Tamil Bayan Points

பேசும் மொழிகளும் படைத்தவனின் அற்புதமே!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

Last Updated on October 4, 2023 by Trichy Farook

பேசும் மொழிகளும் படைத்தவனின் அற்புதமே!

  1. படைத்தவன் இருப்பதற்கான சான்று
  2. மொழிபேசும் உயிரினங்கள்
  3. அனைத்து மொழிகளையும் அறிந்தவன்
  4. மொழிப் பெருமையைப் புறக்கணிப்போம்
  5. மொழியறிவை வளர்த்துக் கொள்வோம்
  6. மொழியை கையிலெடுத்த அசத்தியவாதிகள்
  7. மொழியறிந்தோரின் மகத்தான சேவை
  8. மார்க்கத்தை அறிய உதவும் மொழிப்புலமை
  9. தாய்மொழி தெரிந்தவர்களும் தவறிழைப்பார்கள்
  10. மொழியைப் பயன்படுத்தும் விதம்
  11. மொழி மூலம் வரும்  பிரச்சனைகள்

முன்னுரை : 

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!

நமது கருத்துக்களைப் பரிமாறுவதற்கும், எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும் மிகச் சிறந்த ஊடகமாக மொழி இருக்கிறது. மொழி என்பது மனிதர்களை வகைப்படுத்தும் காரணிகளுள் முக்கியமானதாக இருக்கிறது.

உலக அளவில் ஏறத்தாழ 6800 மொழிகள் இருக்கின்றன. 2001ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இந்தியாவில் மட்டும் 1652 மொழிகள் பேச்சுவழக்கில் இருக்கின்றன. அதிகப்பட்சமாக 10 இலட்சம் மக்களால் பேசப்படுவதாக 29 மொழிகளும், 10,000 மக்களால் பேசப்படுவதாக 122 மொழிகளும் இருக்கின்றன.

சில மொழிகள் அழிந்துவிட்டன. சில மொழிகள் பேசுவதற்கு ஆளின்றி அழிந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சில மொழிகள் மாறும் உலகத்திற்குத் தோதுவாக பல மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. பல மொழிகள் எழுத்து வழக்கில் இல்லாமல் வெறும் பேச்சளவில் மட்டுமே இருக்கின்றன.

இத்தகைய, மொழியைப் பற்றிச் சிந்திக்கும் போது வியப்பாக இருக்கிறது. இன்னும், குர்ஆன் ஹதீஸ்களில் ஆராயும்போது இது தொடர்பான பல்வேறு போதனைகள் கிடைக்கின்றன. அவற்றை இந்த உரையில் அறிந்துக் கொள்வோம். 

படைத்தவன் இருப்பதற்கான சான்று

நமது உடலில் ஒரு ஐம்பது கிராம் எடை கூட இல்லாத சிறிய சதைப் பகுதியே நாக்கு. ஒரு குறிப்பிட்ட வடிவம் கொண்ட சின்னஞ்சிறிய நாக்கை அசைப்பதால், அதிலிருந்து விதவிதமான மொழிகள் வெளிப்படுவதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா?

மனிதர்கள் பலவகையில் இருப்பது போன்று மொழிகளும் வேறுபட்டதாக இருப்பதைப் பார்க்கிறோம். இப்படி மனிதர்களுக்கு மத்தியில் ஏராளமான மொழிகள் இருப்பது சாதாரண விஷயமல்ல. இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கும் அவன் அனைத்துப் படைப்பினங்களையும் நுணுக்கமாகப் படைத்திருக்கிறான் என்பதற்கும் இது மிகப்பெரும் சான்று என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

 وَمِنْ اٰيٰتِهٖ خَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافُ اَلْسِنَتِكُمْ وَاَلْوَانِكُمْ‌ؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّلْعٰلِمِيْنَ‏

வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளனவையே. திண்ணமாக, இவற்றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன்: 30:22)

மொழிபேசும் உயிரினங்கள்

மனிதர்கள் மட்டுமல்ல, மற்ற உயிரினங்களும் தங்களுக்குள் செய்திகளைத் தெரிவித்துக் கொள்கின்றன. இன்பம், துன்பம் என்ற அனைத்து நேரங்களிலும் பரஸ்பரம் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்கின்றன. அனைத்து ஜீவராசிகளும் தங்களது இனத்திற்கு இடையே வெவ்வேறான வித்தியாசமான ஒலிகளை வெளிப்படுத்தித் தொடர்பு கொள்கின்றன. இதன்மூலம், பிற ஜீவராசிகளும் தங்களுக்குத் தோதுவான மொழியைக் கையாளுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நம்மால் அவைகளின் மொழியை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதற்காக அவைகளுக்கு மத்தியிலும் மொழி என்ற தொடர்பு அறவே இல்லை என்று வாதிட முடியாது. ஏனெனில், இறைவன் நாடினால் அவைகளின் மொழியையும் மனிதர்களுக்குப் புரிய வைக்க முடியும் என்பதே உண்மை. இந்தப் பேருண்மையைப் பிரதிபலிக்கும் வேதவரிகளைக் காண்போம்.

وَوَرِثَ سُلَيْمٰنُ دَاوٗدَ‌ وَقَالَ يٰۤاَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّيْرِ وَاُوْتِيْنَا مِنْ كُلِّ شَىْءٍؕ‌ اِنَّ هٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِيْنُ‏

وَحُشِرَ لِسُلَيْمٰنَ جُنُوْدُهٗ مِنَ الْجِنِّ وَالْاِنْسِ وَالطَّيْرِ فَهُمْ يُوْزَعُوْنَ‏

حَتّٰٓى اِذَاۤ اَتَوْا عَلٰى وَادِ النَّمْلِۙ قَالَتْ نَمْلَةٌ يّٰۤاَيُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْ‌ۚ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمٰنُ وَجُنُوْدُهٗۙ وَهُمْ لَا يَشْعُرُوْنَ‏
فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ‏
وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِىَ لَاۤ اَرَى الْهُدْهُدَ ‌ۖ  اَمْ كَانَ مِنَ الْغَآٮِٕبِيْنَ‏
لَاُعَذِّبَـنَّهٗ عَذَابًا شَدِيْدًا اَوْ لَا۟اَذْبَحَنَّهٗۤ اَوْ لَيَاْتِيَنِّىْ بِسُلْطٰنٍ مُّبِيْنٍ‏
فَمَكَثَ غَيْرَ بَعِيْدٍ فَقَالَ اَحَطْتُّ بِمَا لَمْ تُحِطْ بِهٖ وَ جِئْتُكَ مِنْ سَبَاٍۢ بِنَبَاٍ يَّقِيْنٍ‏
 اِنِّىْ وَجَدْتُّ امْرَاَةً تَمْلِكُهُمْ وَاُوْتِيَتْ مِنْ كُلِّ شَىْءٍ وَّلَهَا عَرْشٌ عَظِيْمٌ‏
 وَجَدْتُّهَا وَقَوْمَهَا يَسْجُدُوْنَ لِلشَّمْسِ مِنْ دُوْنِ اللّٰهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ اَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيْلِ فَهُمْ لَا يَهْتَدُوْنَۙ‏

தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். “மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவே தெளிவான அருட்கொடையாகும்” என்று அவர் கூறினார். ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.

அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்தபோது “எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும் அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக்கூடாது” என்று ஓர் எறும்பு கூறியது.

அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். “என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது நல்லடியார்களில் என்னையும் உனது அருளால் சேர்ப்பாயாக!” என்றார்.

பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத் ஹுத் பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார். “அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்” (என்றும் கூறினார்). (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது.

“உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்துள்ளேன். ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறியது. “நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது. அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். அவர்கள் நேர் வழி பெற மாட்டார்கள் (என்றும் கூறிற்று.)

(அல்குர்ஆன்: 27:16-24)

அனைத்து மொழிகளையும் அறிந்தவன்

உலகில் பல மொழிகள் இருக்கின்றன. ஒருவருக்கு என்ன மொழி தெரியுமோ அந்த மொழியில்தான் அவருடன் பேச இயலும். அப்போதுதான் அவர் அதைப் புரிந்து கொள்வார். வெவ்வேறு இரு மொழியைப் பேசும் இருவர், தங்களுக்கு மத்தியிலே இரு மொழியையும் தெரிந்த ஒருவரின் உதவியால்தான் கருத்துக்களைப் பறிமாறிக் கொள்ள முடியும்.

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைத் தெரிந்திருந்தாலும் உலகிலுள்ள அத்தனை மொழிகளையும் அறிந்தவர் யாருமில்லை. ஆனால், அல்லாஹ் அனைத்து மொழிகளையும் அறிந்தவன். அடியார்கள் அவனிடம் எந்த மொழியிலும் பிரார்த்தனை செய்யலாம், அவன் நம்மிடம் உரையாடுவதற்கு எந்தவிதத்திலும் எந்தவொரு மொழிப்பெயர்ப்பாளரும் தேவையில்லை. எனவே, நாம் அறிந்திருக்கும் மொழி மூலம் மறுமை நாளில் நம்முடன் நேரடியாக அவன் உரையாடுவான்.

كُنْتُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَهُ رَجُلاَنِ أَحَدُهُمَا يَشْكُو العَيْلَةَ، وَالآخَرُ يَشْكُو قَطْعَ السَّبِيلِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَمَّا قَطْعُ السَّبِيلِ: فَإِنَّهُ لاَ يَأْتِي عَلَيْكَ إِلَّا قَلِيلٌ، حَتَّى تَخْرُجَ العِيرُ إِلَى مَكَّةَ بِغَيْرِ خَفِيرٍ، وَأَمَّا العَيْلَةُ: فَإِنَّ السَّاعَةَ لاَ تَقُومُ، حَتَّى يَطُوفَ أَحَدُكُمْ بِصَدَقَتِهِ، لاَ يَجِدُ مَنْ يَقْبَلُهَا مِنْهُ،

(ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அங்கு இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் தமது வறுமையைப் பற்றி முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வழிப்பறி என்பது அரிதாக, வணிக ஒட்டகங்கள் (மதீனாவிலிருந்து) மக்காவரை காவலரின்றிச் செல்லும்போது மட்டுமே நடக்கும். ஆனால் வறுமையோ (ஒரு காலத்தில் முற்றாக விலகும்). நிச்சயமாக உங்களில் ஒருவர் தர்மத்தை எடுத்துக் கொண்டு அலைவார். அதை வாங்குவதற்கு எவனும் இருக்கமாட்டான். அந்நிலை ஏற்படாத வரை மறுமை ஏற்படாது.

ثُمَّ لَيَقِفَنَّ أَحَدُكُمْ بَيْنَ يَدَيِ اللَّهِ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ حِجَابٌ وَلاَ تَرْجُمَانٌ يُتَرْجِمُ لَهُ، ثُمَّ لَيَقُولَنَّ لَهُ: أَلَمْ أُوتِكَ مَالًا؟ فَلَيَقُولَنَّ: بَلَى، ثُمَّ لَيَقُولَنَّ أَلَمْ أُرْسِلْ إِلَيْكَ رَسُولًا؟ فَلَيَقُولَنَّ: بَلَى، فَيَنْظُرُ عَنْ يَمِينِهِ فَلاَ يَرَى إِلَّا النَّارَ، ثُمَّ يَنْظُرُ عَنْ شِمَالِهِ فَلاَ يَرَى إِلَّا النَّارَ، فَلْيَتَّقِيَنَّ أَحَدُكُمُ النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ، فَإِنْ لَمْ يَجِدْ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ

பிறகு உங்களில் ஒருவர், அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்பார். அவருக்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையுமிருக்காது; மொழி பெயர்ப்பாளனும் இருக்கமாட்டான். அப்போது (அல்லாஹ்), “நான் உனக்குப் பொருளைத் தரவில்லையா?” எனக் கேட்க அவர்  “ஆம்‘  என்பார். பிறகு “உன்னிடம் ஒரு தூதரை நான் அனுப்பவில்லையா?”  எனக் கேட்டதும் அவர் “ஆம்‘ என்று கூறிவிட்டுத் தமது வலப்பக்கம் பார்ப்பார்; அங்கு நரகமே காட்சியளிக்கும்.

பின்னர் இடப்பக்கத்திலும் பார்ப்பார்; அங்கும் நரகமே காட்சியளிக்கும். எனவே பேரீச்சம்பழத்தின் ஒரு சிறிய துண்டை தர்மம் செய்தாவது அதுவும் கிடைக்கவில்லையெனில் ஒரு நல்ல வார்த்தையின் மூலமாவது அந்த நரகத்திலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி),
நூல்: புகாரி-1413 , (3595), (6539)

மொழியை அறிந்திருப்பதில் படைத்தவனுக்கும், படைப்பினங்களுக்கும் மத்தியில் இருக்கும் வித்தியாசத்தை நாம் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். அல்லாஹ் ஒருவன் மட்டுமே அனைத்து மொழிகளையும் அறிந்தவன். ஆனால் ஒரு மனிதனுக்கு அவனுக்குத் தெரிந்த மொழியில் சொன்னால் மட்டுமே அவனால் புரிந்து கொள்ள முடியும். இதைப் பற்றி சிந்தித்தால், இறந்துபோனவர்களிடம் உதவிதேடும் தர்கா வழிபாடு எந்தளவிற்கு மாபெரும் வழிகேடு என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

இறந்துபோன ஒரு மனிதனிடம் அனைத்து மொழி பேசும் மக்களும் கோரிக்கை வைத்து மன்றாடுவதும், அவர் அந்தப் பிரார்த்தனைகளை விளங்கிக் கொள்வார் என்று நம்புவதன் மூலம் இது, படைத்தவனுக்கு ஒப்பாக படைப்பினத்தை வைக்கும் படுமோசமான இணைவைப்புக் காரியம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

உயிரோடு இருக்கும்போதே ஒரு மனிதனால் அனைத்து மொழிகளையும் அறிந்திருக்க முடியாது எனும் போது இறந்துபோனவருக்கு எப்படி அனைத்து மொழிகளும் புரியும். இதை விளங்கிய பிறகாவது, நம்பிக்கையாளர்கள் தர்ஹாக்களை விட்டும் தூரவிலக வேண்டும்.

மொழிப் பெருமையைப் புறக்கணிப்போம்

மனிதர்கள் தங்களுக்கு மத்தியில் பல்வேறு காரணங்களை வைத்துக் கொண்டு பெருமையடிக்கிறார்கள். எங்களது மொழிதான் உயர்ந்தது; மற்ற மொழிகள் தாழ்ந்தது என்று மொழிப்பெருமை பேசுபவர்கள் இன்றைய காலத்தில் இருப்பதுபோன்று நபிகளாரின் காலத்திலும் இருந்தார்கள். அரபி மொழியே சிறந்தது என்றும் மற்ற மொழிகளை பேசுபவர்கள் கால்நடைகள் என்றும் அன்றைய அரபிகள் கருதினர்.

மனிதர்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை விதைக்கும் சித்தாந்தங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டிய இஸ்லாமிய மார்க்கம், மொழிரீதியாக இருந்த இந்தப் பெருமையையும் பகட்டையும் களைந்தெறிந்தது. அனைத்து மொழிகளும் சமமானவை என்றும் அவற்றைப் பேசும் மக்களும் சமமானவர்களே என்றும் மனித ஒற்றுமைக்குக் குரல் கொடுத்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக அரபி மொழி சிறந்தது என்பதால் குர்ஆன் அந்த மொழியில் அருளப்படவில்லை. மாறாக, அது தூதரின் தாய்மொழியாக இருப்பதால் அதிலே அருளப்பட்டது. இவ்வாறுதான் அனைத்து தூதர்களுக்கும் அவரது மொழியிலேயே வேதம் வழங்கப்பட்டது என்று இஸ்லாம் பிரகடனப்படுத்தியது. மொழிப்பெருமையை ஒரேயடியாக மண்ணுக்குள் புதைத்தது.

 أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى عَجَمِيٍّ، وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ

அரபி மொழியல்லாதவர்களை விட அரபி மொழிபேசுபவர்களுக்கு எந்தவொரு சிறப்பும் இல்லை. அரபி மொழி பேசுபவர்களைவிட அரபியல்லாதவர்களுக்கு எந்தவொரு சிறப்பும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்: அஹ்மத்-23489 (22391)

وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا بِلِسَانِ قَوْمِهٖ لِيُبَيِّنَ لَهُمْ‌ؕ فَيُضِلُّ اللّٰهُ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْ مَنْ يَّشَآءُ‌ ؕ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன்: 14:4)

இதை விளங்காமல் சில முஸ்லிம்கள் அரபிமொழியை வரம்பு மீறிக் புகழ்வதைப் பார்க்கிறோம். முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் அரபி மொழியைத்தான் பேசினார்கள் என்றும், மறுமைநாளில் அல்லாஹ் அரபி மொழியில்தான் மனிதர்களுடன் பேசுவான் என்றும், அரபி மொழிதான் சொர்க்கத்தின் மொழி என்றும் பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள்.

அரபி மொழி அறிந்து கொண்டதால் பொதுமக்களைவிட தங்களை உயர்வாகக் கருதிக் கொள்ளும் அறிஞர்கள், ஆலிம்கள் இருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் இதற்குப் பிறகாவது திருந்துவார்களா?

மொழியறிவை வளர்த்துக் கொள்வோம்

ஒரு மொழியறிந்தவர் ஒரு ஆளுக்குச் சமமானவர்; இரு மொழியறிந்தவர் இரண்டு ஆட்களுக்குச் சமமானவர் என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள். எனவே நமக்குத் தெரிந்த மொழியில் இருக்கும் நுணுக்கங்களைத் தெரிந்து கொள்வதிலும், அதல்லாத பிறமொழிகளைக் கற்றுக் கொள்வதிலும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். காரணம், நடைமுறை வாழ்வில் மொழியறிவின் மூலம் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. இதற்கான வழிகாட்டுதல் மார்க்கத்திலும் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

«أَقْرَأَنِي جِبْرِيلُ عَلَى حَرْفٍ، فَلَمْ أَزَلْ أَسْتَزِيدُهُ حَتَّى انْتَهَى إِلَى سَبْعَةِ أَحْرُفٍ»

ஒரேயொரு (வட்டார) மொழி வழக்குப்படி ஜிப்ரீல் (திருக்குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத் தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழி வழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத் தருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்து,) இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி-3219 

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُ «أَنْ يَتَعَلَّمَ كِتَابَ اليَهُودِ» حَتَّى كَتَبْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُتُبَهُ، وَأَقْرَأْتُهُ كُتُبَهُمْ، إِذَا كَتَبُوا إِلَيْهِ

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், யூதர்களின் (ஹீப்ரு அல்லது சிரியாக் மொழி) எழுத்து வடிவைக் கற்றுக்கொள்ளும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே கற்றுக்கொண்டு, நபி (ஸல்) அவர்கள் (யூதர்களுக்கு) அனுப்பும் கடிதங்களை நான் எழுதிவந்தேன்; யூதர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு எழுதும் கடிதங்களை நபி (ஸல்) அவர்களுக்குப் படித்துக் காட்டி வந்தேன்.

நூல்: புகாரி-7195 

பிற மொழிகளைத் தெரிந்து கொள்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டது அல்ல என்பதற்கும் மேலாக, அது ஆர்வமூட்டப்பட்ட காரியம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பிறமொழிகளைத் தெரிந்து கொள்வதன் மூலம், ஏராளமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இன்றைய சூழ்நிலையில் ஆங்கில மொழியைத் தெரிந்தவரும், தெரியாத மற்றொருவரும் வேலையைத் தேடி நேர்முகத் தேர்விற்கு (இன்டர்வியூ) செல்லும் போது, இருவரும் சமமான படிப்பு படித்தவர்களாக இருப்பினும், ஆங்கில மொழி அறிந்தவருக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதைப் பார்க்கலாம்.

கடல் கடந்து பல நாடுகளில் வர்த்தகம் செய்யும் தொழில்துறைகளில், நிறுவனங்களில் மொழி பெயர்ப்பாளர்களுக்குப் பிரகாசமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. எனவேதான், கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மொழியியல் எனும் பாடப்பிரிவு மூலம் பல்வேறு மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன.

மொழியை கையிலெடுத்த அசத்தியவாதிகள்

சத்தியத்தை எதிர்ப்பவர்கள், தங்களது அசத்தியக் கருத்துக்களை மக்களிடம் பரப்புவதற்கும் சத்தியக் கருத்துக்களை தடுப்பதற்கும் மொழியைப் பெரும் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். தங்களது குருட்டுத்தனமாக நம்பிக்கைகளை, கருத்துக்களை பெருமளவில் மொழியாக்கம் செய்து பரப்புகிறார்கள்.

பெரும்பாலும், சத்தியத்தை நம்பும் பாமர மக்களைக் குறிவைத்து வேத வரிகளுக்குத் தவறான மொழியாக்கம், விளக்கங்கள் கொடுத்து அவர்களுக்கு மூளைச்சலவை செய்து குழப்புகிறார்கள். இவ்வாறு, கள்ளத்தனங்களை, தந்திரங்களைச் செய்யும் அசத்தியவாதிகள் காலங்காலமாக இருக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும் இத்தகையவர்கள்  இருந்துள்ளார்கள். அப்போது, பிரச்சாரம் செய்ய வந்த அன்றைய அசத்தியவாதிகளுக்குப் பதிலடி கொடுக்கும் முறையை நபிகளார்கள் கற்றுக் கொடுத்தார்கள்.

كَانَ أَهْلُ الكِتَابِ يَقْرَءُونَ التَّوْرَاةَ بِالعِبْرَانِيَّةِ، وَيُفَسِّرُونَهَا بِالعَرَبِيَّةِ لِأَهْلِ الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لاَ تُصَدِّقُوا أَهْلَ الكِتَابِ وَلا تُكَذِّبُوهُمْ وَقُولُوا: {آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ} [البقرة: 136] ” الآيَةَ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
வேதக்காரர்(களான யூதர்)கள் தவ்ராத் வேதத்தை ஹீப்ரூ (எபிரேய) மொழியில் ஓதி, அதை அரபு மொழியில் இஸ்லாமியர்களுக்கு விளக்கியும் வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே!) கூறுங்கள்:

அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும் யஅகூபின் சந்ததியினருக்கும் அருளப்பட்டதையும் மற்றும் மூசாவுக்கும், ஈசாவுக்கும் வழங்கப்பட்டதையும், மற்றும் நபிமார்கள் அனைவருக்கும், அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டவை அனைத்தையும் நாங்கள் நம்புகின்றோம். (அல்குர்ஆன்: 2:136)

நூல்: புகாரி-7542 , 4485, 7362

இன்றைய காலகட்டத்தில் இதற்கு முக்கிய உதாரணமாக கிறிஸ்தவர்களைக் குறிப்பிடலாம். கிறிஸ்தவ போதகர்கள், தங்களது பைபிளில் இருக்கும் கர்த்தர் என்ற வார்த்தைளுக்கு அல்லாஹ் என்று மொழியாக்கம் செய்து பாமர முஸ்லிம் மக்களை ஏமாற்றுகிறார்கள். தங்களது அசத்தியக் கருத்துக்களை பல திட்டங்கள் தீட்டி பிற மொழி பேசும் மக்களிடம் பரப்பும் வேலையை கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்கு சத்தியவாதிகள் புறப்படவேண்டும்.

பிறமொழி பேசும் மக்களும் இந்த சத்திய மார்க்கமான இஸ்லாத்தைத் தெரிந்து கொள்வதற்குரிய வாய்ப்புகளை வசதிகளை ஏற்படுத்துவதில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிறமொழி மக்களும் அசத்தியக் கருத்துக்களை அடையாளம் கண்டு கொள்வதற்குரிய வழிகளை ஏற்படுத்த வேண்டும். ஆனால், தமிழ் மொழி பேசும் மக்களிடம் எடுத்துச்சொல்வதைக் காட்டிலும் பல மடங்கு குறைவாகவே மாற்று மொழி மக்களிடம் சத்தியத்தைத் தெளிவுபடுத்தும் காரியத்தை நம் மக்கள் செய்கிறார்கள் என்பதே உண்மை.

மொழியறிந்தோரின் மகத்தான சேவை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்திலும், அவர்களுக்கு பிந்தைய காலத்திலும் இந்த சத்தியத்தைத் தெரிந்து கொள்வதற்கும், வலுவாக நிலைநாட்டுவதற்கும், இன்னும் திசையெங்கும் பரப்புவதற்கும் பன்மொழிப் புலமை பெற்றவர்கள் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். இதன் மூலம் பிறமொழியறிந்த மக்கள் சத்திய மார்க்கமான இஸ்லாத்தைத் தெரிந்து கொள்ளும் பொன்னான வாய்ப்பைப் பெற்றார்கள்.

குறிப்பிட்டுக் கூறுவதாக இருந்தால், இப்பணியில் திறம்பட செயலாற்றிய சான்றோர்களாக நபித்தோழர்கள் திகழ்ந்தார்கள். நபித்தோழர்களில் பலர் பிறமொழியைக் கற்று சத்தியத்தைப் எடுத்துரைத்தார்கள். இன்னும் பலர், பிறமொழியை அறிந்தவர்களின் உதவியுடன் மார்க்கப் பணியில் செம்மையாக செயல்பட்டார்கள். இதற்குரிய சான்றுகளைக் காண்போம்.

நபி (ஸல்) அவர்களிடம் யூதர்கள் தம் சமுதாயத்தாரிலிருந்து விபச்சாரம் புரிந்து விட்டிருந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் அழைத்து வந்தார்கள். (தீர்ப்பளிக்கும்படி கேட்டார்கள்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்களில் விபசாரம் புரிந்தவரை நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அவர்கள் “நாங்கள் அவ்விருவரையும் (அவர்களின் முகங்களில்) கரும்புள்ளியிட்டு அடிப்போம்” என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “(உங்கள் வேதமான) தவ்ராத்தில் (விபச்சாரம் செய்தவருக்கு) “ரஜ்ம்‘ (சாகும் வரை கல்லால் அடிக்கும்) தண்டனையை நீங்கள் காணவில்லையா?” என்று கேட்க, யூதர்கள், “(அப்படி) ஒன்றும் அதில் நாங்கள் காணவில்லை” என்று பதிலளித்தனர். உடனே (யூத மார்க்க அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், யூதர்களிடம், “பொய் சொன்னீர்கள், நீங்கள் உண்மையாளர்களாயின் தவ்ராத்தைக் கொண்டு வந்து ஓதிக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள். (அவ்வாறே தவ்ராத் கொண்டுவரப்பட்டு ஓதப்பட்டது.)

அப்போது அவர்களுக்கு வேதம் கற்பிக்கும் வேதம் ஓதுநர் “ரஜ்ம்‘ தொடர்பான வசனத்தின் மீது தம் கையை வைத்து (மறைத்துக் கொண்டு) தம் கைக்கு முன்னால் இருப்பதையும் அதற்கு அப்பால் உள்ளதையும் மட்டும் ஓதலானார். (கைக்குக் கீழே உள்ள) ரஜ்முடைய வசனத்தை ஓதவில்லை. உடனே அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் அந்த ஓதுநரின் கையை ரஜ்முடைய வசனத்தை விட்டு இழுத்துவிட்டு, “இது என்ன?” என்று கேட்டார்கள்.

யூதர்கள் அதைப் பார்த்தபோது, “இது ரஜ்முடைய வசனம்” என்று சொன்னார்கள். ஆகவே (விபசாரம் புரிந்த) அவ்விருவருக்கும் தண்டனை வழங்கும்படி நபியவர்கள் ஆணையிட்டார்கள். எனவே, அவ்விருவருக்கும் மஸ்ஜிதுந் நபவியில் ஜனாஸாக்கள் (இறுதிப் பிரார்த்தனைக்காகச் சடலங்கள்) வைக்குமிடத்திற்கருகே கல்லெறி தண்டனை தரப்பட்டது. அந்தப் பெண்ணின் அந்த நண்பன் அவளைக் கல்லடியிலிருந்து காப்பாற்றும் விதத்தில் அவள் மீது கவிழ்ந்துகொள்வதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: புகாரி-4556 

ஸாதான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் “நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ள குடிபானங்களைப் பற்றி உங்களது (வட்டார) மொழியில் கூறி, அதற்கு எங்களது (வட்டார) மொழியில் எனக்கு விளக்கமளியுங்கள். ஏனெனில், எங்களது மொழி வழக்கு அல்லாத வேறொரு மொழி வழக்கு உங்களுக்கு உள்ளது” என்று கூறினேன்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹன்த்தமை‘ப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள். அது சுட்ட களிமண் பாத்திரமாகும். மேலும், அவர்கள் “துப்பா‘வையும் தடை செய்தார்கள். அது சுரைக்காய் குடுவையாகும்.

“முஸஃப்பத்‘தையும் தடை செய்தார்கள். அதுவே தார் பூசப்பட்ட பாத்திரமாகும். “நக்கீரை‘யும் தடை செய்தார்கள். அது பேரீச்ச மரத்தின் மேற்பட்டை உரிக்கப்பட்டு பின்னர் நன்கு குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரமாகும்” என்று கூறிவிட்டு, “(இவற்றை விடுத்து) தோல்பைகளில் பானங்களை ஊற்றிவைக்குமாறு உத்தரவிட்டார்கள்” என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம்-4060 

ஓர் அடியார் (உளூ செய்து) தொழுமிடத்தில் (கூட்டுத்) தொழுகையை எதிர்பார்த்தபடி இருக்கும் நேரமெல்லாம் அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுகிறார். (இது எதுவரையில் எனில்) அவருக்கு ஹதஸ் (சிறுதுடக்கு) ஏற்படாத வரை‘ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது (அரபி மொழி புரியாத) ஒரு பாரசீகர் “ஹதஸ் என்றால் என்ன, அபூஹுரைரா அவர்களே!?” என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “பின் துவராத்திலிருந்து வெளியாகும் காற்று” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: சயீத் அல்மக்புரீ (ரஹ்),
நூல்: புகாரி-176 

(பஸ்ராவின் ஆளுநராயிருந்த) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தமது கட்டிலில் அமருமாறு கூற, அவ்வாறே நான் அமர்ந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்கள், “என்னிடம் நீங்கள் (மொழிபெயர்ப்பாளராக இங்கேயே) தங்கிவிடுங்கள். (அதற்காக) நான் எனது செல்வத்திலிருந்து ஒரு பங்கை உங்களுக்குத் தருகிறேன்” என்று கேட்டுக்கொண்டார்கள். அதன்படி அவர்களுடன் நான் இரண்டு மாதங்கள் (மக்காவில்) தங்கி விட்டேன்.

அறிவிப்பவர்: அபூஜம்ரா,
நூல்: புகாரி-53 , 87, 7266

(நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதன்முதலில் இறைச்செய்தி வந்தபோது) கதீஜா (ரலி) அவர்கள், தம் தந்தையின் சகோதரர் மகனான வரக்கா பின் நவ்ஃபல் பின் அசத் பின் அப்தில் உஸ்ஸா என்பாரிடம் நபி (ஸல்) அவர்களை அழைத்துச் சென்றார்கள்.

“வரக்கா’ அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் (அரபு மற்றும்) எபிரேய (ஹீப்ரு) மொழியில் எழுதத் தெரிந்தவராக இருந்தார். எனவே, இன்ஜீல் வேதத்தை அல்லாஹ் நாடிய அளவிற்கு ஹீப்ரு மொழியி(லிருந்து அரபு மொழியி)ல் எழுதுவார். அவர் கண் பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார். (சுருக்கம்)

நூல்: புகாரி-3 , 3392, 4953, 6982

மார்க்கத்தை அறிய உதவும் மொழிப்புலமை

மக்கள் ஒரு மொழியைப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் இடையே பல்வேறு மாறுதல்கள் இருக்கும். பேச்சு நடை, எழுத்து நடை என்பது எல்லா மொழிகளிலும் உண்டு. மேலும் மொழி என்றால் அதில் பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கும். எனவே ஒரு மொழியில் புலமை பெறுவதாக இருந்தால் அந்த மொழியில் பயன்படுத்தப்படும் வழக்குகளை தெரிந்து கொள்வதோடு அதில் கலந்திருக்கும் பிறமொழி சொற்களின் பொருட்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபி மொழி பேசுபவர்களாக இருப்பினும் அவர்கள் தமது பேச்சுக்களிலும், மக்களுக்கு தெரிவித்த போதனைகளிலும் பிறமொழி வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்கள். நபிகளாரின் போதனைகளை முழுமையாக விளங்கிக் கொள்வதற்கு அந்தச் சொற்களின் பொருளையும் நாம் தெரிந்திருக்க வேண்டும். அல்லாஹ்வின் அருளால் அந்த வார்த்தைகளின் அர்த்தங்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. அதற்காக அரும்பாடுபட்ட நல்லலோர்களின் பணி மகத்தானது; என்றும் மறக்க முடியாதது ஆகும்.

ஹஸன் பின் அலீ (ரலி) அவர்கள் (சிறுவராயிருந்த போது) தர்மப் பொருளாக வந்த பேரீச்சம் பழங்களிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் வைத்தார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள் பாரசீக மொழியில், “கிஹ் கிஹ் – சீச்சீ!” (என்று சொல்லி விட்டு) “நாம் தர்மப் பொருளைச் சாப்பிட மாட்டோம் என்று உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி-3072 

قَدِمْتُ مِنْ أَرْضِ الحَبَشَةِ، وَأَنَا جُوَيْرِيَةٌ، فَكَسَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمِيصَةً لَهَا أَعْلاَمٌ، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ الأَعْلاَمَ بِيَدِهِ وَيَقُولُ: «سَنَاهْ سَنَاهْ» قَالَ الحُمَيْدِيُّ: «يَعْنِي حَسَنٌ، حَسَنٌ»

அபிசீனியா நாட்டிலிருந்து நானும் ஜுவைரிய்யா அவர்களும் வந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குப் பட்டுத் துணி ஒன்றை உடுத்தக் கொடுத்தார்கள். அதில் அடையாளக் குறிகள் சில இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கரத்தால் அந்த அடையாளங்களைத் தடவியபடி, “அழகாயிருக்கிறதே! அழகாயிருக்கிறதே!” (என்பதைக் குறிக்க அபிசீனிய மொழியில் “சனா, சனா‘) என்று கூறலானார்கள்.

அறிவிப்பவர்: உம்மு காலித் (ரலி),
நூல்: புகாரி-3874 

إِنَّ بَيْنَ يَدَيِ السَّاعَةِ أَيَّامًا، يُرْفَعُ فِيهَا العِلْمُ، وَيَنْزِلُ فِيهَا الجَهْلُ، وَيَكْثُرُ فِيهَا الهَرْجُ

“மறுமை நாளுக்கு முன்பு ஒரு கால கட்டம் வரும். அப்போது கல்வி அகற்றப்படுவிடும்; அறியாமை நிலவும்; “ஹர்ஜ்‘ பெருகிவிடும். “ஹர்ஜ்‘ என்பது கொலையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” எனத் தெரிவித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி),
நூல்: புகாரி-7064 , 7065

அல்லாஹ்வின் வேதமும், அவனது தூதரின் வாழ்வியல் போதனைகளும் அரபி மொழியில் இருக்கின்றன. அவற்றை அழகிய முறையில் அறிந்து கொள்ள வேண்டுமெனில் அரபி மொழியை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆர்வம் எத்தனை மக்களிடம் இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்.

அரபி மொழியில் முழுமையான புலமை பெறாவிட்டாலும், குறைந்தபட்சமாக அதைப் படிப்பதற்காவது முயற்சி செய்யலாம். ஆனால் முஸ்லிம்களின் நிலமை பரிதாபத்திற்குரியதாக உள்ளது. பெரும்பாலான மக்கள் குர்ஆனைப் படிப்பதற்குக் கூட தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.

தாய்மொழி தெரிந்தவர்களும் தவறிழைப்பார்கள்

குர்ஆனும் ஹதீஸ்களும் அரபி மொழியில் இருப்பதால் அரபிகள் மட்டுமே அதைச் சரியாகப் புரிந்து கொள்வார்கள்; அவர்கள் ஒருபோதும் மார்க்க விஷயங்களில் தவறிழைக்க மாட்டார்கள் என்று சில முஸ்லிம்கள் நினைக்கின்றனர். இன்றும் மார்க்க ரீதியாக ஒரு கருத்து வேறுபாடு வரும் போது நாம் அடுக்கடுக்கான சரியான ஆதாரங்களைக் காட்டினாலும் அதற்கு மாற்றமாக இருக்கும் அரபிகளின் செயல்களைச் சுட்டிக்காட்டி அவர்கள் செய்வதுதான் சரியாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இதற்குப் பல உதாணரங்களைக் குறிப்பிடலாம்.

மதீனாவில் ரமலான் மாதத்தில் குர்ஆனை ஓதி முடித்ததற்கு ஒரு பெரிய துஆவை தொழுகையில் ஓதுவார்கள். மார்க்கத்தில் எந்தவொரு ஆதாரமும் இல்லாத இக்காரியத்தை இந்நிலைபாட்டில் உள்ளவர்கள் சரி காண்பார்கள். அதுபோன்று அங்கு இருப்பவர்கள் மத்ஹபுகளைப் பின்பற்றுவதை இங்கு இருப்பவர்கள் தங்களுக்கு ஆதாரமாகக் காட்டுவார்கள்.

இதற்கெல்லாம் காரணம் ஒரு செய்தியை அந்த மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமே சரியாகச் சொல்வார்கள், செய்வார்கள் என்ற குருட்டுத்தனமான சிந்தனையே ஆகும். தாய்மொழியைத் தெரிந்தவர்களும் அந்த மொழியில் இருக்கும் கருத்துக்களைத் தப்புத் தவறுமாக விளங்கிச் செய்வார்கள் என்பதற்குப் பின்வரும் செய்தி சான்றாக இருக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சியதே காரணம். நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக்கால மாச்சரியத்திலும் தீமையிலும் மூழ்கிக்கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) இந்த நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?” என்று கேட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம் (இருக்கிறது)‘ என்று பதிலளித்தார்கள். நான், “அந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும்” என்று பதிலளித்தார்கள். நான், “அந்தக் கலங்கலான நிலை என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒரு கூட்டத்தார் எனது வழிமுறை (சுன்னா) அல்லாததைக் கடைப்பிடிப்பார்கள்.

எனது நேர்வழியல்லாததைக் கொண்டு வழிகாட்டுவார்கள். அவர்களில் நீ நன்மையையும் காண்பாய்; தீமையையும் காண்பாய்” என்று பதிலளித்தார்கள். நான், “அந்த நன்மைக்குப் பிறகு தீமை உண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம். நரகத்தின் வாசல்களில் நின்றுகொண்டு (அங்கு வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவரை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்க(ளுடைய அடையாளங்)களை எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்கள் நம் (அரபு) இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். நம் மொழிகளையே பேசுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! இத்தகைய கால கட்டத்தை நான் அடைந்தால் என்ன செய்யவேண்டும் என எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அதன் ஆட்சியாளரையும் பற்றிக்கொள்” என்று பதிலளித்தார்கள். அதற்கு நான், “அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஆட்சியாளரோ இல்லை (என்ற நிலையில் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால் (என்ன செய்வது)?” என்று கேட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு (விலகி) ஒதுங்கிவிடு. (ஒதுங்கி வாழும் சூழலுக்கு முட்டுக்கட்டையாகப் பல்வேறு சிரமங்கள் நேர்ந்தாலும்) ஒரு மரத்தின் வேர் பாகத்தைப் பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, இறுதியில் அதே நிலையில் நீ இருக்கவே இறப்பு உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் நீ சேர்ந்துவிடாதே)” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி),
நூல்: புகாரி-3764 

எனவே எந்தவொரு மார்க்க விஷயமாக இருந்தாலும் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் செய்கிறார்கள் என்று ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அதை விடுத்து அரபிகள் அதிலும் குறிப்பாக மக்கா, மதீனாவில் இருப்பவர்கள் செய்தால் அது கண்டிப்பாக சரியாக இருக்கும் என்று குருட்டுத்தனமாக நம்பி ஆட்டு மந்தைகளைப் போன்று அவர்களை அடியொற்றி பயணித்துவிடக்கூடாது. இதைப் புரியாமல் பல முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இவர்கள் இனியாவது திருந்துவார்களா?

மொழியைப் பயன்படுத்தும் விதம்

நாம் எந்தவொரு மொழியைப் பேசுவதாக இருந்தாலும் பயன்படுத்துவதாக இருந்தாலும் அது மார்க்கத்திற்கு உட்பட்ட வகையில் நல்ல முறையில் இருக்க வேண்டும், மோசமான அருவருப்பான வார்த்தைகளைப் பேசுவது கூடாது. அதுபோன்று தவறான தீய அர்த்தம் கொண்ட சொற்பிரயோகத்தைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, அவ்லியாவின் ஆசியால் பிறந்த குழந்தை என்ற மூடநம்பிக்கையால் மைதீன் பிச்சை என்றும், அரசர்களுக்கெல்லாம் அரசன் என்ற அர்த்தம் கொண்ட ஷாஜஹான், ஷாகுல் ஹமீது என்றும் பெயர்களை பயன்படுத்தும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இவ்வாறான பெயர்களை நம்பிக்கையாளர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

أَخْنَعُ الأَسْمَاءِ عِنْدَ اللَّهِ رَجُلٌ تَسَمَّى بِمَلِكِ الأَمْلاَكِ

அல்லாஹ்விடம் மிகவும் கேவலமான பெயர், (உலகில்) ஒரு மனிதன் தனக்கு “மன்னாதி மன்னன்‘ (மலிக்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக்கொண்டதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி-6206 , முஸ்லிம்-4338 

أَنَّ ابْنَةً لِعُمَرَ كَانَتْ يُقَالُ لَهَا عَاصِيَةُ فَسَمَّاهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمِيلَةَ

(என் தந்தை) உமர் (ரலி) அவர்களுக்கு “ஆஸியா‘ (பொருள்: பாவி) எனப்படும் புதல்வியொருவர் இருந்தார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜமீலா (பொருள்: அழகி) என (மாற்று)ப் பெயர் சூட்டினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: முஸ்லிம்-4333 

மொழி மூலம் வரும்  பிரச்சனைகள்

ஒருவர் தமது சொந்த மொழியாக இருந்தாலும் பிறமொழியாக இருந்தாலும் அதைச் சரியான முறையில் அணுக வேண்டும். அதன் இலக்கண இலக்கிய முறைகளை அறிந்து பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், அதுவே பல பிரச்சனைகள் சச்சரவுகளுக்கு வழிவகுத்துவிடும்.

இன்றும்கூட பல தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் விஷயத்தில், யார் பேசுவது சரி என்று இலங்கைத் தமிழர்களும் தமிழகத்தில் இருப்பவர்களும் வாதம் செய்வதைப் பார்க்கலாம். அதுபோன்று அமெரிக்கன் ஆங்கிலம் சரியா? பிரிட்டிஷ் ஆங்கிலம் சரியா? என்று குழம்புபவர்களைக் காணலாம்.

இன்னும் சொல்வதென்றால் தமிழக முஸ்லிம் சமுதாயத்தில், ஸிஹ்ரு என்ற அரபி வார்த்தைக்கு முஸ்லிமல்லாதவர்கள் பயன்படுத்தும் சூனியம் என்ற தவறான அர்த்தத்தை சில ஆலிம்கள் கொடுத்ததால் மக்களிடம் பல்வேறு மூடநம்பிக்கைள் பெருகிக்கிடக்கின்றன. எனவே எந்தவொரு மொழியையும் முறையாக அணுகும் பழக்கம் நம்மிடம் இருக்க வேண்டும். இல்லாதபோது அதன்மூலம் பிரச்சனைகள் தோன்றுவது தவிர்க்க இயலாததாகி விடும். இதைப் புரிந்து கொள்வதற்கு இரு சம்பவங்களைக் காண்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாழ்நாளில் ஹிஷாம் பின் ஹகீம் (ரலி) அவர்கள் “அல்ஃபுர்கான்‘ எனும் (25ஆவது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை நான் செவியுற்றேன். அவரது ஓதலை நான் செவி தாழ்த்திக் கேட்டபோது எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அதை அவர் ஓதிக்கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே நான் அவரைத் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும்வரை பொறுத்துக்கொண்டேன்.

(அவர் தொழுது முடித்த) பிறகு அவரது மேல் துண்டைக் கழுத்தில் போட்டுப் பிடித்து, “நீர் ஓதியபோது நான் செவியுற்ற இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக் காண்பித்தது யார்?” என்று கேட்டேன். அவர், “இதை எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் ஓதிக்காண்பித்தார்கள்” என்று பதிலளித்தார்.

உடனே நான், “நீர் பொய் சொல்லிவிட்டீர்! ஏனெனில், நீர் ஓதியதற்கு மாற்றமாகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை எனக்கு ஓதிக் கொடுத்தார்கள்” என்று கூறியபடி அவரை இழுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம், “(அல்லாஹ்வின் தூதரே!) தாங்கள் எனக்கு ஓதிக்கொடுக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் “அல்ஃபுர்கான்‘ அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன்” என்று சொன்னேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை விடுங்கள்!” என்று கூறிவிட்டு (ஹிஷாம் அவர்களை நோக்கி), “ஹிஷாமே, நீங்கள் ஓதுங்கள்!” என்றார்கள். அவர் என்னிடம் ஓதியது போன்றே நபி (ஸல்) அவர்களுக்கு முன்னாலும் ஓதிக் காட்டினார். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது” என்று கூறினார்கள்.

பிறகு (என்னைப் பார்த்து), “உமரே, ஓதுங்கள்!” என்று சொன்னார்கள். எனக்கு அவர்கள் ஓதிக்கொடுத்திருந்த ஓதல்முறைப் படி நான் ஓதினேன். (அதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப் பெற்றது. இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கின்றது. ஆகவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி),
நூல்: புகாரி-4992 , 5041, 6936

ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம் (அவர்களது ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான் (ரலி) அவர்கள், அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றி கொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்திருந்தார்கள்.

(இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்து வேறுபாடு கொண்டது ஹுதைஃபா (ரலி) அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆகவே, ஹுதைஃபா (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம், “யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களுடைய வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது போல் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!” என்று கூறினார்கள்.

ஆகவே, உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்னை) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி “தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்” என்று தெரிவித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல்: புகாரி-4987 

மொழி சம்பந்தமான பல தகவல்களைத் தெரிந்து கொண்டோம். மனிதர்கள் பல மொழிகள் பேசுவது இறைவன் ஒருவன் இருப்பதற்கான மிகப்பெரும் சான்று என்றும் அனைத்து மொழிகளும் சமமானவை என்றும் அறிந்து கொண்டோம். இன்னும் மார்க்கத்தை அறிந்து கொள்வதற்கும் அதை நிலைநாட்டி அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்கும் மொழிப்புலமையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மொழி எனும் ஆயுதத்தை எப்படிப் பயன்படுத்துகிறோமோ அதற்கு ஏற்ப பின்விளைவுகள் நிகழும். எனவே எப்போதும் நல்ல முறையில் மொழிப் புலமையைக் கையாளவேண்டும் என்பதை விளங்கிக் கொண்டோம். இதற்குத் தோதுவாக திறம்பட செயல்பட்டு வெற்றிபெறுவதற்கு இறைவன் நமக்கு அருள்புரிவானாக!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.