Tamil Bayan Points

பள்ளிவாசலின் சிறப்புகள்

பயான் குறிப்புகள்: கொள்கை உறுதி

Last Updated on October 27, 2023 by Trichy Farook

பள்ளிவாசலின் சிறப்புகள்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!

உலகில் இருக்கும் அனைத்துக் கொள்கைகள், கோட்பாடுகளைக் காட்டிலும் தனித்து விளங்கும் மார்க்கம் இஸ்லாம். இதற்குப் பல்வேறு காரணங்களைக் குறிப்பிடலாம். அவற்றுள் முக்கிய ஒன்று, இஸ்லாம் கூறும் சமத்துவம் என்பதை எவராலும் மறுக்க இயலாது.

நிறம், மொழி என்று எண்ணற்ற வேறுபாடுகள் மனிதர்கள் மத்தியில் இருப்பினும் படைத்தவன் பார்வையில் அனைவரும் சமம் என்று இஸ்லாம் உரக்கச் சொல்கிறது. வெறுமனே வாயளவில் இல்லாமல், மனித ஒற்றுமையை, சமத்துவத்தை நடைமுறை வாழ்விலும் சாத்தியமாக்கிக் காட்டுகிறது. இந்தப் புரட்சிக்குரிய முக்கியக் களமாக பள்ளிவாசல் திகழ்வதன் மூலம் அதன் சிறப்பையும், புகழையும் நாமெல்லாம் உணர்ந்து கொள்ள முடியும்.

பள்ளிவாசலைப் பற்றிப் பேசாமல் இஸ்லாத்தை முழுமையாகப் போதிக்க இயலாது எனும் அளவிற்குப் பல்வேறு செய்திகள் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் சொல்லப்பட்டுள்ளன. ஆரம்ப கட்டமாக, அவற்றில் இருக்கும் பள்ளிவாசல் பற்றிய சில அடிப்படைத் தகவல்களையும், சிறப்புகளையும் பற்றி இந்த உரையில் காண்போம். 

படைத்தவனுக்குப் பிடித்த இடம்

பூமியிலே விதவிதமான இடங்கள் இருக்கின்றன. ஆறுகள், மலைகள், காடுகள் என்று கண்கவரும் வகையிலான இயற்கைப் பகுதிகள் இருக்கின்றன. கோபுரங்கள், அடுக்குமாடிக் கட்டடங்கள், தொழிற்சாலைகள் என்று பிரமிக்க வைக்கும் செயற்கையான இடங்களும் உள்ளன. இன்னும் சொல்வதெனில், நவீன மனிதனின் தேடல் பார்வையில் அகப்படாத. அவனது கால்தடம் பதியாத பல்வேறு பகுதிகள் இருக்கவே செய்கின்றன. இப்படி இவ்வுலகில் எத்தனையோ இடங்கள், பகுதிகள் இருப்பினும், இவை எல்லாவற்றையும் விட பள்ளிவாசல்கள் தான் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமான இடம் என்று மார்க்கம் சொல்கிறது.

ஓர் ஊரிலுள்ள இடங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் பள்ளிவாசலாகும். ஓர் ஊரிலுள்ள இடங்களிலேயே அல்லாஹ்வின் வெறுப்பிற்குரிய இடம் கடைத்தெருவாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (1190)

உலகின் முதல் பள்ளிவாசல்

மகத்துவமும் மாண்பும் கொண்ட ஏக இறைவனிடம் மதிப்பிற்குரிய இடங்களாக மஸ்ஜித்கள் இருக்கின்றன. எனவே தான், முதல் மனிதரும், இறைத்தூதருமான ஆதம் (அலை) அவர்கள் மூலமாகவே பள்ளிவாசல் நிறுவப்பட்டு விட்டது. ஆதம் நபி அவர்கள் கட்டிய முதல் பள்ளிவாசல், மக்காவிலுள்ள கஅபதுல்லாஹ் என்பதையும் இரண்டாவது பள்ளிவாசல் பாலஸ்தீனத்திலுள்ள பைத்துல் முகத்தஸ் என்பதையும் பின்வரும் செய்திகள் விளக்குகின்றன.

 

3:96 اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ‌‌ۚ‏

 

அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.

(திருக்குர் ஆன்:3:96.)

நான் (நபியவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?’’ என்று கேட்டேன். அவர்கள், “அல்மஸ்ஜிதுல் ஹராம் – மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்‘’ என்று பதிலளித்தார்கள். நான், “பிறகு எது?’’ என்று கேட்டேன். அவர்கள், “(ஜெரூஸலத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா’’ என்று பதிலளித்தார்கள். நான், “அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது’’ என்று கேட்டேன். அவர்கள், “நாற்பதாண்டுகள்’’ (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப்பட்டது). பிறகு, “நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில்தான் சிறப்பு உள்ளது’’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: புஹாரி (3366)

பிந்தைய காலகட்டங்களில், இவ்விரண்டு பள்ளிவாசல்களும் மீண்டும் சீரமைக்கப்பட்டன. ஏகத்துவத்தின் தந்தையாக விளங்கும் இப்ராஹீம் நபி (அலை) அவர்கள், தமது மகனார் இஸ்மாயீல் நபி (அலை) அவர்களுடன் சேர்ந்து கஅபத்துல்லாஹ்வைப் புதுப்பித்துக் கட்டினார்கள். அதுபோல, சுலைமான் நபி (அலை) அவர்கள் பைத்துல் முகத்தஸ் எனும் மஸ்ஜிதுல் அக்ஸாவைப் புனர்நிர்மானம் செய்தார்கள்.

…பிறகு, இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு (மீண்டும் ஒருமுறை இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பார்த்து வர வேண்டும் போல்) தோன்றியது. உடனே அவர்கள் (மக்கா) செல்ல, அங்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற்றுக்குப் பின் பக்கத்தில் தமது அம்பைச் சீர் செய்து கொண்டிருக்கக் கண்டார்கள். “இஸ்மாயீலே! உன் இறைவன் தனக்கு ஓர் இல்லத்தை நான் (புதுப்பித்துக்) கட்ட வேண்டுமென்று எனக்குக் கட்டளையிட்டுள்ளான்’’ என்று சொன்னார்கள். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள், “நீங்கள் உங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படியுங்கள்’’ என்று சொன்னார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், “(அதைக் கட்டுவதற்கு) நீ எனக்கு உதவ வேண்டுமென்றும் அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்’’ என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள், “அப்படியாயின் நான் (உதவி) செய்கிறேன்’’ என்று சொன்னார்கள்.

உடனே இருவரும் தயாராகி, இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டத் தொடங்க, இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களைக் கொண்டுவந்து தரலானார்கள். இருவரும் (அப்போது), “இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயம், நீயே செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறாய் (அல்குர்ஆன்:2:127.) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் கட்டடம் எழும்பியது. பெரியவ(ர் இப்ராஹீம் அன்னா)ருக்கு கற்களைத் தூக்கி வைக்க முடியவில்லை. எனவே இந்தக் கல் மீது நின்று கொண்டார்கள். அவர்களுக்கு இஸ்மாயீல் (அலை) கற்களை எடுத்துத் தரலானார்கள். இருவரும் “இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப்பணியை) ஏற்பாயாக! நிச்சயமாக, நீயே செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறாய்’’ (2:127) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி).

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)

நூல்: புஹாரி (3365)

சுலைமான் நபி அவர்கள் பைத்துல் முகத்தஸைக் கட்டிய பிறகு மூன்று நற்பேறுகளை மகத்தவமும் மாண்பும் கொண்ட அல்லாஹ்விடம் கேட்டார்கள். (அவை:) உண்மையான ஞானத்தை (பொருத்தமான தீர்ப்பை) கேட்டார்கள். அது வழங்கப்பட்டது.

(மேலும், மகத்துவமும் மாண்பும் கொண்ட அல்லாஹ்விடம்) தமக்குப் பிறகு யாருக்கும் வழங்கப்படாத ஆட்சியதிகாரத்தைக் கேட்டார்கள். அதுவும் வழங்கப்பட்டது.

மஸ்ஜிதைக் கட்டிய பிறகு அல்லாஹ்விடம், எவரும் இங்கு தொழுகையைத் தவிர வேறெந்த வலிமையும் பெறக்கூடாது; அத்தொழுகை மூலம் அவரது தாய் அவரைப் பெற்றெடுத்த தினத்தைப்போன்று அவர் தமது பாவங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்று கேட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: நஸாயீ-693 (693)

பள்ளிவாசலின் முக்கியத்துவம்

மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அதுவும் சொற்பத்திலும் சொற்பமாக இருக்கும் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே பள்ளிவாசல் கட்டப்பட்டு வந்துள்ளது. இதற்குப் பின்னணியில் மிக முக்கியக் காரணம் இல்லாமல் இல்லை. அன்றைய காலங்களில் தொழுகை எனும் வணக்கம் கண்டிப்பாகப் பள்ளிவாசலில் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் எனும் சட்டம் இருந்தது. இந்தச் சட்டம் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குத் தளர்த்தப்பட்டது.

கடமையான தொழுகை விசயத்தில் முந்தைய சமுதாய மக்களுக்கு இருந்ததை விடவும் நமக்குக் குறைவு செய்யப்பட்டதைப் போன்று இதிலும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. கடமையைத் தவறவிட்டுவிடாமல் உரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் எனும் அடிப்படையில் நேரம் வரும் போது இருக்கும் இடத்தில் தொழுது கொள்ளும் அனுமதி தரப்பட்டுள்ளது. இதனைப் பின்வரும் நபிமொழி மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

எனக்கு முன்னர் வாழ்ந்த (இறைத்தூதர்கள்) எவருக்கும் வழங்கப்பெறாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்பெற்றுள்ளன: (அவை)

1.ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமுதாயத்தாருக்கு மட்டுமே (தூதராக நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். நான் சிவப்பர் கறுப்பர் (என்ற பாகுபாடின்றி) அனைவருக்கும் தூதராக அனுப்பப் பெற்றுள்ளேன்.

2.போரில் கிடைக்கப் பெறும் செல்வங்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளன. எனக்கு முன்னிருந்த (இறைத்தூதர்) எவருக்கும் அவை அனுதிக்கப்படவில்லை.

3.எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கு ஏற்றதாகவும் தூய்மையானதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. (என் சமுதாயத்தாரில்) யாரேனும் ஒருவருக்குத் தொழுகை(யின் நேரம்) வந்து விட்டால் அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்திலேயே தொழுதுகொள்வார்.

  1. (எதிரிகளுக்கும் எனக்குமிடையே) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் (அவர்களுடைய உள்ளங்களில் என்னைப் பற்றிய) அச்சம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் வெற்றியளிக்கப் பெற்றுள்ளேன்.
  2. (மறுமையில் என் சமுதாயத்தாருக்காக) பரிந்துரை செய்யும் வாய்ப்பு அளிக்கப் பெற்றுள்ளேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (905)

இந்த அனுமதி இருந்தாலும், பள்ளிவாசல் கட்டுவது, அதில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவது குறித்து மார்க்கத்தில் நிறைய செய்திகள் போதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பள்ளிவாசலில் ஜமாஅத்தோடு தொழுவது பற்றி அதிகம் வலியுறுத்தி இருப்பதோடு, அதில் அலட்சியமாக இருப்பவர்களைக் குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.

ஏனெனில், பள்ளிவாசல் மூலமாக, அதனுடன் தொடர்புள்ள காரியங்கள் மூலமாக நமக்குப் பல்வேறு பாக்கியங்களை அல்லாஹ் கொடுக்கிறான். அளவற்ற அருள் வளங்களை அள்ளித் தருகிறான். அளப்பறிய நன்மைகளைக் கொள்ளையடிக்கும் வாய்ப்பினைக் கொட்டிக் கொடுக்கிறான். இந்தச் சிறப்புகளை பெறுவதற்குப் பள்ளிவாசல் அமைப்பது அவசியம்.

நபிகளார் கட்டிய முதல் பள்ளிவாசல்

பள்ளிவாசல் அமைத்து வணக்க வழிபாடுகளைச் செய்வதிலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள். மக்காவில் இருந்து ஹிஜ்ரத் செய்து வந்த பிறகு நபிகளார் மதீனாவின் வெளியே ஹர்ரா எனும் பகுதியில் மஸ்ஜிதுல் குபாவை முதலில் கட்டினார்கள். பிறகுதான் மதீனா நகருக்குள் சென்று மஸ்ஜிதுன் நபவியைக் கட்டினார்கள். இதனை கீழ்வரும் நபிமொழி விளக்குகிறது.

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிருந்து வந்த போது அவர்களை மதீனாவிலிருந்த முஸ்லிம்கள் கருங்கற்கள் நிறைந்த புறப்பகுதியான ஹர்ராவிலே சந்தித்தார்கள்.)

…அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் வலப்பக்கமாகத் திரும்பி (“குபா’வில் உள்ள) பனூஅம்ர் பின் அவ்ஃப் குலத்தாரி(ன் குடியிருப்புப் பகுதியி)ல் தங்கினார்கள். இது ரபீஉல் அவ்வல் மாதம் திங்கள் கிழமை நடந்தது. அப்போது மக்களை நோக்கி அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மௌனமாக அமர்ந்திருந்தார்கள். அப்போது அங்கு வந்திருந்த – நபி (ஸல்) அவர்களைப் பார்த்திராத – அன்சாரிகளில் சிலர் (அபூபக்ர் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று எண்ணிக் கொண்டு) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு முகமன் கூறிக் கொண்டிருந்தனர்.

இறுதியில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது வெயில் பட்டபோது உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் சென்று தமது துண்டினால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது நிழலிட்டார்கள். அப்போது தான் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அறிந்து கொண்டனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ அம்ர் பின் அவ்ஃபினரிடையே (குபாவில்) பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் தங்கியிருந்து “இறையச்சத்தின் மீது அடித்தளமிடப்பட்ட (மஸ்ஜித் குபா) பள்ளிவாசலை’ நிறுவினார்கள். (தாம் தங்கியிருந்த நாட்களில்) அந்தப் பள்ளியில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதார்கள்.

பிறகு தமது வாகனத்திலேறி பயணமானார்கள். அவர்களுடன் மக்களும் நடந்து சென்றனர். முடிவாக (அவர்களது) ஒட்டகம் மதீனாவில் (தற்போது) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது பள்ளிவாசல் (அமைந்துள்ள இடம்) அருகே மண்டியிட்டு படுத்துக் கொண்டது. அந்த நாளில் முஸ்லிம்களில் சிலர் அங்கு தான் தொழுது கொண்டிருந்தனர். அது சஅத் பின் ஸுராரா (ரலி) அவர்களின் பொறுப்பிலிருந்த சஹ்ல், சுஹைல் என்ற இரு அனாதைச் சிறுவர்களுக்குச் சொந்தமான பேரீச்சம் பழம் (உலரவைக்கப்படும்) களமாக இருந்தது.

அந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனம் மண்டியிட்டுப் படுத்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ஷா அல்லாஹ் இது தான் (நமது) தங்குமிடம்‘’ என்று கூறினார்கள். பிறகு அந்த இரு சிறுவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து அந்தக் களத்தை பள்ளிவாயில் அமைப்பதற்காக விலைக்குக் கேட்டார்கள். அவர்கள் இருவரும், “இல்லை. அதை உங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறோம் அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுவர்களிடமிருந்து அதை அன்பளிப்பாகப் பெற மறுத்து இறுதியில் அதை அவர்களிடமிருந்து விலைக்கே வாங்கினார்கள். பிறகு அதில் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அதைக் கட்டும் போது அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் செங்கல் சுமக்கலானார்கள்.

அறிவிப்பவர்: சுராகா பின் மாலிக்(ரலி)

நூல்: புஹாரி (3906)

பள்ளிவாசலைக் கட்டுவதின் சிறப்பு

இம்மை வாழ்க்கை நிரந்தரமற்றது, அற்பமானது என்பதை நாமெல்லாம் அறிந்திருந்தாலும் இங்கு வாழும் போது சொந்தமாக ஒரு வீடாவது இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம். அதிகமான மக்கள் தங்களது இந்த ஆசையை, கனவை நிறைவேற்றிக் கொள்ள அயராது பாடுபடுகிறார்கள்; தினந்தோறும் மெனக்கெட்டு சிரமப்படுகிறார்கள். இருப்பினும், பலருடைய வாழ்நாளில் இது வெறும் பகல் கனவாகவே இருகிறது. எட்டாக் கனியாகவே இருந்து விடுகிறது.

இப்படியிருக்க, நிரந்தரமான மறுமை வாழ்வின் போது சொர்க்கத்திலே வீட்டைப் பெறும் பாக்கியம் என்பது சாதாரணமானதா? இந்தப் பொன்னான பாக்கியத்தை, அரிய வாய்ப்பினை இங்கு பள்ளிவாசல் கட்டுவது மூலமாக அல்லாஹ் நமக்குத் தருகிறான்.

உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டிய (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க் கட்ட எண்ணியபோது அது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் (மக்களிடம்), “நீங்கள் மிக அதிகமாகவே பேசிவிட்டீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்’ என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்’’ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (926)

நிரந்தரமான மறுமை வாழ்விலே சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவிற்கு இடம் கிடைப்பதென்பது வானங்கள், பூமி மற்றும் அவற்றிலுள்ள அனைத்தையும் விட சிறந்தது. இத்தைகைய உயரிய சொர்க்கத்திலே வீட்டைச் சொந்தமாக்கும் அற்புதமான வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. அல்லாஹ்வின் ஆலயத்தை அமைப்பதற்காகப் பொருளாதாரம் கொடுப்பவர்கள், திரட்டுபவர்கள் மற்றும் அதற்காக உழைப்பவர்களுக்கு படைத்தவனின் தரமான பரிசு தயாராக இருக்கிறது.

நமக்காக வீடு கட்டும் போது இடமோ, பொருளோ, பணமோ வீண்விரையம் ஆகிவிடக் கூடாது என்று கண்ணும் கருத்துமாக இருந்து கவனத்தோடு கட்டுவோம். இதே அக்கறையும் ஆர்வமும் பள்ளிவாசல் அமைக்கும் போதும் நமக்கு இருக்க வேண்டும். எவ்வகையிலும் அதன் பணிகளில் கவனக்குறைவாக இல்லாமல் நல்ல முறையில் கட்டி எழுப்ப வேண்டும்.

பள்ளிவாசல் கட்டுவதன் நோக்கம்

பள்ளிவாசலைக் கட்டுவதன் அடிப்படை நோக்கமே ஏக இறைவனான அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும், அவன் தனது தூதர் வாயிலாக வழிகாட்டிய வணக்க வழிபாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதாகும். இதனைப் பின்வரும் ஆதாரங்கள் மூலம் அறியலாம்.

 

72:18 وَّاَنَّ الْمَسٰجِدَ لِلّٰهِ فَلَا تَدْعُوْا مَعَ اللّٰهِ اَحَدًا ۙ‏

 

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

(திருக்குர்ஆன்:72:18.)

ஒரு முறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது கிராமவாசியொருவர் வந்து பள்ளி வாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் “நிறுத்து! நிறுத்து!’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள்’’ என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார்.

பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து “இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவு கூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும்‘’ என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம் கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளித் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதை அந்தச் சிறுநீர்மீது ஊற்றச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (480)

அல்லாஹ் அருளிய வணக்கங்களை அவனுக்காக அவனிடம் நன்மை பெறுவதற்காகச் செய்வதற்குரிய இடமே பள்ளிவாசல்கள். இத்துடன், சமுதாயம் சார்ந்த நற்பணிகளைச் செய்வதற்கு அனுமதி இருக்கிறது. இதுகுறித்து வேறொரு இடத்தில் காண்போம்.

இதைவிடுத்து, இதற்கு நேர்மாற்றமான திசையில் இன்று பல பள்ளிவாசல்கள் இயங்கிக் கொண்டிருப்பது கவலை அளிக்கிறது. இறந்துபோன மனிதர்களிடம் உதவி தேடுவது உள்ளிட்ட எங்கும் எப்போதும் செய்யக் கூடாத, கேடுகெட்ட இணைவைப்பான காரியங்களை, அதுவும் படைத்தவனின் ஆலயத்திற்குள் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். மவ்லூது, இருட்டு திக்ர் என்று மார்க்கத்தின் அங்கீகாரமற்ற பித்அத்தான செயல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற பள்ளிவாசலின் தகுதியை இழக்கச் செய்யும் காரியங்கள் பற்றி  இனி அறிவோம். 

பள்ளிவாசலின் தகுதியை இழந்த இடங்கள்

அல்லாஹ்வின் ஆலயம் எப்படி இருக்க வேண்டும்; எவ்வாறு செயல்பட வேண்டும் என்று மார்க்கம் ஆணை பிறப்பித்துள்ளதோ அதன்படி அது அமைந்திருப்பது அவசியம். அதற்கு மாற்றமாக இருந்தால் அது தனக்குரிய அந்தஸ்த்தை இழந்துவிடும். இதைப் புரிந்து கொள்ளாமல், அதிக முஸ்லிம்கள் பள்ளிவாசல்களின் புனிதத்தைப் பாழ்படுத்தி வருகிறார்கள்.

மக்களெல்லாம் பள்ளிவாசல் என்று அழைத்தால் மட்டும் போதாது; அல்லாஹ்வின் பார்வையில் அது பள்ளிவாசலாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள மறந்துவிட்டார்கள். இது குறித்து இருக்கும் திருமறை வசனங்களைப் பாருங்கள்.

 

9:107 وَالَّذِيْنَ اتَّخَذُوْا مَسْجِدًا ضِرَارًا وَّكُفْرًا وَّتَفْرِيْقًۢا بَيْنَ الْمُؤْمِنِيْنَ وَاِرْصَادًا لِّمَنْ حَارَبَ اللّٰهَ وَرَسُوْلَهٗ مِنْ قَبْلُ‌ؕ وَلَيَحْلِفُنَّ اِنْ اَرَدْنَاۤ اِلَّا الْحُسْنٰى‌ؕ وَاللّٰهُ يَشْهَدُ اِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏

 

9:108 لَا تَقُمْ فِيْهِ اَبَدًا ‌ؕ لَمَسْجِدٌ اُسِّسَ عَلَى التَّقْوٰى مِنْ اَوَّلِ يَوْمٍ اَحَقُّ اَنْ تَقُوْمَ فِيْهِ‌ؕ فِيْهِ رِجَالٌ يُّحِبُّوْنَ اَنْ يَّتَطَهَّرُوْا ‌ؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُطَّهِّرِيْنَ‏

 

 

தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் “நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை’’ என்று சத்தியம் செய்கின்றனர். “அவர்கள் பொய்யர்களே’’ என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.

(திருக்குர்ஆன் 9:107-109)

இந்த வசனம் சொல்வதைப் போன்று பள்ளிவாசலின் தகுதியை இழக்க வைக்கும் காரியங்கள் இன்றைய பெரும்பாலான பள்ளிவாசல்களில் தாரளமாக, சகஜமாக இருக்கின்றன. பள்ளிவாசலில் வரதட்சணைத் திருமணங்கள் நடைபெறுகின்றன; பள்ளிவாசல் பணம் வட்டிக்கு விடப்படுகின்றது. பள்ளிவாசலுக்குள் தர்ஹா கட்டி கும்பிடுகிறார்கள்; அந்த தர்ஹாவில் கோரிக்கை வைத்து மன்றாடுகிறார்கள். மத்ஹபுகளின் பெயரால் மார்க்கச் சட்டங்களைக் கூறுபோட்டு மக்களைப் பிரிக்கிறார்கள்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் வழிகாட்டிய மார்க்க நெறிகளை அழித்து நாசமாக்கத் துடிக்கும் சூபியிஸம், ஷியாயிஸத்தின் சடங்குகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்படுகின்றன. பஞ்சா எடுப்பது, தீ மிதிப்பது, பால் கிதாபு பார்ப்பது போன்ற பிறமதக் கலாச்சாரங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறெல்லாம், திருமறை வசனங்கள் கண்டித்துள்ள பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் இடங்கள் பள்ளிவாசல்கள் அல்ல. அவற்றில் தொழுவதற்கும் ஒருபோதும் அனுமதி இல்லை என்பதே மார்க்கத்தின் நிலைபாடு!

பள்ளிவாசல் நிர்வாகிகளின் பண்புகள்

மஸ்ஜிதுக்குரிய இலக்கணம் சொல்லப்பட்டு இருப்பது போன்று அதனை நிர்வாகம் செய்பவர்களுக்குரிய தகுதிகளும் சொல்லப்பட்டு உள்ளன. மார்க்கம் கூறும் இறை நம்பிக்கை சார்ந்த விஷயங்களிலும் செயல்பாடுகளிலும் சரியாக இருக்க வேண்டும். மார்க்கத்தைக் கடைப்பிடிப்பதில் மற்ற மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். இப்படித்தான் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு மார்க்கம் வரையறை வகுக்கிறது என்பதற்குப் பின்வரும் வசனங்கள் சான்றுகளாக உள்ளன.

 

9:17 مَا كَانَ لِلْمُشْرِكِيْنَ اَنْ يَّعْمُرُوْا مَسٰجِدَ اللّٰهِ شٰهِدِيْنَ عَلٰٓى اَنْفُسِهِمْ بِالـكُفْرِ‌ؕ اُولٰۤٮِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ ۖۚ وَ فِى النَّارِ هُمْ خٰلِدُوْنَ‏

 

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

(திருக்குர்ஆன்:9:17.)

 

9:18 اِنَّمَا يَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَ قَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ وَلَمْ يَخْشَ اِلَّا اللّٰهَ‌ فَعَسٰٓى اُولٰۤٮِٕكَ اَنْ يَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِيْنَ‏

 

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.

(திருக்குர்ஆன்:9:18.)

இந்தக் கட்டளைகளும் பல இடங்களில், பள்ளிவாசல் நிர்வாகத்தில் மீறப்படுகின்றன. வட்டி, வரதட்சணை போன்ற பெரும்பாவங்களிலும், சமூகத் தீமைகளிலும் பங்கெடுப்பவர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். புகை பிடிப்பவர்கள், ஒழுக்க வீழ்ச்சி அடைந்தவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுள் தாயத்து, தகடு போன்ற மூட நம்பிக்கைகளில் மூழ்கியவர்கள், தர்ஹாக்களுக்கு வலம் போகும் அவ்லியா பக்தர்கள் இருக்கிறார்கள். இத்தகைய நபர்கள் நிர்வாகத்தில் அமர அறவே அனுமதிக்க கூடாது. இந்தப் பாவ காரியங்களில் ஈடுபடுபவர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகளாக வந்து விடாமல் இருக்க முஸ்லிம்கள் கவனம் செலுத்தி, இதிலும் மார்க்கத்தை நிலைநிறுத்த வேண்டும்.

பள்ளிவாசலும் பராமரிப்பும்

எந்த நோக்கத்திற்காகப் பள்ளிவாசல் கட்டப்படுகிறதோ அந்த எண்ணம் நிறைவேற வேண்டும்; நீடிக்க வேண்டும் என்றால் அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். பள்ளிவாசல் கட்டுவதற்கு அளிப்பதைக் காட்டிலும் அதன் பராமரிப்புக்கு நன்கொடை அளிப்பதில் அநேக மக்கள் அலட்சியமாக இருக்கிறார்கள். அல்லாஹ்வின் ஆலயத்திற்காக செலவளிப் பதற்கும் நிச்சயம் நன்மை உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அங்கு நிறைவேற்றப்படும் நற்காரியங்கள், வணக்க வழிபாடுகள் மூலம் அதேபோன்று நன்மை நமக்கும் கிடைக்கும்.

 

47:7 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تَـنْصُرُوا اللّٰهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ اَقْدَامَكُمْ‏

 

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்.

(திருக்குர்ஆன்:47:7.)

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த “ஒரு கறுப்பு ஆண்’ அல்லது “ஒரு கறுப்புப் பெண்’ இறந்துவிட்டார். ஆகவே அவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அப்போது மக்கள், “அவர் இறந்துவிட்டார்’’ எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அது பற்றி (முன்பே) என்னிடம் நீங்கள் அறிவித்திருக்கக் கூடாதா? “அவருடைய அடக்கத்தலத்தை எனக்குக் காட்டுங்கள்’’ என்று கூறிவிட்டு அவரது அடக்கத்தலத்திற்குச் சென்று அவருக்காக பிரார்த்தனைத் தொழுகை (ஜனாஸா) தொழுதார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: புஹாரி (458)

அல்லாஹ்வின் ஆலயத்தைப் பராமரிப்பதற்கும் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும். நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்று நினைத்துக் கொண்டு பள்ளிவாசலின் தூய்மையைக் கெடுக்கும் வகையில் ஒருபோதும் ஈடுபட்டு விடக்கூடாது. அதன் பொருட்களை, வளங்களை சேதப்படுத்தி விடக்கூடாது. நம்முடைய வீட்டில் எவ்வாறு அக்கறையோடு நடந்து கொள்வோமோ அதைவிட அதிகமாக அல்லாஹ்வின் ஆலயத்தில் பொதுநலத்தோடு நடந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்திலும் நபிகளாரிடம் நமக்கு முன்மாதிரி இருக்கிறது.

கிப்லா திசையில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். இது அவர்களுக்கு மன வருத்தத்தை அளித்தது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. உடனே அவர்கள் எழுந்து தமது கையால் அதைச் சுரண்டினார்கள். பிறகு ‘‘உங்களில் ஒருவர் தொழுகையில் நின்றுகொண்டிருக்கும்போது ‘அவர் தம் இறைவனுடன் அந்தரமாக உரையாடுகிறார்’ அல்லது ‘அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவருடைய இறைவன் இருக்கின்றான்’. ஆகவே, எவரும் தமது கிப்லாத் திசை நோக்கிக் கண்டிப்பாக உமிழ வேண்டாம். தமது இடப்புறமோ அல்லது தமது பாதங்களுக்கு அடியிலோ உமிழ்ந்துகொள்ளட்டும்’’ என்று கூறிவிட்டுப் பிறகு, தமது மேலங்கியின் ஓர் ஓரத்தை எடுத்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிவிட்டு, ‘‘அல்லது இவ்வாறு அவர் செய்துகொள்ளட்டும்’’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புஹாரி (405)

பள்ளிவாசலும் தொழுகை அழைப்பும்

பள்ளிவாசல் என்பது இஸ்லாமிய சமுதாயத்தின் முக்கிய அடையாளம். முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் கண்டிப்பாகப் பள்ளிவாசல் இருக்க வேண்டும். அதன் மூலம் பாங்கு சொல்லி மக்களை, படைத்தவனை வணங்குவதன் பக்கம் அழைக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் கற்றுக் கொடுத்த அந்த அழைப்பில் எந்தவொரு கூடுதல் குறையும் செய்யாமல் அதில் உள்ளவாறு சொல்ல வேண்டும். தொழுகையை நிலைநாட்ட வேண்டும்.

(தொழுகை நேரம் வந்துவிட்டதை அறிவிக்கும் முறை ஒன்று தேவை என முஸ்லிம்கள் கருதியபோது) மக்கள் நெருப்பு மூட்டலாம் என்றும், மணியடித்துக் கூப்பிடலாம் என்றும் கூறினர். (இவையெல்லாம்) யூதர்கள், கிறிஸ்தவர்கள் (ஆகியோரின் போக்காகும்) எனச் சிலர் கூறினார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களுக்கு பாங்கு எனும் தொழுகை அறிவிப்பிற்குரிய வாசகங்களை (கற்றுத் தந்து) அவற்றை இருமுறை கூறும்படியும் இகாமத் வாசகங்களை ஒருமுறை மட்டும் சொல்லும் படியும் (நபியவர்கள் மூலம்) உத்தரவிடப்பட்டது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புஹாரி (603)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தார் மீது படையெடுத்துச் சென்றால் காலை நேரம் வரும் வரை தாக்குதல் நடத்த மாட்டார்கள். பாங்கின் ஓசையைக் கேட்டால் தாக்குதல் நடத்த மாட்டார்கள். பாங்கின் ஓசையைக் கேட்காவிட்டால் காலை நேரம் வந்த பின் தாக்குதல் நடத்துவார்கள். கைபரில் நாங்கள் இரவு நேரத்தில் சென்று தங்கினோம்.

அறிவிப்பவர்: அனஸ்(ரலி)

நூல்: புஹாரி (2943)

ஆகவே பள்ளிவாசலின் சிறப்புகளை அறிந்தவர்களாக, நாம் வாழ வேண்டும் அப்படிப்பட்ட நன் மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் அக்கி அருள் புரிவானாக.!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.