Tamil Bayan Points

12) நபி (ஸல்) அவர்களும் அற்புதங்களும்

நூல்கள்: ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

Last Updated on October 30, 2023 by

12) நபி (ஸல்) அவர்களும் அற்புதங்களும்

நபி (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று நிரூபிப்பதற்காக இறைவன் வழங்கிய சில அற்புதங்களைச் செய்து காட்டினார்கள். மாபெரும் அற்புதமாக அவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குர்ஆனையும் மக்கள் மத்தியில் எடுத்து வைத்தார்கள். அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களை ஏற்க மறுத்த எதிரிகள் அவற்றை ஸிஹ்ர் (சூனியம்) என்று கூறினார்கள்.

(முஹம்மதே!) காகிதத்தில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும். இது வெளிப்படையான சூனியத்தைத் (ஸிஹ்ரைத்) தவிர வேறு இல்லை   என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறியிருப்பார்கள்.

அல்குர்ஆன் (6 : 7)

மக்களை எச்சரிப்பீராக   என்றும்,  நம்பிக்கை கொண்டோருக்குத் தம் இறைவனிடம் அவர்கள் செய்த நற்செயல் (அதற்கான கூலி) உண்டு என நற்செய்தி கூறுவீராக   என்றும் மனிதர்களைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் அறிவிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா?  இவர் தேர்ந்த சூனியக்காரர்   (ஸிஹ்ர் செய்பவர்) என்று (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் (10 : 2)

அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன.  இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் (ஸிஹ்ரிடம்) செல்கிறீர்களா?   என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர்.

அல்குர்ஆன் (21 : 3)

இன்னும் இந்தக் கருத்து (28 : 48) (34 : 43) (37 : 14) (38 : 4) (43 : 30) (46 : 7) (54 : 2) ஆகிய வசனங்களிலும் கூறப்படுகிறது.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா?

சூனியம் என்பது கற்பனையல்ல. மெய்யான அதிசயமே. அதன் மூலம் ஒரு மனிதனின் கை கால்களை முடக்கலாம். படுத்த படுக்கையில் தள்ளலாம் என்றெல்லாம் பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். அவர்கள் தங்கள் கூற்றை நிரூபிக்க சில ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகிறார்கள்.

புகாரி முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு நபிமொழித் தொகுப்புக்களில் நபி (ஸல்) அவர்களுக்கு யூதன் ஒருவன் சூனியம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. தங்களின் கருத்தை மெய்யாக்குவதற்கு இவற்றை ஆதாரமாக இவர்கள் காட்டுகிறார்கள். அந்த ஹதீஸ்கள் வருமாறு :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. தாம் செய்யாத ஒன்றைச் செய்ததாக நினைக்கும் அளவிற்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஒரு நாள் என்னை அழைத்தார்கள். எனக்கு நிவாரணம் கிடைக்கும் வழியை இறைவன் காட்டி விட்டான் என்பது உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். இரண்டு மனிதர்கள் என்னிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைப்பகுதியில் அமர்ந்து கொண்டார். மற்றொருவர் என் கால்பகுதியில் அமர்ந்து கொண்டார்.

இந்த மனிதருக்கு ஏற்பட்ட நோய் என்ன? என்று ஒருவர் மற்றவரிடம் கேட்டார். இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று மற்றவர் விடையளித்தார். இவருக்குச் சூனியம் செய்தவர் யார்? என்று முதலாமவர் கேட்டார். லபீத் பின் அல்அஃஸம் என்பவன் சூனியம் வைத்துள்ளான் என்று இரண்டாமவர் கூறினார். எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று முதலாமவர் கேட்டார்.

அதற்கு இரண்டாமவர் சீப்பிலும் உதிர்ந்த முடியிலும் பேரீச்சை மரத்தின் பாளையிலும் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று விடையளித்தார். எந்த இடத்தில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று முதலாமவர் கேட்டார். தர்வான் என்ற கிணற்றில் வைக்கப்பட்டுள்ளது என்று இரண்டாமவர் கூறினார் என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். பின்னர் அந்தக் கிணற்றுக்குச் சென்று விட்டு திரும்பி வந்தார்கள்.

அங்குள்ள பேரீச்சை மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று இருந்தது என்று என்னிடம் கூறினார்கள். அதை அப்புறப்படுத்திவிட்டீர்களா? என்று நான் கேட்டேன். அதற்கு நபியவர்கள் இல்லை அல்லாஹ் எனக்கு நிவாரணம் அளித்துவிட்டான். மக்கள் மத்தியில் தீமையை பரப்பக்கூடாது என்று நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்கள். பின்னர் அந்தக் கிணறு மூடப்பட்டது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (3268)

தம் மனைவியிடத்தில் தாம்பத்தியம் நடத்தாமல் தாம்பத்தியம் நடத்தியதாக நினைக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நூல் : புகாரி (5765)

நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலை ஆறு மாதங்கள் நீடித்ததாக அஹ்மத் என்ற கிரந்தத்தில் இடம்பெற்ற செய்தி கூறுகிறது.

நூல் : அஹ்மத் (23211)

நபி (ஸல்) அவர்கள் தன்னிலை மறக்கும் அளவிற்கு ஆறு மாதக் காலம் சூனியத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் மற்றவர்களுக்கு ஏன் சூனியம் செய்ய முடியாது என்று இவர்கள் வாதிடுகிறார்கள். மேற்கண்ட ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சரியான கருத்து போல தோன்றலாம்.

ஆனால் ஆழமாகப் பரிசீலனை செய்யும் போது நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவோ அதனால் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கவோ முடியாது என்ற கருத்திற்குத் தான் வந்தாக வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட இறை வேதம்

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு அதன் காரணமாக அவர்களது மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது. அந்த பாதிப்பு ஆறுமாதம் நீடித்தது. தான் செய்யாததைச் செய்ததாக கருதும் அளவுக்கு அந்தப் பாதிப்பு அமைந்திருந்தது என்று மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப்படுவதை நாம் அப்படியே ஏற்பதாக இருந்தால் அதனால் ஏராளமான விபரீதங்கள் ஏற்படுகின்றன.

திருக்குர்ஆனின் நம்பகத்தன்மைக்கு ஏற்படும் பாதிப்பு முதலாவது பாதிப்பாகும். சூனியம் வைக்கப்பட்டதின் காரணமாக தான் செய்யாததைச் செய்ததாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றால் அந்த ஆறுமாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வஹீ (இறைச் செய்தி) சந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும்.

தம் மனைவியிடத்தில் இல்லறத்தில் ஈடுபட்டதை அல்லது ஈடுபடாமல் இருந்ததைக் கூட நபி (ஸல்) அவர்களால் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லையென்றால் இறைவனிடம் வஹீ வராமலேயே வஹீ வந்ததாகவும் அவர்கள் கூறியிருக்கலாம். தனக்கு வஹீ வந்திருந்தும் வரவில்லை என்று அவர்கள் நினைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும். ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட அனைத்துமே சந்தேகத்திற்குரியதாக ஆகி விடும்.

எந்த ஆறு மாதம் என்று தெளிவாக விபரம் கிடைக்காததால் மதீனாவில் அருளப்பட்ட ஒவ்வொரு வசனமும் இந்த ஆறு மாதத்தில் அருளப்பட்டதாக இருக்குமோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்திவிடும்.

இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இன்று நம்மிடம் இருக்கும் ஒரே அற்புதம் திருக்குர்ஆன் தான். திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அனைத்தையும் நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும். திருக்குர்ஆனில் பொய்யோ கலப்படமோ கிடையாது. முழுக்க முழுக்க அது இறைவனின் வார்த்தை தான் என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் நற்சான்று கூறுகிறது.

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

அல்குர்ஆன் (15 : 9)

அவர்கள் (நம்மை) அஞ்சுவதற்காக அரபு மொழியில் எவ்விதக் கோணலும் இல்லாத குர்ஆனை (அருளினோம்.)

அல்குர்ஆன் (39 : 28)

இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞான மிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.

அல்குர்ஆன் (41 : 42)

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் (4 : 82)

பாதுகாப்பு ஏற்பாடுகள்

குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அனைத்து வாசல்களையும் இறைவன் அடைத்து விட்டான். இது இறை வேதமாக இருக்க முடியாது என்ற சந்தேகம் எள்முனையளவும் ஏற்படக் கூடாது என்பதற்காக பலவிதமான ஏற்பாடுகளையும் செய்தான்.

நபி (ஸல்) அவர்கள் எழுதப்படிக்கத் தெரிந்தவராக இருந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது மக்கள் திருக்குர்ஆனை இறைவனுடைய வேதம் என்று நம்பியிருக்க மாட்டார்கள். முஹம்மது தனது புலமையை பயன்படுத்தி உயர்ந்த நடையில் இதைத் தயாரித்து இறை வேதம் என்று ஏமாற்றுகிறார் என்று அந்த மக்கள் நினைத்திருப்பார்கள். இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே முஹம்மது நபிக்கு இறைவன் எழுத்தறிவை வழங்கவில்லை என்று கூறுகிறான்.

(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் (29 : 48)

எழுத்தறிவு வழங்குவது பெரும்பாக்கியமாக இருந்தும் அந்தப் பாக்கியத்தை வேண்டுமென்றே நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் வழங்கவில்லை. திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்துள்ளான் என்று மேலுள்ள வசனம் கூறுகிறது.

ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் திருக்குர்ஆனை மொத்தமாக இறக்கினால் அனைத்துச் சட்டங்களும் மக்களுக்கு ஒரே நேரத்தில் கிடைத்து விடும். ஆனாலும் இதை வேண்டுமென்றே தவிர்த்ததாக இறைவன் கூறுகிறான்.

மக்களுக்கு இடைவெளி விட்டு நீர் ஓதிக் காட்டுவதற்காக குர்ஆனைப் பிரித்து அதைப் படிப்படியாக அருளினோம்.

அல்குர்ஆன் (17 : 106)

இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்.

அல்குர்ஆன் (25 : 32)

சிறிது சிறிதாக இறக்கினால் மனனம் செய்ய இயலும். உள்ளத்தில் பதிய வைக்க இயலும் என்பதற்காகவே இவ்வாறு அருளியதாக இறைவன் குறிப்பிடுகிறான்.

திருக்குர்ஆன் இறைவனுடைய வார்த்தையா? அல்லது மனிதனின் கற்பனையா? என்ற சந்தேகம் வரக் கூடாது என்றால் நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

அவர்கள் செய்யாததைச் செய்ததாகச் சொன்னாலோ அல்லது செய்ததைச் செய்யவில்லை என்று சொன்னாலோ அவர்கள் கூறியது அனைத்தும் சந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும். நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்று நம்புவதால் குர்ஆனைப் பாதுகாப்பதாக கூறும் குர்ஆன் வசனங்களை மறுக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே நபி (ஸல்) அவர்களின் மன நிலை பாதிக்கப்பட்டது என்றக் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணியை முடக்குவதற்கு பலர் முயற்சித்த போதும் அவர்களால் இதைச் செய்ய முடியவில்லை. அழைப்புப் பணிக்கு எந்த விதமான குந்தகமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக மக்கள் செய்யும் தீமைகளிலிருந்து நபி (ஸல்) அவர்களைத் தான் காத்துக் கொள்வதாக அல்லாஹ் அங்கீகாரம் தருகிறான். எனவே நபியவர்களின் தூதுத்துவத்தை சந்தேகத்திற்குரியதாக ஆக்கும் சூனியத்தை எந்த முஸ்லிமும் நம்பிவிடக்கூடாது.

தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்.

 அல்குர்ஆன் (5 : 67)

நகைப்பிற்குரிய விளக்கம்

வஹீ விசயத்தில் மட்டும் உள்ளதை உள்ளபடி கூறினார்கள். மற்ற விசயத்தில் தான் மனநிலை பாதிப்பு ஏற்பட்டது என்று சிலர் விளக்கம் தருகிறார்கள். இந்த விளக்கம் நகைப்பிற்குரியதாகும். குர்ஆன் இறை வேதம் தான் என்று முழுமையாக நம்புகின்ற இன்றைய மக்களின் நிலையிலிருந்து கொண்டு இவர்கள் இந்த விளக்கத்தைக் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நபியவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பார்த்துத் தான் அவர்கள் கூறுவது இறைவாக்கா அல்லவா என்ற நிலையில் மக்கள் இருந்தார்கள். ஆறு மாத காலம் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் நபி (ஸல்) அவர்கள் இருந்திருந்தால் அந்தக் காலத்து மக்களிடம் இந்த வாதம் எடுபடுமா? என்று சிந்திக்கத் தவறி விட்டார்கள்.

செய்யாததைச் செய்ததாகக் கூறும் ஒருவர் எதைக் கூறினாலும் சந்தேகத்திற்குரியதாகத் தான் மக்கள் பார்ப்பார்களே தவிர வஹீக்கு மட்டும் விதி விலக்கு என்று நம்பியிருக்க மாட்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை மூளை தொடர்பானது என்பதால் அவர்கள் கூறிய அனைத்தும் சந்தேகத்திற்குரியதாகி விடும்.

நபி (ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்யாமலேயே செய்ததாக நினைத்தார்கள் என்று சூனியம் தொடர்பாக வரும் ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது. மார்க்க விசயத்தில் குழப்பம் ஏற்படவில்லை. மாறாக உலக விசயத்தில் தான் குழப்பம் ஏற்பட்டது என்று பிரித்துக் காட்டாமல் பொதுவாக எல்லாக் காரியங்களிலும் அவர்களுக்கு இந்தக் குழப்பம் ஏற்பட்டது என்றே ஹதீஸில் இடம் பெற்றுள்ள வாசகம் உணர்த்துகிறது.

எனவே நபி (ஸல்) அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் அன்றைய மக்கள் திருக்குர்ஆனை சந்தேகத்திற்குரியதாக கருதியிருப்பார்கள் என்பதில் ஜயமில்லை.

எந்த விதமான ஆயுதங்களும் இல்லாமல் ஒருவருக்கு தீமை அளிப்பது என்பது இறைவனுக்கு மட்டுமே சாத்தியம். இந்த ஆற்றல் சூனியம் செய்வதன் மூலம் மனிதர்களுக்கும் உண்டு என்று நம்புவது இணை வைப்பில் கொண்டு சேர்த்து விடும். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான ஏகத்துவக் கொள்கைக்கு எதிராக இது அமைந்திருப்பதால் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?

நபி (ஸல்) அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த வேதத்தையும் பொய்யென நிலைநாட்ட எதிரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு ஆறு மாத காலம் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் எதிரிகள் இது குறித்து நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள்.

முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். செய்ததைச் செய்யவில்லை என்கிறார். செய்யாததைச் செய்தேன் என்கிறார். இவர் கூறுவதை எப்படி நம்புவது என்று நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். இந்த வாய்ப்பை நிச்சயம் தவற விட்டிருக்க மாட்டார்கள்.

இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் மட்டும் இருந்திருந்தால் இந்த விசயம் எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆறு மாதம் வரை நீடித்த பாதிப்பு நிச்சயம் மக்கள் அனைவருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

மக்களோடு மக்களாகக் கலந்து பழகாத தலைவர் என்றால் ஆறு மாத காலமும் மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து இந்தக் குறையை மறைத்திருக்கலாம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தினமும் பள்ளிவாசலில் ஐந்து வேளை தொழுகை நடத்தினார்கள். எந்த நேரமும் மக்கள் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கியிருந்தார்கள்.

எனவே நபி (ஸல்) அவர்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் எதிரிகள் அறிந்திருப்பார்கள். இதை மையமாக வைத்து பிரச்சார யுத்தத்தை நடத்தியிருப்பார்கள். ஆனால் எதிரிகளில் ஒருவர் கூட இது பற்றி விமர்சனம் செய்ததாக எந்தச் சான்றும் இல்லை.

எனவே அவர்களுக்கு சூனியம் வைக்கப்படவும் இல்லை. மனநிலை பாதிப்பு ஏற்படவும் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.

இறைத்தூதர் நிராகரிக்கப்பட்டிருப்பர்

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது உண்மையாக இருந்தால் அவரை அன்றைய மக்கள் இறைத்தூதர் என்று நம்பியிருக்க மாட்டார்கள். ஏற்கனவே அவர்களை இறைத்தூதர் என்று நம்பியிருந்தவர்களில் பலரும் அவர்களை விட்டு விலகியிருப்பார்கள்.

ஒருவரை இறைத்தூதர் என்று நம்புவதற்கு இறைவன் எத்தகைய ஏற்பாட்டைச் செய்திருக்கிறான் என்பதை அறிந்து கொண்டால் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்க முடியாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இறைத்தூதர்கள் என்பதற்கான சான்றுகள்

இறைத் தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாவே இருந்தனர். எல்லா வகையிலும் தன்னைப் போன்று இருக்கும் ஒருவர் தன்னை தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?   என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர்வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது

அல்குர்ஆன் (17 : 94)

நீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்   என்று கூறினர்

அல்குர்ஆன் (36 : 15)

நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.

அல்குர்ஆன் (26 : 186)

இஸ்லாத்தை ஏற்க மறுத்தவர்கள் இந்த வாதத்தை வைத்தார்கள் என்று (26 : 154) (25 : 7) (23 : 33) (23 : 47) (21 : 3) ஆகிய வசனங்களிலும் சொல்லப்படுகின்றது.

மனிதனால் நியமிக்கப்படும் தூதர் மனிதனாக இருக்கலாம். இறைவனால் நியமிக்கப்படும் தூதர் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவராகத் தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் கருதினார்கள். மக்கள் இவ்வாறு எண்ணியதில் நியாயங்கள் இருந்தன. இறத்தூதர் என்று ஒருவர் கூறிய உடனே அவரை ஏற்றுக் கொள்வது என்றால் இறைத் தூதர்கள் என்று பொய்யாக வாதிட்டவர்களையும் ஏற்க வேண்டிய நிலை ஏற்படும்.

மற்ற மனிதர்களிலிருந்து எந்த வகையிலாவது இறைத்தூதர் வேறுபட்டிருக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை ஓரளவு இறைவன் ஏற்றுக் கொள்கிறான். தனது தூதராக யாரை அனுப்பினாலும் அவர் இறைத்தூதர் தான் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் சில அற்புதங்களையும் அவர்களுக்குக் கொடுத்து அனுப்பினான்.

மற்ற மனிதர்களால் செய்ய முடியாத அற்புதங்களைக் காணும் போது அவர் இறைவனின் தூதர் தான் என்று நம்புவதற்கு நேர்மையான பார்வையுடைய எவருக்கும் தயக்கம் ஏற்படாது. இதன் காரணமாக எந்தத் தூதரை அனுப்பினாலும் அவர்களுக்கு அற்புதங்களை வழங்கியதாக திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் சொல்லிக் காட்டுகிறது.

(முஹம்மதே!) இந்த ஊர்கள் பற்றிய செய்திகளை உமக்குக் கூறுகிறோம். அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்தனர். முன்னரே அவர்கள் பொய்யெனக் கருதியதால் அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே (தன்னை) மறுப்போரின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.

அல்குர்ஆன் (7 : 101)

அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யரெனக் கருதியுள்ளனர். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளையும் ஏடுகளையும் ஒளிவீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்.

அல்குர்ஆன் (35 : 25)

அவருக்குப் பின்னர் பல தூதர்களை அவரவர் சமுதாயத்திற்கு அனுப்பினோம். அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் முன்னரே பொய்யெனக் கருதியதால் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே வரம்பு மீறியோரின் உள்ளங்கள் மீது முத்திரையிடுவோம்.

அல்குர்ஆன் (10 : 74)

உங்களுக்கு முன் அநீதி இழைத்த பல தலைமுறையினரை அழித்திருக் கிறோம். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. குற்றம் புரியும் கூட்டத்தை இவ்வாறே தண்டிப்போம்.

அல்குர்ஆன் (10 : 13)

இந்தக் கருத்து (40 : 22) (9 : 70) (64 : 6) (40 : 50) (57 : 25) ஆகிய வசனங்களிலும் கூறப்பட்டுள்ளது.

இறைத் தூதர்கள் அனைவருக்கும் அற்புதங்கள் வழங்கப்பட்டன. இந்த அற்புதம் வழங்கப்படாமல் ஒரு இறைத் தூதரும் அனுப்பப்படவில்லை என்று மேலுள்ள வசனங்கள் தெளிவாக உணர்த்துகின்றன.

தான் செய்து காட்டும் அற்புதங்கள் மூலம் தான் ஒரு இறைத் தூதர் தன்னை இறைத் தூதர் என்று நிரூபிக்கும் நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் நபி (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் வைத்து மந்திர சக்தியால் முடக்கிப் போட்டிருந்தால் இறைத் தூதரை விட யூதர்கள் செய்து காட்டியது பெரிய அற்புதமாக மக்களால் கருதப்பட்டிருக்கும். இறைவனால் தேர்வு செய்யப்பட்டவர்களையே முடக்கிப் போட்டிருப்பார்கள் என்றால் அன்றைக்கு பெரும் விளைவுகள் ஏற்பட்டிருக்கும்.

நம்மைப் போன்ற மனிதராக இவர் இருந்தும் இவர் செய்து காட்டிய சில அற்புதங்களைக் கண்டு இறைத் தூதர் என்று நம்பினோம். இன்று அவரது மன நிலையையே பாதிக்கச் செய்து விட்டார்களே. இவர்களை விட சூனியம் வைத்த யூதர்கள் தான் ஆன்மீக ஆற்றல் மிக்கவர்கள் என்று கணிசமான மக்கள் எண்ணியிருப்பார்கள்.

இவர் செய்து காட்டிய அற்புதத்தை விட யூதர்கள் பெரிய அற்புதத்தைச் செய்து காட்டி விட்டார்கள். அற்புதம் செய்தவரையே மந்திர சக்தியால் வீழ்த்தி விட்டார்கள் என்று ஒருவர் கூட விமர்சனம் செய்யவில்லை. அதைக் காரணம் காட்டி ஒருவர் கூட இஸ்லாத்தை விட்டு மதம் மாறிச் செல்லவில்லை.

எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் சீப்பையும் முடியையும் பயன்படுத்தி இறைத் தூதரை வீழ்த்தினார்கள் என்பது தவறான தகவல் என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்திகளை எதிரிகளுக்கு வழங்கி நம்பிக்கைக் கொண்ட மக்களை அல்லாஹ் நிச்சயம் தடம்புரளச் செய்திருக்க மாட்டான் என்பதால் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.