Tamil Bayan Points

வஸீலா ஆளை வைத்தா? அமலை வைத்தா?

முக்கிய குறிப்புகள்: முக்கிய ஆய்வுகள்

Last Updated on December 9, 2016 by Trichy Farook

வஸீலா ஆளை வைத்தா? அமலை வைத்தா?

அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி கேட்க வேண்டும் என்பது அல்குர்ஆனின் ஆணித்தரமான கட்டளையாகும். தவ்ஹீத் ஜமாஅத் இதைத் தான் பிரச்சாரம் செய்து வருகின்றது.

பரேலவிகள் அல்குர்ஆனின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிரான, பல தெய்வக் கொள்கையைக் கொண்டவர்கள். இறந்து விட்ட மகான்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்பது அவர்களின் குருட்டு நம்பிக்கையாகும்.

அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்பதற்குச் சில ஆதாரங்களைத் தங்களுடைய இதழில் எழுதியிருந்தனர். அதற்கு ஏகத்துவம் இதழ் சரியான சாட்டையடிகளையும் சம்மட்டி அடிகளையும் கொடுத்து வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக, இவ்விதழில் வஸீலாவைப் பற்றிப் பார்க்கவிருக்கிறோம்.

இறந்து போன நபிமார்கள், நல்லடியார்களை வைத்து அல்லாஹ்விடம் வஸீலா தேடலாம் என்பது பரேலவிகளின் நிலைப்பாடு.

முஹம்மது நபியின் பொருட்டால் எனக்கு இந்தக் காரியத்தை நிறைவேற்று, முஹ்யித்தீனின் பொருட்டால் எனக்கு இந்தக் காரியத்தை வழங்கு என்று ஆளை வைத்து வஸீலா தேடலாம் என்பது இவர்களது வாதம்.

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வஸீலா என்பது ஆட்களை வைத்துத் தேடுவதல்ல. ஒருவர் செய்கின்ற அமல்களை வைத்துத் தான்.

இதைப் பின்வரும் வசனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.

அல்குர்ஆன் 5:35

இவ்வசனத்தில் “இறைவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்’ என்று கூறப்படுகிறது.
வஸீலா என்பதன் பொருள் சாதனம். கடலில் பயணம் செய்ய கப்பல் “வஸீலாவாக’ – சாதனமாக உள்ளது என்பர்.

“வஸீலா என்பது இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையில் இடைத் தரகர்களை ஏற்படுத்திக் கொள்வது” என்று மார்க்க அறிவு இல்லாத சிலர் கருதுகின்றனர்.

“நாம் நல்வழியில் நடக்கத் தேவையில்லை; எந்த நல்லறமும் செய்யத் தேவையில்லை; எந்தத் தீமையிலிருந்தும் விலகத் தேவையில்லை; ஏதாவது ஒரு மகானைப் பிடித்துக் கொண்டால் போதும்; கடவுளை நெருங்கிடலாம்” என்ற நம்பிக்கை உலகில் உள்ள பல மதங்களிலும் இருக்கிறது.

இஸ்லாம் இந்த நம்பிக்கையை நிராகரிக்கின்றது. இறைவனை நெருங்க நினைப்பவர்கள் நல்லறங்கள் எனும் “வஸீலாவை’ சாதனத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று இங்கே கட்டளையிடப்படுகின்றது.

இறைவனை நெருங்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் நல்லறங்கள் செய்து அதன் மூலமே நெருங்க வேண்டும். அவ்வாறின்றி மகான்களை இடைத் தரகர்களாகப் பயன்படுத்தி வெற்றி பெற முடியாது என்பதே “வஸீலா தேடுங்கள்!’ என்பதன் கருத்தாகும்.

இடைத் தரகர்களை அறவே ஒழித்துக் கட்டும் வகையில் அமைந்த இவ்வசனத்தை “இடைத்தரகர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று நேர்மாறாக விளங்கிக் கொள்கிறார்கள்.

இவ்வசனத்தின் (5:35) துவக்கத்தில் “நம்பிக்கையாளர்களே’ என்று அழைக்கப்படுகிறது. இந்த அழைப்பில் மகான்கள் என்று கருதப்படுவோரும் அடங்குவார்கள். “மகான்களும் வஸீலா தேட வேண்டும்” என்பது தான் இவ்வசனத்தின் பொருள்.

நம்பிக்கையாளர்களே என்ற அழைப்பில் முதலில் அடங்கக் கூடியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். அவர்களுக்கும் வஸீலா தேடும் கட்டளை உள்ளது. அவர்கள் எந்த மகானைப் பிடிப்பார்கள்? என்று சிந்தித்தால் இப்படி விளங்க மாட்டார்கள்.

இவ்வசனத்தில் மூன்று கட்டளைகள் உள்ளன. மற்ற இரண்டு கட்டளைகள் எவ்வாறு மகான்கள் உள்ளிட்ட அனைவரையும் கட்டுப்படுத்துமோ, அது போல் தான் வஸீலா தேடும் கட்டளையும் அனைவரையும் கட்டுப்படுத்தும்.

மகான்கள் கூட வஸீலா தேடுகிறார்கள் என்று மற்றொரு வசனம் தெளிவாகவே கூறுகிறது.

இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும்.

அல்குர்ஆன் 17:57

ஆனால் பரேலவிகளோ ஆளை வைத்து வஸீலா தேடலாம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

நபித்தோழர் உஸ்மான் இப்னு ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

(நான் மஸ்ஜிதுந்நபவியில் அமர்ந்திருக்கும் சமயம் பார்வையற்ற ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு சுகம் கிடைக்க அல்லாஹ்விடம் துஆச் செய்யும்படி வேண்டினார். நபி (ஸல்) அவர்கள், “நீ விரும்பினால் துஆச் செய்கிறேன். நீ விரும்பினால் பொறுத்துக் கொள்ளலாம். பொறுத்துக் கொள்வது சிறந்தது” என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர் துஆச் செய்யும்படி வேண்டினார். அப்பொழுது அம்மனிதரை முழுமையாக உளூச் செய்து விட்டு வந்து கீழ்வரும் துஆவை ஓதப் பணித்தார்கள்.

பொருள்: யா அல்லாஹ்!! அருள் நிறைந்த அண்ணல் முஹம்மது நபி பொருட்டால் உன்னிடம் மன்றாடுகிறேன். முஹம்மது (ஸல்) அவர்களே! என் ரப்பிடம் என் தேவை நிறைவேற உங்களின் பொருட்டு முறையிடுகிறேன். இறைவனே! என் காரியத்தில் அவர்களின் பரிந்துரையை நீ அங்கீகரிப்பாயாக!

பின் அவர் சுகம் பெற்று, பார்வையுடன் திரும்பினார்.

நூல்: திர்மிதீ, நஸாயீ, பைஹகீ, தப்ரானி

இந்த நிகழ்ச்சியைக் கண்ணுற்ற உஸ்மான் பின் ஹுனைஃப் ரலி) அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களை அகற்ற, தேவை நிறைவேற இந்த துஆவையே ஓதுவார்கள். இந்த துஆவிற்கு அப்படி என்ன மகத்துவம் என்றால் வஸீலா தான். அதுவும் நபி (ஸல்) அவர்கள் தங்கள் திருவாயினால் கற்றுக் கொடுக்கப்பட்ட வஸீலா.

இவ்வாறு வஸீலா குறித்து எழுதியுள்ளனர்.

பொதுவாக பரேலவிகள் குர்ஆன் வசனத்தின் அல்லது ஹதீஸின் ஒரு பகுதியை மட்டும் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு ஆதாரமாகச் சமர்ப்பிப்பார்கள்.

இந்தப் பாணியில் தான் இந்த ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

இவர்கள் வளைத்திருக்கின்ற – தங்களுக்குச் சாதகமாக மொழிபெயர்த்திருக்கின்ற இந்த ஹதீஸைச் சரியான மொழிபெயர்ப்பின் அடிப்படையில் பார்ப்போம்.

பார்வை தெரியாத ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்விடம் எனக்குச் சுகமளிக்கும் படி பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கேட்டார். “நீ விரும்பினால் நான் பிரார்த்தனை செய்கிறேன். நீ விரும்பினால் பொறுமையாக இரு! அது உனக்கு (மறுமையில்) சிறந்தது” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அதற்கு அம்மனிதர், “அவனிடம் நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று சொன்னார்.

உளூவை நிறைவாகச் செய்து இந்த துஆவைச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் அவருக்கு உத்தரவிட்டார்கள்.

யா அல்லாஹ்! உன்னிடத்தில் கேட்கிறேன். இரக்கமுடைய உன்னுடைய நபி முஹம்மத் (அவர்களின் பிரார்த்தனை)யை முன்வைத்து உன்னிடம் நான் முன்னோக்குகிறேன். எனது தேவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக வேண்டி இது தொடர்பாக உங்கள் (பிரார்த்தனை)யை முன்வைத்து என்னுடைய இறைவனிடம் முன்னோக்கி விட்டேன். யா அல்லாஹ்! என் விஷயத்தில் அவர்கள் செய்கின்ற பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!

அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு ஹுனைஃப் (ரலி)

நூல்: திர்மிதீ 3502

இதே ஹதீஸ் இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூற்களில் பதிவாகியுள்ளது.

பார்வை தெரியாத ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்விடம் எனக்கு சுகமளிக்குமாறு பிரார்த்தனை செய்யுங்கள்” என்று தெரிவித்தார். “நீ விரும்பினால் (இந்தச் சோதனைக்குரிய கூலியை) உனக்குப் பின்னால் (மறுமையில்) கிடைக்குமாறு நான் விட்டு விடுகிறேன். நீ விரும்பினால் நான் பிரார்த்தனை செய்கின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

உளூவை நிறைவாகச் செய்து, இரண்டு ரக்அத்துகள் தொழுது (பின்வரும்) துஆவைச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் அவருக்கு உத்தரவிட்டார்கள்.

யா அல்லாஹ்! உன்னிடத்தில் நான் கேட்கிறேன். இரக்கமுடைய உன்னுடைய நபி முஹம்மத் (அவர்களின் பிரார்த்தனை)யை முன்வைத்து உன்னிடம் முன்னோக்குகின்றேன். முஹம்மதே! என்னுடைய தேவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக, இது தொடர்பாக உங்கள் (பிரார்த்தனை)யை முன்வைத்து என்னுடைய இறைவனிடம் முன்னோக்கி விட்டேன். யா அல்லாஹ்! என் விஷயத்தில் அவர்கள் செய்கின்ற பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!

அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு ஹுனைஃப் (ரலி)

நூல்: இப்னுமாஜா 1375, முஸ்னத் அஹ்மத் 16604

முதலில் திர்மிதியில் இடம்பெற்ற ஹதீஸின் மொழியாக்கத்தைப் பார்த்தோம். இரண்டாவதாக இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூற்களில் இடம்பெற்றுள்ள ஹதீஸின் மொழியாக்கத்தைப் பார்த்தோம்.
இரண்டாவது ஹதீஸில் கூடுதலாக இரண்டு விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

1. இரண்டு ரக்அத்கள் தொழுவது.
2. பார்வை தெரியாத அந்த நபித்தோழர், முஹம்மதே என்று அழைப்பது.

இவ்விரண்டு விஷயங்கள் தவிர மற்ற செய்திகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை தான்.

இந்த ஹதீஸைத் தான், நபியின் பொருட்டால் என்று மொழிபெயர்ப்பு செய்து, மனிதர்களைக் கொண்டு வஸீலா தேடலாம் என்பதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக, இறந்து போன ஆட்களை வைத்து வஸீலா தேடலாம் என்ற தங்களின் இணைவைப்புச் சிந்தனைக்கு இதைத் திருப்புகின்றனர். இதற்குரிய விளக்கத்தை இன்ஷா அல்லாஹ் பின்னர் பார்ப்போம்.

இப்போது நாம் பார்க்க வேண்டியது, மேற்கூறப்பட்டுள்ள இந்த துஆவில், “யா முஹம்மத்’ என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

யா முஹம்மத் என்றழைப்பது ஷிர்க் இல்லையென்று நபிகள் நாயகம் அவர்கள் ஸஹாபிகளுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள். ஸஹாபிகளும் தனது வாழ்வில் யா முஹம்மத் என்று துஆச் செய்யும் போது கூறியிருக்கிறார்கள். யா முஹம்மது என்று கூறுவதில் ஷிர்க் இல்லையென்றால் யா முஹ்யித்தீன் என்ற அழைப்பதில் எப்படி ஷிர்க் வந்து விட்டது? யா முஹ்யித்தீன் என்று அழைப்பது ஷிர்க் என்றால் யா முஹம்மத் என்றழைப்பதும் ஷிர்க் ஆகி விடும். ஷிர்க்கை எதிர்த்துப் போராடிய நபித்தோழர்கள் யா முஹம்மத் என்றழைத்து ஷிர்க் செய்து விட்டார் என்று கூறுவார்களா?

இவ்வாறு பரேலவிகள் கேட்கின்றனர்.

இந்தச் செய்தியில் பல்வேறு விஷங்களை பரேலவிகள் கொட்டித் தீர்த்திருக்கின்றனர். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

இவர்கள் சுய நினைவோடும் சிந்தனைத் தெளிவோடும் தான் இப்படி வாதிடுகிறார்களா? அல்லது மறை கழன்று விட்டதா? என்று நாம் நினைக்க வேண்டியுள்ளது.

யா முஹம்மத் என்றால் முஹம்மதே என்று பொருள். நம் முன்னால் நாம் சொல்வதைக் கேட்கும் வகையிலும் அவர் சொல்வதை நாம் கேட்கும் வகையிலும் இருக்கும் போது அவரை அழைப்பது இணை வைத்தல் என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்லவில்லை. கருணாநிதியை சந்திக்கும் போது கருணாநிதி அவர்களே என்று அழைக்கலாம். ராம கோபாலனே என்று அழைக்கலாம். யாரையும் அழைக்கலாம். இதை நாம் ஷிர்க் என்று சொல்லவில்லை. வேறு யாரும் எந்தக் காலத்திலும் சொன்னதில்லை.

நபித்தோழர்கள் நபிகள் நாயகத்தை முஹம்மதே என்று அழைத்துள்ளதை இவர்கள் ஆதாரமாகக் காட்டுகிண்றனர். அப்படியானால் நபித்தோழர்கள் அபூஜஹலை, அபூஜஹ்லே என்று அழைத்துள்ளார்கள். இவர்கள் அபூஜஹ்லை அழைப்பார்களா? எல்லா காபிர்களையும் அவர்கள் பெயரைச் சொல்லி நபித்தோழர்கள் அழைத்துள்ளார்கள். இவர்களும் அபூலஹபை. அவனைப் போன்றவர்களை இப்போதும் உதவிக்காக அழைப்பார்களா?

உயிருடன் உள்ள ஒருவரை அழைப்பது ஷிர்க்காக ஏன் ஆகாது? மரணித்தவரை அழைத்தால் எப்படி அது ஷிர்க்காகின்றது என்ற வேறுபாட்டை எத்தனை முறை விளக்கினாலும் இவர்கள் விளங்குவதில்லை.

அந்த வித்தியாசத்தை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறோம்.

உயிருடன் உள்ளவரை ஒரு நேரத்தில் ஒருவர் தான் அழைப்பார். அதுவும் அவர் காதில் விழக் கூடிய தூரத்தில் இருந்து தான் அழைப்பார். இறந்தவரை அழைக்கும் போது அதே சமயத்தில் இன்னும் பலரும் அவரை அழைப்பார்கள். உலகின் பல பகுதிகளிலிருந்தும் பலரும் இவரை அழைப்பார்கள் என்பதைத் தெரிந்து கொண்டே அவரை அணுகுகின்றனர்.

அதாவது எங்கிருந்து அழைத்தாலும் எத்தனை பேர் அழைத்தாலும் இந்தப் பெரியார் கேட்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அழைக்கிறான். இந்தத் தன்மை இறைவனுக்கு மாத்திரம் சொந்தமான தனித்தன்மையாகும். இறைவனுக்கு இருப்பது போன்ற கேட்கும் திறன் மனிதனுக்கும் இருப்பதாக நம்பினால் அது ஷிர்க் அல்லாமல் வேறு என்ன?

இந்தப் பரேலவிய விஷமிகள் யா முஹம்மத் என்று திக்ரு செய்கின்றனர். முஹம்மத் (ஸல்) அவர்களை அழைத்து இவ்வாறு திக்ரு செய்வது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பகிரங்க இணை வைப்பாகும். இது ஏகத்துவவாதிகளான நாம் மட்டும் சொல்லவில்லை. சுன்னத் ஜமாஅத் என்று கூறிக் கொள்ளும் இவர்களுடைய மத்ஹபு சிந்தனையிலும் கண்மூடித்தனமான தக்லீதிலும் ஒன்றிணைந்த, ஒட்டியிருந்த மவ்லவி கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ என்பவர், “யா முஹம்மத் என்று அழைத்து திக்ரு செய்வது, பிரார்த்திப்பது இணை வைப்பு” என்று தமிழகத்திலுள்ள அனைத்து மத்ரஸாக்களிலும் 1974ல் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி தெரிவித்திருந்தார். இந்த மார்க்கத் தீர்ப்புகள் அடங்கிய ஒரு நூல் தொகுப்பை “இர்பானுல் ஹக்’ என்ற பெயரில் வெளியிட்டிருந்தார்.

யா முஹம்மத் என்று அழைப்பது சு.ஜ.வினரே விளங்கியுள்ள தெளிவான இணை வைப்பும், இறை மறுப்பும் ஆகும். ஆனால் பரேலவிச கோணல் புத்திக்காரர்களோ இந்த இறைமறுப்புக்கு மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாக்கிட வளைக்கின்றனர்.

உயிருடன் இருக்கும் ஒருவர் மற்ற மனிதரை உதவிக்கு அழைக்கும் போது, அவரைக் கடவுள் அம்சம் பொருந்தியவராக ஒருபோதும் அழைப்பதில்லை. மாறாக தன்னைப் போல் அவரும் பலவீனமானவர் என்ற அடிப்படையில் தான் அழைக்கிறார். இப்போது இவருக்காக உதவி செய்ய முன்வருகின்ற மனிதருக்கு, பின்னாளில் இவரும் உதவி செய்வார். இதை யாரும் இணை வைப்பு என்று சொல்ல மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எத்தனையோ தடவை, யா அபா பக்ர் (அபூபக்ரே), யா உமர் (உமரே) யா ஆயிஷா (ஆயிஷாவே) என்று அழைத்திருக்கின்றார்கள். அவர்களும் பரஸ்பரம் நபியே என்று அழைத்திருக்கின்றார்கள். இந்த அழைப்புகள் அனைத்தும் பலவீனத்தைக் கொண்ட பரஸ்பர அழைப்பு தான்.

ஆனால் இறந்து போன ஒருவரை இவ்வாறு அழைத்தால் அது இணை வைப்பாகும். காரணம், அங்கு தெய்வீகத்தன்மை, கடவுள் அம்சம் வந்து விடுகின்றது. ஒருவர் இறந்து விட்டால் அவர் பார்க்கவோ, செவியுறவோ மாட்டார். இறந்தவர் பார்க்கிறார் என்றோ அல்லது செவியுறுகிறார் என்றோ நம்பி விட்டால் அது இணை வைப்பாகும். அல்லாஹ் தான் சாகாதவன்; எப்போதும் செவியுறுபவன்.

இந்த ஹதீஸில் பார்வை தெரியாத நபித்தோழர், முஹம்மதே என்று நபி (ஸல்) அவர்களை நேரில் தான் அழைக்கின்றார்.

தன்னுடைய துஆவை விட நபி (ஸல்) அவர்களின் துஆ அங்கீகரிக்கப்பட மிகவும் தகுதியானது என்ற அடிப்படையில் முஹம்மதே என்று அழைத்து, இறைவனிடம் பிரார்த்திக்கச் சொல்கின்றார்.

இங்கே அவரது பலவீனம் தெரிகின்றது. அதே சமயம் நபி (ஸல்) அவர்களிடம், “உங்களுடைய துஆவைக் கொண்டு முன்னோக்குகிறேன்’ என்று சொல்லிவிட்டு இறுதியில், “என்னுடைய விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொள்’ என்று அல்லாஹ்விடம் கேட்கின்றார். இங்கே நபி (ஸல்) அவர்களின் பலவீனத்தை வெளிப்படுத்தி விடுகின்றார்.

நபி பரிந்துரைத்து விட்டால் அல்லாஹ் தந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. ஏனெனில் அல்லாஹ்வை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது என்ற விளக்கத்தையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் “இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா! நீ நினைத்தால் என் மீது அருள்புரிவாயாக” என்று பிரார்த்திக்க வேண்டாம். மாறாக, கேட்பதை வலியுறுத்திக் கேளுங்கள். (இது, இறைவனைக் கட்டாயப்படுத்துவதாகாது.) ஏனெனில், அவனைக் கட்டாயப்படுத்துபவர் யாருமில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6339

இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் நடக்க மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நபி (ஸல்) அவர்களே இந்த துஆவைக் கற்றுத் தருகின்றார்கள். அதனால் நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் இணை வைப்பைக் கற்றுத் தரமாட்டார்கள்.

பார்வை தெரியாதவர், நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கோரிக்கையை தனது பலவீனத்தின் அடிப்படையில் முன்வைக்கின்றார். அதற்கு நபி (ஸல்) அவர்களோ, “எனது பரிந்துரையை ஏற்றுக் கொள்ளுமாறு நீ அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்’ என்று தமது பலவீனத்தையும் பகிர்ந்து கொள்கின்றார்கள்.
இறந்த பிறகும் “யா முஹம்மத்’ என்று கூப்பாடு போடுவதற்கும், கும்பிடு போடுவதற்கும் இதில் எந்த ஆதாரமும் இல்லை. மாறாக, உயிருடன் இருக்கும் போதே மனிதன் பலவீனன் தான்; இறந்த பிறகு எந்த ஆற்றலும் இருக்காது; என்னிடம் எதையும் கேட்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் உணர்த்துகின்ற
எதிர்மறையான ஆதாரம் தான் இதில் இருக்கின்றது.

இதை நாம் கற்பனையாகச் சொல்லவில்லை. அல்லாஹ் அவ்வாறு தான் தனது தூதரை நோக்கி கூறச் சொல்கின்றான்.

“அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை” என்று (முஹம்மதே!) கூறுவீராக! “குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 6:50

நபி (ஸல்) அவர்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்றும் வல்ல இறைவன் சொல்கின்றான்.

“அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 7:188

உண்மை இவ்வாறிருக்கையில் நபி (ஸல்) அவர்கள் தமக்குச் சக்தி இருப்பதைப் போன்று எவ்வாறு தம்மை அழைக்கச் சொல்வார்கள்?

அல்லாஹ் சொல்கின்றான்:

எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின் “அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்!” என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. மாறாக, “வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!” (என்றே நபி கூறுவார்.)

அல்குர்ஆன் 3:79

மொத்தத்தில் மேற்கண்ட ஹதீஸில் சுருக்கமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம், பார்வை தெரியாத நபித்தோழர், முஹம்மதே என்று நபி (ஸல்) அவர்களை நேரில் அழைத்திருக்கிறார். அவ்வாறு நேரில் அழைப்பது இணைவைப்பாகாது. காரணம், நபி (ஸல் அவர்கள் மற்றவர்களை அழைத்தாலும், மற்றவர்கள் நபியை அழைத்தாலும் அது மனிதப் பலவீனத்திற்கு உட்பட்டது தான்.

ஆனால் இறந்த பிறகு, முஹம்மதே என்று அழைத்தால் அது இணை வைப்பாகும். இவ்வாறு அழைக்கும் போது நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள்; பார்க்கின்றார்கள்; கேட்கின்றார்கள்; குறைகளைத் தீர்க்கின்றார்கள் என்ற நம்பிக்கையில் அழைப்பதாகும்.

எப்போதும் உயிருடன் இருந்து, பார்க்கின்ற, கேட்கின்ற, குறைகளை நிவர்த்தி செய்கின்ற ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் தான். அல்லாஹ்வுடைய இந்த ஸ்தானத்தில் யாரை வைத்தாலும் அது கொடிய இணை வைப்பாகும். இந்த விஷயத்தைப் புரியாமல் பரேலவிகள் மொட்டைத்தலைக்கும் முழங்காலும்கும் முடிச்சுப் போடுகின்றனர்.

இதை வைத்துக் கொண்டு முஹ்யித்தீனை அழைப்பதற்கும் முனைகின்றனர் பரேலவிகள்.

முஹம்மது (ஸல்) அவர்களை அழைப்பதற்கே அனுமதியில்லை எனும் போது, இந்த முஹ்யித்தீனை அழைப்பதற்கு எங்கே முடியும்? ஒருபோதும் முடியாது.

இந்த ஹதீஸிலிருந்து முஹ்யித்தீனை அழைப்பதற்குரிய தில்லுமுல்லுகள், எத்துவாளித்தனங்கள் அனைத்தையும் செய்கின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

வஸீலா ஆளை வைத்தா? அமலை வைத்தா?

அருகிலோ, கூப்பிடு தூரத்திலோ, உயிருடன் இருக்கும் ஒருவரை பெயர் சொல்லி அழைப்பது ஒருபோதும் இணைவைப்பாகாது என்ற விளக்கத்தையும் கண்டோம்.

வஸீலா என்பது ஆளை வைத்துத் தான் என்று கூறும் தில்லுமுல்லுகளுக்கும், திருகுதாளங்களுக்கும் சரியான விளக்கத்தை இப்போது பார்ப்போம்.

சான்று: 1

பார்வை தெரியாத நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பரேலவிகள் சொல்வது போன்று, “முஹம்மது நபி பொருட்டால் உன்னிடம் மன்றாடுகிறேன். முஹம்மது (ஸல்) அவர்களே! என் ரப்பிடம் என் தேவை நிறைவேற உங்களின் பொருட்டு முறையிடுகிறேன்” என்று கூறவில்லை. அப்படிச் சொல்வதற்கு நபி (ஸல்) அவர்களிடம் நேரில் வர வேண்டிய அவசியமும் இல்லை. அவர் வீட்டில் இருந்து கொண்டே இந்தப் பிரார்த்தனையைச் செய்திருக்கலாம். ஆனால் அந்த நபித்தோழர் அவ்வாறு செய்யவில்லை. ஏன்? அவர், தவஸ்ஸுல் – வஸீலா தேடுதல் என்ற வார்த்தையில் பொருள் அறிந்த, அரபி மொழி தெரிந்த ஓர் அரபியர்.

ஓர் ஆளை வைத்து வஸீலா தேட வேண்டுமானால் அவர் தனது வஸீலாவில் அவரது பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி பிரார்த்திக்க வேண்டும். அப்படிப் பெயரைக் குறிப்பிட்டுப் பிரார்த்திப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே, தன் மீது அக்கரை காட்டுபவர், மார்க்க ஞானம் உள்ளவர் என்று யாரை அந்த நபித்தோழர் நம்புகிறாரோ அவரிடம், அந்த நபி (ஸல்) அவர்களிடம் வந்து, எனக்காகப் பிரார்த்தியுங்கள் என்று கூறுகிறார். அதில் தான் முழுப் பயன் இருக்கின்றது என்று அவர் தெளிவாக விளங்கி வைத்திருந்தார்.

அதனால் தான் நபி (ஸல்) அவர்களிடம் நேரில் வந்து பிரார்த்திக்கச் சொல்கிறார். நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை ஒப்புக் கொள்ளப்படுவதற்கு அல்லாஹ்விடம் மிக மிகத் தகுதியானது என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.

சான்று: 2

நபி (ஸல்) அவர்கள், உஸ்மான் பின் ஹுனைபுக்காகப் பிரார்த்திக்கின்றார்கள். அதே சமயம் அவரிடம் சிறந்ததைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரையும் செய்கிறார்கள்.

“நீ விரும்பினால் இந்தச் சோதனைக்குரிய கூலியை மறுமையில் கிடைப்பதற்காக விட்டு விடுகின்றேன்; நீ விரும்பினால் நான் பிரார்த்தனை செய்கிறேன்’ என்பது தான் அந்த அறிவுரையாகும்.

பொதுவாக இவ்வாறு பிரார்த்தனை செய்யக் கோருபவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் அறிவுரை மறுமையை முன்னிறுத்தியே அமைந்திருக்கும் என்பதைப் புகாரியில் இடம்பெறும் ஹதீஸ் விளக்குகின்றது.

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், “சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்; (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, “நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

நூல்கள்: புகாரி 5652, முஸ்லிம் 4673

இதுபோன்ற சோதனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பிரார்த்தனை செய்யக் கோரும்போது மறுமை நன்மையைத் தான் நபியவர்கள் முன்னிலைப்படுத்துவார்கள் என்பதற்கு இந்த ஹதீஸ்கள் எடுத்துக்காட்டாகும்.

மிக முக்கியமாக, இந்த உரையாடலில் நமக்கு நிரூபணமாவது, கண் தெரியாத அந்த நபித்தோழரின் கோரிக்கை முஹம்மது (ஸல்) என்ற ஆள் அல்ல, அவர்கள் செய்கின்ற பிரார்த்தனை என்ற அமல் தான்.

சான்று: 3

பார்வை தெரியாத தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று வலியுத்துகின்றார். நபி (ஸல்) அவர்கள் அவருக்காகப் பிரார்த்திக்கின்றார்கள்.

நபியவர்கள் பிரார்த்தித்த விபரம் இந்த ஹதீஸில் இடம் பெறாவிட்டாலும் நபி (ஸல்) அவர்கள், அந்த நபித்தோழருக்கு அளித்த வாக்குறுதியைக் கண்டிப்பாக நிறைவேற்றியிருப்பார்கள்.

அவருக்காக நபி (ஸல்) அவர்கள், தாம் பிரார்த்திக்கின்ற அதே வேளையில், அவர் மீதுள்ள அன்பின் மேலீட்டால் அவரையும் பிரார்த்திக்குமாறு சொல்கின்றார்கள். தான் செய்கின்ற பிரார்த்தனையை ஏற்குமாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று நபித்தோழரிடம் நபியவர்கள் கூறுகின்றார்கள்.

அதிலும் குறிப்பாக, உளூச் செய்து விட்டு இரண்டு ரக்அத்துக்கள் தொழுது விட்டு துஆச் செய்யுமாறு கூறுகின்றார்கள்.

அதாவது தொழுகை, துஆ என்ற அமலை வைத்து வஸீலா தேடச் சொல்கின்றார்கள். இது தான் அல்லாஹ்வின் வசனத்தில் உள்ள கட்டளையாகும்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.

அல்குர்ஆன் 5:35

சான்று: 4

நபி (ஸல்) அவர்கள் அவருக்குக் கற்றுக் கொடுத்த துஆவில், “அல்லாஹும்ம ஃபஷஃப்பிஃஹு ஃபிய்ய- யா அல்லாஹ் என் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக” என்ற வார்த்தை இடம்பெறுகின்றது.

இவ்வார்த்தை இடம்பெறும் ஹதீஸ் அஹ்மதில் (16604) பதிவாகியுள்ளது. இதில் ஃபிய என்ற வார்த்தை இல்லாமல் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பிரகாசமான வார்த்தை பிரகடனப்படுத்துவதென்ன? வஸீலா தேடுதல் என்பது நபி (ஸல்) அவர்களின் பொருட்டால்… என்ற ஆளை, அந்தஸ்தை, தகுதியை வைத்தல்ல. அவர்களது துஆவை வைத்துத் தான். ஆளை வைத்து, அந்தஸ்தை வைத்து வஸீலா தேடலாம் என்று பொருள் கொள்வது அசாத்தியம் என்பதை இது தெளிவாக உணர்த்துகின்றது.

ஏனெனில், “யா அல்லாஹ், என் விஷயத்தில் – அதாவது எனக்குப் பார்வையை எனக்குத் திரும்பத் தருவதில் அவர்களின் பரிந்துரையை (ஷஃபாஅத்தை) ஏற்றுக் கொள்வாயாக!” என்ற வாசகத்தின் பொருள், “நபி (ஸல்) அவர்களின் துஆவை ஏற்றுக் கொள்வாயாக’ என்பது தான்.

இந்தச் செய்தியில் ஷஃபாஅத் என்ற வார்த்தைக்கு, பரிந்துரை என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உண்மையில் ஷஃபாஅத் என்பதற்கு அரபியில், “துஆ – பிரார்த்தனை’ என்பதே பொருளாகும்.

நபிமார்களுக்கும் நல்லவர்களுக்கும் நாளை மறுமையில் ஷஃபாஅத் என்று சொல்வது இந்தப் பொருளில் தான். இந்த அடிப்படையில் ஷஃபாஅத் என்பது குறுகிய பொருள் கொண்டதாகவும் துஆ என்பது விரிந்த பொருள் கொண்டதாகவும் அமைகின்றது.

துஆ என்றால் ஒருவர் தனக்காகச் செய்வதையும், பிறருக்காகச் செய்வதையும் எடுத்துக் கொள்ளும். ஷஃபாஅத் என்பது ஒருவர் மற்றவருக்காகச் செய்கின்ற பிரார்த்தனையை மட்டும் குறிக்கும். இதன்படி ஷஃபாஅத் என்பது துஆவையே குறிக்கின்றது.

உஸ்மான் பின் ஹுனைபுக்கு நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்வதிலிருந்து, அமலை வைத்துத் தான் வஸீலா தேட வேண்டுமே தவிர ஆளை வைத்து அல்ல என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.

சான்று: 5

நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் ஹுனைபுக்குக் கற்றுக் கொடுத்த துஆவில் மிக முக்கியமானது, வ ஷஃப்பிஃனீ ஃபீஹி என்ற வார்த்தையாகும்.

என் பார்வை திரும்பக் கிடைப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்கின்றார்கள். அந்தப் பரிந்துரையை ஏற்பாயாக என்று நான் செய்கின்ற பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக

இந்தக் கருத்தைக் கொண்ட செய்தி மேற்கண்ட வார்த்தைகளுடன் அஹ்மதில் (17280) இடம்பெறுகின்றது. இதே செய்தி ஹாகிமிலும் பதிவாகியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் ஹுனைபுக்குக் கற்றுக் கொடுத்த இந்த வார்த்தையே, ஒரு ஆள் மூலம் வஸீலா தேடுதல் என்பதற்கு மரண அடி கொடுக்கின்றது.

இதில் வேதனை என்னவென்றால் இந்த ஹதீஸின் பிற்பகுதியை பரேலவிகள் திட்டமிட்டு மறைப்பது தான். ஏனெனில் ஹதீஸின் இந்தப் பகுதிக்கு, அமல்கள் மூலமே வஸீலா தேட வேண்டும் என்பதைத் தவிர்த்து வேறு எந்தப் பொருளும் கொடுக்க முடியாது என்பதால் தான் இதை அவர்கள் அப்பட்டமாக மறைக்கின்றனர்.

ஆளைக் கொண்டு வஸீலா தேடலாம் என்பதற்கு அவர்கள் எழுப்பியிருக்கின்ற போலியான வாதங்கள், நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் ஹுனைபுக்குக் கற்றுக் கொடுத்த இந்த வார்த்தைகள் மூலம் தகர்ந்து, தரையில் விழுந்து சுக்குநூறாக நொறுங்கிப் போய்விடுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் இந்தக் கண் தெரியாத நபித்தோழருக்குப் பரிந்துரை செய்வது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் நபி (ஸல்) அவர்களின் துஆவிற்கு அந்த நபித்தோழர் எப்படிப் பரிந்துரைக்க முடியும் என்ற கேள்விக்கு இவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை.

இந்த ஹதீஸின் முற்பகுதியை வைத்துக் கொண்டு, இவ்வாறு வஸீலா தேடலாம் என்று வாதிடும் இவர்கள், “யா அல்லாஹ் என் விஷயத்தில் உன்னுடைய நபியின் பரிந்துரையை ஏற்பாயாக என்று நான் கேட்கும் துஆவையும் ஏற்பாயாக” என்று தான் கூற வேண்டும். ஆனால் பரேலவிகள் அவ்வாறு சொல்வதில்லை. அப்படிச் சொன்னால் அவர்களின் விளக்கங்கள் அனைத்து அபத்தமாகவும் அர்த்தமற்றதாகவும் ஆகி விடும். அதனால் அவர்கள் அப்படிச் சொல்வதில்லை.

சான்று: 6

அறிஞர்கள் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களிலும், ஒப்புக் கொள்ளப்பட்ட துஆ தொடர்பானவற்றிலும் பதிவு செய்துள்ளார்கள். உண்மையில் இயற்கைக்கு மாற்றமான அதி அற்புத நிகழ்வாகும். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாகவே அவரது குருட்டுத்தன்மை நீங்கியது, பார்வை திரும்பியது.

இதனால் தான் இமாம் பைஹகீ போன்றவர்கள், தலாயிலுன் நுபுவ்வா – நபித்துவத்தின் அடையாளங்களில் இதைப் பதிவு செய்திருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்களின் துஆவின்றி, தனது துஆவைக் கொண்டு மட்டும் அந்த நபித்தோழர் நிவாரணத்தைப் பெற்றிருந்தால் உலகிலுள்ள கண் தெரியாதவர்கள் அனைவருக்கும் இது பொதுவானதாகி விடும். உலகில் உள்ள கண் தெரியாதவர்கள் ஒவ்வொருவரும் அல்லது ஒரு சிலராவது, இதுபோன்று உருக்கமாகவும், உளத்தூய்மையாகவும் பிரார்த்தனை செய்து குணம் அடைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. இது இவ்விஷயத்தில் ஒளிந்து கிடக்கின்ற நுணுக்கமாகும்.

இதுபோல் இன்னொரு நுணுக்கத்தையும் நாம் காணத் தவறிவிடக் கூடாது. பரேலவிகள் இந்த ஹதீஸை விளங்குவது போல், கண் தெரியாத நபித்தோழர், நபி (ஸல்) அவர்களின் அந்தஸ்து, தகுதி, மரியாதை மற்றும் அவர்களது பொருட்டைக் கொண்டு கேட்டதால் தான் இந்தக் குணம் கிடைத்தது என்று விளங்கினால், இதே நிவாரணம், அதாவது உலகிலுள்ள ஒவ்வொரு குருடருக்கும் பார்வை கிடைக்க வேண்டுமல்லவா?

இந்தக் கொள்கையில் உள்ளவர்கள் நபி (ஸல்) அவர்களை மட்டும் வைத்து வஸீலா தேடுவதில்லை. நபிமார்கள், அவ்லியாக்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள், மலக்குகள், ஜின்கள் அனைவரின் பொருட்டாலும், தனித்தனியாகவோ, அனைவரையும் சேர்த்தோ கேட்கின்றனர். அவர்களுக்குக் குணம் கிடைத்ததா என்று பார்த்தால் நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு இத்தனை நூற்றாண்டுகளில் யாருக்கும் பார்வை திரும்பக் கிடைத்ததாக வரலாறு இல்லை.

இதுவரை உள்ள இந்த விபரங்களின்படி ஒரு விஷயம் தெளிவாகப் புரிகின்றது. கண் தெரியாத நபித்தோழரின் வஸீலா என்ற சக்கரம் சுழல்வது துஆ என்ற அச்சாணியில் தான். அதாவது துஆ என்ற அமல் மூலம் தான். ஆளைக் கொண்டு அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இத்தனைக்குப் பிறகும் இங்கு இன்னொரு கேள்வி எழுகின்றது.

ஒரு அறிவிப்பில், “யா அல்லாஹ், உன்னிடத்தில் கேட்கின்றேன்; இரக்கமுடைய உன்னுடைய நபி முஹம்மதை வஸீலாவாக்கி (சாதனமாக்கி) கேட்கின்றேன்” என்று பார்வை தெரியாத நபித்தோழர் சொல்கின்றாரே! அது ஏன்? என்பது தான் அந்தக் கேள்வி.

இந்த இடத்தில், “உன்னுடைய நபியின் துஆவைக் கொண்டு” என்று தான் பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு அர்த்தம் கொள்வதற்கு மொழி இலக்கணத்தில் இடம் உண்டு.

“நாங்கள் இருந்த ஊர்வாசிகளிடமும், எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்தாரிடமும் விசாரியுங்கள்! நாங்கள் உண்மை கூறுபவர்களே” (என்று தந்தையிடம் கூறினார்கள்.)

அல்குர்ஆன் 12:82

இந்த வசனத்தில், ஊர்வாசிகள், ஒட்டகக் கூட்டத்தார் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள இடத்தில், “ஊரைக் கேள், ஒட்டகத்திடம் கேள்’ என்று தான் இடம் பெற்றுள்ளது. இதன் பொருள் ஊரையும், ஒட்டகத்தையும் கேட்பதல்ல. ஊர்வாசிகளையும், ஒட்டகக் கூட்டத்தாரையும் என்று பொருள் கொள்கிறோம்.

இந்த வசனத்தில் ஊர் என்பதற்குப் பின்னால் “வாசிகள்’ என்ற இணைப்புச் சொல்லும், ஒட்டகம் என்ற வார்த்தைக்குப் பின்னால் “உரிமையாளர்கள்’ என்ற இணைப்புச் சொல்லும் போக்கப்பட்டுள்ளது.

அதுபோன்றே மேற்கண்ட ஹதீஸில் முஹம்மது நபி என்ற வார்த்தைக்குப் பின்னால் ஓர் இணைப்புச் சொல் போக்கப்பட்டுள்ளது. இதைப் பரேலவிகளும் ஒப்புக் கொள்கின்றார்கள். அந்த இணைப்புச் சொல், முஹம்மது நபியின் அந்தஸ்து, மரியாதை, பதவி, பொருட்டு என்ற பொருளை அவர்கள் கொடுக்கிறார்கள். நாம் இந்த இடத்தில் முஹம்மது நபியின் துஆ என்ற பொருளைப் பயன்படுத்துகிறோம்.

இந்த ஹதீஸில் அந்தஸ்து, பதவி, பொருட்டு என்ற இணைப்புச் சொல்லை இங்கு சேர்ப்பதற்கு இந்த ஹதீஸிலோ, வேறு ஹதீஸ்களிலோ இவர்களுக்கு ஆதாரம் இல்லை. இந்த ஹதீஸின் முன்பின் வாசக அமைப்பும் இதற்கு இடம் தரவில்லை. ஆனால் துஆ என்ற இணைப்புச் சொல்லைச் சேர்க்கும் போது அழகாகப் பொருந்திப் போகின்றது. வேறு நூற்களில் இடம் பெறும் இதே ஹதீஸின் வாசகங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன.

ஒரு பேச்சுக்கு இவர்கள் வாதிடுவது போன்று ஹதீஸின் வெளிப்படையான வாசக அமைப்பைக் கொண்டு, “ஆளை வைத்து’ என்று பொருள் கொண்டாலும் அந்த வாதம் மேலே நாம் காட்டிய அஹ்மத் ஹதீஸ் மூலம் உடைந்து போகின்றது. “யா அல்லாஹ் என் விஷயத்தில் உன்னுடைய நபியின் பரிந்துரையை ஏற்பாயாக என்று நான் கேட்கும் துஆவையும் ஏற்பாயாக” (அஹ்மத் 17280) என்ற வார்த்தைகள் மூலம் “ஆளைக் கொண்டு வஸீலா தேடுதல்’ என்ற வாதம் அடிபட்டுப் போகின்றது.

இதையும் தாண்டி இந்த ஹதீஸ் அந்தப் பொருளைத் தான் கூறுகின்றது என்று வைத்துக் கொண்டாலும் இது நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில், அவர்களுக்கு மட்டும் உரிய தனி உரிமையாகும். இதில் மற்ற யாருக்கும் அறவே பங்கு கிடையாது என்று தான் விளங்க வேண்டும்.