Tamil Bayan Points

வந்தே மாதரம் வந்த வரலாறு

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on December 17, 2020 by

வந்தே மாதரம் வந்த வரலாறு

வந்தேமாதரம் தொடர்பாக விடுதலை இதழில் ஓர் ஆக்கம் வெளியானது. அதை உங்கள் பார்வைக்குத் தருகின்றோம். இது வந்தேமாதரம் வந்த வரலாற்றுப் பிண்ணனியைத் தெரிவிக்கின்றது.

“வந்தேமாதரம்!”  வாழ்த்துப்பாடலா?

– கவிஞர் கலி.பூங்குன்றன்

உத்திரப்பிரதேச மாநிலம் ஜாமியத் உலாமா இ ஹிந்த் என்னும் இசுலாமியர்களின் அமைப்பு மூன்று நாள் மாநாட்டினை டியோ பாண்ட் எனும் இடத்தில் நடத்தி, ‘வந்தே மாதரம்’ பாடலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது. அப்பாடல் இசுலாத்துக்கு எதிரானது என்றும் தீர்மானம் கூறியது.

அம்மாநாட்டில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி போன்றவர்கள் பங்கு கொண்டனர்.

‘வந்தே மாதரம்’ பாடல் தேசபக்திப் பாடல் என்றும், தாய்நாட்டை வணங்குகிறோம் என்பது பொருள் என்றும், அதனை எதிர்த்துத் தீர்மானம் போட்ட மாநாட்டில் எப்படி உள்துறை அமைச்சர் சிதம்பரம் பங்கேற்கலாம் என்றும் பாரதீய ஜனதா உள்ளிட்ட சங்பரிவாரக் கூடாரம் கூச்சல் போடுகிறது.

“வந்தே மாதரம்” பாடல் என்பது என்ன?

ஒரு தேசபக்திப் பாடலை இசுலாமியர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? அப்படியென்றால் இசுலாமியர்களுக்குத் தேசபக்தி இல்லையா? சங்பரிவார் வகையறாக்கள் கூறி வருவது மெய்தானோ என்ற ஐயப்பாடு மக்கள் மத்தியில் நிலவுதல் இயற்கையே!

அந்தப் பாடல் எங்கிருந்து வந்தது? அதனை எழுதியவர் யார்? அதன் உள்ளடக்கம் என்ன? என்பதுதான் முக்கியமாகும். வங்காளத்தில் கண்டபுரத்தில் 1838ஆம் ஆண்டில் பிறந்து 1894ல் மரணமுற்ற பங்கிம் சந்திர சட்டர்ஜி என்னும் பார்ப்பனரால் வங்கமொழியில் எழுதப்பட்ட ‘ஆனந்தமடம்’ எனும் நாவலில் இடம் பெற்ற பாடலே இந்த “வந்தே மாதரம்”

இசுலாமியர்களுக்கு இந்தப் பாடலின் மீது என்ன வெறுப்பு?

ஆனந்த மடம் நாவலில் காணப்படும் கதையம்சமும், உரையாடலும் இசுலாமியர்களுக்கு விரோதமானவை என்கிற அளவில் மட்டுமல்ல; அவர்களை நாட்டை விட்டே துரத்தியடிக்க வேண்டும் என்கிற உணர்வுதான் இந்த நாவலின் அடி நாதமாகும்.

நாவலின் கதை நாயகன் பவாநந்தன் வங்காள முசுலிம் அரசனின் ஆட்சியைக் கவிழ்க்கப் படை திரட்டுகிறான். மகேந்திரன் என்ற ஒருவனைச் சந்தித்து தமது படையில் சேருமாறு அழைக்கின்றான். தாய்நாட்டை முசுலிம்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கூறுகிறான். ஏன் முசுலிம் மன்னனின் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும்? மகேந்திரனின் கேள்வி இது.

நமது மதம் போச்சு, நமது வருணாசிரம தருமம் போச்சு. ஏன், இப்பொழுது நமது உயிருக்குக்கூட ஆபத்து வந்து விட்டது. இந்த முசுலிம்களை விரட்டாவிட்டால் நமது இந்து மதத்தைக் காப்பாற்றவே முடியாது! என்றெல்லாம் வீராவேசம் பேசுகிறான்.

உன் ஒருவனால் இதனைச் சாதிக்க முடியுமா? மீண்டும் மகேந்திரனின் வினா இது. பவாநந்தன் பேசுகிறான். “வந்தே மாதரம்” பாடலிலிருந்து சில வரிகளை மட்டும் கம்பீரமாகப் பாடுகிறான். அதற்கு விளக்கமும் கூறுகிறான். “ஏழு கோடி தொண்டைகள் முழங்கும்போது, 14 கோடி கைகள் கூரிய வாளேந்தி நிற்கும்போது, பாரத மாதா பலவீனமானவள் என்று நீ நினைக்கிறாயா?” என்பதுதான் அந்தப் பாடல் வரிகளின் பொருள்.

மகேந்திரன் மசியவில்லை. முசுலிம்களின் வீரத்தையும், படைபலத்தையும் எடுத்துக் கூறுகிறான். விடவில்லை பவா நந்தன்.

“முசுலிம்களா? அவர்கள் பயங்காளிகள், கடைந்தெடுத்த கோழைகள். உயிருக்கு ஆபத்து நேரும்போது, ஆங்கிலேயர்கள் போர்க்களத்திலிருந்து ஓடிவிட மாட்டார்கள். ஆனால் வியர்வை வடியத் தொடங்கும்போது முசுலிம்கள் பயந்து ஓடி விடுவார்கள். எங்காவது ஒரு மூலையில் வெடிகுண்டு விழுந்தால் போதும், முசுலிம்கள் எல்லாம் விழுந்தடித்துக் கொண்டு ஓடி விடுவார்கள்!’’ என்கிறான் கதை நாயகன் பவாநந்தன். ஆனாலும் மகேந்திரன் அவன் விரித்த வலையில் வீழ்ந்தான் இல்லை.

முயற்சியைக் கைவிடவில்லை – அந்த முசுலிம் எதிரி. மறுநாள் என்ன செய்கிறான்? ஆனந்த மட ஆலயத்துக்கு அழைத்துச் செல்லுகிறான். ஒரு விஷ்ணுவின் விக்கிரகம், அந்த விக்கிரகத்தின் மடியில் ஒரு தேவியின் உருவம்!

“யார் அந்தத் தேவி?” என்று கேட்கிறான் மகேந்திரன். “ஆ! அவள்தான் நம் பாரத மாதா. நாமெல்லோரும் அந்தப் பாரத மாதாவின் புத்திரர்கள்” என்கிறான் கோயில் பூசாரி.

அடுத்து ஒரு காட்சி… “ஜெகத்தாத்ரி” எனும் ஒளிமயமாகக் காட்சியளிக்கும் ஒரு சிலை காட்டப்படுகிறது.

ஆதியிலே நமது பாரத மாதா இப்படித் தான் ஜெகஜோதியாகக் காணப்பட்டாள். இப்பொழுது எப்படியிருக்கிறாள் தெரியுமா? இதோ ஒரு காட்சி! நிர்வாணமாகக் காட்சியளிக்கும் ஒரு கருங்காளி. யார் இவள்? கேட்கிறான் மகேந்திரன்.

“அன்று ஜெகஜோதியாகக் காட்சியளித்த நமது பாரத மாதா இப்போழுது இந்த அலங்கோலத்திற்கு ஆளானாள்” என்று கூறுகிறான்.

மூன்றாவது ஒரு காட்சி: பத்து கரங்களுடைய துர்க்காதேவி! “நமது எதிரிகள் முசுலிம்கள் முற்றாக ஒழிக்கப்பட்டால் நமது அன்னை பாரததேவி இந்தக் கண் கொள்ளாக் காட்சியைத் தருவாள்” என்றான் ஆனந்தமட பூசாரி.

அதோடு விடவில்லை. மூளையில் காவி சாயத்தை ஏற்ற வேண்டுமே! லட்சுமி, சரஸ்வதி விக்கிரகங்களையும் மகேந்திரனுக்குக் காட்டி, “பத்துக் கரங்களையுடைய துர்க்காவே! தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் லட்சுமி தேவியே! கல்வித் தாயான சரஸ்வதியே! போற்றி! போற்றி!!” என பூசாரி புளகாங்கிதமாகப் பாடி ஆனந்தத் தாண்டவமே ஆடுகிறான்.

இவ்வளவு வரைதான் தாக்குப்பிடிக்க முடிந்தது மகேந்திரனால். ஆம்! தடுமாறி விடுகிறான் பவாநந்தன் விரித்த வலையிலே முற்றிலுமாக சரணாகதி அடைந்து விடுகிறான்.

படைக்கு ஆட்கள் திரட்டப்படுகிறார்கள். திரட்டப்படுபவர்கள் ஒவ்வொருவரும் சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக உற்றார் உறவினரை மறந்து, உயிர்த்தியாகம் செய்யக்கூடத் தயார் என்று சபதம் எடுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் அவர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

அந்தப் ‘புரட்சிக்காரர்கள்’ அனுப்பப்பட்ட கிராமப் பகுதிகளில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்களாம்?

பங்கிம் சந்திர சட்டர்ஜி, ஆனந்தமடம் நாவலில் இப்படி வருணிக்கிறார்:

“சகோதரரே! விஷ்ணுவை வணங்க வருகிறாயா? என இளைஞர்களைத் திரட்டிச் முசுலிம் கிராமங்களுக்குச் சென்று தீயிடுவார்கள். முசுலிம்கள் நாலா திசைகளிலும் ஓடி உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள். முசுலிம்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. கொள்ளையடிக்கப்படும் பொருள்கள் விஷ்ணு பக்தர்களுக்குக் காணிக்கையாக்கப்படுகின்றன. பொருள்கள் கிடைக்கக் கிடைக்க இந்தப் படையில் தாங்களும் சேர்ந்து கொள்வதாக பலரும் முன் வருகிறார்கள்.

ஆனந்த மடம் நாவல், எட்டாம் அத்தியாயத்தில் ஒரு கிராமக் கொள்ளையைப் பற்றி சொல்கிறது.

“திடீரென ஒரு முழக்கம். முஸ்லிம்களைக் கொல்லு! கொல்லு! என ஒரே ஆர்ப்பரிப்பு! வந்தே மாதரம்” என்ற பாடல் பீறிட்டுக் கிளம்புகிறது.

அடுத்து ஒரு குரல் “சகோதரர்களே! மசூதிகளையெல்லாம் தரை மட்டமாக்கி, அந்த இடத்திலே ராதா மாதவர் ஆலயத்தைக் கட்டும் நாள் விரைவில் வரும்!” என்று பிரசங்கம்.

“வந்தே மாதரம்” பாடலின் தாத்பரியமும் பின்புலமும் இதுதான்.

ஆனந்த மடம் நாவலின் நடுநாயகமான வந்தே மாதரம் பாடலினை முசுலிம்கள் கடுமையாக எதிர்ப்பதன் நியாயம் இப்பொழுது புரிந்திருக்க வேண்டுமே!

ஒரு கால கட்டத்தில் இந்த வந்தே மாதரத்தைத் தூக்கிப் பிடித்தது காங்கிரசு! அப்பொழுது காங்கிரசு என்றாலே, பார்ப்பன தர்பார்தானே! அன்றைய பா.ஜ.க. சங்பரிவார் என்றுகூட அதனைச் சொல்ல முடியும்.

பாரதியார் கூட வந்தே மாதரத்துக்கு வக்காலத்து வாங்கியவர்தான்!

நொந்தே போயினும்

வெந்தே மாயினும்

நந்தேசத்தவர்

உவந்து சொல்வது

வந்தே மாதரம்

பாரதியைத் தொற்றிப் பிடித்த பார்ப்பன வாடைக்கு இந்த ஒருசோறு பதம்போதும்.

சட்டமன்றங்களில் என்ன நடந்தது?

1937-இல், ஒரிசா சட்டப் பேரவையில், “வந்தே மாதரம்” தேசிய கீதமாகப் பாடப்பட்டது. சில அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை. அமர்ந்தேயிருந்தனர். இது சட்டப் பேரவைத் தலைவரிடமும் முறையிடப்பட்டது. தேசிய கீதம் பாடும்போது உட்கார்ந்திருப்பதும் எழுந்திருப்பதும் அவரவர்களின் விருப்பம் என்று கூறிக் கழன்று கொண்டு விட்டார் சபாநாயகர்.

ஒரிசாவில் மட்டுமல்ல! அதே காலகட்டத்தில் (1938-ல்) சென்னை மாநிலத்தில் என்ன நடந்தது? சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அப்பொழுது பிரதமர். (அப்பொழுது பிரதமர் என்றுதான் பெயர்)

சட்டப் பேரவைத் தலைவராக இருந்தவர் ஆந்திரப் பகுதி – கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த புலுசு சாம்பமூர்த்தி என்ற வழக்குரைஞர். இவர் சுதந்திரப் போராட்டத்துக்காக அத்தொழிலை உதறி எறிந்தவர் – மேல் சட்டை கூட அணியாதவர்.

வந்தேமாதரம் பாடலை சட்டமன்றம் தொடங்கப்படும் போது பாடச் செய்ய வேண்டும் என்பது அவரின் ஆசை! ஆசை நிறைவேற்றப்பட்டது. முசுலிம் லீக் உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள்.

வறட்டுத்தனமாகக் கூச்சல் போடவில்லை அவர்கள்; வளமான காரணத்தையும் எடுத்துக் கூறினார்கள். இந்துக் கடவுள்களைப் போற்றித் துதிக்கும் ஒரு பாடலை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்க் கேள்வி வைத்தார்கள்.

பார்வதி, இலட்சுமி, சரஸ்வதி ஆகிய இந்து மத முத்தேவிகளும் அப்பாடலில் துதிக்கப்படுகிறார்கள். எனவேதான் இந்த எதிர்ப்பு. குல்லுகப்பட்டர் ஆச்சாரியார் (ராஜாஜி) பிரதம அமைச்சர் ஆயிற்றே! இதற்கு ஏதாவது ஓரு வழி செய்ய வேண்டாமா? அப்படி செய்யாவிட்டால் அவர் எப்படி ராஜாதந்திரியாவார்?

சபை அலுவல் தொடங்கும் நேரம் காலை 11.00 மணி; இதற்கு முன்னதாக “வந்தே மாதரம்” பாடிவிடலாம்; மற்றவர்கள் இதற்குப் பின் சபைக்கு வரலாம் என்பது தான் அந்த சமாதான நடவடிக்கை. இன்னொன்றையும் கூட அவர் சேர்த்துக் கூறினார்: வேண்டுமானால் வந்தே மாதரத்துடன் மற்ற மதத்துப் பாடல்களையும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம் என்று நரியை நனையாமல் குளிப்பாட்டப் பார்த்தார்.

ஆனால் முசுலிம்களிடம் அந்தப் பருப்பு வேகவில்லை. சட்டமன்றத்தில் குறிப்பிட்ட மதத்தின் கடவுள்கள் பெயரில் பாடல் இடம் பெறக் கூடாது என்பதிலே மிக உறுதியாக இருந்தார்கள். வேறு வழியில்லை, வந்தே மாதரம், கைவிடப்பட்டது. கெஞ்சினால் மிஞ்சுவார்கள். மிஞ்சினால் கெஞ்சக் கூடியவர்களாயிற்றே பார்ப்பனர்கள்.

72 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தப் பிரச்சனை தலைதூக்கி நிற்கிறது.

சவுத்துப்போய்க் கிடக்கும் சங்பரிவாரக் கூடாரம் இதனைத் தூக்கிப்பிடித்து உயிர் தப்பித்துக் கொள்ளலாமா என்று முண்டிப் பார்க்கிறது. இது ஏதோ குறிப்பிட்ட முசுலிம்களின் பிரச்சினை மட்டுமல்ல. மதச்சார்பற்ற சக்திகளின் மகத்தான பிரச்சினையாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்திலே உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார்பின்மையைக் காப்பாற்றித் தீர வேண்டிய பிரச்சினையும் கூட!

பார்ப்பனியத்தின் நிலைப்பாடு என்ன?

சங்பரிவார் என்பது ஒரு முகமூடி; அதனுள் உறைந்திருப்பது பங்கிம் சந்திர சட்டர்ஜி என்னும் பார்ப்பனியம். அதற்குள் பதுங்கிக் கிடப்பது ‘ஆனந்த மடங்கள்’ என்பதை மறந்துவிடக் கூடாது.

முசுலிம் மசூதிகளை இடியுங்கள்! அந்த இடத்திலே ராதா மாதவரின் ஆலயத்தைக் கட்டுங்கள்! என்று ‘ஆனந்தமடம்’ நாவலில் கேட்ட அதே சூளுரையைத் தானே 1992 டிசம்பரில் அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பின் போது கேட்டோம்.

அன்றைக்கு “வந்தே மாதரம்” பாட வேண்டும் என்று வலியுறுத்திய அதே குரலைத்தான் பாரதிய ஜனதா ஆட்சியின் போது, கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் ‘சரஸ்வதி வந்தனா’ பாடவேண்டும் என்ற குரலாக ஒலித்தது. காலம் மாறலாம்; ஆனால் காவிகளின் பார்ப்பனியத்தின் கபடநெஞ்சம் மட்டும் மாறுவதில்லை; மாறுவதேயில்லை!