Tamil Bayan Points

பல்லி இறைத்தூதருக்கு எதிராக செயல்பட்டதா?

முக்கிய குறிப்புகள்: சர்ச்சைக்குரியவை

Last Updated on October 18, 2016 by Trichy Farook

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும் படி உத்தரவிட்டார்கள். மேலும் அவர்கள் அது இப்ராஹீம் (நபி தீக் குண்டத்தில் எறியப்பட்ட பேது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது என்றும் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஷரீக் (ரலி) 

நூல் : புகாரி (3359)

இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு எதிராகப் பல்லி செயல்பட்டதாக மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது. நபிக்கு எதிராகச் செயல்படுவது அல்லாஹ்விற்கு எதிராக செயல்படுவதைப் போன்றது. பல்லி மட்டும் அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராகச் செயல்பட்டது என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. ஆனால் மனிதனைத் தவிர்த்து வானம் பூமியில் உள்ள அனைத்தும் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நடப்பதாகக் குர்ஆன் கூறுகிறது. 

அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

அல்குர்ஆன் (3 : 81)

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.

அல்குர்ஆன் (13 : 15)

வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மற்றும் மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர் என்பதை நீர் அறியவில்லையா?

அல்குர்ஆன் (22 : 18)

ஒருவரது பாவச்சுமையை இன்னொருவர் சுமக்க முடியாது

இப்ராஹிம் நபி காலத்தில் இருந்த பல்லி அவர்களுக்கு எதிராக நெருப்பை ஊதிவிட்டதால் கியாமத் நாள் வரும் வரைக்கும் நாம் எந்தப் பல்லியை பார்த்தாலும் அதைக் கொல்ல வேண்டும் என்று பல்லி சம்பவம் கூறுகிறது. இப்ராஹீம் நபியின் காலத்திலிருந்த பல்லிகள் செய்த குற்றத்திற்காக நமது காலத்தில் வாழும் பல்லிகளைக் கொல்வது எப்படி நியாயமாகும்? 

இஸ்லாத்திற்கும் கி றிஸ்தவத்திற்கும் மத்தியில் உள்ள மாபெரும் வேறுபாடு என்னவென்றால் ஒருவர் செய்த பாவச் சுமையை இன்னொருவர் சுமக்க முடியாது என்பதாகும். கி றிஸ்தவர்கள் மனிதர்களின் பாவங்களை ஏசு சுமந்து கொள்வார் என்று கூறுவார்கள். ஆனால் ஒருவர் செய்த குற்றத்திற்கு இன்னொருவரை தண்டிக்க முடியாது என்று திருக்குர்ஆன் அழுத்தமாகப் பல இடங்களில் கூறுகிறது. 

இந்த அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்த பல்லிகள் செய்த குற்றத்திற்காக பின்வரும் காலங்களில் ஜீவிக்கும் பல்லிகளைக் கொல்வது இஸ்லாமியக் கொள்கைக்கு மாற்றமானது.

(பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதித்துக் கொள்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். 

அல்குர்ஆன் (6 : 164)

நேர் வழி பெற்றவர் தனக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை.

அல்குர்ஆன் (17 : 15)

ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார். கனத்தவன் அதைச் சுமக்குமாறு யாரையேனும் அழைத்தால் (அழைக்கப்படுபவன்) உறவினராக இருந்தாலும் அதிலிருந்து எதுவும் அவன் மீது சுமத்தப்பட மாட்டாது. 

அல்குர்ஆன் (35 : 18)

நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களிடம் அதைப் பொருந்திக் கொள்வான். ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். பின்னர் உங்கள் மீளுதல் உங்கள் இறைவனிடமே உள்ளது. 

அல்குர்ஆன் (39 : 7)

மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் “ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை” என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?

அல்குர்ஆன் (53 : 36)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இறைத்தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்தின் கீழே தங்கினார். அவரை எறும்பு ஒன்று கடித்து விட்டது. உடனே அவர் தமது (பயண) மூட்டைகளை அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டார். அவ்வாறே அவை மரத்தின் கீழிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. பிறகு எறும்புப் புற்றை எரிக்கும்படி கட்டளையிட்டார். அவ்வாறே அது தீயிட்டு எரிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ் அவருக்கு உங்களைக் கடித்தது ஒரே ஒரு எறும்பல்லவா? (அதற்காக ஓர் எறும்பு கூட்டத்தையே எரிக்கலாமா?) என்று வஹீ அறிவித்(து அவரைக் கண்டித்)தான். 

அறிவிப்பர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (3319)

ஒரு எறும்பு தீங்கு செய்ததற்காக எல்லா எறும்புகளையும் நபி கொன்று விட்டார். ஒருவர் செய்த குற்றத்திற்கு அவரது இனத்தையே பலி வாங்கக் கூடாது என்பதால் இதை இறைவன் கண்டிக்கிறாôன். இப்ராஹிம் நபி காலத்தில் வாழ்ந்த பல்லிகள் செய்த தவற்றுக்காக பல்லி இனத்தையே பலி வாங்குமாறு நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று கூறினால் எறும்பைக் கொன்ற நபி தவறு செய்ததைப் போல் நபி (ஸல்) அவர்களும் தவறு செய்துவிட்டார்கள். பிறரை தவறு செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார்கள் என்று அர்த்தமாகும். 

இஸ்லாத்தில் அநீதி இல்லை

ஒருவர் செய்யாத குற்றத்தைப் பிறரின் மீது சுமத்தி தண்டனைக் கொடுப்பது அநியாயம். இந்த அநியாயத்தை செய்ய மாட்டேன் என்று அல்லாஹ் கூறுகிறான். 

இன்றைய தினம் ஒவ்வொருவரும் செய்ததற்கு கூலி கொடுக்கப்படும். இன்று எந்த அநியாயமும் இல்லை. அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன்.

அல்குர்ஆன் (40 : 17)

இன்றைய தினம் எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. நீங்கள் செய்து கொண்டிருந்ததைத் தவிர கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.

அல்குர்ஆன் (36 : 54)

ஒருவன் செய்த குற்றத்திற்கு அவனுடைய உறவினரைப் தண்டிக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். : எனக்குப் பிறகு உங்களில் சிலர் சிலருடைய பிடரியை வெட்டிக்கொள்ளும் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விட வேண்டாம். தனது தந்தை செய்த குற்றத்திற்காக அல்லது சகோதரன் செய்த குற்றத்திற்காக ஒருவன் தண்டிக்கப்பட மாட்டான். 

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : நஸயீ (4058) 

இப்ராஹீம் நபியவர்களுக்கு எதிராக மக்கள் சூழ்ச்சி செய்ததாகவும் அவர்களின் சூழ்ச்சியை அல்லாஹ் முறியடித்ததாகவும் தான் குர்ஆனில் சொல்லப்படுகிறது. பல்லிகளைப் பற்றி அங்கு பேசப்படவில்லை.

“நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!” என்றனர். “நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகிவிடு” என்று கூறினோம். அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை நஷ்டமடைந்தோராக ஆக்கினோம். அவரையும், லூத்தையும் காப்பாற்றி நாம் அகிலத்தாருக்குப் பாக்கியமாக ஆக்கிய பூமியில் (சேர்த்தோம்).

அல்குர்ஆன் (21 : 68)

இப்ராஹிம் நபியை எரிப்பதற்காக உருவாக்கப்பட்ட நெருப்பைச் சிறிய படைப்பான பல்லியால் ஊதிப் பெரிதாக்க முடியவே முடியாது. நெருப்பிற்கு அருகில் சென்றால் அதன் அனல் தாங்க முடியாமல் துடிதுடித்து இறந்து விடும். அடுப்பில் இருக்கும் நெருப்பை மூட்டுவதற்குத் தாய்மார்களே சிரமப்படும் போது அளவில் சிறியதாக இருக்கும் இந்த உயிரி ஊதுவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 

பல குர்ஆன் வசனங்களுக்கு இச்செய்தி முரண்படுவதே இது பொய்யானது என்பதற்கு போதுமான சான்று. இச்செய்தியை சரிகாணுபவர்கள் ஏற்றுக்கொண்ட விதியின் பிரகாரமும் இந்த ஹதீஸ் பலவீனமாகிறது. 

பல்லி இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு எதிராக நெருப்பை ஊதிவிட்டது என்ற தகவல் ஆயிஷா மற்றும் உம்மு ஷரீக் ஆகிய இரண்டு நபித்தோழியர்களின் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு அறிவிப்புகளும் பலவீனமான செய்திகளாகும்.

உம்மு ஷரீகின் வழியாக அறிவிக்கப்படும் செய்தியின் உண்மை நிலை

உம்மு ஷரீக் (ரலி) அவர்களின் வழியாக அறிவிக்கப்படும் மேலுள்ள செய்தி பின்வரும் அடிப்படையில் தவறான செய்தியாகும். உம்மு ஷரீக்கின் வழியாக பல்லி சம்பந்தமான ஹதீஸ் இரண்டு விதங்களில் வருகிறது. 

1. பல்லிகளைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் எனக்கு கட்டளையிட்டார்கள். 

அறிவிப்பவர் : உம்மு ஷரீக் (ரலி) 

நூல் : புகாரி (3307)

2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். மேலும் அவர்கள் அது இப்ராஹீம் (அலை அவர்கள் தீக் குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது என்றும் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஷரீக் (ரலி) 

நூல் : புகாரி (3359)

முதல் அறிவிப்பில் பல்லிகளைக் கொல்ல வேண்டும் என்ற கட்டளை மாத்திரம் இடம் பெற்றுள்ளது. ஆனால் இரண்டாவது அறிவிப்பில் பல்லிகளைக் கொல்ல வேண்டும் என்ற கட்டளையோடு இப்ராஹிம் நபியவர்களுக்கு எதிராக பல்லிகள் நெருப்பை ஊதிவிட்டன என்ற செய்தி கூடுதலாக இடம்பெற்றுள்ளது. 

பல்லி தொடர்பான செய்தியை உம்மு ஷரீக்கிடமிருந்து சயீத் என்பார் அறிவிக்கிறார். சயீத் என்பாரிடமிருந்து அப்துல் ஹுமைத் என்பார் அறிவிக்கிறார். அப்துல் ஹுமைத் என்பாரிடமிருந்து சுஃப்யான் மற்றும் இப்னு ஜுரைஜ் ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள். 

அப்துல்ஹுமைத் என்பவருக்கு சுஃப்யான் மற்றும் இப்னு ஜுரைஜ் என்ற இரண்டு மாணவர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜிடமிருந்து இப்னு வஹப், ரவ்ஹ், முஹம்மத் பின் பக்ர். அபூ ஆசிம் மற்றும் உபைதுல்லா ஆகிய ஐந்து நபர்கள் அறிவிக்கிறார்கள். இப்னு ஜுரைஜிற்கு ஐந்து மாணவர்கள் உள்ளனர். 

இவர்களில் உபைதுல்லாவைத் தவிர்த்து மீதமுள்ள நான்கு மாணவர்களும் இப்னு ஜ,ýரைஜிடமிருந்து இப்ராஹிம் நபிக்கு எதிராக பல்லி நெருப்பை ஊதி விட்டது என்ற வாக்கியத்தைக் கூறாமல் பல்லியைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்பதை மட்டுமே அறிவிக்கிறார்கள். 

உபைதுல்லாஹ் மட்டும் அந்த நான்கு நபர்களுக்கு மாற்றமாக இப்ராஹிம் நபிக்கு எதிராக பல்லி நெருப்பை ஊதி விட்டது என்ற வாக்கியத்தையும் சேர்த்து அறிவிக்கிறார். இப்னு வஹப் ரவ்ஹ் முஹம்மத் பின் பக்ர் மற்றும் அபூ ஆசிம் ஆகிய நான்கு நபர்கள் ஒரே மாதிரி அறிவிப்பதால் இவர்களுடைய அறிவிப்புத் தான் சரியான அறிவிப்பு. இவர்களுக்கு மாற்றமாக உபைதுல்லாஹ் மட்டும் தனித்து அறிவிப்பதால் இவரது அறிவிப்பு நிராகரிக்கப்பட வேண்டியது. 

அப்துல் ஹுமைத் என்பாரிடமிருந்து இப்னு ஜ,ýரைஜ் மற்றும் சுஃப்யான் அறிவிப்பதாக முன்பே கூறினோம். சுஃப்யான் அவர்களும் அந்த நான்கு நபர்கள் அறிவிப்பதைப் போன்றே பல்லி நெருப்பை ஊதிவிட்ட தகவலைக் கூறாமல் அதைக் கொல்ல வேண்டும் என்பதை மட்டும் கூறுகிறார். உபைதுல்லாஹ் தான் நெருப்பை ஊதிவிட்டத் தகவலை தவறுதலாக கூறியுள்ளார் என்று இதன் மூலமும் புரிந்து கொள்ளலாம். 

உறுதிமிக்க நம்பகமானவர்கள் பலர் அறிவிக்கும் செய்திக்கு நம்பகமான ஒருவர் மாற்றமாக அறிவித்தால் அந்த ஒருவருடைய செய்திக்கு ஷாத் (பின்தள்ளப்பட்ட செய்தி) என்று ஹதீஸ் கûலியில் சொல்வார்கள். உறுதி மிக்கவர்கள் அறிவிக்கும் செய்தி மஹ்ஃபூள் (முன்னுரிமை தரப்பட்ட செய்தி) என்று சொல்லுவார்கள். 

இந்த அடிப்படையில் பல்லி நெருப்பை ஊதி விட்டது என்று உபைதுல்லாஹ் மட்டும் அறிவிக்கும் செய்தி பின்தள்ளப்பட்ட செய்தியாகும். எனவே புகாரியில் இடம்பெற்றிருக்கிதே என்றெல்லாம் குருட்டுத்தனமாக பேசாமல் இந்த ஹதீஸ் கலை விதிக்கு கட்டுப்பட்டு நடப்பதே அறிவாளிகளின் வழியாகும். 

ஆயிஷா (ரலி) அவர்களின் வாயிலக அறிவிக்கப்பட்ட செய்தியின் உண்மை நிலை

பல்லி நெருப்பபை ஊதிவிட்ட சம்பவம் ஆயிஷா (ரலி) அவர்களின் வாயிலாக பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் வந்தேன். அவர்களின் வீட்டில் ஈட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். முஃமின்களின் தாயே இதை (இந்த ஈட்டியை) வைத்து தாங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இதை வைத்து நாங்கள் பல்லிகளைக் கொல்வோம். ஏனென்றால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (இவ்வாறு) சொன்னார்கள். இப்ராஹிம் (அலை) அவர்கள் நெருப்பில் போடப்பட்ட போது பல்லியைத் தவிர பூமியிலிருந்த எல்லா உயிரினமும் நெருப்பை வாயால் ஊதி அனைத்தது. ஆனால் பல்லி மாத்திரம் அவர்களுக்கு எதிராக (நெருப்பை) ஊதிவிட்டது. இதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கொல்லும்படி கட்டளையிட்டார்கள் என்று ஆயிஷா கூறினார். 

அறிவிப்பவர் : சாயிபா 

நூல் : இப்னு மாஜா (3222)

இதே செய்தி அஹ்மதில் (23393) (24643) (23636) ஆகிய எண்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

ஆயிஷா (ரலி) அவர்களிடம் இந்தச் செய்தியை அறிவிக்கும் சாயிபா என்ற பெண்மனியின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை. இவர் நம்பகமானவர் தான் என்று இப்னு ஹிப்பானைத் தவிர வேறுயாரும் சான்றளிக்கவில்லை. இப்னு ஹிப்பான் அறியப்படாத ஆட்களுக்கெல்லாம் நம்பகமானவர் என்று சான்றுதரக் கூடியவர் என்பதால் அவருடைய கூற்றை ஆதாரமாக எடுக்கலாகாது. எனவே இந்த ஹதீஸ் பலவீனமானது. 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக பின்வருமாறு ஹதீஸ் அஹ்மதில் இடம்பெற்றுள்ளது. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பல்லியை நீங்கள் கொல்லுங்கள். ஏனென்றால் அது இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு எதிராக நெருப்பை ஊதிவிட்டது. ஆயிஷா (ரலி) அவர்கள் பல்லிகளை கொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று (உர்வா என்ற அறிவிப்பாளர்) கூறியுள்ளார். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) 

நூல் : அஹ்மத் (24463)

இந்த ஹதீஸில் சாயிபா இடம்பெறவில்லை. மாறாக அப்துல்லாஹ் பின்அப்திர் ரஹ்மான் என்ற நபர் இடம்பெறுகிறார். இவரது நம்பகத்தன்மைûயும் யாராலும் நிரூபிக்கப்படவில்லை. இவர் யாரென்றும் தெரியவில்லை. எனவே இந்த செய்திக்கும் ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

நெருப்பை ஊதிவிட்டதற்காக பல்லியை கொல்ல வேண்டுமென்றால் மற்ற மற்ற உயிரினங்கள் நெருப்பை அனைத்திருக்கிறது. எனவே பல்லியைத் தவிர உள்ள வேறெந்த விஷ ஜந்துக்களையும் கொல்லக்கூடாது என்று சொல்லமுடியுமா? ஒரு உயிரைக் கொல்லுவதற்கு இப்படிப்பட்ட மோசமான அளவுகோலை நபி (ஸல்) அவர்கள் நிச்சயமாக சொல்லவே மாட்டார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் சரியான ஹதீஸ்

பல்லி தீங்கிழைக்கக் கூடியது என்பதைத் தவிர வேறெதையும் பல்லி சம்பந்தமாக ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுறவில்லை. பல்லியை கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதை கூட ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்காதபோது பல்லியை கொல்வதற்கான காரணத்தை நபியவர்களிடமிருந்து கேட்பதற்கு அறவே வாய்ப்பில்லை. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :பல்லி தீங்கிழைக்கக் கூடியது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் அதைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதை நான் செவியுறவில்லை என்றும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) 

நூல் : புகாரி (1831)

ஆகையால் இப்ராஹிம் நபிக்கு எதிராக நெருப்பை ஊதிவிட்டது என்ற கருத்தை நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. ஆயிஷா (ரலி) அவர்களும் சொல்லவில்லை. உம்மு ஷரீக் (ரலி) அவர்களும் சொல்லவில்லை என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணமாகிவிட்டது. 

தீமைதரக்கூடிய உயிரிகளைக் கொல்லலாம்

மேற்கண்ட ஹதீஸை நாம் மறுப்பதால் பல்லியை கொல்லக்கூடாது என்று கூறுவதாக விளங்கிக்கொள்ளக் கூடாது. இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு எதிராக நெருப்பை ஊதிவிட்டதால் தான் பல்லியை கொல்ல வேண்டும் என்ற தவறான காரணத்தை தான் மறுக்கிறோம். பல்லி தீங்கு தரக்கூடிய உயிரினம் என்ற அடிப்படையில் அதைக் கொல்லலாம். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பல்லியை கொல்லும்படி கட்டளையிட்டார்கள். அதற்கு ஃபுவைசிக் (தீங்குதரக்கூடிய மோசமான உயிரி) என்று பெயர் வைத்தார்கள். 

அறிவிப்பவர் : சஃத் பின் அபீவக்காஸ்

நூல் : முஸ்லிம் (4154)

நபி (ஸல்) அவர்கள் பல்லிக்கு மட்டும் இவ்வாறு கூறவில்லை. மாறாக இன்னும் சில உயிரினங்களையும் பல்லியைப் போன்று தீங்குதரக்கூடியவைகள் என்று கூறியுள்ளார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும். அவற்றை இஹ்ராம் அணிந்தவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை. அவை காகம் பருந்து தேள் எலி வெறிநாய் ஆகியனவாகும். 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி (1826)