Tamil Bayan Points

நபித் தோழர்கள் சூனியத்தை நம்பினார்களா?

முக்கிய குறிப்புகள்: சர்ச்சைக்குரியவை

Last Updated on October 18, 2016 by Trichy Farook

சூனியத்தினால் எந்த தாக்கத்தையும் உண்டாக்க முடியாது. சூனியத்தினால் தாக்கத்தை உண்டாக்க முடியும் என்று நம்புவது இணைவைப்பு, நல்லது கெட்டது எது நடந்தாலும் அது இறைவன் புறத்தினால் தான் ஏற்படுமே தவிர அதனைத் தாண்டி யாரும் யாருக்கும் எவ்வித தீங்குகளையும் செய்து விட முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

அல்லாஹ் தனக்கு ஏராளமான பண்புகள் இருப்பதாக திருமறைக் குர்ஆனில் நமக்குக் கற்றுத் தருகின்றான். அந்தப் பண்புகளில் ஏதாவது ஒன்று இறைவனுக்கு இருப்பதைப் போல் மனிதனுக்கும் உள்ளது என்று நம்புவது பகிரங்க இணை வைத்தலாகும். அப்படியொருவர் நினைத்தால் அவர் முஷ்ரிக்காக மாறி விடுவார்.

அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். “எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?” என்று கேட்கிறான்.

திருக்குர்ஆன் 36:78

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 42:11

அவனுக்கு நிகராக யாருமில்லை.

திருக்குர்ஆன் 112:4

நம்மைப் படைத்த அல்லாஹ்வைப் போல் கேட்பவன் இல்லை. அவனைப் போல் பார்ப்பவன் இல்லை. அவனைப் போல் செயல்படுபவன் இல்லை என்பது இதன் கருத்தாகும்.

அல்லாஹ்வைப் போல் நானும் பார்ப்பேன் என்று ஒருவர் சொன்னால் அது இணை வைப்பாகும். அல்லது அல்லாஹ் கேட்ப்பதைப் போல் நானும் கேட்பேன் என்று ஒருவன் சொன்னால் அதுவும் இணை கற்பித்தலாகும். ஆக இறைவனுக்கு இருக்கும் ஆற்றல்கள் மனிதர்களுக்கும் இருப்பதாக நம்புவது இணை வைப்பான காரியம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் சூனியத்தினால் ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றோ, அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் ஆற்றல் சூனியத்திற்கு உண்டு என்றோ ஒருவர் நம்பினால் அதுவும் பகிரங்க இணை வைப்பாகும். இதனை கீழ் காணும் நபி மொழி மூலம் நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி), நூல் : அஹ்மது (26212)

சூனியத்தை உண்மை என்று யாராவது நம்பினால் அது பகிரங்க இணை வைப்பு என்பதை மேற்கண்ட செய்தி நமக்கு தெளிவாக உணர்த்துகின்றது.

அதே போல் சூனியத்திற்கு எந்த ஆற்றலும் கிடையாது என்பதை திருமறைக் குர்ஆன் மூலம் நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.

(போட்டிக்கு) வரும்போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்” (அல்குர்ஆன் 20:69)

“உண்மை உங்களிடம் வந்திருக்கும்போது அதைச் சூனியம் என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்” என்று மூஸா கூறினார். (அல்குர்ஆன் 10:77)

சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான் என்று திருக் குர்ஆன் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கும் போது சூனியத்தினால் தாக்கம் ஏற்படும் என்றோ, அல்லது நபி (ஸல்) அவர்களே சூனியத்தினால் பாதிப்புக்குள்ளானார்கள் என்றோ நாம் நம்புவது நம்மை முஸ்லிம் என்ற இடத்தை விட்டும் முஷ்ரிக்காக மாற்றும் செயல்பாடாகும்.

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இந்தப் பிரச்சாரத்தை நாம் செய்து வருகின்ற போது, இதற்கு எதிர் பிரச்சாரம் செய்யக் கூடியவர்கள், இட்டுக் கட்டப்பட்ட சில செய்திகளை உண்மை என்று மக்கள் மன்றில் முன் வைப்பதற்காக புனித குர்ஆனின் மேற்கண்ட கட்டளையை புறக்கனித்து குர்ஆனை மறுக்கும் கூட்டமாக மாறியுள்ளதை நாம் பார்க்கக் கிடைக்கிறது.

உலக வரலாற்றில் அனைத்து முஸ்லிம்களும் சூனியத்தை உண்மை என்று நம்பியதைப் போலும், தவ்ஹீத் ஜமாஅத் மாத்திரம் தான் அதனை மறுப்பதைப் போன்றும் ஒரு பொய்யான தோற்றத்தை இவர்கள் உண்டாக்க முயற்சிக்கிறார்கள்.

புனித அல்குர்ஆனுக்கு மாற்றமாக நபியவர்கள் பேசியிருக்க மாட்டார்கள். அப்படி பேசியதாக ஒரு செய்தி கிடைத்தால் அது பொய்யானது. உண்மையல்ல, அதனை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது மறுக்க வேண்டும் என்ற அடிப்படையை உலக வரலாற்றில் பல அறிஞர்களும் முன் வைத்திருக்கிறார்கள். நம்மை எதிர்க்கும் குர்ஆன் மறுப்பாளர்களுக்கு பதிலாக அவற்றை நாம் எடுத்துக் காட்டும் போது வாய் மூடி மவ்னித்து விட்டு மீண்டும் மன முரண்டாக பழைய புராணத்தையே பாடும் காட்சிகளை காண்கிறோம்.

குர்ஆனை மறுக்கும் இந்த குர்ஆன் மறுப்பாளர்கள் சூனியத்தை உண்மை என்று பிரச்சாரம் செய்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப உலக இலாபங்களை அடைந்து கொள்வதற்காக நம்மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்கள். அதில் முதன்மையான ஒரு விமர்சனம் என்னவென்றால், சூனியத்திற்கு எந்தத் தாக்கமும் இல்லை என்று தவ்ஹீத் ஜமாஅத்தினர் மறுக்கிறார்கள். ஆனால் நபித் தோழர்களே சூனியத்தை நம்பினார்கள் அல்லவா? நபியவர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களை பார்த்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நபித் தோழர்களே சூனியத்தை நம்பியிருக்கும் போது அதனை நாம் நம்பினால் மாத்திரம் முஷ்ரிக்கீன்களாக மாறி விடுவோமா? அப்படியானால் சூனியத்தை உண்மையென்று நம்பிய நபித் தோழர்களையும் இவர்கள் முஷ்ரிகீன்கள் என்று சொல்வார்களா?

ஏதோ பதிலில்லாத கேள்வியை கேட்டு விட்டதைப் போல் இந்தக் கேள்வியை இவர்கள் முன் வைத்து வருகின்றார்கள்.

நபித் தோழர்களைப் பொருத்த வரையில் அவர்களில் யாரும் சூனியத்திற்கு ஆற்றல் உண்டு என்று நம்ப வில்லை என்பது தெளிவான விஷயமாகும்.

சூனியத்திற்கு ஆற்றல் உண்டு, அதனால் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்று ஆரம்ப காலத்தில் நபித் தோழர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள் இறைவன் அந்த எண்ணத்தையும் தவறு என்றும், சூனியத்திற்கு எந்தத் தாக்கமும் இல்லை என்பதையும் தெளிவாக நபித் தோழர்கள் முன்னிலையிலேயே நிரூபித்துக் காட்டி விட்டான். இதனை கீழ்க்கானும் நபி மொழியூடாக நாம் புரிந்து கொள்ள முடியும்.

صحيح البخاري (7/ 84)

5469 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّهَا حَمَلَتْ بِعَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ بِمَكَّةَ، قَالَتْ: فَخَرَجْتُ وَأَنَا مُتِمٌّ، فَأَتَيْتُ المَدِينَةَ فَنَزَلْتُ قُبَاءً، فَوَلَدْتُ بِقُبَاءٍ، ثُمَّ «أَتَيْتُ بِهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعْتُهُ فِي حَجْرِهِ، ثُمَّ دَعَا بِتَمْرَةٍ فَمَضَغَهَا، ثُمَّ تَفَلَ فِي فِيهِ، فَكَانَ أَوَّلَ شَيْءٍ دَخَلَ جَوْفَهُ رِيقُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ حَنَّكَهُ بِالتَّمْرَةِ، ثُمَّ دَعَا لَهُ فَبَرَّكَ عَلَيْهِ» وَكَانَ أَوَّلَ مَوْلُودٍ وُلِدَ فِي الإِسْلاَمِ، فَفَرِحُوا بِهِ فَرَحًا شَدِيدًا، لِأَنَّهُمْ قِيلَ لَهُمْ: إِنَّ اليَهُودَ قَدْ سَحَرَتْكُمْ فَلاَ يُولَدُ لَكُمْ

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவில் (என் புதல்வர்) அப்துல்லாஹ் பின் ஸுபைரை நான் கருவுற்றேன். கர்ப்ப காலம் முழுமையடைந்து விட்ட நிலையில் புறப்பட்டு நான் மதீனா சென்றேன். (வழியில்) “குபா’வில் தங்கினேன். குபாவிலேயே எனக்குப் பிரசவமாகி விட்டது. பிறகு குழந்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று அவர்களுடைய மடியில் வைத்தேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தைக் கொண்டு வரச் சொல்லி அதை மென்று குழந்தையின் வாயில் உமிழ்ந்தார்கள். அப்துல்லாஹ்வின் வயிற்றுக்குள் சென்ற முதல் (உணவுப்) பொருள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உமிழ் நீராகத்தான் இருந்தது. பிறகு, அவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று அப்துல்லாஹ்வின் வாயில் அதை இட்டார்கள். பின்னர், அப்துல்லாஹ்வுக்கு சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தனை செய்தார்கள். (என் புதல்வர்) அப்துல்லாஹ்தான் இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தையாவார். ஆகவே, முஸ்லிம்கள் அவர் பிறந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஏனெனில், அவர்களிடம், “யூதர்கள் உங்களுக்கு சூனியம் வைத்து விட்டார்கள். ஆகவே, உங்களுக்கு (இனி) குழந்தை பிறக்காது” எனக் கூறப்பட்டு வந்தது.

புகாரி : 5469

ஆரம்ப கால இஸ்லாமியப் பிரச்சாரத்தின் போது பலர் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். இஸ்லாம் மதீனாவில் பரவ ஆரம்பித்து, நபி (ஸல்) அவர்களும் மக்காவில் இருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றார்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டு வந்தது.

இந்த நிலையில் தான் மதீனாவில் வாழ்ந்த யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு செய்தியை பரப்புகிறார்கள். அதாவது நபியவர்களை ஏற்றுக் கொண்டு முஸ்லிம்களாக மாறியவர்களுக்கு நாங்கள் (யூதர்கள்) சூனியம் வைத்து விட்டோம். ஆகவே முஸ்லிம்களில் யாருக்கும் குழந்தை பிறக்காது. என்று ஒரு செய்தியை பரப்புகிறார்கள்.

யூதர்கள் சூனியம் வைத்து விட்டார்கள். முஸ்லிம்களுக்கு இனிமேல் குழந்தை கிடைக்காது என்று செய்தி பரப்பப் பட்ட நேரத்தில் தான் அன்னை அஸ்மா (ரலி) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வருகிறார்கள். கற்பிணியாக மதீனா வந்தடைந்த அஸ்மா (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் மதீனாவில் வைத்து குழந்தையை பிரசவிக்க வைகிறான். இதனால் நபித் தோழர்கள் அனைவரும் சந்தோஷமடைகிறார்கள்.

இதனைப் பற்றி அஸ்மா (ரலி) அவர்கள் கூறும் போது, ஆகவே, முஸ்லிம்கள் அவர் (எனது மகன்) பிறந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஏனெனில், அவர்களிடம், “யூதர்கள் உங்களுக்கு சூனியம் வைத்து விட்டார்கள். ஆகவே, உங்களுக்கு (இனி) குழந்தை பிறக்காது”எனக் கூறப்பட்டு வந்தது.

புகாரி : 5469

சூனியம் வைத்த காரணத்தினால் முஸ்லிம்களுக்கு இனிமேல் குழந்தை கிடைக்காது என்று கூறப்பட்டு வந்த நிலையில் தான் அல்லாஹ் அஸ்மா (ரலி) அவர்களுக்கு மதீனாவில் குழந்தையை பிரசவிக்கச் செய்து சூனியத்தை பொய்பித்துக் காட்டுகின்றான்.

குழந்தையைத் தருவதும், தராமல் இருப்பதும் இறைவனின் ஆற்றலாக இருக்கும் போது அதனை சூனியத்தின் மூலம் நாங்கள் செய்து காட்டுவோம் என்று கூறி இறைவனின் ஆற்றல் தங்களுக்கு இருப்பதாக மதீனா யூதர்கள் கூறி வந்ததை இறைவன் பொய்யாக்கி அனைத்து ஆற்றல்களும் இறைவனுக்கு மாத்திரம் தான் இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டினான்.

மேற்கண்ட செய்தி நபித் தோழர்கள் சூனியத்தை நம்பினார்கள் என்ற குர்ஆன் மறுப்பாளர்களின் வாதத்திற்கு சாட்டை அடியாக அமைந்துள்ளது.

சூனியத்திற்கு தாக்கம் உண்டு, அதன் மூலம் ஒருவருக்கு நோயை உண்டாக்களாம், பிள்ளை வரம் கொடுக்களாம், பிள்ளை பிறக்காமல் செய்யலாம், கை, கால் போன்றவற்றை முடக்கலாம் என்றெல்லாம் நம்பி, அதனை பிரச்சாரம் செய்து வந்த யூதர்களை பொய்யர்களாக்கி, சூனியத்திற்கும் எந்தத் தாக்கமும் இல்லை. அதனால் எந்த ஒன்றும் செய்ய முடியாது என்பதையும் தெளிவாக இறைவன் முஸ்லிம்களுக்கு புரிய வைத்தான்.

சூனியத்தைப் பொய்யென்று நிரூபணம் செய்து, அதற்கு ஆதாரமாக அஸ்மா (ரலி) அவர்களுக்கு குழந்தையையும் கொடுத்து அல்லாஹ் தனது வல்லமையை நிலை நாட்டியதற்காக நபித் தோழர்கள் சந்தோஷப் பட்டார்கள் என்பதை மேற்கண்ட செய்தியில் இருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.

சூனியத்தினால் பாதிப்பை உண்டாக்க முடியும் என்பது இஸ்லாமிய நம்பிக்கையா? யூதர்களின் நம்பிக்கையா? என்பது இப்போது புரிகிறதல்லவா?

யூதர்களின் வழிகெட்ட சூனிய நம்பிக்கையை இஸ்லாமிய நம்பிக்கை என்று பிரச்சாரம் செய்யும் இந்த குர்ஆன் மறுப்பாளர்கள் நபித் தோழர்களையும் தங்களைப் போன்ற வழிகேடர்கள் என்று சித்தரிக்கை முனைகிறார்கள். (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்)

நபித்தோழர்கள் மீது அபாண்டமான பழி சுமத்தும் இந்த வழிகேடர்கள் இனிமேலாவது சத்தியத்தை நோக்கி வர வேண்டும் என்பதே நமது எண்ணமாகும்.

-ரஸ்மின் MISc