Tamil Bayan Points

வஹ்ஹாபிகள் என்றால் யார்?

கேள்வி-பதில்: மற்ற கேள்விகள்

Last Updated on November 16, 2022 by

வஹ்ஹாபிகள் என்றால் யார்?

கேடுகெட்ட துருக்கியர்கள் ஆளுகையின் கீழ் முஸ்லிம் நாடுகள் இருந்த போது மக்கா, மதீனா நகரங்களும் துருக்கி ஷைத்தான்களின் ஆதிக்கத்தில் இருந்தன.

(துருக்கியர்கள் உலக முஸ்லிம் நாடுகளுக்கு தலைமை வகித்ததால் நம்மையும் துருக்கர் எனச் சொல்லி பின்னர் துலுக்கர் என்று ஆனது.)

இவர்கள் ஆட்சியில் இருந்த போது இப்போது நாகூரிலும், அஜ்மீரிலும் நடப்பதை மிஞ்சும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு இணைவைத்தலும், கணக்கிலடங்காத பித்அத்களும் அறங்கேறின. பத்ருப்போர் நடந்த இடத்திலும், உஹதுப் போர் நடந்த இடத்திலும் நூற்றுக்கணக்கான தர்காக்கள் கட்டப்பட்டன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை ஒட்டி அமைந்துள்ள மஸ்ஜிதுன்னபவியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வாகவே ஆக்கப்பட்டார்கள். அவர்களின் அடக்கத்தலம் அலங்காரம் செய்யப்பட்டது. அதன் சுவரிலும், டூம்களிலும் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் கவிதைகள் பதியப்பட்டன.

எந்த அளவுக்கு மார்க்கத்தை நாசப்படுத்தி இருந்தார்கள் என்றால் கஅபாவைச் சுற்றி நான்கு முஸல்லாக்கள் உருவாக்கப்பட்டன. ஒரே நேரத்தில் ஷாஃபி,  ஹனபி,  மாலிகி,  ஹன்பலி என நான்கு பிரிவினரும் தனித்தனியாக தொழுகை நடத்துவார்கள்.

காபாவில் நான்கு தொழுகை தலங்கள் இருந்தனவா?

1902 ஆம் ஆண்டு முதல் துருக்கிக்கு எதிராக களத்தில் போராடிய அப்துல் அஸீஸ் பின் சவூது என்பார் ரியாத்தைக் கைப்பற்றி அரசமைத்தார். இவரது தந்தையின் பெயரால் இது சவூதி அரசு என்று அழைக்கப்படுகிறது.

ரியாத பகுதி மட்டுமே இவரது சவூதி அரசாக இருந்தது. தற்போதையை சவூதி அரசின் பல பகுதிகள் தனித்தனி ராஜ்ஜியங்களாக இயங்கி வந்தன. இவரது மரணத்திற்குப் பின் இவரது மகன் முஹம்மத் பின் அப்துல் அஸீஸ் ஆட்சிக்கு வந்தார்.

இந்தக் காலகட்டத்தில் தான் (1703-1792) முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் செயல்களையும், அனாச்சாரங்களையும் கண்டித்து பிரச்சாரம் செய்து வந்தார். மத்ஹபை விட்டு விலகி குர்ஆன் ஹதீஸ் வழியில் மட்டுமே செயல்பட வேண்டும் எனவும் பிரச்சாரம் செய்து வந்தார். இவரது பிரச்சாரத்தால் மன்னர் முஹம்மது ஈர்க்கப்பட்டார். இருவரும் சந்தித்து ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

அதாவது மார்க்க விஷயத்தில் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபுக்கு மன்னர் ஒத்துழைப்பாக இருப்பது, சிதறிக் கிடக்கும் ராஜ்ஜியங்களை ஒருங்கிணைக்க மன்னருக்கு முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் உறுதுணையாக இருப்பது என்பது தான் அந்த ஒப்பந்தம்.

வீரியமிக்க இளைஞர்களைத் திரட்டி வைத்திருந்த முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபும் மன்னரின் படையினரும் சேர்ந்து இன்றைய சவூதியாக இருக்கும் எல்லாப் பகுதிகளையும் ஒரு ராஜ்ஜியத்ய்தின் கீழ் கொண்டு வந்தனர். எல்லா தர்காக்களும் உடைத்து எறியப்பட்டன. தாயத்து தட்டு மோசடிக்காரர்கள் சிறையில் தள்ளப்பட்டனர்.

லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதைக் கொடியில் பதித்து இனி எல்லாம் தவ்ஹீத் தான் என்று பிரகடனம் செய்யப்பட்டது. கஅபாவைச் சுற்றி இருந்த நான்கு முஸல்லாக்களும் உடைத்து நொறுக்கப்பட்டு ஒரே முஸல்லாவாக ஆக்கப்பட்டது.

ஹஜ் உம்ராவுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ரத்து செய்யப்பட்டன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தில் நடந்து வந்த பல அநாச்சாரங்கள் தடைசெய்யப்பட்டன. இன்னும் சில அனாச்சாரங்கள் மிச்சம் உள்ளன.

தர்காக்களை உடைத்து எறிந்ததாலும், புரோகிதர்களை ஒழித்துக் கட்டியதாலும், அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்று முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் போதனை செய்ததாலும் இந்தக் கொள்கையைச் சொல்பவர்கள் வஹ்ஹாபிகள் என்று குறிப்பிடப்படுகின்றனர்.

ஆனால் இவரது பெயர் வஹ்ஹாப் அல்ல. அப்துல் வஹ்ஹாபும் அல்ல. இவரது தந்தையின் பெயர் தான் அப்துல் வஹ்ஹாப்.

இவரது பெயர் முஹம்மத் ஆகும். இவரது கொள்கையைப் பின்பற்றுவோருக்குப் பெயர் சூட்டுவதாக இருந்தால் முஹம்மதீ என்று தான் சொல்ல வேண்டும். (முஹம்மத் என்பவரைப் பின்பற்றுவோர்) இப்படிச் சொன்னால் அது நபிகள் நாயகத்தைக் குறித்து விடும் என்று அஞ்சிய கப்ரு வணங்கிக் கூட்டம் அவரது தந்தையின் பெயரால் வஹ்ஹாபிகள் எனக் கூறி வருகின்றனர்.

ஆனால் அவரது தந்தையின் பெயர் அப்துல் வஹ்ஹாப் தானே தவிர வஹ்ஹாப் அல்ல. வஹ்ஹாப் என்பது அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்களில் ஒன்றாகும்.

முஹம்மதிகள் என்று சொன்னால் நபிவழி நடப்பவர்கள் என்று பெயர் வாங்கி விடுவார்கள் என்று அஞ்சி வஹ்ஹாபிகள் என்று அதை விட அழகான பெயரை அவர்கள் வாயாலேயே அல்லாஹ் சொல்லவைத்து விட்டான்.

வஹ்ஹாப் என்றால் அல்லாஹ்.

வஹ்ஹாபி என்றால் அல்லாஹ்வின் கட்சியைச் சேர்ந்தவர் என்று பொருள்.

நாங்கள் கப்ரு வணங்கிகள் அல்ல என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது.

இணைவைப்பை எதிர்த்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து மிகப் பெரும் தியாகம் செய்த மாவீரர் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப். அவர் சந்தித்தது போன்ற அடக்குமுறைகளையும், எதிர்ப்புகளையும் நாம் சந்தித்து இருந்தால் நம்மில் எத்தனை பேர் கடைசி வரை தாக்கு பிடித்திருப்போம் என்று சொல்ல முடியாது.

இன்றைய சவூதி ஆட்சியாளர்கள் மீது நமக்கு வெறுப்பு வந்தாலும் முஹம்மத் பின் அப்துல் அஸீஸையும், முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபையும் ஏகத்துவவாதிகள் வெறுக்க முடியாது.

அவர் அன்று துணிச்சலுடன் கப்ரு வணக்கத்தின் தீமைகளை எதிர்த்தது தான் நமக்கெல்லாம் உத்வேகத்தை அளித்தது என்பதையும் மறந்து விட முடியாது. நாம் பெரிதும் மதிக்கும் நல்லறிஞர்களில் ஒருவர் தான் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப்.

ஆனால் அவர் சொன்ன அனைத்தையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பது இதற்கு அர்த்தமில்லை. அவரது சில போதனைகள் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக உள்ளன. அதை நாம் சுட்டிக்காட்டி நிராகரித்துள்ளோம்.