பவம். மகராஷ்ட்ரா மாநிலம், பாந்த்ரா மாவட்டத்தில் உள்ள கைர்லாஞ்சியில் நான்கு தலித்துக்கள் கொலை செய்யப்படுகின்றனர். அவர்கள் கொல்லப்பட்டதற்குக் காரணம் இந்த நால்வரும் கல்வியறிவு பெற்றிருந்தது தான். (இது குறித்து “தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே” என்ற கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது,)

அவர்கள் கல்வியறிவு பெற்றது அந்தச் சமூகத்தில் கவுரவம் பெறுவதற்கு வழிவகுக்கவில்லை; அவர்கள் களப்பலி ஆவதற்குத் தான் வழிவகுத்திருக்கின்றது. எனவே கல்வியறிவு பெற்றுவிட்டால் சாதியம் ஒழிந்து விடும் என்று நாம் கனவு காண முடியாது.

பொருளாதாரம்

தாழ்த்தப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி பெற்று விட்டால் சாதியம் ஒழிந்து போகும் என்று கருதி, அவர்களது பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசாங்கத்தின் அனைத்து வாசல்களும் திறக்கப்பட்டன; வாய்ப்புகள் வழங்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட மக்களில் இன்று பொருளாதாரத்தில் சிகரத்தைத் தொட்டவர்கள் இருக்கிறார்கள்; இமயத்தில் ஏறியவர்களும் இருக்கிறார்கள்.

என்ன தான் பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்கள் ஒரு பிராமண வீட்டில் போய் திருமணம் செய்ய முடியுமா? பிராமண ஆச்சாரம் அவர்களிடத்தில் சம்பந்தம் கொள்ள அனுமதிக்குமா? ஆசீர்வதிக்குமா? ஒரு போதும் அனுமதிக்காது.

ஒரு தாழ்த்தப்பட்டவரிடம் சரியான பண வசதியிருக்கலாம். ஆனால் அதன் மூலம் பிராமண குடும்பத்தில் சம்பந்தம் பண்ண உதவாது. எனவே இந்த வகையில் பொருளாதார முன்னேற்றத்தினால் சாதியம் ஒழிந்து விடாது. சமூக அந்தஸ்து கிடைத்து விடாது.

ஆட்சியதிகாரம்

இவ்வளவு காலம் அடங்கிப் போன மக்களிடம் ஆட்சி, அதிகாரம் வந்து விட்டால் இந்த இழிநிலை மாறிப் போய் விடும்; தீண்டாமையெனும் கோட்டை தகர்ந்து போய் விடும் என்றெண்ணி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சிகள் உயர் பதவிகள் அளித்தன. இட ஒதுக்கீட்டிலும் பதவிகள் வழங்கப்பட்டன. ஆனால் அவற்றால் எதிர்பார்த்த தீர்வைத் தர முடியவில்லை. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்பவர், இந்திரா காந்தி அமைச்சரவையில் இராணுவ அமைச்சராகப் பணி புரிந்த பாபு ஜெகஜீவன் ராம் அவர்கள்.

இராணுவ அமைச்சர் என்பது இந்தியாவின் மிகப் பெரிய பொறுப்பாகும். இப்படிப்பட்ட பொறுப்பை வகித்த ஒருவர், ஒரு சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்; ஒரு தாழ்த்தப்பட்டவர் அந்தச் சிலையைத் திறந்து வைத்ததால் அது தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி, உயர்ஜாதிக்காரர்கள் கங்கை நீரால் அதைக் கழுவினார்கள். இந்த நிகழ்வை இந்தியா மறந்திட முடியுமா?

இங்கே ஆட்சி, அதிகாரத்தில் இருந்து விட்டால் தீண்டாமை தொலைந்து விடும் என்பது தொலைவான கருத்து என்பதை நாம் உணரலாம். எனவே அமுக்கப்பட்ட ஓர் இனம் ஆளும் வர்க்கமாகி விட்டால் அதற்கு அந்தஸ்து வரும்! ஆனால் தீண்டாமை அகலாது; அழியாது என்பதற்கு ஜெகஜீவன் ராமின் நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டு!

இட ஒதுக்கீடு முறையில் தலித்துகளுக்கு ஒதுக்கப்படும் தனித் தொகுதிகளில் கூட பார்ப்பனர்களைத் தலைவர்களாகக் கொண்ட கட்சியினர் ஜெயித்து விடுகின்றார்கள். அதன் பின் அவர்கள் இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராகவே போராடுகின்றார்கள். இது தான் அரசியலில் இட ஒதுக்கீடு பெற்ற தலித்துகளின் நிலை.

கலப்புத் திருமணம்

கலப்புத் திருமணம் செய்தால் தீண்டாமை ஒழிந்து விடும் என்று கூறி அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதுவும் எடுபடாமல் போனது.

தமிழகத்தில் சாதியக் கட்சிகள் பெருக்கெடுத்து, அவற்றின் ஆதிக்கம் வலுப்பெற்று வருகின்றது. தேவர் சமுதாயம் தங்களுக்கென ஒரு அமைப்பையும், நாடார் சமுதாயம் தங்களுக்கென ஒரு பேரவையையும் வன்னியர்கள் தங்களுக்கென ஒரு கட்சியையும் உருவாக்கி சமுதாயத்தின் வாக்குகளை தங்கள் கட்சிகளுக்கு வாரிக் கொண்டிருக்கின்றனர்.

“வன்னியர் வாக்கு அந்நியருக்கு இல்லை” என்பது ஒரு சமுதாயத்தின் முழக்கம். வாக்கே அடுத்தவருக்கு இல்லை எனும் போது வாழ்க்கை அடுத்த சமுதாயத்திற்கு எப்படிக் கிடைக்கும்? அது எப்படித் தாரை வார்க்கப்படும்? அதன் விளைவு தான் உடுமலை சங்கர், தர்மபுரி இளவரசன் படுகொலைகள். கலப்புத் திருமணத்தால் பலியான உயிர்கள். எனவே கலப்புத் திருமணமும் கானல் நீரானது; கால வேகத்தில் சாதியக் கட்சிகளின் வெள்ளப் பெருக்கில் கரைந்து போனது.

ஆக, கல்வி, பொருளாதாரம், ஆட்சியதிகாரம், கலப்புத் திருமணம் என்று தீண்டாமைக்கு எதிராகக் கிளம்பிய திட்டங்கள் எதுவும் தீர்வாகவில்லை; திருப்புமுனை ஆகவில்லை. அதிலும் அண்மையில் தமிழகத்தில் விஷ விருட்சங்கள் போல் முளைத்துக் கிளம்பி, பெருகி வரும் சாதிக் கட்சிகளும் அவற்றின் சாம்ராஜ்யங்களும் இங்கு சாதிகள் ஒழியாது என்பதற்குச் சரியான சாட்சிகள். திராவிட இயக்கங்களின் சாதிய ஒழிப்பு தோல்வி கண்டதற்கு இவை தலைசிறந்த எடுத்துக்காட்டுகள்.

குறைபட்ட சிந்தனையும் குறுகிய வட்டமும்

தீண்டாமை என்பது தமிழகத்தில் மட்டுமோ, அல்லது இந்தியாவில் மட்டுமோ தொற்றி நிற்கும் நோயல்ல! உலகமனைத்திலும் பற்றிப் பரவி மக்களை அழிக்கும் ஒரு கொடிய, கோரத் தீ! எனவே அதற்குரிய தீர்வு ஒரு குறுகிய வட்டத்தில் இருக்கக் கூடாது. தீண்டாமையை ஒழிக்க நாம் மேலே கண்ட தீர்வுகள் எல்லாம் தமிழக அளவில், அல்லது இந்திய அளவில் தான் அமைந்திருக்கின்றன. உலக அளவில் தீண்டாமை ஒழிப்பிற்குப் பொருந்தக் கூடியவையாக இல்லை.

ஆப்பிரிக்கா இதுவரை தீண்டாமை எனும் தீயில் எரிந்து, கரிந்து கொண்டிருக்கின்றது. இதற்கு யார் தீர்வு தருவது? ஆப்பிரிக்கா மட்டுமல்ல! அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என உலகின் அனைத்துக் கண்டங்களிலும் நிலவுகின்ற தீண்டாமையைத் துடைத்தெடுக்கும் வகையில் உலகளாவிய தீர்வாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட மொழி, இனம், வட்டாரம் சார்ந்ததாக இருக்கக் கூடாது. அப்படி இருக்குமானால் அது குறைவுபட்ட குறுகிய சிந்தனையாகவே அமையும்; தூர நோக்குடன் கூடிய சிந்தனையாக அமையாது.

அப்படிப்பட்ட தூர நோக்குள்ள திட்டம் எங்கு இருக்கின்றது? எதில் இருக்கின்றது?

இந்து மதம்

இந்து மதத்தில் இருக்கின்றதா? என்று பார்த்தால் அங்கு இல்லை என்று சொல்வதை விட, அதுதான் மனுசாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு சாதியத்தின் வேராகவும், விருட்சமாகவும் அமைந்திருக்கின்றது என்பதை மேலே நாம் விரிவாகப் பார்த்தோம்.

புத்த மதம்

சட்ட மேதை என்று வர்ணிக்கப்படும் டாக்டர் அம்பேத்கர், தீண்டாமைக்குத் தீர்வு புத்த மதம் தான் என்று தன்னுடைய தொண்டர்களுடன் புத்த மதம் புகுந்தார்.

அக்டோபர் 2ஆம் தேதியன்று அம்பேத்கரின் புத்த மதப் பிரவேசத்தின் அடையாள நாள். ஆம்! லட்சக்கணக்கான தொண்டர்களுடன் அம்பேத்கர் புத்த மதம் புகுந்ததன் ஐம்பதாவது ஆண்டு நினைவு நாளுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் தான் மேலே நாம் குறிப்பிட்ட கைர்லாஞ்சி தலித் படுகொலைச் சம்பவம் நடைபெறுகின்றது. அதைத் தொடர்ந்து இரண்டு ரயில்கள் கொளுத்தப்படுகின்றன. மகராஷ்ட்ரா முழுவதும் வன்முறை பற்றி எரிகின்றது.

மகராஷ்ட்ராவில் தான் அம்பேத்கரின் புத்த மதத் தழுவல் நடைபெற்றது. இந்த மதமாற்றம் நடந்து அரை நூற்றாண்டுகள் ஆன பின்னர் அதே மகராஷ்ட்ராவில் நடைபெற்றுள்ள இந்த வன்முறைச் சம்பவங்கள் எதைக் காட்டுகின்றன? அம்பேத்கரின் புத்த மதத் தழுவல் தீண்டாமைக்குத் தீர்வாகவில்லை என்பதையே காட்டுகின்றன.

பைபிளிலும் தீண்டாமைக்குத் தீர்வில்லை!

உலகளாவிய மதங்கள் என்று எடுத்துக் கொண்டால் கிறிஸ்துவ மதத்தைக் குறிப்பிடலாம். இவர்களின் வேதமான பைபிளிலும் தீண்டாமைக்குத் தீர்வில்லை என்பது உண்மையாகும்.

யூத மதத்தை எடுத்துக் கொண்டால் பார்ப்பனியத்தின் மறு பதிப்பு தான் அது! பிறப்பால் தான் யூதராக முடியுமே தவிர, மத மாற்றம் அங்கு இல்லை. கிறித்தவ மதத்திலும் தீண்டாமைக்குத் தீர்வு இல்லை.

பைபிள் கூறுவதைக் கேளுங்கள்:

அன்னியன் ஒருவன் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது. ஆசாரியன் வீட்டில் தங்கி இருக்கிறவனும் கூலி வேலை செய்பவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது.

(லேவியராகமம் 22:10)

ஆசாரியனுடைய குமாரத்தி அன்னியனுக்கு வாழ்க்கைப்பட்டால் அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது.

(லேவியராகமம் 22:12)

ஆசாரியர் (புரோகிதர்) குலத்தில் பிறந்து விட்ட பெண், அன்னிய ஜாதிக்கு வாழ்க்கைப்பட்டு விட்டால் அவளும் அந்த ஜாதியில் சேர்ந்து விடுவாள் என்று பைபிள் கூறுகின்றது.

அப்போது அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியப் பெண் ஒருத்தி அவரிடத்தில் (இயேசுவிடம்) வந்து, “ஆண்டவரே! தாவீதின் குமாரனே! எனக்கு இரங்கும். என் மகள் பிசாசினால் கொடிய வேதனை செய்யப்படுகிறாள்” என்று சொல்லிக் கூப்பிட்டாள். அவளுக்குப் பிரதியுத்திரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.

அப்போது அவருடைய சீடர்கள் வந்து, “இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே! இவளை அனுப்பி விடும்” என்று அவரை வேண்டிக் கொண்டார்கள். அதற்கு அவர் “காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப் பட்டேனே அன்றி மற்றபடி அல்ல” என்றார்.

அவள் வந்து, “ஆண்டவரே! எனக்கு உதவி செய்யும்” என்று அவரை நோக்கிப் பணிந்து கொண்டாள். அவர் அவளை நோக்கி, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல” என்றார். அதற்கு அவள், “மெய் தான் ஆண்டவரே! ஆயினும் நாய்க் குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜைகளிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே!” என்றாள்.

(மத்தேயு 15:22-27)

இந்தச் சம்பவத்தில், இஸ்ரவேல் புத்திரர்களை பிள்ளைகள் என்றும், கானானிய இனத்தவர் நாய்களைப் போன்றவர்கள் என்றும் பைபிள் கூறுகின்றது. வர்க்க பேதத்தை, வர்ணாசிரம தத்துவத்தை பைபிள் ஆதரிப்பதற்கு இதை விடச் சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை.

மேலும் இஸ்ரவேல் மக்களைத் தவிர வேறு யாருக்காகவும் தாம் அனுப்பப்படவில்லை என்று இயேசு கூறியதாகவும் மேற்கண்ட வசனம் கூறுகின்றது. இஸ்ரவேல் மக்களைத் தவிர வேறு யாரையும் ஏற்றுக் கொள்வதற்குக் கிறித்தவ மார்க்கம் தயாராக இல்லை.

கடவுள் என்பவன் இஸ்ரவேலர்களுக்கு மட்டும் தான். பூமியில் வேறு யாருக்கும் இல்லை.

(இரண்டாம் ராஜாக்கள் 5:15)

நாம் பிறப்பால் யூதர்கள். நாம் யூதரல்லாத பாவிகள் இல்லை.

(கலாத்தியர் 2:15)

உலகளாவிய அளவில் பைபிள் தன்னிடம் தீண்டாமைக்குத் தீர்வில்லை என்று தெளிவாகப் பிரகடனம் செய்து விட்டது. இந்திய மற்றும் தமிழக அளவில் இதற்கு எப்படித் தீர்வு கிடைக்கும்?

இதனால் தான் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கிறித்தவ மதத்திற்கு மாறினாலும் அங்கு தலித் கிறித்தவர்களாகவே வாழ்கின்றனர். நாடார்கள் கிறித்தவ மதத்திற்குச் சென்றாலும் கிறித்தவ நாடார்களாகவே இருக்கின்றனர்.

தீண்டாமைக்கு தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே!

தீண்டாமையைப் பெயரளவுக்கு இல்லாமல் செயலளவில் ஒழித்து காட்டியது திருக்குர்ஆனும், அதைப் போதிக்க வந்த திருத்தூதர் (ஸல்) அவர்களும் தான் என்பதை இதுவரை கண்ட செய்திகளிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலவும் தீண்டாமையை அல்ல! உலகம் முழுவதும் பல்வேறு பெயர்களில், பல்வேறு கோணங்களில் பரவிப் பீடித்துள்ள இந்தத் தீண்டாமை நோயைத் தீர்க்கும் மருந்து திருக்குர்ஆனிலும், அது கூறும் திருத்தூதரின் பாதையிலும் தான் உள்ளது என்பதை இதன் மூலம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

இந்தியாவில் தீண்டாமையிலிருந்தும் இதர ஏற்றத் தாழ்வுகளிலிருந்தும் விடுதலை பெறுவதற்கு, விமோசனம் பெறுவதற்கு ஒரே ஒரு தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே என்று அந்தத் திருக்குர்ஆனின் பக்கம் மக்களை அன்புடன் அழைக்கின்றோம்.