Tamil Bayan Points

வருமுன் காப்போம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

Last Updated on October 15, 2023 by Trichy Farook

வருமுன் காப்போம்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

நாம் வாழும் இவ்வுலக வாழ்க்கையானது நிரந்தரமற்றது. அப்படிப்ட்ட ஓர் உலகில் வாழும் நாம் நம்மை மறுமைக்காக எவ்வாறு தயாரித்துக் கொள்ள வேண்டும், இவ்வுலக வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நபிகளார் உபதேசித்த சில நிகழ்வுகளை இந்த உரையில் காண்போம்.. 

செத்த ஆட்டைவிட இவ்வுலக வாழ்கை அற்பமானது 

இஸ்லாம் மார்க்கம் இதர மதங்களின் கொள்கைகளை விட்டும், நம்பிக்கைகளை விட்டும் முற்றிலும் வேறுபட்டு நிற்கின்றது. கற்சிலைகளையும், கால்நடைகளையும், கண்ணில் கண்டவைகளையும் கடவுளாக நம்பி வழிபட்டு வரும் மதத்தினருக்கு மத்தியில், கண்ணால் காணாமலேயே இவ்வுலகத்தைப் படைத்துப் பரிபாலிக்கக் கூடியவன் ஒருவன் மட்டுமே, அவன் தான் அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ் என்று நம்பி வாழ்ந்து வருபவர்கள் தான் முஸ்லிம்கள்.

நமது செயல்களுக்கான கூலி மறுமையில் கிடைக்கும் என்ற மறைவான விஷயங்களை நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வரும் முஸ்லிம்களில் சிலர், இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு, இறைத்தூதர் காட்டிய தூய வழிமுறைகளுக்கு மாற்றமாக வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கான காரணம் என்னவெனில், இவ்வுலகமும் அதன் மீது கொண்ட மோகமும் தான். இவ்வுலக வாழ்க்கை நம்மை வெகுவாகக் கவர்ந்திருப்பதனால், இந்த வாழ்க்கையை விட்டும் துண்டிக்கின்ற மரணத்தையும், அதற்குப் பின்னுள்ள நிலையான வாழ்வையும் பல நேரங்களில் நாம் மறந்து விடுகின்றோம். நமது பார்வையில் மிகப் பிரம்மாண்டமாகத் தெரியும் இவ்வுலகத்தைப் பற்றிய நமது மார்க்கத்தின் மதிப்பீடு இதோ:

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِالسُّوقِ، دَاخِلًا مِنْ بَعْضِ الْعَالِيَةِ، وَالنَّاسُ كَنَفَتَهُ، فَمَرَّ بِجَدْيٍ أَسَكَّ مَيِّتٍ، فَتَنَاوَلَهُ فَأَخَذَ بِأُذُنِهِ، ثُمَّ قَالَ: «أَيُّكُمْ يُحِبُّ أَنَّ هَذَا لَهُ بِدِرْهَمٍ؟» فَقَالُوا: مَا نُحِبُّ أَنَّهُ لَنَا بِشَيْءٍ، وَمَا نَصْنَعُ بِهِ؟ قَالَ: «أَتُحِبُّونَ أَنَّهُ لَكُمْ؟» قَالُوا: وَاللهِ لَوْ كَانَ حَيًّا، كَانَ عَيْبًا فِيهِ، لِأَنَّهُ أَسَكُّ، فَكَيْفَ وَهُوَ مَيِّتٌ؟ فَقَالَ: «فَوَاللهِ لَلدُّنْيَا أَهْوَنُ عَلَى اللهِ، مِنْ هَذَا عَلَيْكُمْ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (புறநகர் மதீனாவை ஒட்டியுள்ள) “ஆலியா”வின் ஒரு பகுதி வழியாக ஒரு கடைத்தெருவைக் கடந்து சென்றார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் மக்களும் இருந்தார்கள். அப்போது அவர்கள், செத்துக் கிடந்த, காதுகள் சிறுத்த ஓர் ஆட்டைக் கடந்து சென்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த ஆட்டை எடுத்து, அதன் (சிறிய) காதைப் பிடித்துக்கொண்டு, “உங்களில் யார் இதை ஒரு வெள்ளிக்காசுக்குப் பகரமாக வாங்கிக் கொள்ள விரும்புவார்?” என்று கேட்டார்கள்.

அதற்கு மக்கள், “எதற்குப் பகரமாகவும் அதை வாங்க நாங்கள் விரும்ப மாட்டோம்; அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வோம்?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புவீர்களா?” என்று கேட்டார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இது உயிரோடு இருந்தாலும் இது குறையுள்ளதாகும். ஏனெனில், இதன் காது சிறுத்துக் காணப்படுகிறது. அவ்வாறிருக்க, இது செத்துப் போயிருக்கும் போது எப்படி?’’ என்று கேட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின், அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தச் செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்’’ என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம்-5664 

وَ مَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا لَعِبٌ وَّلَهْوٌ‌ ؕ وَلَـلدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّـلَّذِيْنَ يَتَّقُوْنَ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

(அல்குர்ஆன்: 6:32)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

وَاللهِ مَا الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مِثْلُ مَا يَجْعَلُ أَحَدُكُمْ إِصْبَعَهُ هَذِهِ – وَأَشَارَ يَحْيَى بِالسَّبَّابَةِ – فِي الْيَمِّ، فَلْيَنْظُرْ بِمَ تَرْجِعُ؟

அல்லாஹ்வின் மீது ஆணை! மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது இந்த விரலை, –அதாவது சுட்டு- விரலை (அறிவிப்பாளர் யஹ்யா சுட்டு விரலால் சைகை செய்கிறார்) கடலில் வைப்பதைப் போன்றுதான். அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக்கொள்கிறது என்று அவர் பார்க்கட்டும். (அந்த அளவு குறைவானதேயாகும்.)

அறிவிப்பவர்: முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி)
நூல்: முஸ்லிம்-5490 

மாய உலகில் மனிதனின் தேடல்

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலக வாழ்க்கை என்பது காணாமல் போகும் கானல் நீரும், போதை தரக்கூடிய மாயை நிறைந்ததும் தான். இந்த உண்மையை உணராத மக்கள் தமது இந்த வாழ்க்கையில் நிம்மதியாக வாழ வேண்டும், சுகபோகமாக வாழ வேண்டும் என்பதற்காகப் பலவித முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

தமது வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக செய்யக் கூடாத காரியங்களையும் செய்யத் துணிகின்றனர். நாளை, நாளை என்று நாளைய வாழ்வுக்காக  சிறுகச் சிறுக பொருளை சேகரித்துக் கொள்கின்றனர். இவ்வளவு ஏன்? இன்றைய  பொழுது நிறைவுறுவதற்கு முன்பே நாளைய வாழ்விற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றனர்.

இவ்வாறு நாளைய வாழ்விற்காக ஓடிக் கொண்டே இருக்கும் மனிதன், பொருள் திரட்ட வேண்டும் என்ற ஆவலிலும், தேடலிலும் பிறரது பொருட்களை முறையின்றி அபகரிப்பது, ஏமாற்றுவது, மோசடி செய்வது, வட்டி வாங்குவது, சக மனிதர்களின் மானத்தோடு விளையாடுவது, அநீதியிழைப்பது என எண்ணில்லா அக்கிரமங்களைக் கட்டவிழ்த்து விடுகின்றான்.

இறைவன் அனுமதிக்காத பல காரியங்களைச் செய்பவனாகவும், இறைவன் கட்டளையிட்ட தர்மங்களை வழங்காமல் பதுக்கி  வைத்துக் கொள்பவனாகவும், இணைத்து வாழ வேண்டும் என்று வலியுறுத்திய உறவுகளைப் பகைத்து வாழ்பவனாகவும் இருக்கிறான். அதனால் தான் இஸ்லாம் கூறக்கூடிய சகோதரத்துவத்தை முஸ்லிம்களிடையே இன்று முழுமையான அளவில் காண முடிவதில்லை.

உயிர் வாழ்கின்ற வரை நம்மால் இயன்ற பொருளாதாரத்தைத் திரட்டி சேகரித்து விட வேண்டும் என்ற ஆவலில் நாம் ஒன்றை மட்டும் மறந்து விடுகின்றோம். ஆம்! அதுதான் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கின்ற மரணம். அத்தகைய மரணம் நம்மை எப்போது வேண்டுமானாலும் வந்தடையலாம். அது நமக்கென குறித்த நேரத்தில் வந்து நம்மை அழைத்துச் செல்லும். அதிலிருந்து முந்தவோ, பிந்தவோ முடியாது. நமது நிழலை விடச் சமீபமாக இருக்கின்ற மரணத்தைப் பற்றி படைப்பாளன் கூறுவதைக் கேளுங்கள்.

اَيْنَ مَا تَكُوْنُوْا يُدْرِكْكُّمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِىْ بُرُوْجٍ مُّشَيَّدَةٍ‌ ؕ

“நீங்கள் எங்கே இருந்தபோதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே.

(அல்குர்ஆன்: 4:78)

وَلِكُلِّ اُمَّةٍ اَجَلٌ‌ۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا يَسْتَاْخِرُوْنَ سَاعَةً‌ وَّلَا يَسْتَقْدِمُوْنَ‏

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும்போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 7:34)

وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهٖ‌ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً  ؕ حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُـنَا وَهُمْ لَا يُفَرِّطُوْنَ‏

உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும்போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 6:61)

காணாமல் போகும் சொத்தும் சொந்தமும்

மன இச்சைகளுக்குக் கட்டுப்பட்டு அழிச்சாட்டியத்தில் மூழ்கிக் கிடக்கும் மனிதனிடம் மரணம் வந்து விட்டால் அவன் எதையெல்லாம் நிலையானது, நிரந்தரமானது என்று எண்ணிக் கொண்டிருந்தானோ அவை அனைத்தும் உயிர் பிரியும் போதே அவனை விட்டும் காணாமல் போய்விடும்.

இன்னும் சொல்வதென்றால் நாம் சேகரித்த செல்வம் எதுவும் நமக்குச் சொந்தமானதில்லை என்று நபிகளார் கூறுகிறார்கள்.

அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

عَنْ مُطَرِّفٍ، عَنْ أَبِيهِ، قَالَ

أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقْرَأُ: أَلْهَاكُمُ التَّكَاثُرُ، قَالَ: ” يَقُولُ ابْنُ آدَمَ: مَالِي، مَالِي، قَالَ: وَهَلْ لَكَ، يَا ابْنَ آدَمَ مِنْ مَالِكَ إِلَّا مَا أَكَلْتَ فَأَفْنَيْتَ، أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ، أَوْ تَصَدَّقْتَ فَأَمْضَيْتَ؟

நபி (ஸல்) அவர்கள், “மண்ணறைகளைச் சந்திக்கும்வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பிவிட்டது” என்று தொடங்கும் (அல்குர்ஆன்: 102:1) ஆவதுஅத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன்.

அப்போது அவர்கள், “ஆதமின் மகன் (மனிதன்), ‘எனது செல்வம்; எனது செல்வம்’ என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?” என்று கேட்டார்கள்.

நூல்: முஸ்லிம்-5665 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்கள் கூறினார்கள்:

أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«يَتْبَعُ الْمَيِّتَ ثَلَاثَةٌ، فَيَرْجِعُ اثْنَانِ وَيَبْقَى وَاحِدٌ، يَتْبَعُهُ أَهْلُهُ وَمَالُهُ وَعَمَلُهُ، فَيَرْجِعُ أَهْلُهُ وَمَالُهُ وَيَبْقَى عَمَلُهُ»

இறந்துபோனவரைப் பின்தொடர்ந்து மூன்று பொருட்கள் செல்கின்றன. அவற்றில் இரண்டு திரும்பி விடுகின்றன; ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பி விடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கி விடுகின்றன.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம்-5667 

பின்தொடர்ந்து வரும் பாவச் செயல்கள்

இவ்வுலகத்திற்கும் மனிதனுக்கும் உள்ள உறவு அறுந்து விட்டது என்றால் அவனது செல்வமும் சொந்த பந்தமும் அவனை விட்டு நின்று விடும். ஆனால் வாழும் போது அவன் செய்த அமல்கள் அவனது மரணத்திற்குப் பின்னரும் தொடரும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ

மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன;

1. நிலையான தர்மம்

2. பயன்தரும் கல்வி.

3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம்-3358 

மனிதன் தன் வாழ்வில் செய்த நல் அமல்கள் மரணத்திற்குப் பின் அவனைத் தொடர்வது போன்றே, சக மனிதர்களுக்கு அவன் செய்த தீவினைகளும் மறுமையில் அவனுக்கெதிராக வந்து நிற்கும். இறைவனின் விசாரணையின் போது மனிதனின் தீமைகள் மிகைத்து விட்டது என்றால் அவனது நன்மைகள் அனைத்தும் அழிந்து விடும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ؟» قَالُوا: الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ، فَقَالَ: «إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ، وَصِيَامٍ، وَزَكَاةٍ، وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا، وَقَذَفَ هَذَا، وَأَكَلَ مَالَ هَذَا، وَسَفَكَ دَمَ هَذَا، وَضَرَبَ هَذَا، فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ، وَهَذَا مِنْ حَسَنَاتِهِ، فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ، ثُمَّ طُرِحَ فِي النَّارِ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திவாலாகிப் போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப் போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார்.

(அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும்.

அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர் மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப் போனவர்)” என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம்-5037 

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لِأَخِيهِ مِنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ، فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ اليَوْمَ، قَبْلَ أَنْ لاَ يَكُونَ  دِينَارٌ وَلاَ دِرْهَمٌ، إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ، وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ»

ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.)

(ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி-2449 

وَاتَّقِ دَعْوَةَ المَظْلُومِ، فَإِنَّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ اللَّهِ حِجَابٌ

‘அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளுங்கள். ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை’ என முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு ஆளுநராக அனுப்பும்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி-1496 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
اتَّقُوا الظُّلْمَ، فَإِنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ،

அநீதியிழைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் அநீதியானது, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம்-5034 

கைகொடுக்கும் நல்லறங்கள்

மறுமை நாளில் விசாரணைக்காக இறைவன் முன் நிறுத்தப்படும் போது, ஒவ்வொருவரும் தாம் செய்த செயல்களைக் கண்டுகொள்வார்கள்.

يُنَبَّؤُا الْاِنْسَانُ يَوْمَٮِٕذٍۢ بِمَا قَدَّمَ وَاَخَّرَؕ‏

بَلِ الْاِنْسَانُ عَلٰى نَفْسِهٖ بَصِيْرَةٌ ۙ‏

 وَّلَوْ اَلْقٰى مَعَاذِيْرَهٗؕ‏

அந்நாளில் மனிதன் முற்படுத்தியது பற்றியும், பிற்படுத்தியது பற்றியும் அறிவிக்கப்படுவான். மாறாக, மனிதன் சமாதானங்களைக் கூறியபோதும் தன்னைப் பற்றி நன்கு தெரிந்தவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 75:13-15)

இத்தகைய பயங்கரமான நாளில் நமக்குக் கைகொடுத்துக் காப்பாற்றுவது நாம் செய்த நல்அமல்கள் மட்டுமே!

اَلْمَالُ وَ الْبَـنُوْنَ زِيْنَةُ الْحَيٰوةِ الدُّنْيَا‌ ۚ وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ اَمَلًا‏

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப்படுவதில் சிறந்ததுமாகும்.

(அல்குர்ஆன்: 18:46)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

… فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ

நபி (ஸல்) அவர்கள் “அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!” என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம்-1777 

இறைவனின் எச்சரிக்கை

 فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيٰوةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ‏

இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.

(அல்குர்ஆன்: 31:33)

நிலையானது என்று எண்ணி நாம் வாழ்ந்து வரும் இவ்வாழ்க்கை கவர்ச்சி நிறைந்ததும் ஏமாற்றமானதுமே என்றும், அதைக் கண்டு நாம் ஏமாந்து விடக்கூடாது என்றும் அல்லாஹ் எச்சரிக்கின்றான். இதை உணராமல் நிலையில்லா உலகில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எத்தனையோ முயற்சிகளை மேற்கொள்ளும் நாம் நிலையான வாழ்வில் வெற்றி பெற என்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்?

இவ்வுலகில் சுகமாய் வாழ்வதற்காக செல்வங்களைச் சேமித்து வைத்திருக்கும் நாம் மறுமையில் சுகமாய் வாழ்வதற்கு எதனைச் சேமித்துள்ளோம்? பகைமையும் பாவச் சுமைகளுமே மேலோங்கி நிற்கின்றது. ஓர் ஊருக்குப் பயணம் மேற்கொள்வதாக இருந்தாலே ஒரு வாரத்துக்கு முன் நம்மைத் தயார்படுத்திக் கொள்கிறோம். ஆனால் மறுமைப் பயணத்திற்காக நாம் திரட்டி வைத்திருப்பது என்ன? என்பதை ஒருகணம் சிந்தியுங்கள்.

மரணம் தானே! அது வரும் போது பார்த்துக் கொள்ளலாம், எனது குழிக்கு நான் பதில் சொல்லிக் கொள்கிறேன் என்றெல்லாம் நக்கலாகப் பேசிக் கொண்டு, அசட்டையாக நமது வாழ்வைக் கழிக்கிறோம். இறைவனிடம் நமது தவறுகளுக்காக வருந்தி மன்னிப்புத் தேடாமலும் மனம் வருந்தாமலும் வாழ்ந்து வருகிறோம். ஆனால் மரணம் ஒரு நிமிடத்தில் நம்மை வந்தடையலாம். மேலே நாம் சுட்டிக்காட்டிய வசனங்கள் இதை நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

நேற்று வரை நம்முடன் உறவாடியவர்கள் இன்று இல்லை. இன்று காலை ஓடி ஆடித் திரிந்தவர் மாலையில் உயிர்த் துடிப்பின்றி ஓய்ந்து விடுகின்றார். நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் மட்டுமே மரணம் வரும் என்பதில்லை. வாழ்க்கையை ஆரம்பிக்காத பச்சிளம் குழந்தைகளையும் மரணம் விட்டு வைப்பதில்லை. நமக்குரிய கெடு வந்து விட்டால் நம்மால் தப்பித்து விடமுடியாது.

நம்மைச் சுற்றிலும் கேட்கக் கூடிய மரணச் செய்திகள் வெறும் செய்திகள் மட்டும் அல்ல! நம்மை எச்சரிக்கை செய்யக்கூடிய அபாய ஒலி! அத்தகைய மரணம் நம்மை வந்தடைவதற்கு முன்பாக நாம் செய்த பாவச் செயல்களுக்கு பாவமன்னிப்புத் தேடுவதும், நன்மையை சேகரிப்பதும் அவசியமானதாகும்.

ஏனெனில் மரணம் என்பது முடிவல்ல! மற்றொரு வாழ்வின் துவக்கம். இன்னும் சொல்வதென்றால் மறு உலக வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் ஒரு நுழைவுச் சீட்டு தான் மரணம்.

வாழும்போது மார்க்கத்திற்கு முரணாக வாழ்ந்து விட்டு, மரணம் வந்த பிறகு இறைவன் நமக்களித்த வாய்ப்பையும் வாழ்வையும் நினைத்து வருந்துவதை விட, உடலில் உயிர் இருக்கும் போதே நம்மைப் படைத்தவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து, அவனுக்கு அநீதி இழைக்காமலும், சக மனிதர்களுக்கு அநீதி இழைக்காமலும் இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளின் அடிப்படையில் வாழ்ந்து மரணிப்போமாக! மறுமையில் வெற்றி பெறுவோமாக!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.