Tamil Bayan Points

வரதட்சணை வாங்கிட்டு வா… இளம்பெண்ணை கொடுமைப்படுத்தி கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on July 17, 2019 by

வரதட்சணை வாங்கிட்டு வா… இளம்பெண்ணை கொடுமைப்படுத்தி கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்

லக்னொ: உத்தரபிரதேசத்தில் அடுத்தடுத்து பல கொலைகள் நடந்து வருகின்றன. கடந்த வாரம் புதுப்புடவை கேட்ட இளம் பெண் கணவர் வாங்கித்தர மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டார். இரு தினங்களுக்கு முன்பு இளம் பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் இருப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தகவலறிந்த போலீஸார் கணவன் மற்றும் மாமனார் மாமியாரை கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கலிபூர் கிராமத்தில் மருமகளை கணவரின் குடும்பத்தினரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கனவுகளுடன் திருமணம் செய்து செல்பவர்களுக்கு கணவர் வீடே எமலோகமானால் எப்படி இருக்கும் அந்த பெண்ணுக்கும் அப்படித்தான் இருந்தது.

முர்சலிமா என்ற அழகான அந்த இளம் பெண் கலிபூர் கிராமத்தைச் சேர்ந்த ஜாவேத்தை திருமணம் செய்தார். நகை, பணம் போட்டுத்தான் திருமணம் செய்து கொடுத்தனர்.திருமணம் முடிந்து போன நாள் முதலே முர்சலிமாவிற்கு கணவன் வீட்டில் கொடுமைதான். கணவன், மாமனார், மாமியார்கள் என அனைவருமே அடித்து கொடுமைப்படுத்தினர். தனது மகனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து தர முடிவு செய்தே இந்த கொடுமைகளை செய்தனர்.

மருமகளை கொலை செய்ய குடும்பத்தோடு சேர்ந்து திட்டமிட்டனர். திங்கட்கிழமையன்று காலையில் முர்சலிமாவின் கணவன் ஜாவேத், மாமனார் பப்பு இருமனைவிகள் முர்சலீன், மற்றொரு மனைவி இம்ரானா மைத்துனர் பர்வேஸ் ஆகிய அனைவருமே இணைந்து அடித்தனர். முர்சலிமாவின் கழுத்தை கணவர் நெரித்து கொலை செய்ய அனைவருமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். முர்சலிமாவின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

அதில் முர்சலிமாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முர்சலிமாவின் கணவர் உள்ளிட்ட ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்தால் மரணதண்டனை விதிக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளே கூறியுள்ளனர். அப்படியிருந்தும் உத்தரபிரதேசத்தில் வரதட்சணை கொலைகள் அதிகரித்து வருகின்றன.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சத்தியநாராயண திவாரி தனது மனைவி கீதாவை கடந்த 2000ஆம் ஆண்டு தனது தாயாருடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்று தீ வைத்து எரித்தனர். 24 வயதான கீதா வரதட்சணைக்காக கொல்லப்பட்டது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இது தொடர்பாக, இந்திய தண்டனை சட்டம் 304-பி பிரிவின் கீழ் வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த செசன்சு ‌நீ‌திம‌ன்ற‌ம், திவாரி மற்றும் அவருடைய தாயார் இருவரையும் விடுதலை செய்தது.

அதை எதிர்த்து காவ‌ல்துறை தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த அலகாபாத் உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌ம், இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து திவாரி மற்றும் அவருடைய தாயார் இருவரும் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மேல் முறையீடு செய்தனர். அந்த மனுவை நீதிபதிகள் மார்கண்டேய கட்சு, கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ அம‌ர்வு விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வரதட்சணை கொலைகளுக்கு எதிராக நீதிபதிகள் கடுமையான கருத்துகளை கூறினார்கள். அந்த கொலைகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். திவாரி மற்றும் அவருடைய தாயார் இருவருக்கும் அலகாபாத் உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌ம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்.

Source:https://tamil.oneindia.com/news/lucknow/husband-and-father-in-law-in-arrested-asking-dowry-death-women-357238.html