Tamil Bayan Points

பிறந்த குழந்தையின் மண்டை ஓடு மிக எளிதாக இருக்கும் நிலையில் அகீகா ஏன்?

கேள்வி-பதில்: குழந்தை வளர்ப்பு

Last Updated on November 21, 2020 by Trichy Farook

பிறந்த குழந்தையின் மண்டை ஓடு மிக எளிதாக இருக்கும் நிலையில் அகீகா ஏன்?

அகீகாவுடன் தலைமுடி மழிப்பது தொடர்பான செய்தி தாங்கள் குறிப்பிடுவது போல் புகாரி, முஸ்லிமில் இல்லை. முஸ்னத் அஹ்மதில் (19337) வது ஹதீஸாக இது பதிவு செய்யப் பட்டுள்ளது.

مسند أحمد مخرجا (33/ 318)
20139 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّ غُلَامٍ رَهِينٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ السَّابِعِ، وَيُحْلَقُ رَأْسُهُ، وَيُسَمَّى»

ஒவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆட்டை) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும்…

அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி)

ஏழு நாள் குழந்தையின் மண்டை ஓடு மெல்லியதாக இருக்கும் என்பது இந்தக் காலத்தில் மட்டுமல்ல! நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் ஏழு நாள் குழந்தையின் மண்டை ஓடு அவ்வாறு தான் இருந்திருக்கும். எனவே நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றை நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் செய்யுமாறு கூறியிருக்க மாட்டார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்றும் இந்த ஹதீஸை நமது சகோதரர்கள் நடைமுறைப் படுத்தியே வருகின்றார்கள். இதனால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

எனினும் தங்களின் குழந்தைக்கு அவ்வாறு ஏற்படும் என்று நீங்கள் கருதினால் அல்லது இந்தக் கட்டத்தில் முடியை மழிக்க வேண்டாம் என்று மருத்துவர் ஆலோசனை வழங்கினால் அதையும் மீறி இந்த ஹதீஸைச் செயல்படுத்தியாக வேண்டும் என்று மார்க்கம் எந்த நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தவில்லை.

“ஒன்றைச் செய்ய வேண்டாமென நான் உங்களுக்குத் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு நான் உங்களுக்குக் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவுக்குச் செய்யுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் செய்தி புகாரியில் 7288வது ஹதீஸாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. “எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்” (அல்குர்ஆன் 2:286) என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. எனவே குழந்தைக்கு ஏதும் ஆபத்து வந்து விடக்கூடாது என்று பயந்து ஏழாம் நாளில் தலைமுடியை மழிக்காமல் இருந்தால் அது மார்க்க அடிப்படையில் தவறில்லை.

குறிப்பு: 2004 ஏப்ரல் மாத ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி