Tamil Bayan Points

2) மவ்லிதின் தோற்றம்

நூல்கள்: சுப்ஹான மவ்லித் ஓர் ஆய்வு

Last Updated on December 17, 2019 by Trichy Farook

மவ்லிதின் தோற்றம்

எந்த ஒரு காரியமும் வணக்கமாகக் கருதப்பட வேண்டுமானால் – அதைச் செய்வதால் மறுமையில் ஏதேனும் நன்மை கிடைக்கும் என்று நம்ப வேண்டுமானால் – அந்தக் காரியம் நபிகள் நாயகம் ஸல் அவர்களால் கற்றுத்தரப்பட்டிருக்க வேண்டும். அல்லது அவர்கள் முன்னிலையில் அக்காரியம் நிகழ்ந்து அதை அவர்கள் அங்கீகரித்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத எந்தக் காரியமும் ஒரு வணக்கமாக – மறுமையில் நன்மையளிப்பதாக ஆக முடியாது. இது இஸ்லாத்தின் அடிப்படை விதி.

இந்த விதியைப் புரிந்து கொள்வதற்கு மிகப் பெரிய ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை. ‘நபிகள் நாயகம் ஸல் அவர்களைத் தனது இறுதித் தூதராக அல்லாஹ் அனுப்பி வைத்தான். அவர்கள் வழியாக முஸ்லிம்கள் செய்ய வேண்டிய அனைத்து வணக்கங்களையும் கற்றுத் தந்தான். அவர்களுக்குப் பின் எவருக்கும் வஹீ – இறைச் செய்தி – வர முடியாது’ என்ற அடிப்படைக் கொள்கையை விளங்கியிருந்தால் போதும். இந்த விதியைப் புரிந்து கொள்ள முடியும்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குப் பின் ஒரு வணக்கத்தை மற்றவர்களும் உருவாக்கலாம் என்று யாரேனும் கருதினால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வணக்கங்களை முழுமையாகக் கற்றுத் தரவில்லை என்று அவர் கருதுகிறார். நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குப் பின் மற்றவர்களுக்கும் வஹீ வரக்கூடும் என்றும் அவர் கருதியவராகிறார்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். அல்குர்ஆன் 5:3

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே இம்மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டதாக அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் கூறுகின்றான்.

மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்றால் என்ன பொருள்? அல்லாஹ்வே முழுமைப்படுத்தி விட்டான் என்று கூறினால் அதற்கு என்ன பொருள்?

‘மார்க்கத்தில் எவையெல்லாம் உள்ளனவோ அவை ஒவ்வொன்றையும் நான் கூறி விட்டேன்; புதிதாக எதையும் உருவாக்கிட அவசியமில்லை; அது கூடாது’ என்பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க முடியாது.

நபிகள் நாயகம் ஸல் காலத்தில் இந்த மவ்லிதுகள் இருக்கவில்லை; அல்லாஹ்வால் நேரடியாக முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் மவ்லிதுகள் இருக்கவில்லை என்பதே மவ்லிதுகளை நிராகரிக்கப் போதுமான காரணமாகவுள்ளது.

‘நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்’ என நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா ரலி), நூல்: முஸ்லிம் 3243

‘நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்’ எனவும் நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷாரலி), நூல்கள்: புகாரி 2697, முஸ்லிம் 3242.

மேற்கண்ட இரண்டு நபிமொழிகளும் கூறுவது என்ன?

நாம் எந்த ஒரு அமலை நல்லறத்தைச் செய்வதாக இருந்தாலும் அது பற்றி நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஏதும் கட்டளை பிறப்பித் திருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். அவர்களது கட்டளையில்லாமல் எந்த ஒரு அமலைச் செய்தாலும் அது அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும் என்பதைத் தான் மேற்கண்ட நபிமொழிகள் கூறுகின்றன.

மவ்லிது ஓதுமாறு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்காதது மவ்லிதை நிராகரிக்க மற்றொரு காரணமாக அமைகின்றது.

‘செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் சிறந்தது முஹம்மதுடைய வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்’ என்று நபிகள் நாயகம் ஸல் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலி), நூல்: முஸ்லிம் 1435

‘செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் அனாச்சாரம் ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்’ எனவும் நபிகள் நாயகம் ஸல் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலி), நூல்: நஸயீ 1560

இவ்விரண்டு நபிமொழிகளும் கூறுவது என்னவென்பதை முஸ்லிம்கள் கவனமாகச் சிந்திக்க வேண்டும்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குப் பின்னால் புதிதாக உருவாக்கப்பட்டவை

நி மிகவும் மிகவும் கெட்ட காரியம்.

நி வழிகேடு.

நி நரகத்தில் சேர்க்கும்

என்றெல்லாம் கடும் எச்சரிக்கை இதில் உள்ளது. நபிகள் நாயகம் ஸல் காலத்துக்கு ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட இந்த மவ்லிதுகளால் நன்மை ஏதும் விளையாது என்பது ஒருபுறமிருக்க இதனால் நரகத்திற்குச் செல்லும் நிலை தான் ஏற்படும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அல்லாஹ்வும், நபிகள் நாயகம் ஸல் அவர்களும் மவ்லிது ஓதுமாறு கூறவில்லையென்றால் பிறகு எப்படி மவ்லிது’ என்பது ஒரு வணக்கமாக முஸ்லிம் சமுதாயத்தில் நிலைபெற்றது?