Tamil Bayan Points

21) பால் மாற்றம்

நூல்கள்: நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்

Last Updated on March 5, 2022 by

கணவன் மனைவி இருவரில் எவராவது பால் மாறிவிட்டால் அதன் சட்டம் என்ன?

பால் மாற்றம் இயற்கையாக நடக்குமா? என்று தெரியவில்லை. நாம் அறிந்தவரை அறுவை சிகிச்சை மூலம் செயற்கையாகவே மாற்றப்படுகின்றது. இவ்வாறு செயற்கையாக மாற்றிக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

பெண்களுக்கு ஒப்ப நடக்கும் ஆண்களையும், ஆண்களுக்கு ஒப்ப நடக்கும் பெண்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்துள்ளனர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5885, 6834

எந்த வகையிலும் ஒரு பாலினம் இன்னொரு பாலினத்துக்கு ஒப்பாகக் கூடாது என்று இந்த ஹதீஸ் தடுப்பதால் முற்றாகவே மாற முயல்வது கடுமையான குற்றம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அப்படி மாறி விட்டால் அதன் பின்னர் ஏற்படும் நிலை என்ன? என்பதற்கு இஸ்லாத்தில் தீர்வு உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் யாரும் பால் மாறவில்லை என்பதால் அது பற்றிய சட்ட விளக்கம் நேரடியாக ஹதீஸ்களில் கிடைக்காது. இதனை ஒத்திருக்கின்ற ஏனைய சட்டங்களிலிருந்து இதற்கான விளக்கத்தை நாம் பெற வேண்டும்.

கணவன் என்பவன் ஆணாகத் தான் இருக்க வேண்டும். மனைவி என்பவள் பெண்ணாகத் தான் இருக்க வேண்டும். இதற்கு ஆதாரம் காட்டத் தேவையில்லை.

ஒரு கணவன் எப்போது பெண்ணாக மாறி விடுகின்றானோ அந்த நிமிடமே அவன் கணவனாக இருக்க முடியாது.

* மனைவியைப் பொருத்த வரை அவன் இறந்து விட்டதாகக் கருதப்பட வேண்டும்.

* அல்லது அவனால் விவாகரத்துச் செய்யப் பட்டவளாகக் கருதப்பட வேண்டும்.

இந்த இரண்டு நிலைகளில் இரண்டாவது நிலையே இவளைப் பொருத்த வரை பொருத்தமாக உள்ளது.

கணவன் இறந்து விட்டால் சோகத்தைக் காட்டுவதற்காகவும், கர்ப்ப அறையில் அவனது சிசு வளர்கின்றதா என்பதைக் கண்டறிவதற்காகவும் அவள் இத்தா இருக்க வேண்டும். இவன் உயிருடனேயே உள்ளதால் விவாகரத்துச் செய்யப்பட்ட நிலையிலேயே அவள் இருக்கிறாள். எனவே மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் காலம் வரை அவள் இத்தா இருந்து விட்டு அதன் பிறகு அவள் ஒரு ஆணைத் திருமணம் செய்யலாம்.