08) வீர பெண்மணி
நூல்கள்: உம்மு சுலைம் (ரலி) வரலாறுLast Updated on February 11, 2024 by
08) வீர பெண்மணி
உம்மு சுலைம் (ரலி) அவர்கள் போர்களத்தில் கத்தியுடன் வருவதை பார்த்த அபூதல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து என் மனைவி கத்தி ஒன்று வைத்திருக்கிறார் என்னவென்று விசாரியுங்கள் என்று சொல்கிறார்கள். அப்போது நபிகளார் அழைத்து விசாரிக்கிறார்கள் அதற்கு அவர்கள் அளித்த பதிலை பாருங்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஹுனைன் போர் தினத்தன்று பிச்சுவாக் கத்தி ஒன்றை எடுத்து, தம்முடன் வைத்திருந்தார். அதைப் பார்த்த (என் தாயாரின் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் சென்று), “அல்லாஹ்வின் தூதரே! உம்மு சுலைம் தம்முடன் பிச்சுவாக் கத்தி ஒன்றை வைத்திருக்கிறார்” என்று கூறினார்கள்.
அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்தப் பிச்சுவாக் கத்தி எதற்கு?” என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், “இணைவைப்பாளர்களில் யாரேனும் என்னை நெருங்கினால் அவரது வயிற்றை நான் பிளந்துவிடுவேன். அதற்காகத்தான் அதை வைத்துள்ளேன்” என்று கூறினார். அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரிக்கலானார்கள்.
உம்மு சுலைம் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நம்மவரைத் தவிர (மக்கா வெற்றியின்போது) தங்களிடம் சரணடைந்து தங்களால் (பொது மன்னிப்பளிக்கப்பட்டு) விடுவிக்கப்பட்டவர்களைத் தாங்கள் கொன்றுவிடுங்கள்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் போதுமானவனாக ஆகிவிட்டான். அவன் உபகாரமும் செய்துவிட்டான். (இந்த ஹுனைன் போரில் நமக்குச் சரிவு ஏற்பட்டாலும் பெருத்த பாதிப்பு ஏதுமில்லாமல் அல்லாஹ் காப்பாற்றிவிட்டான்)” என்று கூறினார்கள்.
இன்றைக்கு இருக்கும் பெண்கள் இரத்தத்தை பார்த்தாலே பயந்து விடுகிறார்கள். ஆனால் உம்மு சுலைம் அவர்களின் வீரத்தை பார்த்தீர்களா? “இணைவைப்பாளர்களில் யாரேனும் என்னை நெருங்கினால் அவரது வயிற்றை நான் பிளந்துவிடுவேன். அதற்காகத்தான் இந்த கத்தியை வைத்துள்ளேன்” என்று நபி (ஸல்) அவர்களிடம் தைரியமாக சொல்கிறார்கள் என்றால் அவர்கள் எத்தகைய வீரமிகுந்த பெண்மணியாக இருந்திருக்கிறார்கள்.