Tamil Bayan Points

07) ஸஃயு செய்தல் – மினாவுக்கு செல்தல்

நூல்கள்: நபி வழியில் நம் ஹஜ்

Last Updated on April 15, 2023 by

ஸஃபா, மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓடுவது

தவாஃபுல் குதூம்எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரத்அத்கள் தொழுது விட்டு ஸஃபா, மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓட வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்து இரண்டு ரக்அத்கள் தொழுத பிறகு ஸஃபாமர்வாவுக்கு இடையே ஓடினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1616, 1624, 1646, 1647, 1767, 1794, 4188

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபாவை அடைந்ததும் ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்என்ற (2:158) வசனத்தை ஓதினார்கள். அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராகஎன்று கூறிவிட்டு ஸஃபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன் மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தாஎன்று கூறி இறைவனைப் பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சம தரைக்கு வந்ததும்) பதனுல் வாதீஎன்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும் வரை நடந்தார்கள். ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 2137

ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்ய வேண்டும்.

ஏழு தடவை ஸஃயு செய்ய வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு ஏதுமில்லை. ஸஃபாவிலிருந்து மர்வாவுக்குச் செல்வது ஒரு தடவையாகக் கருதப்படுமா அல்லது மீண்டும் ஸஃபாவுக்குத் திரும்புவது தான் ஒரு தடவையாகக் கருதப்படுமா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

ஹதீஸ்களை ஆராயும் போது ஸஃபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று, மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வருவது மற்றொன்று என்பதே சரியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு தடவை ஸஃயு செய்தார்கள். ஸஃபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2137

துவங்கிய இடத்துக்கே திரும்பி வருவது தான் ஒரு தடவை என்றிருந்தால் கடைசிச் சுற்று ஸஃபாவில் தான் முடிவுறும்; மர்வாவில் முடிவுறாது.

மர்வாவில் முடிந்ததிலிருந்து ஸஃபாவிலிருந்து மர்வா வந்தால் ஒருதடவை என்றும், மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வந்தால் இரண்டு தடவைஎன்றும் விளங்கலாம்.

 

மினாவுக்குச் செல்வது

துல்ஹஜ் மாதம் ஏழாம் நாள் லுஹருக்குப் பின் இமாம் குத்பா உரை நிகழ்த்த வேண்டும்.

தர்வியா (எட்டாம் நாள்) நாளுக்கு முதல் நாள் மக்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குத்பா உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் செய்ய வேண்டிய கிரியைகள் பற்றி விளக்கினார்கள்.

துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று மினா எனுமிடத்துக்குச் செல்ல வேண்டும்.

அன்றைய தினம் லுஹர், அஸர், மஃரிப், இஷா பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும்.

நூல்: முஸ்லிம் 2137

தர்வியா நாளில் (எட்டாம் நாளில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கே லுஹர் தொழுதார்கள்? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் மினாவில்என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல் அஸீஸ் பின் ரபீவு

நூல்: புகாரி 1653, 1763

எட்டாம் நாளின் லுஹர் தொழுகையையும், அரஃபா நாளின் (ஒன்பதாம் நாளின்) பஜ்ரு தொழுகையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மினாவில் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 1632, 1634, அஹ்மத் 5856

இங்கே நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும்.

மினாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வைத்தார்கள்.

அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்பு (ரலி)

நூல்: புகாரி 1082, 1083, 1655, 1656