Tamil Bayan Points

நிலவின் பிரமாண்டம்

பயான் குறிப்புகள்: அறிவியல் உண்மைகள்

Last Updated on January 28, 2020 by

நிலா

நிலா (மாற்றுப் பெயர்கள்: நிலவு, அம்புலி, திங்கள், மதி, சந்திரன்) (Moon, இலத்தீன்: luna) என்பது புவியின் ஒரேயொரு நிரந்தரமான இயற்கைத் துணைக்கோள் ஆகும். இது கதிரவ தொகுதியில் உள்ள ஐந்தாவது மிகப்பெரிய துணைக்கோளும் இரண்டாவது அடர்த்திமிகு துணைக்கோளும் ஆகும்.

நிலவு புவியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றி வர சராசரியாக 29.32 நாட்கள் ஆகிறது. புவிக்கும் நிலாவுக்கும் இடையே உள்ள சராசரித் தொலைவு 384, 403 கி.மீ. ஆகும். ஈர்ப்பு விசை பூட்டல் காரணமாக நிலவு புவியை நோக்கி எப்போதும் ஒரு பக்கத்தையே காட்டுகின்றது; இந்தப் பக்கத்தில் வெளிச்சமான உயர்நிலங்களுக்கும் விண்கல் வீழ் பள்ளங்களுக்கும் இடையே பல எரிமலைசார் சமநிலங்கள் உள்ளன. புவியின் வான்பரப்பில் அன்றாடம் தோன்றும் வானியல் பொருட்களில் (கதிரவனை அடுத்து) இரண்டாவது வெளிச்சமான வான்பொருள் நிலவாகும். இது மிகவும் வெண்மையாகத் தெரிந்தாலும் இதன் தரைப்பகுதி உண்மையில் இருட்டாகவே உள்ளது; அசுபால்ட்டை விட சற்றே கூடிய ஒளிர்வே உள்ளது.

புவியிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிவதாலும் முறைதவறா பிறை சுழற்சியாலும் தொன்மைக்காலத்திலிருந்தே மனித சமுகத்தின் பண்பாட்டுக் கூறுகளில், (இலக்கியம், நாட்காட்டிகள், கலை, தெய்வங்கள் ) நிலவு மிகுந்த தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. நிலவின் ஈர்ப்புவிசைத் தாக்கத்தால் ஓதங்களும் நாள் நீள்வதும் ஏற்படுகின்றன. புவியின் விட்டத்தைப் போல முப்பது மடங்கு தொலைவில் நிலவின் சுற்றுப்பாதை அமைந்திருப்பதால் வானத்தில் சூரியனின் அளவும் நிலவின் அளவும் ஒன்றே போலக் காட்சியளிக்கின்றன. இவ்வாறு அமைந்தது மிகவும் தற்செயலானதாகும். இதனால் முழுமையான சூரிய கிரகணத்தின் போது சூரியனை நிலவினால் முழுவதுமாக மறைக்க இயலுகின்றது. புவிக்கும் நிலவிற்கும் இடையேயான நேரோட்ட தொலைவு தற்போது ஆண்டுக்கு 3.82±0.07 செமீ அளவில் கூடிக் கொண்டு வருகின்றது; ஆனால் இந்த கூடும் வீதம் நிலையாக இல்லை.

புவியினுடையதை விட சற்றே குறைவாக, நிலா ஏறத்தாழ 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவாகியுள்ளதாக கருதப்படுகின்றது. இதன் உருவாக்கத்தைப் பற்றி பல கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன; தற்போது மிக விரிவாக ஏற்றுக்கொள்ளப்படும் கருதுகோளின்படி புவிக்கும் செவ்வாய் (கோள்)-அளவிலான வான்பொருளுக்கும் இடையேயான பெரும் மோதலின் துகள்களிலிருந்து நிலா உருவானது.

புவியல்லாது மனிதர்கள் கால் பதித்த ஒரே வான்பொருள் நிலவாகும். சோவியத் ஒன்றியத்தின் லூனா திட்டம் மனிதரில்லாத முதல் விண்கலத்தை 1959இல் நிலவில் இறக்கியது; இதுவரை மனிதர் சென்ற திட்டங்களை இயக்கிய ஒரே திட்டம் ஐக்கிய அமெரிக்காவின் நாசாவின் அப்பல்லோ திட்டம் ஆகும்; நிலவின் சுற்றுப்பாதையில் பயணித்த முதல் மனிதர்கள் 1968இல் அப்பல்லோ 8இல் சென்ற அமெரிக்க வானோடிகளாவர். 1969க்கும் 1972க்கும் இடையே ஆறு திட்டங்களில் நிலாவில் தரையிறக்கியுள்ளது. முதலில் நிலவில் தரையிறங்கிய மனிதர் அப்பல்லோ 11இல் சென்ற நீல் ஆம்ஸ்ட்றோங் ஆவார். இந்தத் திட்டங்கள் மூலம் 380 கிலோவிற்கும் கூடுதலான நிலவுப்பாறைகள் கொணரப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு நிலாவின் தோற்றம், உள்கட்டமைப்பு, நிலவியல் வரலாறு ஆகியன ஆய்வு செய்யப்படுகின்றன.

1972இல் அப்பல்லோ 17 திட்டத்திற்குப் பிறகு நிலவிற்கு ஆளில்லா விண்கலங்களே அனுப்பப்படுகின்றன. இவற்றில் நிலவுச் சுற்றுப்பாதைத் திட்டங்களே முதன்மையாக உள்ளன: 2004 முதல் ஜப்பான், சீன மக்கள் குடியரசு, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நிலவுச் சுற்றுப்பாதையில் விண்கலங்களை அனுப்பி உள்ளன. இவற்றின் மூலம் நிலவின் முனையங்களில் (துருவங்களில்) நிரந்தரமாக இருட்டாக உள்ளப் பள்ளங்களில் நிலவு நீர் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அப்பல்லோவிற்குப் பின்பு இரு தேட்ட ஊர்திகள் அனுப்பப்பட்டுள்ளன: 1973இல் சோவியத் ஒன்றியத்தின் இறுதி லூனோகோட் திட்டம்; திசம்பர் 14, 2013இல் ஜேட் ராபிட் அனுப்பிய சீனாவின் நடப்பிலுள்ள சாங் ஈ 3 திட்டம்.

புவியின் ஈர்ப்பைக் காட்டிலும் நிலவின் ஈர்ப்பு ஆறுமடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் புவியில் ஒரு பொருளின் விடுபடு வேகம் (escape speed) அதிகம்; மேலும் புவிப்பரப்பு வெப்பநிலையும் அதிகம் இல்லை. இவ்விரு காரணங்களால் காற்று மூலக்கூறுகள் புவியின் ஈர்ப்பை விட்டு விடுபட முடியாது. சுருங்கக்கூறின், பூமியின் ஈர்ப்பு விசை வளி மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது.

ஆனால், நிலவின் ஈர்ப்பு குறைவாக இருப்பதால், அதிலுள்ள பொருள்களின் விடுபடு வேகமும் குறைவு; மேலும் நிலவின் பரப்பு வெப்பநிலை அதிகம் ஆதலால், அங்குள்ள மூலக்கூறுகள் விடுபட்டுச் சென்று விடும். எனவே தான் நிலவில் காற்று இல்லை. நிலவோடு ஒப்பிடும்போது செவ்வாயின் ஈர்ப்பு விசை சிறிது அதிகம். பூமியின் ஈர்ப்பு விசையில் பாதியளவு உள்ளது. இதன் காரணமாக அங்கே சிறிதளவு காற்று உள்ளது. வியாழன் கோளின் ஈர்ப்பு விசை பூமியைக் காட்டிலும் 350 மடங்கு அதிகம். இந்த ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு நாள்தோறும் விண்கற்கள் வியாழனில் விழுந்து கொண்டேயிருக்கின்றன. வால் நட்சத்திரங்களும் அதன் மீது மோதுவது உண்டு.

நிலவில் நீர்

நிலவில் நீரினை முதன்முதலில் இஸ்ரோவின் சந்திராயன்-1 செய்மதி நாசாவின் கருவியைப் பயன்படுத்தி கண்டறிந்தது.

இங்கிலாந்தின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவிவேதியியலாளர் ஆல்பர்டோ சால் என்பவர் சில ஆண்டுகளாக “நிலவு வறண்டதாக பிறந்தது” என்ற பொதுவான கூற்றை உடைக்க முயன்றபொழுது நிலவில் ஆழமான பகுதியில் உருவாகிய நீரானது புவியில் உண்டான நீரின் ஆதாரம் போன்றதாக இருக்கிறது என்பதை கண்டறிந்தார். 4.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒளிர்மைமாறு (எதிர்பாராப் பொலிவு) விண்மீன் மோதலினால் (cataclysmic collision) கோள் உருவான பொழுது நிலவு பூமியிடம் இருந்து ஒரு திடமான நீர் வழங்கலை கைப்பற்றியதாக அவரது ஆய்வு கூறுகிறது.

1970களில் அப்பலோ விண்பயணிகளால் கொண்டுவரப்பட்ட நிலவின் இரண்டு பாறையின் நீரினைக் கொண்டு சாலும், அவரது குழு உறுப்பினர்களும் ஆய்வு நடத்தினர் என கடந்த மே 9 சயன்ஸ் ஆய்விதழில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாறைகள் பெரும்பாலும் நிலவின் வாழ்நாளின் முன்பகுதியில் ஏற்பட்ட எரிமலை உமிழ்வின் போது புதைந்த கற்குழம்பு வேறு பரப்புக்கு தள்ளப்படுவதால் உண்டானதாக இருக்கும் எனவும், நீரினை வான்வெளியில் அகலாமல் தடுக்கும் படிகங்களுடன் பிணைந்த அடர் எரிமலைக்குழம்பின் சிறு குமிழிகளை அது கொண்டுள்ளது. எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அந்தக் குழு பாறைகளின் நீரை அதிலுள்ள ஐதரசன் மற்றும் ஒரு அதிக கருவணுவை (நியூட்டிரான்) கொண்ட டியூட்டிரியம் ஆகியவற்றின் செறிவினை அளப்பதன் மூலம் பகுப்பாய்வு நடத்தியது. அதன் ஓரகத்தனிமங்களின் விகிதம் அந்நீரின் ஆதாரத்தை சூரியக் குடும்பத்திற்குள் உட்பட்டதுவாய் தெரிகிறது. சூரியக் குடும்பத்திற்கு வெளியில் உள்ள வாயுப் பெருங்கோள்கள் மற்றும் வால்வெள்ளிகள் மிக அதிக ஐதரசன்-டியூட்டிரிய விகிதத்தைக் கொண்டதாகும். பூமியின் நீரும் மிக குறைந்த விகிதத்தைக் கொண்டதாகும்.

பூமி மற்றும் பிற நுண்விண்கற்களின் குறைந்த ஐதரசன்-டியூட்டிரிய விகிதத்தைப் போன்றே நிலவுப் பாறைகளின் நீரும் குறைந்த விகிதத்தைக் கொண்டிருப்பது சால் மற்றும் அவரின் குழுவிற்கு ஆச்சரியத்தை அளித்தது. இதனால், பூமியின் நீரும் நிலவின் நீரும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரே மாதிரியான நுண்விண்கற்களின் தாக்கத்தினால் ஏற்பட்டது என கூறலாம் என சாலின் அறிக்கை கூறுகிறது.

நிலவின் கலைகள்

முதன்மைக் கட்டுரை: நிலவின் கலை கலைகள் என்பது நிலவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அளவாகத் தெரியும் தனித்தனி நிலைகளைக் குறிப்பன. இதனைப் பிறை என்று சொல்வது பெருவழக்கு. முதல் நாள் நிலாவே தென்படாது. இரவு மிக இருட்டாக இருக்கும். இதனை புதுநிலவு என்றும் அமாவாசை என்றும் அழைப்பர். பிறகு ஒவ்வொரு நாளும் சிறுகச் சிறுக நிலவின் வெளிச்சம் தெரியும் பகுதி பெரிதாகிக் கொண்டே வரும். இவைகளை இரண்டாம் பிறை, மூன்றாம் பிறை என்று சொல்வார்கள்.

பின்னர் சுமார் 14 நாட்கள் கழித்து ஒரு நாள் முழு நிலா பெரிதாய் வட்ட வடிமாய்த் தெரியும். இதனை முழுநிலவு என்றும் பௌர்ணமி என்றும் அழைப்பர். பிறகு அடுத்த சில நாட்கள் நிலா சிறுகச் சிறுகத் தேய்ந்து கொண்டே போய், மீண்டும் புதுநிலவு நாளுக்கான நிலைக்கே திரும்பி விடும். புதுநிலவு முதல் முழுநிலவு வரை வளர்ந்து வருவதால் வளர்பிறை என்றும், பிறகு அடுத்த புது நிலவு நாள் வரை தேய்ந்து வருவதால் தேய்பிறை என்றும் அழைப்பர். நிலா நம் புவியைச் சுற்றி வருகையிலே எப்படி கதிரொளி நிலாக் கோளத்தின் மீது பட்டு புவியில் தெரிகிறது.

முழுநிலவு

முழுநிலவு,முழுமதி அல்லது பவுர்ணமி என்பது புவியில் இருந்து காணும் போது நிலவு முழுமையான வெளிச்சத்துடன் தோற்றமளிக்கும் நாளாகும். வானியலின்படி, கதிரவன் மற்றும் நிலவிற்கு இடையே புவி வரும் நாளே முழுநிலவு ஆகும். அப்போது கதிரவனின் வெளிச்சம் நிலவின் முற்பக்கத்தின் மீது முழுமையாகப் பதிகிறது. ஆகவே அது ஒளிர்ந்து புவியில் இருந்து காணும்போது வட்ட வடிவில் காட்சியளிக்கிறது. அப்போது புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கம் இருளாக இருக்கும்.

நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து டிகிரி அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே முழுநிலவு நாளன்று பெரும்பாலும் புவியின் நிழல் நிலவின் மீது விழுவதில்லை. அவ்வாறு விழும்போது ஏற்படும் நிகழ்வே நிலவு மறைப்பு ஆகும். முழுமையான நிலவு மறைப்பின் போது ராலே ஒளிச்சிதறல் காரணமாக நிலவு சிவப்பு நிறத்தில் தோற்றமளிப்பதால் அது சிவப்பு நிலவு என்றும் குருதி நிலவு என்றும் அழைக்கப்படுகின்றது

இந்து சமயத்தில் திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் பவுர்ணமியும் ஒன்று.

புதுநிலவு

புதுநிலவு,மறைமதி அல்லது அமாவாசை என்பது நிலவின் முதல் கலை ஆகும். வானியல்படி நிலவும் கதிரவனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளே புதுநிலவு ஆகும்.[1] இந்நாளில் கதிரவ ஒளியானது புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிகிறது. எனவே இந்நாளில் புவியை நோக்கி இருக்கும் நிலவின் முற்பக்கம் ஒளியின்றி இருக்கும்.

நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதையானது சுமார் ஐந்து பாகைகள் அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே புதுநிலவு நாட்களில் கதிரவ வெளிச்சத்தால் ஏற்படும் நிலவின் நிழல் பெரும்பாலும் புவியின் மீது விழுவதில்லை. அவ்வாறு விழும்போது கதிரவ மறைப்பு நிகழும்.
29 மார்ச் 2006ல் நிகழ்ந்த முழுக் கதிரவ மறைப்பின் உச்ச நிலையின் போது புதுநிலவின் காட்சி புதுநிலவு ஒரு இருள் நிறைந்த வட்டம் போன்று இருக்கும். இது எப்போதும் கதிரவனுடன் ஒரே நேரத்தில் எழுந்து மறைந்து விடுவதால் இதைக் காண இயலாமல் போகிறது. எனினும் முழுக் கதிரவ மறைப்பு நிகழ்வின் உச்ச நிலையின் போது மட்டும் புதுநிலவை வெறும் கண்களால் காண இயலும்.[2]

சந்திரமானம் எனப்படும் நிலவை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் புதுநிலவு நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.

இந்து சமயத்தில் திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் அமாவாசையும் ஒன்று.

நிலவின் கலை

நிலவின் கலை என்பது புவியில் இருந்து காணக்கூடிய நிலவின் முற்பக்கத்தில் கதிரவ ஒளி பதியும் போது ஏற்படும் வடிவம் ஆகும். ஒவ்வொரு நிலவு மாதத்திற்கு (சுமார் 29.53 நாட்கள்) ஒரு முறை நிலவின் கலைகள் மாறுகின்றன.

நிலவின் சுழற்சியானது புவியின் ஈர்ப்புவிசையால் பூட்டப்பட்டுள்ளது. இதனால் நிலவின் முற்பக்கம் மட்டுமே எப்போதும் புவியை நோக்கி இருக்கின்றது. இப்பக்கத்தின் மீது விழும் கதிரவ ஒளியின் அளவைப் பொறுத்து வானில் வெவ்வேறு வடிவங்களில் நிலவு காட்சியளிக்கும்.

Source : https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE