Tamil Bayan Points

மகளிரை விழுங்கும் மது எனும் சுனாமி!

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on December 9, 2020 by

மகளிரை விழுங்கும் மது எனும் சுனாமி!

ஆண்டுக்கு ஆண்டு மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஒரு காலத்தில் மது அருந்தும் பெண்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டது கிடையாது. ஆனால் இன்று ஆண்டு தோறும் மது அருந்துகின்ற பெண்கள் தொடர்பான பத்து வழக்குகள் இப்போது தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் அவர்கள் 30 வயதினராக இருக்கின்றார்கள்.

அவர்கள் மதுக் கடைகளுக்குப் போய் அருந்துவது கிடையாது.  பாழும் மதுக் கிண்ணத்தில் என்று சொல்வதை விட  பாழும் கிணற்றில் தள்ளி விடுவது அவர்களது சக தோழியர்களோ அல்லது அந்நிய சக்திகளோ கிடையாது. அவர்களது கணவர்களே இந்த அரக்கத்தனத்தை அரங்கேற்றி விடுகின்றார்கள். பெண்களுக்கு மத்தியில்  வரம்பு கடந்து குடிப்பது வாடிக்கையாகி விட்டது. வாரத்தில் நான்கு நாட்கள் குடிப்பது கிடையாது. வாரத்தின் இறுதி நாட்களில் வைத்து வெளுத்துத் தள்ளி விடுகின்றார்கள்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையாகும் பெண்களின் வயதும் இப்போது வெகுவாகக் குறைந்து கொண்டே வருகின்றது. போதைத் தடுப்பு  முகாம்களுக்குச் சில பள்ளிக் குழந்தைகள் வருகின்றனர்.  அவர்களுக்குப்  பழக்கமான பொருட்கள் ஆச்சரியத்தை தருகின்றன. ஒட்டுவதற்குப் பயன்படும் குளூவின் வாடை, பெட்ரோல் வாடை, எழுத்துப் பிழைகளை அழிப்பதற்குப் பயன்படுத்துகின்ற ஒயிட்னர் என்று அந்தப் பட்டியல் நீளுகின்றது. இது மிகவும் அபாயகரமானது. காரணம் ஒரு சில  கட்டங்களில் அவர்களின் மத்திய நரம்பு மண்டலத்தையே பாதிக்கச் செய்து விடும்.

கடந்த 10 ஆண்டுகளில்  மது அருந்தும்  பழக்கம் 38% அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது (Voluntary Health Services – VHS) தன்னார்வ சுகாதாரச் சேவை அமைப்பின் உளவியல் துறையின் தலைவர்  லக்‌ஷ்மி  தெரிவிக்கின்றார்.

இது (01.06.2017) அன்று இந்து ஆங்கில  நாளிதழில் வெளியான செய்தி. உண்மையில், இது அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தியாகும்.

மது எனும் சுனாமி ஆண்களைப் பல்வேறு வகைகளில் அள்ளிக் கொண்டு செல்கின்றது; அது பெண்களை இழுத்துச் செல்லாமல் விட்டிருந்தது என்று இதுவரை நாம் வலுவாக நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது நம்பிக்கையில் மண் விழுந்து விட்டது. இப்போது அந்த ஆழிப் பேரலை பெண்களையும் அள்ளி வாரிக் கொண்டு செல்கின்றது.

அப்படி அள்ளிக் கொண்டு போனால் அதன் விளைவு என்னவாகும்? குடும்பத்திற்கும் ‘குடி’ என்று பெயர். மது குடிப்பதற்கும் ‘குடி’ என்று பெயர்.  பெண்கள் குடிக்க ஆரம்பித்தால் குழந்தைகளும் குடிகாரர்களாகி விடுவர். மொத்ததில் குடியே குடியாகி விடும். குடிகாரக் குடும்பத்தில் வளர்கின்ற வருங்கால தலைமுறையும் குடிகாரத் தலைமுறையாக மாறி, குட்டிச் சுவராக மாறி விடும்.

அலறி அடித்து, பதறித் துடித்து இதற்கு விடையும், விடிவும் காண வேண்டிய  மத்திய மாநில அரசுகள் மெத்தனமாகவும் மெத்த அலட்சியமாகவும் இருக்கின்றன.

மது அருந்துபவன், மதுக் கடை நடத்துபவன் மாபாதகனாகப் பார்க்கப்படவில்லை. மாறாக, மாற்று அரசியலைக் கொண்டு வருகின்றேன் என்று கூறி பொய்களை மூலதனமாக்கி ஆட்சிக்கு வந்த பொய் மன்னன், கோயபல்ஸின் உடன் பிறவா சகோதரன் மோடியும் அவனது பயங்கரவாதப் பரிவாரமும் மாட்டு அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்றது.

மது அருந்தியவனை, வியாபாரம் செய்பவனை மாட்டு மாட்டென்று மாட்டுவதற்குப் பதிலாக மாட்டிறைச்சி சாப்பிடுவனை, விற்பவனை கொடூரமாகக் கொலை செய்து கொண்டிருக்கின்றது. மது அருந்துவதால் ஏற்படுகின்ற விளவுகளை ஓர் உதாரணத்திற்கு  சொல்ல வேண்டுமென்றால்  சாலை விபத்துகளைச் சொல்லலாம். இன்று அதிகமான சாலை விபத்துகள் நடப்பதற்குக் காரணம் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால் தான்.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவன், தான் மட்டும் அழிவதில்லை. போதையின்றி  வாகனம் ஓட்டுபவர் மீதும் சாலையில் நடந்து செல்வோர் மீதும் மோதி அப்பாவியான அவர்களைச் சாகடித்து விடுகின்றான். இப்படிப்பட்டவர்கள் சமூக விரோதிகளாகப் பார்க்கப்படுவதற்குப் பதிலாக சாதாரணமாகவே பார்க்கப்படுகின்றார்கள்.

இதற்குக் காரணம் மது அருந்துவதை ஒரு கொடிய பாவமாக மக்களும் பார்ப்பதில்லை; மத்திய மாநில அரசாங்கங்களும் பார்ப்பதில்லை. மாறாக, மத்திய மடமை அரசுக்கு மாட்டுக் கறி மதுவை விட கொடுமையான பாவமாகத் தெரிகின்றது. மதுவுக்கு எதிராகப் பல்வேறு விதமான போராட்டங்கள் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை இதுவரை ஈர்க்கவில்லை.

தமிழகத்தில் கடைகளை மூடும் போராட்டம் மக்களிடத்தில் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. என்ன தான் மக்கள் எதிர்த்தாலும் அதற்கு அரசு இறங்குவதாகத் தெரியவில்லை.  அதிலும் குறிப்பாகப் பெண்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையாவதைப் பற்றி மத்திய, மாநில அரசுகள் கடுகளவு கூடக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

பெண்கள் மதுவருந்துவதால் ஏற்படும் பாதகங்களை, பாதிப்புகளை, பரிதவிப்புக்ளை “மெல்லத் தமிழன் இனி…” என்ற நூலில் அதன் ஆசிரியர் அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகின்றார். அதை சற்று இப்போது பார்ப்போம்

ஆண்/பெண் குடிநோய் வேறுபாடு என்ன?

பெண்கள் மது அருந்தலாம், அருந்தக் கூடாது, ஆண்களுக்கு இணையாக உரிமைகள் உண்டு என்கிற வாதங்களையெல்லாம் இங்கு ஒதுக்கி வைத்துவிடலாம். ஏனெனில், குடிநோய் என்பது ஓர் ஆட்கொல்லி விலங்குபோல. அதற்கு ஆண்/பெண் தெரியாது. அழிக்க மட்டுமே தெரியும்.

ஆண்களின் குடிநோய் அதிர்ச்சி எனில், பெண்களின் குடிநோய் பேரதிர்ச்சி. கொங்கு மண்டலத்தின் சிற்றூர் ஒன்றின் தென்னந்தோப்புக்கு நடுவிலிருந்த மதுபானக் கூடத்துக்குத் தன்னார்வலர்கள் சிலர் அழைத்துச் சென்றார்கள். கூடத்தின் ஒரு பகுதியைப் பிரித்து, திரை போட்டு மூடப்பட்டிருந்தது. எட்டிப் பார்த்தேன். பெண்கள் மது அருந்திக் கொண்டிருந்தார்கள். தனிப் பகுதியாம்!

யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான பெண்கள் கணவரின் குடிநோயாலேயே மதுவுக்கு அடிமையாகியிருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது. இன்று தமிழகத்தின் அநேக மதுபானக் கூடங்களில் பெண்கள் மது அருந்தும் காட்சிகளெல்லாம் அதிர்ச்சிக்கு அப்பாற்பட்டவையாகி விட்டன.

‘நல்லா தூக்கம் வரும்’, ‘சளிக்கு நல்லது’, ‘குழந்தை புஷ்டியா பொறக்கும்’, ‘வலி தெரியாது’ என்பன போன்ற தூண்டில் வார்த்தைகளே பெண்களை மதுவின் வலையில் சிக்க வைக்கின்றன. இதைத் தவிர்த்து, குடும்பங்களிலேயே கட்டாயப்படுத்தி வாயில் மதுவைத் திணிக்கும் செயல்களும் உண்டு.

தென் மாவட்டங்களில் சில ஊர்களில் செங்கல் சூளை, கட்டிட வேலை, வயல் வேலை செய்யும் பெண்களில் பலரும் கூலியுடன் மதுபாட்டில் கேட்க ஆரம்பித்து விட்டார்கள் என்கிறார்கள். இன்னொரு பக்கம் ‘பப்’ கலாச்சாரம் பயமுறுத்துகிறது. அங்கெல்லாம் பெண் துணையுடன் சென்றால் மட்டுமே அனுமதி. அதாவது, பெண்களைக் குடிக்கக் கட்டாயப்படுத்துகிறார்கள்.

அழகல்ல… ஆபத்து!

“ஆணுக்கு இருக்கும் குடிநோய்க்கும் பெண்ணுக்கு இருக்கும் குடிநோய்க்கும் வித்தியாசம் இருக்கிறதா என்று மருத்துவரிடம் கேட்டேன். “குடிநோயில் பெண்ணுக்கே பாதிப்பு அதிகம். சமீபகாலமாக ‘டிரங்கோரெக்சியா’ (Drunkorexia) கேஸ்கள் நிறைய வருகின்றன. வயிறு ஒட்டிப்போய் எலும்பும் தோலுமாக இளம் பெண்கள் வருகிறார்கள். இவர்களுக்கு மதுபோதை தொடர்ந்து வேண்டும்.

வெறும் வயிற்றில் குடிப்பார்கள். நன்றாகப் பசித்தாலும் கொறிப்பார்களே தவிர, சாப்பிட மாட்டார்கள். உடல் பெருத்துவிடும் என்கிற பயமும் சேர்ந்து கொள்கிறது. இது பெண்களுக்கே உரித்தான குடிநோய். ஒருகட்டத்தில் இது மரணம் வரையும்கூட இழுத்துச் செல்லும்.

அழகையும், மெல்லிய உடற்கட்டையும் விரும்பும் பெண்களே அறியாமையால் இந்த பாதிப்புக்குள்ளாகிறார்கள். உடல் அழகு கூடும், தோல் மெருகேறும், சிவந்த நிறத்தைப் பெறலாம் என்பது போன்ற கவர்ச்சி வார்த்தைகளில் மயங்கிய பெண்கள், மதுவைப் பழகியிருக்கிறார்கள். என்னிடம் வந்த ஒரு பெண் குடிநோயாளி, “நட்சத்திர மதுக் கூடங்களில் பெண்களின் மெல்லிய உடற்கட்டுக்கு என்று பிரத்யேக மதுபானங்களையே வைத்திருக்கிறார்கள்” என்றார். எவ்வளவு கொடுமையான வியாபார உத்தி!

உண்மையில், மது அருந்துவதால் ஒரு போதும் அழகு கூடாது. மாறாக, தோல் சுருக்க பாதிப்புகள் விரைவிலேயே ஏற்படும். அதுவும் ஆண்களைவிடப் பெண்களுக்கு இந்தப் பாதிப்பு அதிகம். ஏனெனில், ஆண்களின் உடலை விடப் பெண்களின் உடலில் கொழுப்புச் சத்தின் அளவு அதிகம். மதுவின் பாதிப்பால் கல்லீரல் சுருங்கி கொழுப்பு அங்கு கூடுதலாகும்போது என்சைம்களில் பாதிப்பு ஏற்படும். இது தோல் சுருக்கத்தை விரைவுபடுத்துகிறது.

அளவு ஒன்று… ஆபத்து இரண்டு!

அடுத்தது, மது அருந்தும் பெண்கள் ஆண்களை விட விரைவில் மயக்கம் அடைவார்கள். மது அருந்தும்போது ரத்தத்தில் கலக்கும் ஆல்கஹாலின் அளவுக்கு மருத்துவக் கணக்கீடுகள் உண்டு. இதனை, ‘ரத்தத்தில் உள்ள ஆல்கஹாலின் (Blood alcohol content level) என்கிறோம். ஆண் ஒருவர் சுமார் 240 மில்லி அளவுக்கு மது அருந்தும்போது இந்த அளவு சராசரியாக 0.20-லிருந்து 0.29 வரை இருக்கும். இது ‘சுயநினைவு இல்லாமல்போகவாய்ப்புள்ள’ நிலை.

ஆனால், இதுவே பெண் ஒருவர் அதே அளவு மது அருந்தும்போது, அந்தஅளவு 0.30-லிருந்து 0.39 வரை உயர்கிறது. இது ‘சுயநினைவு இல்லாதநிலை’. மருத்துவம் இதனை மரணத்துக்கு வாய்ப்புள்ள நிலை என்றும் குறிப்பிடுகிறது. இதற்குக் காரணம், ஆண்களின் உடலைவிட பெண்களின் உடலில் நீர்ச்சத்து குறைவு.

பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் போது மட்டும் கணவர் குடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார் என்கிறார்கள் சில பெண்கள்.

மது அருந்திவிட்டு உடலுறவு கொள்வது என்பது ஆரோக்கியமானதல்ல என்பது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. பாலியல் உறவின்போது ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரிக்கும். தவிர, உணர்ச்சி வசப்படும் தன்மை பெண்களுக்கு அதிகம். அப்போது மதுவின் வீரியமும் சேர்ந்து கொள்வதால் ரத்த அழுத்தம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகமாகி வெடிக்கலாம். தொடர் அழுத்தங்களால் இதயத்தில் ஓட்டை விழலாம். தாறுமாறாக இதயம் துடிப்பதால் மாரடைப்பு ஏற்படலாம்.

பாலியல் உறவைப் பொறுத்தவரை ஆணைவிடப் பெண்ணின் உடல் உள்உறுப்புகளுக்கே பணிகள் அதிகம். ஆல்கஹாலின் தன்மையால் உள்உறுப்புகள் சோர்வடைந்திருக்கும் நிலையில், பிறப்புறுப்பில் இயற்கையாகச் சுரக்க வேண்டிய திரவம் சுரக்காது. இது வலியை ஏற்படுத்தி, பாலியல் உறவைச் சிக்கலாக்குகிறது. மனரீதியான அழுத்தங்களுக்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் வழி வகுக்கிறது. சமயத்தில் கர்ப்பமும் உண்டாகிறது.

குழந்தையா? சதைப் பிண்டமா?

கர்ப்பத்துடன் முடிந்துவிடவில்லை பிரச்சினைகள். குழந்தை புஷ்டியாக இருப்பதற்காக, கர்ப்ப காலத்தில் ஒயின் குடிக்கலாம் என்கிற தவறான கருத்துக்கள் இங்கே அதிகம். ஒயினில் இருந்தாலும் ஓட்காவில் இருந்தாலும் ஆல்கஹால் என்பது ஒன்றே. கர்ப்ப காலத்தில் மது அருந்துவது என்பது ஒரு சந்ததியையே அழிக்கும் பாவத்துக்கு ஈடானது. இதனால், ‘ஃபீட்டல் ஆல்கஹால் சின்ட்ரோம்’(Fetal alcohol syndrome) என்கிற நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதன் மூலம் பிறக்கும் குழந்தைகளை ‘கிரானியோ ஃபேஷியல் அப்நார்மாலிட்டீஸ்’ (Cronio facial abnormalities) என்கிறார்கள். இவ்வகைக் குழந்தைகள் பிறக்கும்போது எந்த வடிவத்தில் இருக்கும் என்றே சொல்ல முடியாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், உயிருள்ள/ உயிரற்ற சதைப் பிண்டங்கள் தான் அவை” என்று முடித்தார் மருத்துவர்.

மூளைக்குள் உறையும் பூதம்

ஈரோடு அருகே அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அந்தப் பெண்ணுக்கு வயது 35 இருக்கும். நடுத்தரக் குடும்பம். கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நான் பார்த்தபோது அந்தப் பெண் கடும் போதையில் இருப்பது போலத் தெரிந்தது. பத்தடிகள் அவரால் இயல்பாக நடக்கமுடியவில்லை. தடுமாறுகிறார். கால்கள் பின்ன விழப்போகிறார். தலைதொங்கிக் கிடக்கிறது. அவரால் திடமாக நிற்க முடியவில்லை.

பெண்ணின் கணவர் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தினார். லேசாகச் சிரித்தவரிடம், “நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டேன்.

“இட்லி நல்லாவே இல்லை, மழைன்னு ஸ்கூலு லீவு விட்டுட்டாங்க’’ என்றார்.

“இல்லை, உங்களுக்கு உடம்பு எப்படி இருக்குன்னு கேட்டேன்” என்று புரியவைக்க முயன்றேன்.

“உடம்பா…” என்று யோசித்தவர், என் கழுத்தில் கை வைத்துப் பார்த்து, “ஜூரம் எல்லாம் இல்லை, ஊசி போட வேண்டாம். எங்க, நல்லா ஆகாட்டுங்க…” என்றார்.

குழப்பமாக இருந்தது. அவர் குடித்திருக்கவில்லை. ஆனால், போதையில் இருப்பவரைவிட அதிகம் தள்ளாடுகிறார். அவரது கணவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வந்தேன்.

கணவருக்கும் அடி விழும்!

ஈரோடு அருகே ஒரு மில்லில் இருவரும் பணிபுரிந்திருக்கிறார்கள். கணவரிடம் குடிப் பழக்கம் இருந்திருக்கிறது. அது மனைவிக்கும் தொற்றிக் கொண்டது. தினமும் இரவானால் இருவரும் சேர்ந்து மதுஅருந்தி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இரவில் மட்டும் மது அருந்திய அந்தப் பெண், பகலிலும் அருந்தத் தொடங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் காலையிலேயே மது அருந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

பயந்துபோன கணவர் தன்னுடைய குடிப் பழக்கத்தை நிறுத்திவிட்டார். மனைவியால் முடியவில்லை. தினமும் கணவர் மது வாங்கித் தரவில்லை என்றால், வீட்டில் ரகளையே நடந்தது. பொருட்களை விற்றுக் குடிப்பது, குழந்தைகளை அடிப்பது, கணவரை உதைப்பது என ஆண்குடி நோயாளிகள் செய்யும் அத்தனையையும் அந்தப் பெண் செய்தார். அதனால்தான் சொன்னேன், குடிநோய்க்கு ஆண்/பெண் தெரியாது என்று!

நடிக்கும் மூளை நரம்பு செல்கள்!

மருத்துவர் மோகன வெங்கடாஜலபதியிடம் பேசினேன். “அந்தப் பெண் மது குடிப்பதை நிறுத்தி மூன்று மாதங்கள் ஆகின்றன. ஆனால், அவர் முழுமையாகக் குணமாக இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அவருக்கு இருப்பது ‘வெர்னிக்கி கார்சாகாஃப் சின்ட்ரோம்’ (Wernicke korsakoff syndrome). தொடர்ந்து மது அருந்துவதால் பி-1 விட்டமின் பற்றாக்குறை ஏற்பட்டு, அதன் மூலம் உண்டாகும் மூளை நரம்புப் பாதிப்புகளில் ஒன்று. மேற்கண்ட சின்ட்ரோமின் உடல்ரீதியான பிரச்சினையான ‘வெர்னிக்கிஸ் என்ஸிபாலோபதி’ (Wernicke’s encephalopathy)  என்கிற தீவிர நோய்த் தாக்கத்தால், அந்தப் பெண்மணி அவதிப்பட்டுவருகிறார்.

அந்தப் பெண்ணின் பெரும்பாலான மூளை நரம்பு செல்கள் சேதமடைந்திருக்கின்றன. அதாவது, தொடர்ந்து பல காலம் மிக அதிகமாக மது குடித்ததால், மது குடிக்காத நாட்களிலும், ‘போதை இல்லாத’ நிலையை மூளை நரம்பு செல்கள் விரும்புவதில்லை. நரம்பு செல்களில் மதுவின் தாக்கம் வடிந்து பல நாட்கள், பல மாதங்கள் ஆகியும் கூட அவை அதிலிருந்து விடுபட விரும்பாமல், மயக்க நிலையிலேயே இருக்கின்றன அல்லது நடிக்கின்றன.

அதனால்தான், மது அருந்தாத, மதுவின் போதை இல்லாத நிலையிலும், இந்த வகை நோயாளிகள் தள்ளாடித்தான் நடப்பார்கள். வலது கையைத் தூக்கு என்று மூளை கட்டளையிட்டால், இடது காலைத் தூக்குவார்கள். உட்கார் என்றால் நிற்பார்கள். அதாவது, உடலின் பிற உறுப்புகளுக்கு மூளை சரியான கட்டளைகளைப் பிறப்பிக்க இயலாது. கண்களின் நரம்புகளும் பாதிக்கப்பட்டிருப்பதால், விழி பாப்பாக்கள் ஓரிடத்தில் நிற்காது. அலைபாயும். லேசாகக் கண்ணை மட்டும் திருப்பி பக்கவாட்டில் பார்க்க முடியாது. ஆளே திரும்பினால் தான் பக்கவாட்டுக் காட்சியைப் பார்க்க முடியும். இது போன்ற பாதிப்புகளை ‘அட்டாக்ஸியா’ (Ataxia) என்கிறோம். இவை எல்லாம் உடல்ரீதியான பாதிப்புகள்.

மெமரி கார்டு இல்லாத கேமரா

சிகிச்சை எடுத்துக் கொள்ளாதபோது இந்த நோய், கார்சாகாஃப் சைக்கோசிஸ் (Korsakoff’s psychosis) என்கிற மனநோயாக அதன் இரண்டாவது நிலைக்கு முற்றுகிறது. மூளை நரம்பு செல்களில் புதிய பதிவுகள் எதுவுமே தங்காது; கண்ணால் பார்க்கும் காட்சிகள் அந்தந்த கணத்தில் அழிந்து விடும். அதாவது, மெமரி கார்டு போடாத டிஜிட்டல் கேமராவில் படம் எடுப்பதுபோல. இதன் பெயர் ‘ஆன்டிரோகிரேடு அம்னீஷியா’ (Anterograde amnesia). நாம் ஏதாவது பேசினால், அதில் சில வார்த்தைகளை மட்டுமே அவர்களால் புரிந்து கொள்ள முடியும். அதனால், கேள்விக்கான நேரடியான, முழுமையான பதிலைத் தர முடியாது. அதனால்தான், அந்தப் பெண்மணி, ‘நல்லா இருக்கிறீர்களா?’ என்று கேட்டால், ‘இட்லி நல்லா இல்லை’ என்கிறார்.

இந்த இரண்டாம் கட்ட நோயின் நிலையில்தான் அந்தப் பெண்மணி சிகிச்சைக்கு வந்தார். அப்போதும் அவர் வரவில்லை எனில், அவர் நோயின் முற்றிய மூன்றாவது கட்டத்துக்குப் போயிருப்பார். அது குணப்படுத்த முடியாத ‘ரெட்ரோகிரேடு அம்னீஷியா’ (Retrograde amnesia). நிரந்தர மூளை ஊனம் இது. புதிய பதிவுகள் மட்டுமின்றி, மூளையின் பழைய பதிவுகளும் படிப்படியாக அழியத் தொடங்கும். கொடுமையான மனநோய் இது. தனது பெயர் தெரியாது; தாய்மொழி புரியாது. ஒலிகளே மொழியாகிவிடும். மூளையின் நிரந்தர ஊனம் இது.

மது, எது வரையிலும் செல்லும் என்பதற்கு இது ஒன்று போதுமே” என்றார் மருத்துவர்.

நூல்: மெல்லத் தமிழன் இனி…

ஆசிரியர்: டி.எல். சஞ்சீவிகுமார்

நன்றி: தமிழ் இந்து நாளிதழ்

பெண்கள் மதுவை நோக்கித் தூண்டப் படுகின்றார்கள். புருஷன்களாலும், மற்றவர்களாலும் மதுவென்னும் மாபாதகத்தை நோக்கித் தள்ளப்படுகின்றார்கள் என்பதையும் பெண்கள் மதுவருந்துவதால் ஏற்படும் மருத்துவ ரீதியலான பாதிப்புகளும் பாதகங்களும் அந்தப் பெண்களோடு மற்றும் நின்று விடாமல் அவர்களது கருக்களில் குடியிருக்கும் குழந்தைகளை நோக்கியும் பாய்ந்து விடுகின்றன என்பதையும் மிகவும் விளக்கமாக எடுத்துச் சொல்கின்றார்.

இதைப் படிக்கும் போதே உடலில் பாய்ந்து ஓடும் ரத்தம் உறைந்து பனிக்கட்டியாகி விடும் போல் தெரிகின்றது. அதனால் தான் ஒரு கூட்டம் இதை எதிர்த்து இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்தப் போராட்டக்கார்களுக்கும் இந்த மது ஒழிந்து ஓய்ந்து விடாதா? என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் சிந்தனைமிகு சீர்த்திருத்தவாதிகளுக்கும் நாம் சொல்லிக் கொள்வது, இந்த மதுவை ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழி இஸ்லாம் மார்க்கம் மட்டும் தான்.

உலகத்தில் மதுவிலக்கு அமல்படுத்திய நாடுகளெல்லாம் தோல்வியைத் தான் சந்தித்திருக்கின்றன. அவர்கள் கொண்டு வந்த மதுவிலக்கு சட்டம் ஒரு சில ஆண்டுகளில் மரணத்தைத் தழுவியது. ஆனால் அரபகத்தில் மட்டும் அது ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.இதற்குக் காரணம் திருக்குர்ஆனும் திருநபியின் வழிமுறையும் தான்.

திருடி சம்பாதிப்பதை உலகம் அறவே ஜீரணிக்கவில்லை.  மது விற்பனை மூலம் வரும் வருவாயும் திருடிச் சம்பாதிப்பதைப் போன்று தான் என்ற சிந்தனை ஓட்டம் அரசிடமும் இல்லை. தனி மனிதரிடத்திலும் இல்லை.

ஆனால் இஸ்லாமிய மார்க்கம் மதுவின் வருவாயை அந்த ரகத்தில் வைத்துப் பார்க்கின்றது. அதனால் தான் மதுவின் வருவாயைத் தடை செய்து விட்டது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹிஜிரி 8ஆம் ஆண்டில் தன்னை விரட்டி அடித்த மக்காவை வெற்றி கொள்கின்றார்கள். வெற்றி கொண்ட மாத்திரத்தில் தனது அரசின் தடைகளைப் பிரகடனப்படுத்துகின்றார்கள். அந்தத் தடையுத்தரவுகளில் மதுவின் தடையையும்  சேர்த்துக் குறிப்பிடுகின்றார்கள்.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, ‘‘நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!’’ என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘கூடாது! அது விலக்கப்பட்டது!’ எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, ‘அல்லாஹ் யூதர்களைச் சபிப்பானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-2236

மதுவின் வியாபாரத்தை இஸ்லாம் எந்த ரகத்தில் வைத்திருக்கின்றது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

அதுவரைக்கும் மக்கா இஸ்லாமிய  ஆட்சியின் கீழ் இல்லை. இப்போது அது இஸ்லாமிய ஆட்சிக்குக் கீழ் வந்ததால் மது வியாபாரத் தடையை பிரகடனப்படுத்துகின்றார்கள். ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் அமலான இந்த மது விலக்குச் சட்டம் இன்றும் தொடர்கின்றது.

இந்தியாவிலும் தற்காலிக மதுவிலக்காக இல்லாமல் நிரந்தரமான மதுவிலக்கு வேண்டு மென்றால் அதற்கு இஸ்லாம் ஒன்றே தீர்வு. எனவே, சிந்தனையாளர்கள் தங்களது மது விலக்குப் போராட்டம் வெற்றி பெற இந்த மையப் புள்ளியை நோக்கித் தங்கள் பயணத்தை நகர்த்துவார்களாக!