Tamil Bayan Points

பாபர் பள்ளியை இடித்த பல்பீர் சிங் முஸ்லிமாக மாறி 90 மசூதிகளை கட்டினார்

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

Last Updated on November 10, 2019 by Trichy Farook

பாபர் மசூதியை இடித்த பல்பீர் சிங், முகமது அமீராக மதம் மாறி 90 மசூதிகளை கட்டியுள்ளார். பாபர் மசூதியின் குவிமாடத்தில் முதலில் ஏறியவர் பல்பீர் சிங். கரசேவகர்களுடன் இணைந்து மூலம் குவிமாடத்தை தாக்கி நிர்மூலம் செய்தார்.

சொந்த ஊரான பானிபட்டில் கதாநாயகன் போல மக்களால் வரவேற்கப்பட்டார். பல்பீர் சிங் செயலால் பள்ளி ஆசிரியரான அவரது தந்தை வருத்தம் அடைந்தார். குற்ற உணர்வு அடைந்த பல்பீர் சிங், தனது தவறை உணர்ந்து இஸ்லாமியராக மதம் மாறினார்.

முகமது அமீர் என பெயர் மாற்றிக் கொண்ட பல்பீர் சிங், இஸ்லாமிய பள்ளியை நடத்தி வருகிறார். இதுவரை 90 மசூதிகளை கட்டியதுடன், மசூதிகளை பாதுகாக்கவும் உழைக்கிறார் என்பதே அவரின் சுவாரஷ்யம் ஆகும்.

Source:

https://www.dailythanthi.com/News/India/2019/11/09180413/Balbir-Singh-who-demolished-the-Babri-Masjid.vpf

 

பல்பீராக பாபர் மசூதியை இடித்தார்… இன்று அமீராக மசூதிகளைக் கட்டுகிறார்!

அயோத்தி நிலம் தொடர்பாக பல ஆண்டுகளாக நீடித்துவந்த பிரச்னைக்கு தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இந்தநிலையில், கடந்த 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போது அதன் டூம் மீது ஏறிய முதல் நபராக அறியப்படும் பல்பீர் சிங், என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா?

இந்தியாவே அதிர்ந்த சம்பவம் அது. எது நடக்கக் கூடாது என்று இந்திய மக்கள் கருதினார்களோ, கடைசியில் அது நடந்தேவிட்டது. மத நல்லிணக்கம் இந்தியாவிலிருந்து மறைந்த நாள். 1992- ம் ஆண்டு டிசம்பர் 6- ம் தேதி, அயோத்தியில் பாபர் மசூதி உடைக்கப்பட்டது. மசூதியை உடைக்க லட்சக்கணக்கான கரசேவகர்கள் அயோத்தியில் முகாமிட்டிருந்தனர். அதில், பல்பீர் சிங் என்பவரும் ஒருவர். பானிபட் நகரைச் சேர்ந்த பல்பீர் சிங்கின் தந்தை தவுலத் ராம், ஒரு ஆசிரியர். சிவசேனா தலைவர் பால்தாக்கரேவால் ஈர்க்கப்பட்டு, பல்பீர் சிங் அந்தக் கட்சியில் சேர்ந்தார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சித்தாந்தங்கள் ஈர்க்கப்பட்டு, தொடர்ந்து அந்த அமைப்பு நடத்தும் கூட்டங்களிலும் பங்கேற்றுவந்தார்.

ஆர்.எஸ்.எஸ் கூட்டங்களில் பங்கேற்றிருந்த பல்பீர் சிங்கின் மனத்தில், ராமர் கோயில் கட்ட வேண்டும் என்கிற எண்ணம் ஊறியிருந்தது. 1992- ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் அயோத்தியில் கரசேவகர்கள் குவிந்தனர். பானிபட்டில் இருந்து பல்பீர் சிங் தன் நண்பர் யோகேந்திர பாலுடன் சேர்ந்து அயோத்திக்குச் சென்றார். டிசம்பர் 6-ம் தேதி, ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியாமல்போக மசூதிமீது கரசேவகர்கள் ஏறத் தொடங்கினர். மசூதியின் டூமை குறிவைத்து பல்பீர் சிங் தன் நண்பருடன் ஏறினார். பாபர் மசூதி டூம் மீது ஏறிய முதல் கரசேவகர் இவர்தான்.

மசூதியின் கோபுரத்தை உடைத்த பிறகு, பானிபட் திரும்பிய பல்பீர் சிங்குக்குப் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. கடும் உற்சாகத்துடன் வீட்டுக்குச் சென்றார். வீட்டிலோ… வரவேற்பு வேறு விதமாக இருந்தது. மதச்சார்பின்மையில் நம்பிக்கைகொண்டிருந்த பல்பீர் சிங்கின் தந்தை, அவரை கடுமையாகக் கண்டித்தார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, தவறு செய்துவிட்டதாகத் தந்தையிடம் பல்பீர் சிங் மன்றாடினார். 20 வயது பல்பீர் சிங்குக்கு மன்னிப்பு கிடைக்கவில்லை. பிற்காலத்தில் தன் தவற்றை உணர்ந்த பல்பீர் சிங், இஸ்லாம் மதத்திற்கு மாறி, தன் பெயரை முகமது அமீர் என்று மாற்றிக்கொண்டார். இவரின் நண்பர் யோகேந்திர பாலுவும் இஸ்லாத்தைத் தழுவினார். தற்போது இவரின் பெயர், முகமது உமர். இஸ்லாமியப் பெண்ணை மணந்துகொண்ட அமீருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

பாபர் மசூதி உடைப்பு சம்பவம் குறித்து அமீர், ” சிலரால் தூண்டப்பட்டு சட்டத்தைக் கையில் எடுத்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகச் செயல்பட்டேன். அதை உணர்ந்துதான் இஸ்லாத்தைத் தழுவினேன். இதுவரை, 90 மசூதிகளை நானும் என் நண்பர் முகமது உமரும் சேர்ந்து சீரமைத்துள்ளோம். இஸ்லாமிய கூட்டங்களில் உரையாற்றி, மக்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன்” என்கிறார்.

Source:
https://www.vikatan.com/news/politics/143961-balbir-singh-who-helped-demolish-babri-masjid-is-now-a-muslim