Tamil Bayan Points

மறுமையின் சாட்சிகள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

Last Updated on October 4, 2023 by Trichy Farook

மறுமையின் சாட்சிகள்

  1. அல்லாஹ்வே முதல் சாட்சியாளன்
  2. சாட்சியாகும் மலக்குகளும் பதிவேடுகளும்
  3. தங்களுக்கே சாட்சி சொல்லும் மனிதர்கள்
  4. ஒருவருக்கொருவர் சாட்சியாக இருக்கும் மனிதர்கள்
  5. கழுத்தில் இருக்கும் பதிவேட்டின் சாட்சி
  6. உடல் உறுப்புகளின் சாட்சி
  7. ஜின்களின் சாட்சி
  8. உயிரற்ற பொருட்களின் சாட்சி

முன்னுரை 

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!

இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒருநாள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டுவிடும். அதன்பிறகு அனைத்து மனிதர்களும் எழுப்பப்பட்டு விசாரணையை எதிர்நோக்கியவர்களாக அல்லாஹ்வின் முன்னால் நின்று கொண்டிருப்பார்கள். பூமியில் வாழும்போது செய்த அனைத்துக் காரியங்கள் குறித்தும் மனிதர்களிடம் கேள்வி கேட்கப்படும். அந்த நாளில் அனைத்து அதிகாரமும் ஆதிக்கமும் அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கும்.

அப்போது நினைத்ததை எல்லாம் அவனால் செய்ய முடியும். இருப்பினும், அவன் தமது மனம்போன போக்கில் விசாரித்து கூலி வழங்கமாட்டான். அவன் நீதமானவன். அவன் நமது செயல்களுக்கும் சில விதிமுறைகளை வழிமுறைகளை வைத்திருக்கிறான். அந்த வகையில், அவனது அனைத்து விசாரணைகளும் அதற்குரிய கூலிகளும் ஆதாரங்கள், சாட்சிகள் அடிப்படையில் தான் அமைந்திருக்கும். எவரும் எந்தவொரு செயலையும் எந்த வகையிலும் மறைக்கவும் முடியாது; மறுக்கவும் முடியாது.

நன்மையான காரியங்களைச் செய்திருக்கும் நம்பிக்கையாளர்கள் தங்களுக்குரிய பரிசுகளை, வெகுமதிகளைப் பெற்றுக் கொள்வார்கள். தீமையான காரியங்களைச் செய்திருக்கும் குற்றவாளிகள் தங்களுக்குரிய தண்டனைகளை, வேதனைகளைப் பெற்றுக்கொள்வார்கள். சின்னஞ்சிறிய அற்பமான செயல்களாக இருந்தாலும், மிகப்பெரிய மகத்தான காரியங்களாக இருந்தாலும் அனைத்துக்கும் அந்நாளில் அடுக்கடுக்கான ஆதாரங்கள் இருக்கும். பல்வேறு விதமான சான்றுகள் இருக்கும்.

இவ்வாறு, நல்லவர்களுக்கு ஆதரவாகவும் கெட்டவர்களுக்கு எதிராகவும் சாட்சிகள் நிறைந்திருப்பது என்பது மறுமை நிகழ்வுகளில் முக்கியமான ஒன்றாகும். இதைப் பின்வரும் வசனங்களின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

 وَشَاهِدٍ وَّمَشْهُوْدٍؕ‏

சாட்சி கூறுவோர் மீதும் சாட்சி கூறப்படுவோர் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன்: 85:3)

 وَنُفِخَ فِى الصُّوْرِ ‌ؕ ذٰ لِكَ يَوْمُ الْوَعِيْدِ‏ وَجَآءَتْ كُلُّ نَفْسٍ مَّعَهَا سَآٮِٕقٌ وَّشَهِيْدٌ‏

ஸூர் ஊதப்படும். இதுவே எச்சரிக்கப்பட்ட நாள். ஒவ்வொருவரும், இழுத்துச் செல்பவருடனும் சாட்சியுடனும் வருவர். 

(அல்குர்ஆன்: 50:20,21)

 وَيَوْمَ نَـبْعَثُ مِنْ كُلِّ اُمَّةٍ شَهِيْدًا ثُمَّ لَا يُؤْذَنُ لِلَّذِيْنَ كَفَرُوْا وَلَا هُمْ يُسْتَعْتَبُوْنَ‏

ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் எழுப்பும் நாளில்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு (பேச) அனுமதிக்கப்படாது. அவர்கள் (வணக்க வழிபாடுகள் செய்யுமாறு) வற்புறுத்தப்படமாட்டார்கள்.   

(அல்குர்ஆன்: 16:84)

 اِنَّا لَنَـنْصُرُ رُسُلَنَا وَالَّذِيْنَ اٰمَنُوْا فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُوْمُ الْاَشْهَادُ ۙ‏

நமது தூதர்களுக்கும், நம்பிக்கை கொண்டோருக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் முன் வரும் நாளிலும் நாம் உதவுவோம். 

(அல்குர்ஆன்: 40:51)

وَنَزَعْنَا مِنْ كُلِّ اُمَّةٍ شَهِيْدًا فَقُلْنَا هَاتُوْا بُرْهَانَكُمْ فَعَلِمُوْۤا اَنَّ الْحَـقَّ لِلّٰهِ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ

ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியைப் பிரித்தெடுப்போம். “உங்கள் சான்றுகளைக் கொண்டு வாருங்கள்!” என்று கூறுவோம். உண்மை அல்லாஹ்விற்கே உரியது என்பதை அப்போது அறிந்து கொள்வார்கள். அவர்கள் இட்டுக்கட்டியவை அவர்களை விட்டு மறைந்து விடும். 

(அல்குர்ஆன்: 28:75)

 وَاَشْرَقَتِ الْاَرْضُ بِنُوْرِ رَبِّهَا وَوُضِعَ الْكِتٰبُ وَجِآىْ َٔ بِالنَّبِيّٖنَ وَالشُّهَدَآءِ وَقُضِىَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏

பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். (பதிவுப்) புத்தகம் (முன்) வைக்கப்படும். நபிமார்கள் மற்றும் சாட்சிகள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பு வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 39:69)

எந்தவொரு நல்லறமும் செய்யாதவருக்கு, சொர்க்கம் தரப்படுகிறது என்று அதிருப்தியில்  எவரும் எதிர்த்துப் பேசுவதற்கோ வாதம் செய்வதற்கோ வாய்ப்பே இருக்காது. எந்தவொருதீமையும் செய்யாதவருக்கு நரகம் கொடுக்கப்படுகிறது என்று பொய் சொல்லி உண்மையை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. காரணம், நன்மைகள் தீமைகள் அனைத்துக்கும் மிகத் துல்லியமான சாட்சிகள் இருக்கும்.

இந்த உலகில் வாழும்போது, நமக்குத் தெரியும் வகையிலும் தெரியாத வகையிலும் பல சாட்சிகள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. இந்த வகையில், மறுமையில் எவ்வாறெல்லாம் சாட்சிகள் சூழ்ந்திருக்கும் என்பதை மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் இந்த உரையில் அறிந்து கொள்வோம்.

அல்லாஹ்வே முதல் சாட்சியாளன்

நம்மைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ், வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தையும் அறிந்தவன். உறக்கம், ஓய்வு போன்ற பலவீனம் இல்லாமல் இரவு பகல் முழுவதும் நம்மை கண்காணித்துக் கொண்டிருப்பவன். மனிதர்கள் அனைவரையும் பற்றி முழுமையாக துல்லியமாக அறிந்தவன். இத்தகைய இறைவன் மறுமை நாளில் நமது செயல்களுக்கு முதல் சாட்சியாக இருப்பான்.

நாம் நல்லது செய்தோமா? கெட்டது செய்தோமா? என்று பகிரங்கப்படுத்துவதற்கு அவனே போதுமானவன். இதை நாம்  நமது மனதில் முதலில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதை குர்ஆனிலும் பல இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். இந்தச் செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நமக்கு தெளிவாக எடுத்துரைத்து இருக்கிறார்கள். அந்த ஆதாரங்களில் சிலவற்றை இப்போது காண்போம்.

 

 اَمْ يَقُوْلُوْنَ افْتَـرٰٮهُ‌ؕ قُلْ اِنِ افْتَـرَيْتُهٗ فَلَا تَمْلِكُوْنَ لِىْ مِنَ اللّٰهِ شَیْـًٔا ؕ هُوَ اَعْلَمُ بِمَا تُفِيْضُوْنَ فِيْهِ‌ؕ كَفٰى بِهٖ شَهِيْدًاۢ بَيْنِىْ وَبَيْنَكُمْ‌ ؕ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

 

“இவர் இதை இட்டுக்கட்டிவிட்டார்” என்று கூறுகிறார்களா? “நான் இட்டுக்கட்டியிருந்தால் அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் நீங்கள் என்னைக் காப்பாற்ற முடியாது. நீங்கள் எதில் மூழ்கியுள்ளீர்களோ அதை அவனே நன்கு அறிவான். எனக்கும் உங்களுக்குமிடையே அவனே சாட்சியாகப் போதுமானவன். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! 

(அல்குர்ஆன்: 46:8)

 

 وَيَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْا لَسْتَ مُرْسَلًا‌ ؕ قُلْ كَفٰى بِاللّٰهِ شَهِيْدًۢا بَيْنِىْ وَبَيْنَكُمْۙ وَمَنْ عِنْدَهٗ عِلْمُ الْكِتٰبِ‏

 

முஹம்மதே!) “நீர் (இறைவனின்) தூதர் அல்லர்” என்று, மறுப்போர் கூறுகின்றனர். “எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். வேதத்தின் அறிவு உள்ளோரும் போதுமானவர்கள்” என்று கூறுவீராக! 

(அல்குர்ஆன்: 13:43)

 

 وَاِمَّا نُرِيَـنَّكَ بَعْضَ الَّذِىْ نَعِدُهُمْ اَوْ نَـتَوَفَّيَنَّكَ فَاِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ اللّٰهُ شَهِيْدٌ عَلٰى مَا يَفْعَلُوْنَ‏

 

(முஹம்மதே!) நாம் அவர்களுக்கு எச்சரித்ததில் சிலவற்றை உமக்குக் காட்டினாலோ, உம்மை நாம் கைப்பற்றிக் கொண்டாலோ நம்மிடமே அவர்களின் மீளுதல் உள்ளது. பின்னர் அவர்கள் செய்வதற்கு அல்லாஹ் சாட்சியாளனாக இருக்கிறான். 

(அல்குர்ஆன்: 10:46)

 وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِيْنَ اَشْرَكُوْا مَكَانَكُمْ اَنْتُمْ وَشُرَكَآؤُكُمْ‌ۚ فَزَيَّلْنَا بَيْنَهُمْ‌ وَقَالَ شُرَكَآؤُهُمْ مَّا كُنْتُمْ اِيَّانَا تَعْبُدُوْنَ‏
 فَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًۢا بَيْنَـنَا وَبَيْنَكُمْ اِنْ كُنَّا عَنْ عِبَادَتِكُمْ لَغٰفِلِيْنَ‏

அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் இணை கற்பித்தோரை நோக்கி “நீங்களும், உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்!” என்று கூறுவோம். அப்போது அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவோம். “நீங்கள் எங்களை வணங்கவே இல்லை” என்று அவர்களின் தெய்வங்கள் கூறுவார்கள். “எங்களுக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். நீங்கள் (எங்களை) வணங்கியதை அறியாதிருந்தோம்” என்றும் கூறுவார்கள். 

(அல்குர்ஆன்: 10:28,29)

 وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ النَّبِيّٖنَ لَمَاۤ اٰتَيْتُكُمْ مِّنْ كِتٰبٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَـتُؤْمِنُنَّ بِهٖ وَلَـتَـنْصُرُنَّهٗ ‌ؕ قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلٰى ذٰ لِكُمْ اِصْرِىْ‌ؕ قَالُوْۤا اَقْرَرْنَا ‌ؕ قَالَ فَاشْهَدُوْا وَاَنَا مَعَكُمْ مِّنَ الشّٰهِدِيْنَ‏

“உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பிறகு உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் “தூதர்‘ உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?” என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து “இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்ட போது, “ஒப்புக் கொண்டோம்” என்று அவர்கள் கூறினர். “நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்” என்று அவன் கூறினான். 

(அல்குர்ஆன்: 3:81)

நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, “இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார்கள். நாங்கள் “அல்லாஹ்வையும் அவனது தூதருமே நன்கறிவர்!” என்றோம். அந்நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது (குர்பானி கொடுப்பதற்குரிய) நஹ்ருடைய நாளல்லவா?” என்று கேட்டார்கள்.

நாங்கள் “ஆம்!” என்றோம். பிறகு “இது எந்த மாதம்?” என அவர்கள் கேட்டதும் நாங்கள் “அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்!” என்றோம். அப்போதும் அம்மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு, “இது துல்ஹஜ் மாதம் அல்லவா?” என அவர்கள் கேட்க, நாங்கள் “ஆம்!” என்றோம். பிறகு “இது எந்த நகரம்?” எனக் கேட்டார்கள்.

அதற்கு நாங்கள் “அல்லாஹ்வும் அவது தூதருமே நன்கறிவர்!” என்றோம். அப்போதும் அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு “இது புனிதமிக்க நகரமல்லவா?” எனக் கேட்க, நாங்கள் “ஆம்!” என்றோம்.

பிறகு “உங்களுடைய (புனிதமிக்க) இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமிக்க) இந்த மாதத்தில் இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் இரட்சகனைச் சந்திக்கும் நாள் (மறுமை)வரை புனிதமானவையாகும்!” என்று கூறிவிட்டு, “நான் உங்களிடம் (இறைச்செய்திகள் அனைத்தையும்) சேர்ப்பித்துவிட்டேனா?” எனக் கேட்டார்கள். மக்கள் “ஆம்!” என்றனர்.

பிறகு அவர்கள், “இறைவா! இதற்கு நீயே சாட்சியாயிரு! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! ஏனெனில், செவியேற்பவரைவிட அறிவிக்கப்படுபவர் (இந்த இறைச் செய்தியை) நன்கு புரிந்து கொள்பவராயிருக்கலாம்; எனக்குப் பின்னால் நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாகிவிட வேண்டாம்!” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி),
ஆதாரம்: புகாரி-1741 , 4403

சாட்சியாகும் மலக்குகளும் பதிவேடுகளும்

நம்மைக் கண்காணிப்பது நமது காரியங்களைப் பதிவு செய்வது போன்ற பல்வேறு பணிகளைச் செய்வதற்கு மலக்குகளை அல்லாஹ் படைத்திருக்கிறான். குறிப்பாக, ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது செயல்களைப் பதிவு செய்வதற்கென்று மலக்குகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவ்வாறு, நமக்காக நியமிக்கப்பட்டுள்ள அந்த மலக்குகள் அனைத்துத் தருணங்களிலும் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நமது செயல்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நமது செயல்களுக்குரிய ஏடுகளும் அவற்றை எழுதிய மலக்குகளும் மறுமை நாளில் நமது காரியங்களுக்கு முக்கியமான சாட்சிகளாக இருப்பார்கள். இந்த விளக்கத்தை பின்வரும் வரிகளின் வாயிலாக விளங்கலாம்.

وَاِنَّ عَلَيْكُمْ لَحٰـفِظِيْنَۙ‏  كِرَامًا كَاتِبِيْنَۙ‏ يَعْلَمُوْنَ مَا تَفْعَلُوْنَ‏

உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர். நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள்.

(அல்குர்ஆன்: 82:10,11,12)

 وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّنْۢ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُمْ اِذَا لَهُمْ مَّكْرٌ فِىْۤ اٰيَاتِنَا‌ ؕ قُلِ اللّٰهُ اَسْرَعُ مَكْرًا‌ ؕ اِنَّ رُسُلَنَا يَكْتُبُوْنَ مَا تَمْكُرُوْنَ‏

மனிதர்களுக்கு துன்பம் ஏற்பட்ட பின் அருளை நாம் அவர்களுக்கு அனுபவிக்கச் செய்தால் நமது சான்றுகளில் அவர்கள் சூழ்ச்சி செய்கின்றனர். “அல்லாஹ் விரைந்து சூழ்ச்சி செய்பவன்” என (முஹம்மதே!) கூறுவீராக! நமது தூதர்கள் நீங்கள் செய்யும் சூழ்ச்சியைப் பதிவு செய்கின்றனர்.

(அல்குர்ஆன்: 10:21)

 وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ ۖۚ وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ‏
 اِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيٰنِ عَنِ الْيَمِيْنِ وَعَنِ الشِّمَالِ قَعِيْدٌ‏- مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ‏
மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை. 

(அல்குர்ஆன்: 50:16-18)

اَمْ يَحْسَبُوْنَ اَنَّا لَا نَسْمَعُ سِرَّهُمْ وَنَجْوٰٮهُمْ‌ؕ بَلٰى وَرُسُلُنَا لَدَيْهِمْ يَكْتُبُوْنَ‏

அவர்களது இரகசியத்தையும், அதை விட ரகசியத்தையும் நாம் செவியுறவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்களா? அவ்வாறில்லை! அவர்களிடம் உள்ள நமது தூதர்கள் பதிவு செய்கின்றனர்.       

(அல்குர்ஆன்: 43:80)

 اِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيٰنِ عَنِ الْيَمِيْنِ وَعَنِ الشِّمَالِ قَعِيْدٌ‏
 مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ

வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை. 

(அல்குர்ஆன்: 50:17,18)

மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கும் முன்னிலையில் இந்த என்னுடைய சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனை அல்லாஹ் வெளியே கொண்டு வருவான். தொன்னூற்று ஒன்பது ஏடுகள் அவனுக்கு விரித்து வழங்கப்படும். ஒவ்வொரு ஏடும் பார்வை எட்டும் தூரம் அளவிற்கு இருக்கும்.

அந்த மனிதனிடம் அல்லாஹ், “இதில் இருக்கும் ஏதேனும் ஒன்றை நீ மறுக்கிறாயா? (உன்னை கண்காணிப்பதற்கு நான் நியமித்த) எனது எழுத்தாளர்கள் உனக்கு (ஏதேனும் இதிலே தவறாக பதிவு செய்து) தீங்கிழைத்து இருக்கிறார்களா?” என்று கேட்பான். “இல்லை, எனது இறைவா” என்று அந்த மனிதன் கூறுவான்.

மேலும் இறைவன், “உன்னிடம் ஏதேனும் கோரிக்கை இருக்கிறதா?” என்று அந்த மனிதனிடம் கேட்பான். “இல்லை, என் இறைவா” என்று அந்த மனிதன் கூறுவான். உடனே இறைவன், “அவ்வாறில்லை, நம்மிடம் உமக்கு சிறந்த நன்மை இருக்கிறது; இன்று உனக்கு அநீதி இழைக்கப்படாது” என்று கூறுவான். (அந்த மனிதனுக்குரிய ஏடுகள்) அவற்றில் இருந்து ஒரு துண்டு சீட்டு வெளியே எடுக்கப்படும்.

அதில், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்று இருக்கும். “உன்னுடைய எடையை நிறுத்து” என்று இறைவன் கூறுவான். “இறைவா! இந்த ஏடுகளுடன் இருக்கும் இந்தச் சீட்டு என்ன?” என்று அந்த மனிதன் அவனிடம் கேட்பான். அதற்கு, “நீ அநீதி இழைக்கப்படமாட்டாய்” என்று இறைவன் கூறுவான்.

(நன்மை தீமைகளை அளவிடும் தராசின்) ஒரு தட்டில் ஏடுகளும் மற்றொரு தட்டில் அந்தத் துண்டுச்சீட்டும் வைக்கப்படும். ஏடுகள் எடையில் தாழ்ந்துவிடும். துண்டுச் சீட்டு எடையில் கனத்துவிடும். அல்லாஹ்வுடைய பெயரைவிட எந்தவொன்றும் கனத்துவிடாது.

இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்கள்: திர்மிதீ-2639 (2563), இப்னுமாஜா 4290, அஹ்மத் 6699

தங்களுக்கே சாட்சி சொல்லும் மனிதர்கள்

மறுமை நாள் என்பது திடுக்கங்களும் தடுமாற்றங்களும் நிறைந்திருக்கும் நேரம். என்ன நடக்குமோ? என்று எல்லோரும் பயத்தில் உறைந்திருக்கும் தருணம். இத்தகைய நேரத்தில், தங்களது காரியங்களை வெறுத்து மூடி மறைக்கவும், மறுத்துத் தவிர்க்கவும் இயலாத நிலையில் மனிதர்கள் இருப்பார்கள்.

இதன் காரணமாக, மனிதர்கள் தங்களது செயல்களை எடுத்துக் காட்டும் வேளையில் அதை ஒப்புக் கொள்வார்கள். இவ்வாறான நிலையை மனிதர்களில் இறைத்தூதர்கள் உட்பட அனைவருக்கும் வல்ல இறைவன் ஏற்படுத்தி வைத்துள்ளான். இதைப் பின்வரும் ஆதாரங்களின் வாயிலாக நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰيٰتِهٖ ؕ اُولٰۤٮِٕكَ يَنَالُهُمْ نَصِيْبُهُمْ مِّنَ الْـكِتٰبِ‌ؕ حَتّٰٓى اِذَا جَآءَتْهُمْ رُسُلُـنَا يَتَوَفَّوْنَهُمْ ۙ قَالُوْۤا اَيْنَ مَا كُنْتُمْ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ‌ ؕ قَالُوْا ضَلُّوْا عَنَّا وَشَهِدُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ اَنَّهُمْ كَانُوْا كٰفِرِيْنَ‏

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? விதிக்கப்பட்ட அவர்களின் பங்கு அவர்களுக்குக் கிடைக்கும்.

“அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?” என்று நமது தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும் போது கேட்பார்கள். “அவர்கள் எங்களை விட்டும் மறைந்து விட்டனர்” என அவர்கள் கூறுவார்கள். தாம் (ஏக இறைவனை) மறுப்போராக இருந்தோம் எனத் தமக்கு எதிராகச் சாட்சி கூறுவார்கள். 

(அல்குர்ஆன்: 7:37)

وَ اِذْ اَخَذَ رَبُّكَ مِنْۢ بَنِىْۤ اٰدَمَ مِنْ ظُهُوْرِهِمْ ذُرِّيَّتَهُمْ وَ اَشْهَدَهُمْ عَلٰٓى اَنْفُسِهِمْ‌ ۚ اَلَسْتُ بِرَبِّكُمْ‌ ؕ قَالُوْا بَلٰى‌ ۛۚ شَهِدْنَا ‌ۛۚ اَنْ تَقُوْلُوْا يَوْمَ الْقِيٰمَةِ اِنَّا كُنَّا عَنْ هٰذَا غٰفِلِيْنَ ۙ‏ اَوْ تَقُوْلُوْۤا اِنَّمَاۤ اَشْرَكَ اٰبَآؤُنَا مِنْ قَبْلُ وَكُنَّا ذُرِّيَّةً مِّنْۢ بَعْدِهِمْ‌ۚ اَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُوْنَ‏
“ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். நான் உங்கள் இறைவன் அல்லவா?” (என்று கேட்டான்.) “ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறினர்.
இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்துவிட்டோம்‘ என்றோ, “இதற்குமுன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின்வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?’ என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.) 

(அல்குர்ஆன்: 7:172,173)

 وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ النَّبِيّٖنَ لَمَاۤ اٰتَيْتُكُمْ مِّنْ كِتٰبٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَـتُؤْمِنُنَّ بِهٖ وَلَـتَـنْصُرُنَّهٗ ‌ؕ قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلٰى ذٰ لِكُمْ اِصْرِىْ‌ؕ قَالُوْۤا اَقْرَرْنَا ‌ؕ قَالَ فَاشْهَدُوْا وَاَنَا مَعَكُمْ مِّنَ الشّٰهِدِيْنَ‏

“உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பிறகு உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?” என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து “இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்ட போது, “ஒப்புக் கொண்டோம்” என்று அவர்கள் கூறினர். “நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்” என்று அவன் கூறினான். 

(அல்குர்ஆன்: 3:81)

ஒருவருக்கொருவர் சாட்சியாக இருக்கும் மனிதர்கள்

இவ்வுலகில் வாழும் போது மனிதர்கள், தங்களது விருப்பு வெறுப்புகளுக்குத் தோதுவான குணம் கொண்டவர்களுடன் சேர்ந்து செயல்படுவதைப் பார்க்கிறோம். ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் சேர்ந்து நற்காரியங்களையோ அல்லது தீய காரியங்களையோ செய்கிறார்கள். பல்வேறு காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள். ஆதரவு தெரிவித்துக் கொள்கிறார்கள்.

இங்கே இப்படி இருக்கும் மனிதர்கள், மறுமை நாளில் மற்றவர்களுக்கு சாட்சிகளாக இருப்பார்கள். நாம் அனைவரும் பிறரைப் பற்றி தெரிந்து வைத்திருக்கும் செயல்களுக்கு சாட்சியம் செல்லும் நிலையில் நின்று கொண்டிருப்போம். இதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

இந்த வகையில், ஒவ்வொரு சமுதாயத்தாருடைய காரியங்களுக்கும் அவர்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் சாட்சியாளர்களாக இருப்பார்கள். தங்களுடைய சமுதாயத்தினர் செய்திருக்கும் காரியங்கள் தாங்கள் போதித்தவையா? இல்லையா? என்பதை அவர்கள் தெளிவுபடுத்துவார்கள். நபிமார்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தவர்கள் யார்? மாறு செய்து தட்டழிந்தவர்கள் யார்? என்பது அன்றைய தினம் வெட்ட வெளிச்சமாகிவிடும். இதற்குரிய சான்றுகளைக் காண்போம்.

 فَكَيْـفَ اِذَا جِئْـنَا مِنْ كُلِّ اُمَّةٍ ۭ بِشَهِيْدٍ وَّجِئْـنَا بِكَ عَلٰى هٰٓؤُلَاۤءِ شَهِيْدًا ؕ‏

(முஹம்மதே!) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சாட்சியை நாம் கொண்டு வந்து, இவர்களுக்கு எதிராக உம்மைச் சாட்சியாக நாம் கொண்டு வரும் போது (இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?

(அல்குர்ஆன்: 4:41,42)

 وَيَوْمَ نَـبْعَثُ فِىْ كُلِّ اُمَّةٍ شَهِيْدًا عَلَيْهِمْ مِّنْ اَنْفُسِهِمْ‌ وَجِئْنَا بِكَ شَهِيْدًا عَلٰى هٰٓؤُلَاۤءِ ‌ؕ 

(அது) ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிரான சாட்சியை நாம் நிறுத்தி, (முஹம்மதே!) உம்மை இவர்களுக்கு எதிரான சாட்சியாகக் கொண்டு வரும் நாள்!

(அல்குர்ஆன்: 16:89)

 وَاِنْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اِلَّا لَيُـؤْمِنَنَّ بِهٖ قَبْلَ مَوْتِهٖ‌ ۚ وَيَوْمَ الْقِيٰمَةِ يَكُوْنُ عَلَيْهِمْ شَهِيْدًا‌ ۚ‏

வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார்.

(அல்குர்ஆன்: 4:159)

(நபியவர்களின் பெரிய தந்தை) அபூதாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூஜஹ்ல் பின் ஹிஷாம், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம், “எனது பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) எனச் சொல்லி விடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சியம் கூறுவேன்”  எனக் கூறினார்கள்.

அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், “அபூதாலிபே‘ அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகின்றீரா?” எனக் கேட்டனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமுமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூதாலிப் கடைசியாக, “நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே (மரணிக்கின்றேன்)” என்று கூறியதோடு “லாஇலாஹ இல்லல்லாஹ்‘ எனக் கூறவும் மறுத்துவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோருவேன்” என்று கூறினார்கள்.

அப்போது “இணை வைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதன்று” எனும் (அல்குர்ஆன்: 9:13) ஆவது வசனத்தை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர்: முஸய்யிப் (ரலி)
நூல்: புகாரி-1360

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْمَعُ بَيْنَ الرَّجُلَيْنِ مِنْ قَتْلَى أُحُدٍ فِي ثَوْبٍ وَاحِدٍ، ثُمَّ يَقُولُ: «أَيُّهُمْ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ»، فَإِذَا أُشِيرَ لَهُ إِلَى أَحَدِهِمَا قَدَّمَهُ فِي اللَّحْدِ، وَقَالَ: «أَنَا شَهِيدٌ عَلَى هَؤُلاَءِ يَوْمَ القِيَامَةِ»، وَأَمَرَ بِدَفْنِهِمْ فِي دِمَائِهِمْ، وَلَمْ يُغَسَّلُوا، وَلَمْ يُصَلَّ عَلَيْهِمْ

நபி (ஸல்) அவர்கள், உஹுதுப் போரில் கொல்லப்பட்டவர்களில் இரண்டிரண்டு நபர்களை ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, “இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும் அந்த ஒருவரது உடலைக் கப்ரின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு, “இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாவேன்” எனக் கூறினார்கள்.

பின்பு இரத்தத்தோடே அடக்குமாறு பணித்தார்கள். இவர்கள் நீராட்டப்படவோ இவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவிக்கப்படவோ இல்லை.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி-1343 ,1353

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمًا، فَصَلَّى عَلَى أَهْلِ أُحُدٍ صَلاَتَهُ عَلَى المَيِّتِ، ثُمَّ انْصَرَفَ إِلَى المِنْبَرِ، فَقَالَ: «إِنِّي فَرَطٌ لَكُمْ، وَأَنَا شَهِيدٌ عَلَيْكُمْ، وَإِنِّي وَاللَّهِ لَأَنْظُرُ إِلَى حَوْضِي الآنَ، وَإِنِّي أُعْطِيتُ مَفَاتِيحَ خَزَائِنِ الأَرْضِ – أَوْ مَفَاتِيحَ الأَرْضِ – وَإِنِّي وَاللَّهِ مَا أَخَافُ عَلَيْكُمْ أَنْ تُشْرِكُوا بَعْدِي، وَلَكِنْ أَخَافُ عَلَيْكُمْ أَنْ تَنَافَسُوا فِيهَا»

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்ததைப் போன்று உஹுதுப்போர் உயிர்த் தியாகிகளுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவுமேடை (மிம்பர்)க்குத் திரும்பி வந்து, “(உங்களுக்கு முன்னேற்பாடுகளைச் செய்து வைப்பவனைப் போல்) நான் உங்களுக்கு முன்பே செல்கிறேன்.

நான் (அப்போது) உங்களுக்கு சாட்சியம் கூறுவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) எனது தடாகத்தைக் காண்கிறேன். மேலும், எனக்கு பூமியின் கருவூலங்களின் திறவுகோல்கள்‘ வழங்கப்பட்டுள்ளன. மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. எனினும் நீங்கள் உலகத்திற்காக ஒருவரோடொருவர் போட்டியிடுவீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: புகாரி-1344 

ஒருவர் நன்மையான மற்றும் தீமையான காரியங்களைச் செய்யும் போது மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் அடுத்தவர்களால் கவனிக்கப்டுகிறார்கள். இப்படியிருக்கும் மனிதர்கள், மறுமையில் அவர்கள் செய்த காரியங்களுக்கு சாட்சியாக இருப்பார்கள்.

இவர்கள் நல்லவிதமான காரியங்களைச் செய்தார்கள் என்று நல்லவர்கள், நல்லவர்களுக்கு சாட்சியம் சொல்வார்கள். இதுபோன்று குற்றவாளிகள் குற்றவாளிக்கு எதிராக நின்று, இவர்களே எங்களை வழிகெடுத்தார்கள் என்று கூறுவார்கள். இங்கு வாழும் போது வழிகேட்டில் இருந்து கொண்டு நேர்வழியில் இருப்போரின் செயல்களை வேடிக்கை பார்ப்பவர்கள், மறுமை நாளில்  இவர்கள் நல்ல காரியங்களை செய்து கொண்டிருந்தார்கள்; நாங்களோ அலட்சியமாக இருந்தோம் என்று ஆதங்கப்பட்டு நல்லவர்களுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிப்பார்கள் இந்த உண்மைகளை பின்வரும் ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது.

وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا‌ ؕ اُولٰٓٮِٕكَ يُعْرَضُوْنَ عَلٰى رَبِّهِمْ وَ يَقُوْلُ الْاَشْهَادُ هٰٓؤُلَاۤءِ الَّذِيْنَ كَذَبُوْا عَلٰى رَبِّهِمْ‌ ۚ اَلَا لَـعْنَةُ اللّٰهِ عَلَى الظّٰلِمِيْنَۙ‏

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அவர்கள் தமது இறைவன் முன்னே கொண்டு வரப்படுவார்கள். “இவர்களே தமது இறைவனின் பெயரால் பொய்யுரைத்தோர்” என்று சாட்சிகள் கூறுவார்கள். கவனத்தில் கொள்க! அநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது.

(அல்குர்ஆன்: 11:18)

فَاِنْ تَوَلَّوْا فَقُوْلُوا اشْهَدُوْا بِاَنَّا مُسْلِمُوْنَ‏

அவர்கள் (இந்த அழைப்பைப்) புறக்கணிப்பார்களாயின், “நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிபவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாயிருங்கள்” என்று (அவர்களிடம்) கூறிவிடுங்கள்.         

(அல்குர்ஆன்: 3:64)

ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் அல் மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன், அவர்களுடைய கையைப் பிடித்தபடி சென்று கொண்டிருந்த போது ஒரு மனிதர் குறுக்கிட்டு, “(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசியப் பேச்சு பற்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹு தஆலா முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து, அவன் மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி, “நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா? நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?’ என்று கேட்பான். அதற்கு அவன், “ஆம், என் இறைவா!‘ என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான்.

அந்த முஃமின், “நாம் இத்தோடு ஒழிந்தோம்‘ என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும் போது இறைவன், “இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன்‘ என்று கூறுவான். அப்போது அவனது நற்செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும்.

நிராகரிப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், “இவர்கள் தாம், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்கள் மீது இறைவனின் சாபம் உண்டாகும்‘ என்று கூறுவார்கள்‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-2441 , 4685

கழுத்தில் இருக்கும் பதிவேட்டின் சாட்சி

நமது நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக ஒரு முக்கியமான ஏற்பாட்டினை வல்ல இறைவன் ஏற்படுத்தி வைத்திருக்கிறான். நமது கழுத்தில் நமது செயல்பாடுகள் பற்றிய தகவல்களை சேமிக்கும் பொருளை வைத்திருக்கிறான். பார்ப்பது, நடப்பது, கேட்பது என்ற சகல செயல்பாடுகளும் அதிலே பதிவு செய்யப்படுகின்றன. மறுமை நாளில் ஒரு மாபெரும் ஏடாக அதை அல்லாஹ் கொண்டு வருவான்.

நாம் சொல்லும் வார்த்தையின் சத்தத்தை உள்வாங்கிக் கொண்டு அந்த வார்த்தையில் இருப்பதையெல்லாம் தேடித்தரும் மென்பொருள்களை மனிதனே உருவாக்கியிருக்கிறான். மனிதனுக்கே இந்த அறிவு இருக்கும் போது, அத்தகைய மனிதனை படைத்த இறைவன் இதற்குச் சக்தி பெற்றவன் என்பதில் நாம் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. இதற்குரிய ஆதாரத்தைக் காண்போம்.

 وَكُلَّ اِنْسَانٍ اَلْزَمْنٰهُ طٰۤٮِٕرَهٗ فِىْ عُنُقِهٖ‌ؕ وَنُخْرِجُ لَهٗ يَوْمَ الْقِيٰمَةِ كِتٰبًا يَّلْقٰٮهُ مَنْشُوْرًا‏
 اِقْرَاْ كِتٰبَك َؕ كَفٰى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيْبًا ؕ‏

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம். அதை விரிக்கப்பட்டதாக அவன் காண்பான். “உனது புத்தகத்தை நீ வாசி! உன்னைப் பற்றி கணக்கெடுக்க நீயே போதுமானவன்” (என்று கூறப்படும்).

(அல்குர்ஆன்: 17:13,14)

உடல் உறுப்புகளின் சாட்சி

நாம் செய்யும் செயல்கள் யாருக்கும் தெரியாது என்று பலரும் பல்வேறு காரியங்களில் ஈடுபடுகிறார்கள். திரை மறைவில் தைரியமாக தப்பும் தவறுமான காரியங்களில் இறங்குகிறார்கள். இத்தகையவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எந்தக் கை, கால்களை வைத்து தீயகாரியங்களைச் செய்கிறார்களோ அவை மறுமையில் தாங்கள் செய்த காரியங்களைப் பற்றி பேசும்.

உலகில் நாம் நினைப்பது போன்று பேசுவதற்கு நாவைப் பயன்படுத்துகிறோம். மறுமையிலோ நாக்கு உலகில் தான் பேசியவற்றை எல்லாம் வெளிப்படுத்தும். நாம் நல்ல காரியங்களைச் செய்தவர்களாக இருப்பின் நமது உடல்களும் நல்ல வகையில் சாட்சியமளிக்கும். கெட்ட காரியங்களை செய்திருப்பின் கெட்ட விதத்தில் சாட்சியமளிக்கும்.

நமது உடல் உறுப்புகள், இவர் குர்ஆன் படித்தார், பள்ளிவாசலுக்குச் சென்றார் என்று நல்ல செய்திகளைக் கூறவேண்டுமா? அல்லது இவர் புறம் பேசினார், புகை பிடித்தார் என்று தீய தகவல்களைத் தெரிவிக்க வேண்டுமா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

هٰذِهٖ جَهَنَّمُ الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ‏ اِصْلَوْهَا الْيَوْمَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ‏- اَلْيَوْمَ نَخْتِمُ عَلٰٓى اَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَاۤ اَيْدِيْهِمْ وَتَشْهَدُ اَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْن

இதுவே உங்களுக்கு எச்சரிக்கப்பட்ட நரகம். “நீங்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருந்ததால் இன்று இதில் கருகுங்கள்!” என்று கூறப்படும். இன்றைய தினம் அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும்.

(அல்குர்ஆன்: 36:63,65)

 يَّوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ اَلْسِنَـتُهُمْ وَاَيْدِيْهِمْ وَاَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ ‏- يَوْمَٮِٕذٍ يُّوَفِّيْهِمُ اللّٰهُ دِيْنَهُمُ الْحَـقَّ وَيَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ هُوَ الْحَـقُّ الْمُبِيْنُ

அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும். அன்றைய தினம் அவர்களது உண்மையான கூலியை அவர்களுக்கு அல்லாஹ் கொடுப்பான். அல்லாஹ் உண்மையானவன்; தெளிவு படுத்தக்கூடியவன் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

(அல்குர்ஆன்: 24:24,25)

 وَيَوْمَ يُحْشَرُ اَعْدَآءُ اللّٰهِ اِلَى النَّارِ فَهُمْ يُوْزَعُوْنَ‏
 حَتّٰٓى اِذَا مَا جَآءُوْهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَاَبْصَارُهُمْ وَجُلُوْدُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
 وَقَالُوْا لِجُلُوْدِهِمْ لِمَ شَهِدْتُّمْ عَلَيْنَا‌ ؕ قَالُوْۤا اَنْطَقَنَا اللّٰهُ الَّذِىْۤ اَنْطَقَ كُلَّ شَىْءٍ وَّهُوَ خَلَقَكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّاِلَيْهِ تُرْجَعُوْنَ‏
وَمَا كُنْتُمْ تَسْتَتِرُوْنَ اَنْ يَّشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَاۤ اَبْصَارُكُمْ وَلَا جُلُوْدُكُمْ وَلٰكِنْ ظَنَنْتُمْ اَنَّ اللّٰهَ لَا يَعْلَمُ كَثِيْرًا مِّمَّا تَعْمَلُوْنَ‏
 وَذٰلِكُمْ ظَنُّكُمُ الَّذِىْ ظَنَنْتُمْ بِرَبِّكُمْ اَرْدٰٮكُمْ فَاَصْبَحْتُمْ مِّنَ الْخٰسِرِيْنَ‏

அல்லாஹ்வின் பகைவர்கள் நரகை நோக்கித் திரட்டப்படும் நாளில் அவர்கள் வகைப்படுத்தப்படுவார்கள். முடிவில் அவர்கள் அங்கே வந்ததும் அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும், பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். “எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று அவர்கள் தமது தோல்களிடம் கேட்பார்கள்.

“ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்த அல்லாஹ்வே எங்களையும் பேசச் செய்தான். முதல் தடவை அவனே உங்களைப் படைத்தான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளீர்கள்!” என்று அவை கூறும். உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லை.

நீங்கள் செய்தவற்றில் அதிகமானவற்றை அல்லாஹ் அறிய மாட்டான் என்று நினைத்தீர்கள். இதுவே உங்கள் இறைவனைப் பற்றி உங்களது எண்ணம். அது உங்களை அழித்து விட்டது. எனவே நஷ்டமடைந்தோரில் ஆகிவிட்டீர்கள்.

(அல்குர்ஆன்: 41:19-23)

اجْتَمَعَ عِنْدَ البَيْتِ قُرَشِيَّانِ وَثَقَفِيٌّ – أَوْ ثَقَفِيَّانِ وَقُرَشِيٌّ – كَثِيرَةٌ شَحْمُ بُطُونِهِمْ، قَلِيلَةٌ فِقْهُ قُلُوبِهِمْ، فَقَالَ أَحَدُهُمْ: أَتُرَوْنَ أَنَّ اللَّهَ يَسْمَعُ مَا نَقُولُ؟ قَالَ الآخَرُ: يَسْمَعُ إِنْ جَهَرْنَا وَلاَ يَسْمَعُ إِنْ أَخْفَيْنَا، وَقَالَ الآخَرُ: إِنْ كَانَ يَسْمَعُ إِذَا جَهَرْنَا فَإِنَّهُ يَسْمَعُ إِذَا أَخْفَيْنَا، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَمَا كُنْتُمْ تَسْتَتِرُونَ أَنْ يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلاَ أَبْصَارُكُمْ وَلاَ جُلُودُكُمْ} [فصلت: 22] الآيَةَ

இறையில்லம் (கஅபாவிற்கு) அருகில் குறைஷியரில் இருவரும் ஸகஃபியரில் ஒருவரும் (ஆக மூன்று பேர் ஓரிடத்தில்) ஒன்றுகூடினர். அவர்களின் வயிறுகளில் கொழுப்பு நிறைய இருந்தது. இதயங்களில் சிந்தனை குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், “நாம் பேசுவதை அல்லாஹ் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?” என்று கேட்டார். மற்றொருவர், “நாம் சப்தமாகப் பேசினால் அவன் கேட்கின்றான். நாம் இரகசியமாகப் பேசினால் அவன் கேட்பதில்லை” என்று பதிலளித்தார்.

(அவர்களில்) இன்னும் ஒருவர், “நாம் சப்தமிட்டுப் பேசும்போது அவன் கேட்பானெனில் நாம் இரகசியமாகப் பேசும் போதும் அவன் கேட்கத்தான் செய்வான்” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ், “உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லை” எனும் வசனங்களை (அல்குர்ஆன்: 41:22) அருளினான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி-4817 

ஜின்களின் சாட்சி

மனித இனத்தைப் போன்று ஜின் எனும் இனமும் படைக்கப்பட்டுள்ளது. மனிதர்களைக் காட்டிலும் வலிமையான படைப்பினமான ஜின்கள் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஜின்களை நாம் பார்க்க முடியாவிட்டாலும் அவர்கள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நமது செயல்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் நினைத்தால் நமது காரியங்கள் எப்படி இருந்தது என்பதற்கு நம்மைப் பற்றியறிந்த ஜின்களையும் சாட்சிகளாகக் கொண்டு வருவான் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதைப் பின்வரும் செய்தியை கவனிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

إِنِّي أَرَاكَ تُحِبُّ الغَنَمَ وَالبَادِيَةَ، فَإِذَا كُنْتَ فِي غَنَمِكَ، أَوْ بَادِيَتِكَ، فَأَذَّنْتَ بِالصَّلاَةِ فَارْفَعْ صَوْتَكَ بِالنِّدَاءِ، فَإِنَّهُ: «لاَ يَسْمَعُ مَدَى صَوْتِ المُؤَذِّنِ، جِنٌّ وَلاَ إِنْسٌ وَلاَ شَيْءٌ، إِلَّا شَهِدَ لَهُ يَوْمَ القِيَامَةِ»، قَالَ أَبُو سَعِيدٍ: سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூசயித் அல்குத்ரீ (ரலி) அவர்கள் என்னிடம் “நீங்கள் ஆடுகளையும் (அவற்றை மேய்த்திட) பாலைவனத்தையும் நேசிப்பதை நான் பார்க்கின்றேன். நீங்கள் உங்கள் ஆடுகளுடன் இருக்கும்போது தொழுகைக்காக பாங்கு சொன்னால் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், பாங்கு சொல்பவரின் குரலை வழிநெடுகிலும் கேட்கின்ற ஜின்னாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் அவர்கள் அவருக்காக மறுமைநாளில் நிச்சயம் சாட்சியம் அளிப்பார்கள்” என்று சொல்லிவிட்டு, “இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்” என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி-609 , 7548

உயிரற்ற பொருட்களின் சாட்சி

மறுமை நாளில், ஒருவர் செய்த காரியத்தை நிரூபிப்பதற்கு அவர் அந்தக் காரியத்தை செய்வதற்குப் பயன்படுத்திய பொருட்களே போதுமானதாக இருக்கும். இவ்வாறு நல்லவர்களும் கெட்டவர்களும் பயன்படுத்தும் பொருட்களை தேவைப்படின் அவற்றையும் சாட்சியாகக் கொண்டுவரும் ஆற்றல் அல்லாஹ்விற்கு இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒருவர் திருடினார் என்பதற்கு அவர் திருடிய பொருளை இறைவன் நாடினால் சாட்சியாகக் கொண்டுவருவான்.

ஒருவர் மார்க்கத்தை மக்களுக்குச் சொன்னார் என்பதற்கு அவர் அதற்குப் பயன்படுத்திய மைக்கையோ, எழுதுகோலையோ கூட சாட்சியாகக் கொண்டுவர முடியும். இதை விளங்கிய பிறகாவது நமது செயல்களை நாம் சீர்திருத்திக் கொள்ள வேண்டும்.

اَقِمِ الصَّلٰوةَ لِدُلُوْكِ الشَّمْسِ اِلٰى غَسَقِ الَّيْلِ وَقُرْاٰنَ الْـفَجْرِ‌ؕ اِنَّ قُرْاٰنَ الْـفَجْرِ كَانَ مَشْهُوْدًا‏

சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள் சூழும் வரையில் தொழுகையையும் பஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலை நாட்டுவீராக! பஜ்ரு (தொழுகையின்) குர்ஆன் சாட்சி கூறப்படுவதாக இருக்கிறது.

(அல்குர்ஆன்: 17:78)

إِنِّي أَرَاكَ تُحِبُّ الغَنَمَ وَالبَادِيَةَ، فَإِذَا كُنْتَ فِي غَنَمِكَ وَبَادِيَتِكَ، فَأَذَّنْتَ بِالصَّلاَةِ، فَارْفَعْ صَوْتَكَ بِالنِّدَاءِ، فَإِنَّهُ «لاَ يَسْمَعُ مَدَى صَوْتِ المُؤَذِّنِ جِنٌّ وَلاَ إِنْسٌ وَلاَ شَيْءٌ إِلَّا شَهِدَ لَهُ يَوْمَ القِيَامَةِ»

அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் என்னிடம், “ஆட்டையும் பாலைவனத்தையும் விரும்புபவராக உங்களை நான் காண்கிறேன். நீங்கள் ஆட்டை மேய்த்துக் கொண்டோ, அல்லது பாலைவனத்திலோ இருக்க (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகைக்காக அழைப்புக் கொடுப்பீர்களாயின் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள்.

ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒலிக்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும், பிற பொருள்களும் அதைக் கேட்டு அவருக்காக மறுமை நாளில் சாட்சி சொல்கின்றன” என்று கூறிவிட்டு, “இதை நான் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து கேட்டேன்” என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி-3296 

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போதவர்கள் “என் வாழ்விற்குப் பின், உங்களுக்கிடையே உலகவளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்” எனக் கூறினார்கள். 

ஒருவர் “அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையை உருவாக்குமா?” எனக்கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் மௌனமாகிவிட்டார்கள். உடனே அந்த நபரிடம், ” என்ன ஆனது உமது நிலைமை? நீர் நபி (ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால் நபி (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!” எனக் கேட்கப்பட்டது. நாங்கள் நபி(ஸல்)  அவர்களுக்கு வஹீ அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்துவிட்டு, “கேள்வி கேட்டவர் எங்கே?” என அவரைப் பாராட்டுவது போன்று கேட்டார்கள்.

பிறகு, “நன்மையானது தீமையை உருவாக்காது தான்; நிச்சயமாக, நீர்நிலைகளின் கரைகளில் விளைகின்ற தாவரங்களில் சில, (தம் நச்சுத் தன்மையால் அவற்றை மேய்கின்ற) கால்நடைகளைக் கொன்றுவிடுகின்றன; அல்லது மரணத்தின் விளிம்புக்கே (அவற்றைக்) கொண்டு போகின்றன;  பசுமையான (நல்ல வகைத்) தாவரங்களைத் தின்பவற்றைத் தவிர! அவற்றைக் கால்நடைகள் வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்குகின்றன. மேலும் சாணம் போட்டு, சிறுநீர் கழித்து மீண்டும் மேய்கின்றன.

(இது போலவே உலகிலுள்ள) இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே ஒரு முஸ்லிம், தன்செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கின்றானோ அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சியம் சொல்லும்” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி-1465 , 2842

«الطُّهُورُ شَطْرُ الْإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ، وَسُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَآَنِ – أَوْ تَمْلَأُ – مَا بَيْنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، وَالصَّلَاةُ نُورٌ، وَالصَّدَقَةُ بُرْهَانٌ وَالصَّبْرُ ضِيَاءٌ، وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ، كُلُّ النَّاسِ يَغْدُو فَبَايِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا»

தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். “அல்ஹம்துலில்லாஹ்‘ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். “சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி‘ (அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக் கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். தொழுகை (வழிகாட்டும்) ஒளியாகும். தான தர்மம் சான்றாகும்.

பொறுமை ஒரு வெளிச்சமாகும். குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக் கொள்கின்றனர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)
நூல்: முஸ்லிம்-381 

اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ، اقْرَءُوا الزَّهْرَاوَيْنِ الْبَقَرَةَ، وَسُورَةَ آلِ عِمْرَانَ، فَإِنَّهُمَا تَأْتِيَانِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُمَا غَمَامَتَانِ، أَوْ كَأَنَّهُمَا غَيَايَتَانِ، أَوْ كَأَنَّهُمَا فِرْقَانِ مِنْ طَيْرٍ صَوَافَّ، تُحَاجَّانِ عَنْ أَصْحَابِهِمَا، اقْرَءُوا سُورَةَ الْبَقَرَةِ، فَإِنَّ أَخْذَهَا بَرَكَةٌ، وَتَرْكَهَا حَسْرَةٌ، وَلَا تَسْتَطِيعُهَا الْبَطَلَةُ

குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில், குர்ஆனை ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான “அல்பகரா‘ மற்றும் “ஆலு இம்ரான்‘ ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதி வாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல் தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். “அல்பகரா‘ அத்தியாயத்தை ஓதி வாருங்கள்.

அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கைவிடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்துபோவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர்: அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி)
நூல்: முஸ்லிம்-1470

ஒவ்வொரு மனிதனுக்கும் இத்தனை சாட்சிகளை இறைவன் கண்டிப்பாகக் கொண்டு வருவான் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. நல்ல விதமான காரியங்களைச் செய்த ஒருவர் தமக்கு வழங்கப்படும் கூலி சரியானதுதான் என்று ஏற்றுக்கொள்வதற்கு எத்தனை சாட்சிகள் தேவைப்படுமோ அந்தளவிற்கு இறைவன் சாட்சிகளைக் கொண்டு வருவான்.

அதுபோன்று கெட்ட செயல்களைச் செய்த ஒருவர் தமக்குக் கொடுக்கப்படும் தண்டனை நியாயமானதுதான் என்று ஏற்றுக்கொள்வதற்கு எத்தனை சாட்சிகள் தேவைப்படுமோ அதற்குரிய வகையில் அவன் சாட்சிகளை ஏற்படுத்துவான். சிலருக்கு ஒரு சாட்சியே போதுமானதாக இருக்கும். சிலருக்கு இரு சாட்சிகள் தேவைப்படலாம்.

இவ்வாறு மறுமை நாளில் நமது செயல்களுக்கு சான்றுகள், சாட்சிகள், ஆதாரங்கள் இருக்கும் என்று மார்க்கம் சுட்டிக் காட்டுவதற்கும் நோக்கம் இருக்கிறது. நல்ல காரியங்களைச் செய்பவர்கள் நமது செயல்களுக்குத் தக்க வெகுமதிகள் கிடைக்காதோ என்று தவறுதலாக நினைத்து தளர்ந்து விடக்கூடாது.

கெட்டவர்கள் எவரும் நம்மை எதுவும் செய்ய முடியாது என்று தைரியமாக இருந்துவிடாது. ஒவ்வொரு நேரத்திலும் நாம் கவனிக்கப்படுகிறோம்; நம்மைச் சுற்றி சாட்சிகள் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதைக் கவனத்தில் கொண்டு நல்ல முறையில் செயல்பட்டு மறுமையில் மகத்தான வெற்றி பெறுவதற்கு இறைவன் நமக்கு அருள்புரிவானாக!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.